தேவகியின் கணவன் - அத்தியாயம் 12
அன்றைக்கும் மறுநாளும் எனக்கு தேவகியின்
நினைவாகவே இருந்தது. ஆனாலும் அவளைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொள்வது
என்று தெரியவில்லை. அவளுடைய கணவனைப் பற்றிய உண்மை என்ன? ஹைதராபாத் குழப்பத்தின்
போது அவனை ரஜாக்கர்கள் கொண்டு போனார்கள் என்பதும், பிறகு அவன் திரும்பி
வரவேயில்லை என்பதும் உண்மையா? அல்லது தேவகியின் தகப்பனார் கூறியபடி அவனுக்குப்
பைத்தியம் பிடித்துப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்பது
உண்மையா? அல்லது என் கண்ணாலே பார்த்தபடி, அதே வீட்டில் மேல்மாடியில்
அந்தப் பைத்தியம் பிடித்த கணவனை அடைத்துப் போட்டிருப்பது உண்மையா?
எல்லாவற்றையும் சேர்த்து யோசித்துப் பார்க்கும்போது கடைசியில் நான் கண்ணால் கண்டதே உண்மையாயிருக்கலாம் என்று தோன்றியது. தேவகியும் அவள் தகப்பனாரும் கூறிய பொய்களுக்குச் சுலபமாகக் காரணம் கண்டு பிடிக்கலாமல்லவா? பாவம்! தேவகிக்குத் தன்னுடைய கணவனைப் பற்றிய உண்மையைச் சொல்வது கஷ்டமாகத்தானேயிருக்கும்? அதிலும் என்னிடம்? அந்த வேலைக்காரி முதலில் பதில் சொல்லத் தயங்கிவிட்டுப் பிறகு எங்கேயோ தேவகியின் கணவன் போயிருப்பதாகவும் திரும்பி வரவில்லையென்றும் சொன்னாள், அல்லவா? புதிய மனிதர்களிடம் அந்த மாதிரி சொல்லும்படியாகத் தேவகி அவளுக்குக் கட்டளையிட்டிருக்க வேண்டும். தேவகியின் தகப்பனாருக்குப் பாவம், அவ்வளவு முழுப் பொய் சொல்ல விருப்பமில்லை. அவர் பாதி உண்மையைச் சொன்னார். தேவகியின் கணவனுக்குப் பைத்தியம் என்று ஒப்புக் கொண்டார். ஆனால் அதே வீட்டு மாடியில் தேவகியின் கணவனை அடைத்து வைத்திருக்கிறது என்று சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. அதனாலேயே பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் சொன்னார்.
இதையெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த போது ஒரு பக்கத்தில் எனக்கு எவ்வளவோ பரிதாபமாயிருந்தது. தேவகிக்கு இந்தக் கதியா வரவேண்டும்? இப்படிப்பட்ட புருஷனா அவளுக்கு வாய்க்க வேண்டும்? அடடா! ஹெட்மாஸ்டர் எப்படியெல்லாம் சொப்பனம் கண்டு கொண்டிருந்தார்? என்னென்ன ஆகாசக் கோட்டைகளைக் கட்டினார்? கொஞ்சமும் சங்கோசமில்லாமல் என் முகத்துக்கு நேரே தேவகிக்குப் பணக்காரக் கணவனாக வரன் பார்க்கிறேன்; உனக்கு அவளைக் கொடுக்க முடியாது; அந்த எண்ணத்தை விட்டு விடு!" என்று பச்சையாகச் சொன்னாரே? இத்தனைக்கும் நான் அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவரிடம் பிரஸ்தாபிக்கவேயில்லையே? யாரோ காலிப்பயல்கள் சொன்னதைக் கேட்டுக் கொண்டும் ஊர் வதந்தியை வைத்துக் கொண்டும் என் பேரில் எரிந்து விழுந்தாரே? என் மீது அபாண்டமான பழியும் சுமத்தினாரே? இப்போது என்ன ஆயிற்று? தேவகிக்கு எப்படிப்பட்ட கணவன் வாய்த்தான்? கடவுளே! என்னைப் பரமயோக்யன் என்று அதுகாறும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என் மனதின் ஆழத்தில் ஒளிந்திருந்த தீய பிசாசின் வலிமை தெரிந்தது. தேவகி அப்படிப்பட்ட துர்க்கதியை அடைந்திருக்கக் கண்டது வெளிப்படையாக என் மனதில் பரிதாபத்தை உண்டாக்கிய போதிலும் உள்ளுக்குள்ளே ஒருவித திருப்தியையும் உண்டாக்கிற்று. அத்துடன், அத்தகைய பரிதாப கதிக்கு உள்ளான தேவகிக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் முன் வந்து நின்றது.
