தேவகியின் கணவன் - அத்தியாயம் 11
தேவகி தன்னுடைய கணவனைப் பற்றி "இப்போதே
சொல்லத்தான் வேண்டுமா?" என்று கேட்டபோது, அவளுடைய குரலில் எல்லையில்லாச்
சோகம் தொனித்தது. நான் எதிர்பார்த்தபடியே அவளுடைய இல்லற வாழ்க்கை துர்ப்பாக்கிய
வாழ்க்கைதான் போலும்!
என் இருதயம் கனிந்து உருகிற்று. கண்ணில் கண்ணீர் வந்துவிடும் போலிருந்தது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு, "உனக்கு அது கஷ்டம் தருவதாயிருந்தால், இப்போது சொல்ல வேண்டாம். இன்னொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம்!" என்றேன்.
"இல்லை, இல்லை! அதை இப்போதே சொல்லி விடுவதுதான் நல்லது. அந்த விஷயம் ஒன்று மனதில் பாரமாய் இருப்பானேன்?" என்று தேவகி சொல்லிவிட்டுத் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ஒருவாறு கூறினாள். அதன் சுருக்கம் வருமாறு:-
தேவகிக்கு முதலில் நிச்சயிக்கப்பட்ட கலியாணம் நின்று போன மூன்று வருஷத்துக்குப் பிறகு வேறு வரனுக்குக் கலியாணம் ஆயிற்று. கலியாணம் ஆனதும் குடும்பம் சென்னைக்குக் வந்து விட்டது. தேவகியின் கணவன் வைத்தியக் கல்வி படித்துத் தேறி டாக்டர் ஆனான். ஹைதராபாத் சமஸ்தானத்தில் டாக்டர்களுக்கு நல்ல வருமானம் என்று கேள்விப்பட்டு இருவரும் அங்கே போனார்கள். எதிர்பார்த்த படியே அங்கு நல்ல வருமானமும் வந்தது. பல வருஷ காலம் அவர்களுடைய இல்லற வாழ்க்கை சந்தோஷமாக நடந்து வந்தது.
பிறகு, ஹைதராபாத்துக்குச் சனியன் பிடித்தது! ரஸாக்கியர்களின் கொடூர ஆட்சி அந்த நவாப் சமஸ்தானத்தில் ஏற்பட்டது. அத்துடன் கம்யூனிஸ்டுகளின் தொல்லையும் சேர்ந்து கொண்டது. ஹைதராபாத்தில் வசித்த ஜனங்கள் எல்லாரையும் போல் தேவகியும் அவள் குடும்பத்தாரும் எப்போதும் என்ன ஆபத்து நேருமோ என்று கதிகலங்கிக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.
ஒருநாள் இரவு பத்து மணிக்கு யாரோ சிலர் அவர்களுடைய வீட்டு வாசலுக்கு வந்து தடதடவென்று கதவை இடித்தார்கள். கதவைத் திறந்ததும் கறுப்பு முகமூடி அணிந்த ஐந்தாறு தடியர்கள் வீட்டுக்குள் புகுந்தார்கள். டாக்டரை அவருடைய மருந்துப் பெட்டியையும், மற்ற அவசியமான கருவிகளையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். 'ஏதோ வைத்தியத்துக்குத் தானே கூப்பிடுகிறார்கள்?' என்று எண்ணி டாக்டர் அவர்களுடன் சென்றார். வாசலில் போலீஸ் வண்டியைப் போன்ற கூண்டு மோட்டார் வண்டி ஒன்று நின்றது. அதில் டாக்டரை ஏற்றி அழைத்துப் போனார்கள். அன்றைக்குப் போனவர் அப்புறம் திரும்பி வரவேயில்லை. எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் அவர் இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தேவகி தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து தன் தந்தையின் வீட்டில் தஞ்சம் புகுந்தாள். அது முதல் அப்பாவின் ஆதரவில் இருந்து வருகிறாள். எவ்வளவோ பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பார்த்தும், ஹைதராபாத் சர்க்காருக்கு மனுப் போட்டுப் பார்த்தும், தேவகியின் கணவனைப் பற்றி நாளது வரையில் தகவல் ஒன்றும் தெரியவில்லை!
இந்தத் துயரமான, பீதிகரமான வரலாற்றைத் தேவகி சொல்லிவிட்டு, கண்களில் துளித்த கண்ணீரைப் புடவைத் தலைப்பினால் துடைத்துக் கொண்டு "நான் வீட்டு வேலையைப் பார்க்கப் போகட்டுமா? இன்னும் சொல்ல வேண்டியது, பேச வேண்டியது எவ்வளவோ இருக்கிறது! இன்னொரு நாள் சொல்கிறேன்" என்றாள்.
