முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.073.திருமங்கலக்குடி
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.073.திருமங்கலக்குடி
5.073.திருமங்கலக்குடி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புராணவரதேசுவரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
1800 | தங்க லப்பிய தக்கன் பெருவேள்வி அங்க லக்கழித் தாரருள் செய்தவன் கொங்க லர்க்குழல் கொம்பனை யாளொடு மங்க லக்குடி மேய மணாளனே. |
5.073.1 |
மணம் உடைய மலரைச்சூடிய கூந்தலை உடைய பூங்கொம்பு போன்ற உமாதேவியோடு மங்கலக்குடியில் மேவிய மணவாளன், தம்மைக் கலக்குதற்காகத் தக்கன் செய்த பெருவேள்வியை அங்கு அலைக்கழித்துப் பின் நிறைந்த அருள் புரிந்தவன்.
1801 | காவி ரியின் வடகரைக் காண்தகு மாவிரி யும்பொ ழில்மங் கலக்குடித் தேவ ரியும்பி ரமனுந் தேடொணொத் தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே. |
5.073.2 |
காவிரியின் வடகரையில் காணத்தக்க மாமரங்கள் விரிகின்ற பொழில் சூழ்ந்த மங்கலக்குடியில், திருமாலாகிய தேவும், பிரமனும் தேடி அறியவியலாத தூய எரிவிடும் சுடரை உடைய சோதியுள் சோதியாக வீற்றிருக்கிறான் இறைவன்.
1802 | மங்க லக்குடி யீசனை மாகாளி வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணும்நேர் சங்கு சக்கர தாரி சதுர்முகன் அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே. |
5.073.3 |
மங்கலக்குடி இறைவனை மாகாளியும், சூரியனும், விண்ணும் மண்ணும் நிகராய சங்கு, சக்கரதாரியாகிய திருமாலும், பிரமனும், அகத்தியனும் அருச்சித்தார்கள்.
1803 | மஞ்சன் வார்கடல் சூழ்மங் கலக்குடி நஞ்ச மாரமு தாக நயந்துகொண் டஞ்சு மாட லமர்ந்தடி யேனுடை நெஞ்ச மாலய மாக்கொண்டு நின்றதே. |
5.073.4 |
நீண்ட கடல் சூழ்ந்த மங்கலக்குடியில் வீற்றிருக்கும் மைந்தனாகிய (பெருவீரனாகிய ) பெருமான், ஆலகாலவிடத்தைச் செறிந்த அமுதமாக விரும்பி உட்கொண்டு, பஞ்சகவ்வியம் ஆடலை விரும்பி அடியேனுடைய நெஞ்சத்தை ஆலயமாகக்கொண்டு நிலை பெற்றான்.
1804 | செல்வம் மல்கு திருமங் கலக்குடி செல்வம் மல்கு சிவநிய மத்தராய்ச் செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச் செல்வன் தேவியொ டுந்திகழ் கோயிலே. |
5.073.5 |
செல்வம் நிறைந்த திருமங்கலக்குடியில், அருட்செல்வம் நிறைந்த சிவ ஒழுக்கம் உடையவராய்ச் செல்வம் மல்கும் செழித்த மறையோர் தொழத் திருவருட்செல்வனாகிய பெருமான் உமாதேவியோடும் திகழ்வது திருக்கோயிலிலாகும்.
1805 | மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன்பெயர் உன்னு வாரு முரைக்கவல் லார்களும் துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே. |
5.073.6 |
நிலைபெற்ற புகழை உடைய மங்கலக்குடியில் நிலைபெற்ற பின்னுதல் உடைய நீண்ட சடையையுடைய பிஞ்ஞகன் திருநாமத்தை எண்ணுவாரும், சொல்லும் வல்லமை உடையாரும், நன்னெறித் தொடர்பு எய்தத் துன்னுவார் ஆவர்.
1806 | மாத ரார்மரு வும்மங் கலக்குடி ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன் வேத நாயகன் வேதியர் நாயகன் பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. |
5.073.7 |
பெண்கள் பொருந்துகின்ற மங்கலக்குடியின் ஆதிநாயகன், தேவர்கள் தலைவன்; வேதநாயகன்; வேதியர்நாயகன்; பூதநாயகன்; புண்ணியமூர்த்தி ஆவன்.
1807 | வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி விண்ட தாதையைத் தாளற வீசிய சண்ட நாயக னுக்கருள் செய்தவன் துண்ட மாமதி சூடிய சோதியே. |
5.073.8 |
வண்டுகள் சேரும் பொழில் சூழ்ந்த மங்கலக்குடியில் இளம் பிறை சூடிய சோதியாகிய பெருமான், மனம் மாறுபட்ட தந்தையைக் கால் ஒடியுமாறு மழுவை வீசிய சண்டேசுரர்க்கு அருள் புரிந்த இறைவன் ஆவன்.
1808 | கூசு வாரலர் குண்டர் குணமிலர் நேச மேது மிலாதவர் நீசர்கள் மாசர் பால்மங் கலக்குடி மேவிய ஈசன் வேறு படுக்கவுய்ந் தேனன்றே. |
5.073.9 |
மங்கலக்குடி இறைவன், தம் சிறுமை நோக்கிக் கூசாதவர்களும், குண்டர்களும், நற்குணமில்லாதவர்களும், அன்புசிறிதும் இல்லாதவர்களும், கீழானவர்களும், குற்றம் உடையவர்களுமாகிய சமணரோடு என்னை வேறுபடுக்க, உய்ந்தேன்.
1809 | மங்க லக்குடி யான்கயி லைம்மலை அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன் தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந் தங்க லைத்தழு துய்ந்தனன் தானன்றே. |
5.073.10 |
மங்கலக்குடியானுக்குரிய கயிலைமலையினை அலைத்து எடுக்கலுற்ற இராவணன் தன் கரங்களோடு தாளும், தலையும் சிதைந்து அலைக்கப்பெற்றுப் பின் அழுது அருள்பெற்று நன்றே உய்ந்தான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 71 | 72 | 73 | 74 | 75 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கலக்குடி - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கலக்குடி, மங்கலக்குடியில், செல்வம், நாயகன், இறைவன், பெருமான், நிறைந்த, சூழ்ந்த, லக்குடி, திருச்சிற்றம்பலம், விரும்பி, பிஞ்ஞகன், திருமுறை, நிலைபெற்ற, தக்கன், சூழ்மங், திருமங்கலக்குடி, பொழில், பிரமனும், மங்கலக்குடி, சோதியே, செய்தவன்