இந்த எண்ணத்தோடு கூட தேவகியைப் பற்றிய தாழ்வான ஒரு எண்ணமும் என் மனதில் உதிக்கக் கண்டேன். சீச்சீ! பைத்தியக்காரப் புருஷனை மேல் மாடியில் அடைத்துப் போட்டுவிட்டு இவளுக்குப் பொருட்காட்சி வேடிக்கை என்ன வேண்டிக்கிடந்தது? அடுத்த வீதி ஆண்டு நிறைவுக் கல்யாணத்துக்குப் போக எப்படி மனம் வந்தது? எவ்வளவு கடின நெஞ்சு அவளுக்கு? ஒரு தடவை போனது போதாது என்று இன்னொரு நாளும் பொருட் காட்சிக்குப் போக வேண்டுமாமே? அடாடா! ஒரு காலத்தில் நான் இவளை தேவ கன்னிகை என்று நினைத்துப் போற்றினேன் அல்லவா? இவளுடைய பணிவிடைக்காக என் வாணாளையே அர்ப்பணம் செய்யத் தயாராகயிருந்தேன் அல்லவா! சீ!
ஆனால் கொஞ்சம் நிதானித்துப் பார்த்தால், அவள் பேரில் அவ்வளவு நிஷ்டூரம் சொல்வதற்கு இடம் என்ன இருக்கிறது? எப்படியும் மூன்று குழந்தைகளுக்குத் தாயார். அந்தக் குழந்தைகளைச் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டியதுதானே அவசியம? புருஷனுக்கு ஏதோ துர்க்கதி நேர்ந்து விட்டது என்பதற்காகக் குழந்தைகளையும் கஷ்டப்படுத்துவது நியாயமாகுமா? நாலு இடங்களுக்கு அழைத்துக் கொண்டு போய்க் காட்டினால்தானே குழந்தைகள் தந்தையின் நிலையை மறந்து சந்தோஷமாயிருக்க முடியும்?
இப்படி முன்னுக்குப் பின் முரணான எண்ணங்களால் என் உள்ளம் கலங்கிக் கொண்டிருந்தது. என் மனதில் தோன்றிய கேள்விகளுக்கு நானே சமாதானம் கண்டு பிடித்துத் திருப்தியடையப் பார்த்தேன். ஆயினும் பூரண திருப்தி ஏற்படவில்லை.
மறுநாள் திங்கட்கிழமை, நான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனபோது வழியில் பார்க்டவுனில் 'டாக்டர் சுந்தரம் எல்.ஐ.எம்.' என்று போட்டிருந்த போர்டு என் கண்களைக் கவர்ந்தது. ஏற்கெனவேயே சில சமயம் நான் இந்த போர்டைப் பார்த்துவிட்டுக் கட்டிடத்தையும் உற்றுப் பார்த்திருக்கிறேன். சுந்தரம் என்று பெயருள்ள எத்தனையோ ஆயிரம் பேர் நாட்டில் இருக்கிறார்கள். ஆயினும் இந்த 'டாக்டர் சுந்தரம்' போர்டு எனக்குத் தண்டாங்கோரையில் என்னுடன் ஹைஸ்கூலில் படித்த சுந்தரத்தை நினைவூட்டிற்று. அதற்கு ஒரு காரணமும் இல்லாமற் போகவில்லை. இரண்டொரு தடவை அந்த ஆயுர்வேத மருந்துக் கடையில் ஜன்னல் வழியாக ஒரு முகம் தெரியும். அந்த முகம் ஏதோ எப்போதோ எனக்குத் தெரிந்த முகம் போலத் தோன்றும். பல தடவை இதைப் பற்றி யோசித்து, 'ஆமாம்; இவன் அந்தத் தண்டங்கோரை சுந்தரமாயிருக்கக் கூடும்' என்று தீர்மானித்தேன். காரிலே அந்த வழியாகப் போய்க் கொண்டிருக்கையில் ஏற்பட்ட மின்னல் எண்ணங்கள் இவை. மோட்டாரை நிறுத்தி விசாரிப்பதற்கு வேண்டிய அக்கறை அப்போதெல்லாம் எனக்கு ஏற்படவில்லை. எதற்காக விசாரிக்க வேண்டும்? விசாரித்து அந்த சுந்தரமாயிருந்தால் தான் என்ன பயன்? இவனுடைய சிநேகத்தைப் புதுப்பித்துக் கொண்டு இப்போது எனக்கு ஆக வேண்டியது என்ன? ஒன்றுமில்லை!