அவள் போவதற்காக எழுந்து நின்றதும் எனக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
"தேவகி! என்னிடம் நீ கொஞ்சம் கூடச் சங்கோசப் படக்கூடாது. உனக்கு ஏதாவது எப்போதாவது என்னால் ஆகக்கூடிய உதவியிருந்தால் உடனே சொல்ல வேண்டும். அப்படி உனக்கு உதவி செய்யக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவேன்" என்றேன்.
தேவகி சில கண நேரம் யோசனை செய்துவிட்டு, "ஆமாம்; நானே ஒரு உதவி உங்களைக் கேட்கலாமென்றுதானிருந்தேன். நாளை மாலை இன்னொரு தடவை பொருட்காட்சிக்குப் போகவேண்டும் என்று குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள். பஸ்ஸில் இவர்களை அழைத்துக் கொண்டு போய் வருவது ரொம்பவும் கஷ்டமாயிருக்கிறது. உங்களிடம் தான் பெரிய மோட்டார் வண்டி இருக்கிறதே! நாளை சாயங்காலம் சுமார் நாலு மணிக்கு வந்து எங்களைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போக முடியுமா?" என்று கேட்டான்.
"இது என்ன பிரமாதம்? பேஷாக வந்து அழைத்துப் போகிறேன்!" என்று உற்சாகத்துடன் சொன்னேன்.
தேவகி சமையல் உள்ளுக்குச் சென்றதும், நானும் வெளிக் கிளம்பலாம் என்று யத்தனித்தேன். அச்சமயம் ஹெட்மாஸ்டர் ஸ்நான அறையிலிருந்து வந்துவிட்டார். "என்ன, கிருஷ்ணசாமி! புறப்படுகிறாயா?" என்றார்.
"புறப்பட வேண்டியதுதான்; உங்களிடம் விடை பெறுவதற்காகத்தான் காத்திருக்கிறேன்!" என்றேன்.
அவருடைய அறைக்குள் போனதும் "சற்றே உட்காரு, அப்பா, கிருஷ்ணசாமி! அவசரம் ஒன்றும் இல்லையே? கொஞ்சம் கழித்துப் போகலாம் அல்லவா?" என்றார்.
அதன்படியே நான் உட்கார்ந்தேன். ஏனெனில் என்னுடைய சந்தேகத்தை இன்னும் நான் நிவர்த்தி செய்து கொண்டபாடில்லை. தேவகியின் கையெழுத்துப் போல் எழுதியிருந்த அந்த 'போர்ஜரி' கடிதத்தை எழுதியது யார் என்னும் உண்மை அவர்களுக்குப் பிற்பாடு தெரிந்ததா? குற்றவாளி நான் இல்லை என்பதை அவர்கள் அப்புறமாவது தெரிந்து கொண்டார்களா? இதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆர்வம் அதிகமாயிருந்தது. ஆனால் அந்தப் பேச்சை எடுப்பதற்குச் சங்கோசமாயிருந்தது.
நான் உட்கார்ந்தும் ஹெட்மாஸ்டர் "தேவகி உன்னிடம் என்ன சொன்னாள்? என் பேரில் ஏதாவது புகார் சொன்னாளா? நான் யோகாசனம் செய்வது பற்றிக் குறை சொல்லியிருப்பாளே?" என்று கேட்டார்.
"அதெல்லாம் இல்லை, ஸார்! உங்களைப் பற்றி தேவகி ஏன் புகார் சொல்லப் போகிறாள்? பாவம், அவளுக்கு நேர்ந்த கஷ்டகாலத்தில் நீங்களாவது தஞ்சம் கொடுப்பதற்கு இருந்தீர்களே? தேவகியின் புருஷனுடைய கதியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நினைக்க நினைக்க ரொம்ப வருத்தமாயிருக்கிறது!" என்றேன்.
"ஓஹோ! புருஷனைப் பற்றியும் சொல்லி விட்டாளா? என்ன சொன்னாள்?" என்றார் ஹெட்மாஸ்டர்.
"ஹைதராபாத்தில் நடந்ததையெல்லாம் சொன்னாள். ஒரு நாள் இராத்திரி கறுப்பு முகமூடி போட்டுக் கொண்டு ஐந்தாறு பேர் வந்து டாக்டரை அழைத்துக் கொண்டு போனதைப் பற்றிச் சொன்னாள். அப்புறம் அவர் திரும்பியே வரவில்லையாமே?"
"அதை உன்னிடமும் சொல்லி விட்டாளா? கிருஷ்ணசாமி! நான் சொல்கிறேன், கேள்! தேவகி என்னுடைய பெண்தான். இருந்தாலும் அவள் சில சமயம் செய்கிறது எனக்குப் பிடிக்கிறதில்லை. இந்த மாதிரி வருகிறவர் போகிறவர்களிடம் எல்லாம்..." என்று ஹெட்மாஸ்டர் கூறியதும் நான் குறுக்கிட்டேன்.
