முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.071.திருவிசயமங்கை
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.071.திருவிசயமங்கை

5.071.திருவிசயமங்கை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - விசயநாதேசுவரர்.
தேவியார் - மங்கைநாயகியம்மை.
1780 | குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ் வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே இசைய மங்கையுந் தானுமொன் றாயினான் விசைய மங்கையுள் வேதியன் காண்மினே. |
5.071.1 |
விசயமங்கையுள் வீற்றிருக்கும் வேதியனாகிய பெருமான், தம் அங்கையில் தருப்பையும், மலர்களும் கொண்ட அழகிய, குற்றமற்ற மங்கலவாசகம் உரைப்போர் வாழ்த்தும்படி பொருந்த உமையும் தானும் ஒரு திருமேனி உருவில் நின்றான்.
1781 | ஆதி நாத னடல்விடை மேலமர் பூத நாதன் புலியத ளாடையன் வேத நாதன் விசயமங் கையுளான் பாத மோதவல் லார்க்கில்லை பாவமே. |
5.071.2 |
ஆதிக்கண் தோன்றியநாதனும், வலியுடைய இடபத்தின்மேல் அமரும் பூதநாதனும், புலித்தோலாடையனும், வேதநாதனும் ஆகிய பெருமான் விசயமங்கையில் உள்ளான்; அவன் திருவடிகளைப் புகழ்ந்து உரைக்க வல்லார்க்குப் பாவம் இல்லை.
1782 | கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில் வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை உள்ளி டத்துறை கின்ற வுருத்திரன் கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே. |
5.071.3 |
கொள்ளிடக்கரைக் கோவந்தபுத்தூரில் வெள்ளிய இடபம் பூசிக்க அதற்கு அருள்செய்தவனும்,விசயமங்கையுள் இடமாகக்கொண்டு உறைகின்றவனும் ஆகிய உருத்திரன், கிள்ளிய விடத்துப் பிரமனுக்குத் தலை ஒன்று அற்றது.
1783 | திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம் அசைய அங்கெய்திட் டாரழ லூட்டினான் விசைய மங்கை விருத்தன் புறத்தடி விசையின் மங்கி விழுந்தனன் காலனே. |
5.071.4 |
விசயமங்கையில் உள்ள மிகப் பழையவனாகிய பெருமான், திசைகள் எங்கும் குலுங்குமாறு திரிபுரங்கள் அசையும்படிப் பொருந்திய அழலூட்டியவன்; அப்பெருமான் திருவடிப்புறத்து விரைந்து மயங்கி விழுந்தனன் கூற்றுவன்.
1784 | பொள்ள லாக்கை யகத்திலைம் பூதங்கள் கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள் விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான் உள்ளல் நோக்கியென் னுள்ளுள் உறையுமே. |
5.071.5 |
ஓட்டைகளை உடைய உடம்பினகத்து ஐம்பூதங்கள் கள்ளத்தனம் உடையவாக்கிக் கலக்கிய கரிய இருளிலே, அவ்விருளை விலக்குதல் புரிந்த விசயமங்கைப்பெருமான் தன் திருவுள்ளத்தே நினைந்தருளலை நோக்கி என் உள்ளத்துள்ளே உறைவான்.
1785 | கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச் செல்வ போற்றியென் பாருக்குத் தென்திசை எல்லை யேற்றலு மின்சொலு மாகுமே. |
5.071.6 |
முல்லைநிலத்துக்குரிய இடபக்கொடியையும், மேருமலையாகிய வில்லையும் பொருந்த உடையவனாகிய விசயமங்கையின் அருட்செல்வ! போற்றி! என்று உரைப்பார்க்குத் தென்திசையில் ஏறுதலும், இனிய புகழும் உளதாகும்.
1786 | கண்பல் உக்க கபாலம்அங் கைக்கொண்டு உண்ப லிக்குழ லுத்தம னுள்ளொளி வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே. |
5.071.7 |
கண்ணும் பல்லும் சிந்திவிட்டகபாலத்தைத் தம் அழகியகைக்கொண்டு உண்ணுகின்ற பலிக்கு எங்கும் திரிகின்ற உத்தமனும், வெண்பிறையைக் கண்ணியாக உடையானுமாகிய விசயமங்கையின் நண்புக்குரிய கடவுளைத் தொழப்பெற்றது நன்மையேயாகும்.
1787 | பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து வேண்டும் நல்வரங் கொள்விச யமங்கை ஆண்ட வன்னடி யேநினைந் தாசையால் காண்ட லேகருத் தாகி யிருப்பனே. |
5.071.8 |
பாண்டுவின் மகனாகிய பார்த்தன் (அருச்சுனன்) பணிகள் செய்து தான் விரும்பிய நல்வரத்தைக் கொண்ட விசயமங்கையில் உறையும் ஆண்டவன் திருவடியே நினைந்து ஆசையால் அவனைக் காணுதலே கருத்தாக இருப்பன் அடியேன்.
1788 | வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள் வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான் சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப் பந்து வாக்கி உய்யக்கொளுங் காண்மினே. |
5.071.9 |
மயக்கந் தீர்தற்குரிய மனிதர்களே! அடியேன் கூறுவதை வந்து கேட்பீராக; வெந்த திருநீற்றை அணிந்தவனாகிய விசயமங்கைப் பெருமான் தன்னைச் சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனத் தன் உறவுடையவராக்கி உய்யக் கொள்வான்; காண்பீராக.
1789 | இலங்கை வேந்த னிருபது தோளிற விலங்கல் சேர்விர லான்விச யமங்கை வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும் நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே. |
5.071.10 |
இலங்கைக்கரசனாகிய இராவணனது இருபது தோள்களும் இற்று விழும்படியாகத் திருக்கயிலையை ஊன்றிய திருவிரலை உடையவனாகிய பெருமானுக்குரிய விசய மங்கையை வலம் வந்து வணங்குபவர்களும், வாழ்த்து இசைப்பவர்களும் நன்னெறிநாடித் தமக்கு நலம் செய்வாராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 69 | 70 | 71 | 72 | 73 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவிசயமங்கை - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெருமான், யமங்கை, விசயமங், விசயமங்கையில், கைப்பிரான், யான்விச, உடையவனாகிய, அடியேன், பார்த்தன், விசயமங்கையின், கலக்கிய, விழுந்தனன், விசயமங்கையுள், காண்மினே, திருமுறை, பொருந்த, திருச்சிற்றம்பலம், திருவிசயமங்கை, எங்கும்