ஆனால் நான் இந்தத் திங்கட்கிழமையன்று அந்த வழியாகப் போனபோது, காரை நிறுத்தி அவன் தண்டாங்கோரை சுந்தரம்தானா என்று விசாரிப்பதற்குத் தடுக்க முடியாத ஆர்வம் கொண்டேன். காரை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே போனேன். சுந்தரம் மாதிரிதான் இருந்தது. ஆனால், அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.
அவனிடம், வைத்தியம் பார்த்துக் கொள்ள வந்தவர்கள் யாரும் அப்போது அங்கு இருக்கவில்லை. நான் அவன் மேஜைக்கெதிரே கிடந்த பெஞ்சியில் உட்கார்ந்ததும், "உங்களுக்கு என்ன உடம்பு? எங்கே, கையைக் காட்டுங்கள்!" என்று வைத்திய பரிசீலனை செய்யத் தயாரானான்.
நான் கொஞ்சம் தயங்கினேன்.
"சீக்கிரம் சொல்லுங்கள். எனக்கு இன்றைக்குச் சீக்கிரம் டிஸ்பென்ஸரியைச் சாத்திக் கொண்டு போகவேண்டும்" என்றான்.
"நான் உடம்பு பார்த்துக் கொள்ள வரவில்லை. எனக்கு உடம்பு ஒன்றுமில்லை. வேறொரு விஷயம் விசாரிப்பதற்காக வந்தேன். ஒரு வேளை நீங்கள் என் பழைய சிநேகிதனாயிருக்கலாம் என்று நினைத்தேன். டாக்டர்! நீங்கள் தண்டாங்கோரை ஹைஸ்கூலில் எப்போதாவது படித்ததுண்டா?" என்று கேட்டேன்.
அவன் என்னை அதிசயத்துடன் உற்றுப் பார்த்து, "ஆமாம், படித்திருக்கிறேன். நீங்கள் யார்? ஒரு வேளை... ஒரு வேளை ... அடேடே! நம்ம கிச்சாமி போலிருக்கிறதே!" என்றான் .
"ஆமாம், சுந்தரம்! நான் அந்த கிருஷ்ணசாமி தான்!"
"பலே! பலே! நம்ம 'சோப்பளாங்கி' கிருஷ்ணசாமியா? மன்னித்துக் கொள்! அப்போது, நாம் பள்ளிக்கூடத்தில் படித்தபோது, நீ யாரோடும் சண்டைக்கு வரமாட்டாயல்லவா? யாராவது உன்னோடு சண்டைக்கு வந்தாலும் நீ பின்வாங்கிப் போய்விடுவாயல்லவா? அதனால் உன்னை நாங்கள் 'சோப்பளாங்கி கிச்சாமி' என்று சொல்வோம். உன் காதிலும் விழுந்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றியெல்லாம் இப்போது என்ன? கார், கீர் வைத்துக் கொண்டு ஜோராய் இருக்கிறாப் போலிருக்கிறதே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
நான் நடத்தும் தொழிலைப் பற்றிச் சுந்தரத்திடம் சொன்னேன். அவனும் தன்னைப் பற்றி சுருக்கமாகச் சொன்னான். தண்டாங்கோரையில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு இந்த பட்டணத்துக்கு வந்து ஆயுர் வேத கலாசாலையில் சேர்ந்து மூன்று வருஷம் படித்து எல்.ஐ.எம். பட்டம் பெற்று டாக்டர் ஆனானாம். வைத்தியத் தொழிலிலும் மருந்து விற்பனையிலும் மாதம் முந்நூறு, நானூறு ரூபாய் அவனுக்கு இப்போது வருமானம் வருகிறது என்று அறிந்தேன்.
"உங்கள் வீட்டில் யாருக்காவது ஏதாவது வியாதி என்றால், நேராக இங்கே வந்துவிடு. மருந்துகள் எல்லாம் நானே சாஸ்திரீயமாய்ச் செய்கிறேன். டைபாய்டு சுரத்துக்கு ஒரு மருந்து கண்டுபிடித்திருக்கிறேன். இங்கிலீஷ் வைத்தியத்தில் டைபாய்டு சுரத்துக்கு மருந்தே கிடையாது என்று தெரியுமல்லவா! உன் முகம் கூட அவ்வளவு நன்றாயில்லை. ஒரு மாதிரி வெளுத்துப் போயிருக்கிறது. ஆறு மாதம் நீ சியவனப்பிராஸ லேகியம் விடாமல் சாப்பிட்டால் குணம் தெரியும். அப்புறம் அதை விடவே மாட்டாய். இன்னொரு நாளைக்கு வா, மற்ற மருந்துகளைப் பற்றி விவரமாகச் சொல்லுகிறேன். இன்றைக்குக் கொஞ்சம் எனக்கு அவசர வேலையிருக்கிறது. போகட்டுமா?" என்று எழுந்தான்.