"என்ன, ஸார், அப்படிச் சொல்கிறீர்கள்? என்னை வருகிறவர், போகிறவர்களோடு சேர்த்து விட்டீர்களே? ஏதோ பழைய விசுவாசத்தை நினைத்து என்னிடம் தன்னுடைய கஷ்டத்தைச் சொல்லலாம் என்று எண்ணித்தான் தேவகி சொன்னாள். அதற்காக நீங்கள் தேவகியைக் கோபித்துக் கொள்ள வேண்டாம்!" என்றேன்.
ஹெட்மாஸ்டர் தம்முடைய பிசகை உணர்ந்தவர் போல், "ஆமாம், கிருஷ்ணசாமி, உன்னிடம் சொன்னால் தவறில்லைதான். ஆனாலும் நாம் தான் கஷ்டப்படுகிறோம் என்றால், நம்மைச் சேர்ந்தவர்களிடமெல்லாம் நம்முடைய கஷ்டங்களைச் சொல்லி அவர்களையும் அநாவசியமாகக் கஷ்டப்படுத்தக் கூடாது அல்லவா?" என்றார்.
"சிநேகிதம் என்பது பின் எதற்காக? நம்முடைய கஷ்டங்களைச் சொல்லிக் கொள்வதற்கும் சமயா சமயங்களில் உதவியாயிருப்பதற்குந்தானே? என்னை வேற்று மனிதனாக நீங்கள் நினைக்கக் கூடாது. அது இருக்கட்டும்... உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அந்தக் கறுப்பு முகமூடி தரித்தவர்கள் ரஸாக்கியர்களாயிருப்பார்களா? அல்லது கம்யூனிஸ்டுகளாயிருப்பார்களா? ஹைதராபாத்தில் எனக்குத் தெரிந்த வர்த்தர்கள், - செல்வாக்கு உள்ளவர்கள், - சிலர் இருக்கிறார்கள். உங்கள் மாப்பிள்ளையைக் கண்டு பிடிப்பதற்கு நான் ஏதாவது முயற்சி செய்து பார்க்கட்டுமா?" என்று கேட்டேன்.
"பேஷாக முயற்சி செய்து பார்க்கலாம்; ஆனால் பலன் ஒன்றுமிராது!" என்றார் ஹெட்மாஸ்டர்.
அவர் இவ்விதம் கூறிய தொனி என் மன அமைதியைக் கெடுத்தது.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் எல்லாப் பிரயத்தனங்களும் செய்து பார்த்து விட்டீர்களா?" என்று கேட்டேன்.
"நான் ஒரு முயற்சியும் செய்யவில்லை!" என்றார் தேவகியின் தந்தை. பிறகு என் அருகில் வந்து மெல்லிய குரலில், "கிருஷ்ணசாமி! தேவகியின் சுபாவம் இன்னும் உனக்குத் தெரியவில்லையா? பாவம்! உன்னை அவள், ஏமாற்றி விட்டாள். அவள் வார்த்தையை நீ நம்பவே நம்பாதே அவ்வளவும் கட்டுக் கதை. தேவகியின் கணவன் இந்த ஊரிலேதான் இருக்கிறான்!" என்றார்.
இதைக் கேட்டதும், எனக்கு எவ்வளவு திகைப்பு ஏற்பட்டிருக்குமென்பதை வாசகர்களே ஊகித்து அறிந்து கொள்ளலாம்.
"தேவகி அவ்வளவு பொய் புனை சுருட்டுச் சொல்லுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லைதான். அப்படியானால் உங்கள் மாப்பிள்ளை இந்த ஊரில் தான் இருக்கிறாரா? இந்த ஊரில் என்றால் எங்கே?" என்றேன்.
"பைத்தியம் பிடித்தவர்கள் எங்கே இருப்பார்களோ, அங்கேதான்!"
"என்ன, என்ன?"
"ஆமாம், கிருஷ்ணசாமி! ஒரு நாள் உனக்கு உண்மை தெரியாமலிராது. இந்த அசட்டுப் பெண் அதை மறைத்து வைக்க முயல்வதால் என்ன பயன்? என் மாப்பிள்ளைக்குக் கொஞ்சம் பைத்தியம். கொஞ்சம் என்ன? ஒரே முற்றின பைத்தியம். அதுவும் சில நாளாய்..." என்று நிறுத்தினார்.
அதற்கு மேலே கேட்பதற்கு எனக்கும் விருப்பம் இல்லை. மனம் ஒரேயடியாய்க் குழம்பி விட்டது. தேவகியிடம் முன்னைக் காட்டிலும் அதிக அநுதாபம் ஏற்பட்டது. அவள் என்னிடத்தில் பொய் சொன்னது பற்றி எனக்குக் கொஞ்சமும் கோபமோ மனஸ்தாபமோ ஏற்படவில்லை. தன் புருஷன் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்று எந்த ஸ்திரீதான் தயக்கமின்றிச் சொல்வாள்? புருஷனைப் பற்றிக் கேட்டதும் தேவகியின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் எனக்கு நினைவு வந்தன. பாவம்! அவளைப் போய்க் கேட்கப் போனேனே? புண்ணிலே குச்சியை எடுத்துக் குத்துவது போல. ஹெட்மாஸ்டர் இவ்விதம் சொன்ன பிறகு, அந்தப் பழைய 'போர்ஜரி' கடிதத்தைப் பற்றிப் பிரஸ்தாபிக்கக் கூட எனக்கு மனம் வரவில்லை. அதற்கு இப்போது என்ன அவசரம்? பிறகு கேட்டுக் கொண்டால் போகிறது.
"சரி, ஸார்! போய்விட்டு நாளை வருகிறேன்! குழந்தைகளைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போவதற்காகத் தேவகி நாளை சாயங்காலம் வரச் சொல்லியிருக்கிறாள்" என்று கூறிவிட்டுக் கிளம்பினேன்.
அதே சமயத்தில் அந்த வீட்டின் மேல் மச்சிலிருந்து ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது. அது என்ன சத்தம் என்று சொல்ல முடியாது. சிம்மத்தின் கர்ஜனை, புலியின் உறுமல், ஓநாயின் ஊளை, - இவற்றையெல்லாம் விட அந்தச் சத்தம் பயங்கரமாயிருந்தது. கதைகளிலே நாம் படித்திருக்கும் ராட்சதர்கள் ஒருவேளை அப்படித்தான் சத்தமிடுவார்கள் போலும்.
என் உடம்பிலும் ஒவ்வொரு ரோமமும் குத்திட்டு நின்றது. என்னுடைய கால்கள் கீழே நிலைத்து நிற்க முடியாமல் நடுநடுங்கின.
"ஸார்! ஸார்! இது என்ன?" என்று கேட்டேன்.
"எது என்ன என்று கேட்கிறாய்? அடுத்த வீட்டில் ஏதோ புருஷன் பெண்டாட்டி சண்டை போலிருக்கிறது! அதைப் பற்றி நமக்கு என்ன?" என்றார் ஹெட்மாஸ்டர்.
அந்த வீட்டிலிருந்து நான் கிளம்பிச் சென்ற போது ரேழி நடையில் வைத்திருந்த சைக்கிளில் கால் தடுக்கிற்று. கட்டை விரலில் காயம் உண்டாயிற்று.
ஆனால் காயம்பட்டது என்பதாக எனக்கு அப்போது தெரியவேயில்லை. வீடு சென்ற பிறகுதான் தெரிந்தது.
வாசலில் நின்ற மோட்டாரில் நான் ஏறி உட்கார்ந்து காரைச் செலுத்திய போது 'ஸ்டியரிங்'கில் வைத்த என் கைகள் நடுங்கின; 'ஆக்ஸிலேட'ரில் வைத்த என் காலும் நடுங்கிற்று.
மோட்டாரை விடுவதற்கு முன்னால் தற்செயலாக அந்த வீட்டின் மேல் மாடிப் பக்கம் பார்த்தேன். திறந்திருந்த ஜன்னல் வழியாக ஒரு பயங்கரமான மனித உருவம் என்னை நோக்கிக் கொண்டிருந்தது. அந்த உருவத்தின் முகத்தில் பைத்தியம் என்று எழுதி ஒட்டியிருந்தது!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 11 - Devagiyin Kanavan - தேவகியின் கணவன் - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்ன, நான், தேவகி, தேவகியின், ஹெட்மாஸ்டர், என்றார், அந்த, வந்து, கொண்டு, அவள், எனக்கு, கிருஷ்ணசாமி, என்றேன், செய்து, சொன்னாள், ஸார், பிறகு, இல்லை, சொல்ல, பற்றி, அழைத்துப், வாழ்க்கை, உனக்கு, பைத்தியம், கொஞ்சம், நாளை, சொல்லி, ஏதாவது, தான், நீங்கள், கேட்டேன், சத்தம், என்னை, பாவம், பற்றிக், என்னுடைய, எவ்வளவோ, போல், கறுப்பு, ஹைதராபாத்தில், கலியாணம், தன்னுடைய, இன்னொரு, முகமூடி, டாக்டரை, நாள், வேண்டும், இன்னும், அழைத்துக், அவர், ஆமாம்