"கொஞ்சம் உட்கார், சுந்தரம்! இன்னொரு நாளைக்கு அவசியம் வந்து உன்னிடமுள்ள மருந்துகளிலெல்லாம் ரகத்துக்குக் கொஞ்சமாக வாங்கிப் போகிறேன். ஒரு முக்கியமான விஷயம் உன்னைக் கேட்கலாம் என்று இன்றைக்கு வந்தேன். அதை மட்டும் சொல்லிவிட்டுப் போ! நாம் படித்த போது ஹெட்மாஸ்டர் பத்மநாப ஐயங்கார் என்று இருந்தாரே? அவரைப் பற்றியும் அவர் குமாரி தேவகியைப்பற்றியும் உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்க வந்தேன். தெரிந்தால் சொல்லு!"
சுந்தரம் என்னை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்து விட்டு, "அவர்களைப் பற்றி என்ன கேட்கிறாய்? உனக்கு என்ன தெரிய வேண்டும்?" என்றான்.
"அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?"
"இந்த ஊரில்தான் எங்கேயோ இருக்கிறார்கள் என்று கேள்வி. நான் கூட இரண்டொரு தடவை பார்த்திருக்கிறேன். சிந்தாதிரிப் பேட்டையிலோ கோமளீசுவரன் பேட்டையிலோ இருக்கிறார்கள் போலிருக்கிறது. நீ எதற்காகக் கேட்கிறாய்?"
"ஆமாம். அவர்கள் சிந்தாதிரிப் பேட்டையிலே தான் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் வீடு கூட எனக்குத் தெரியும். நேற்று அவர்கள் வீட்டுக்குப் போய் வந்தேன்."
"அப்படியா! ரொம்ப சரி! நீதான் போய் வந்திருக்கிறாயே, என்னை என்ன கேட்கிறாய்?"
"ஒன்றுமில்லை. தேவகியின் புருஷனைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டேன்!"
"தேவகியின் புருஷனைப் பற்றி உனக்கு என்ன இவ்வளவு கவலை?"
"இல்லையப்பா! அவள் புருஷனைப் பற்றிப் பலவிதமாகக் கேள்விப்பட்டேன். ஒருவேளை உண்மை உனக்குத் தெரிந்திருக்கலாமோ என்று எண்ணிக் கேட்டேன். வேறொன்றுமில்லை!"
"பலவிதமாக அப்படி என்ன கேள்விப் பட்டாய்?"
நேற்றுக் காலை தேவகியின் வீட்டில் நடந்ததையெல்லாம் சுந்தரத்திடம் சொன்னேன். தேவகி சொன்னதும், அவள் தகப்பனார் சொன்னதும், நான் பார்த்ததும் ஒன்றுக்கொன்று முரணாயிருந்ததையும் சொன்னேன்.
"அவ்வளவும் பொய்! உன்னை நன்றாய் ஏமாற்றிவிட்டிருக்கிரார்கள்!" என்றான் சுந்தரம்.
"அவ்வளவும் பொய்யா? பின் எதுதான் உண்மை? உனக்குத் தெரியுமா?" என்றேன்.
"அவள் புருஷன் எப்போதோ 'கயா'வாகி விட்டான்! உனக்கு விதவா விவாகம் செய்து கொள்வதில் அபிப்பிராயம் இருந்தால்..."
"சீச்சீ! இது என்ன சுந்தரம்? அபஸ்மாரமாய்ப் பேசுகிறாயே? எனக்குப் பெண்டாட்டி பிள்ளைகுட்டி எல்லாரும் இருக்கிறார்கள்."
"ரொம்ப சரி! அப்படியென்றால் பேச்சை விட்டுவிடு!"
"என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று சொன்னாயே? அது என்ன என்று மட்டும் சொல்லி விடு! பாவம்! அவர்களைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருந்தது!"
"பரிதாபமா? அந்த நீலி நன்றாகத்தான் உன்னை மயக்கி விட்டிருக்கிறாள். என்னைக் கேட்டால் அவள் வசிக்கும் வீட்டுப் பக்கமே போகாதே என்பேன். தேவகியின் கணவனை ரஸாக்கர்கள் கொண்டு போகவும் இல்லை; அவனுக்குப் பைத்தியம் பிடிக்கவும் இல்லை. ஆசாமி தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போய்விட்டான்!"
"ஐயோ! எப்போது? எதற்காக?"
"எப்போது என்று எனக்குத் தெரியாது. சில வருஷம் ஆயிற்று என்று கேள்வி. எதற்காகத் தற்கொலை செய்து கொண்டான் என்றா கேட்கிறாய்? எல்லாம் அந்தப் பரதேவதை தேவகியின் தொல்லையைப் பொறுக்க முடியாமல் தான்! கிச்சாமி! நீ கூட அந்த நாளில் தேவகியைக் கலியாணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணம் வைத்திருந்தாயல்லவா?"
"கிடையவே கிடையாது! அந்தப் பொய்க் கதையைக் கட்டி விட்டவர்கள் நீயும் வைத்தியுந்தான்."
"அப்படியே யிருக்கட்டும். நீ தேவகியைக் கலியாணம் செய்து கொள்ளாதது உன் அதிர்ஷ்டந்தான். அதனாலேதான் நீ இன்றைக்குப் பிழைத்திருக்கிறாய். இல்லாவிட்டால் அவள் புருஷம் செய்தது போல் நீயல்லவா தற்கொலை செய்து கொண்டிருப்பாய்! போகட்டும். நான் புறப்படட்டுமா?" என்று கேட்டுக் கொண்டே சுந்தரம் எழுந்து நடந்து ரேழியில் நிறுத்தியிருந்த சைக்கிள் வண்டியைச் சரிபார்க்க ஆரம்பித்தான். நானும் காரில் ஏறிக் கொண்டு புறப்பட்டேன்.
சுந்தரம் கூறியது இன்னும் என் மூளையைக் குழப்பி விட்டது என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? அவன் சொன்னதே ஒரு வேளை உண்மையாயிருக்குமோ என்றும் சிந்திக்க ஆரம்பித்தேன். எது எப்படியிருந்தாலும் தேவகியிடம் ஒத்துக் கொண்டபடி இன்று சாயங்காலம் அவள் வீட்டுக்குப் போய் அவளையும் குழந்தைகளையும் பொருட்காட்சிக்கு அழைத்துப் போக வேண்டியது. பிறகு எப்படி உசிதமென்று தோன்றுகிறதோ, அப்படி நடந்து கொண்டால் போகிறது.
இவ்விதம் எண்ணமிட்டுக் கொண்டே வீடு சென்றேன். ஆனால் விவரமாகாத ஏதோ ஒரு விஷயம் என் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. அது என்னவென்று ஆனமட்டும் ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தேன். ஆனாலும் அது ஞாபகத்துக்கு வரவில்லை. 'தொண்டையிலிருக்கிறது வாயில் வரமாட்டேனென்கிறது' என்று சில சமயம் சொல்லுகிறோமல்லவா? அந்த மாதிரி என் உள்ளத்தில் தெளிவில்லாத ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருவது போல் தோன்றி, ஆனால் ஞாபகத்துக்கு வராமல் தொல்லைப்படுத்தியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 12 - Devagiyin Kanavan - தேவகியின் கணவன் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்ன, நான், அந்த, சுந்தரம், தேவகியின், கொண்டு, அவள், பற்றி, எனக்கு, செய்து, உனக்கு, இருக்கிறார்கள், என்னை, அவன், வேண்டும், கொஞ்சம், வேளை, தடவை, வந்தேன், என்றான், விஷயம், இப்போது, ஆமாம், தெரியுமா, கேட்கிறாய், பைத்தியம், டாக்டர், பிறகு, தான், முகம், எனக்குத், ஒன்றுமில்லை, உடம்பு, கிச்சாமி, போய், புருஷனைப், ஞாபகத்துக்கு, உனக்குத், ஏதாவது, கேட்டேன், உன்னை, சொன்னேன், நீங்கள், வந்து, அந்தப், கணவனை, கண்டு, பாவம், வீட்டில், உண்மையா, பற்றிய, உண்மை, போது, அல்லவா, மாதிரி, மனதில், இன்னொரு, உற்றுப், தேவகிக்கு, வரவில்லை, தேவகி, அவ்வளவு, சொல்ல, தெரியும்