முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.040.திருக்கழிப்பாலை
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.040.திருக்கழிப்பாலை

5.040.திருக்கழிப்பாலை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பால்வண்ணநாதர்.
தேவியார் - வேதநாயகியம்மை.
1467 | வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள் எண்ணி நாமங்க ளேத்தி நிறைந்திலள் கண்ணு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம் அண்ண லேயறி வானிவள் தன்மையே. |
5.040.1 |
கழிப்பாலை இறைவனின் நிறம் வடிவம் முதலியவற்றைச்சென்று நேரே கண்டிலள். அவன் திருநாமங்களை எண்ணினாளில்லை. காணாமலே காதல்கொண்டு பிதற்றும் இவள் தன்மையைப் பொழில் சூழ்ந்த கழிப்பாலை இறைவனே அறிவான்.
1468 | மருந்து வானவ ருய்யநஞ் சுண்டுகந் திருந்த வன்கழிப் பாலையு ளெம்பிரான் திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள் பரிந்து ரைக்கிலு மென்சொற் பழிக்குமே. |
5.040.2 |
தேவர்கள் அமிர்தத்தை உண்டு உய்யத் தான் நஞ்சினை உண்டு உகந்து இருப்பவனும் வலிய கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம்பெருமானுமாகிய இறைவனின் சேவடிகளைச் சிந்தையுள் வைத்து யான் பரிந்து உரைத்தாலும், இவள் என் சொல்லைப் பழிக்கின்றாள்.
1469 | மழலை தான்வரச் சொல்தெரி கின்றிலள் குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ அழக னேகழிப் பாலையெம் மண்ணலே இகழ்வ தோவெனை யேன்றுகொ ளென்னுமே. |
5.040.3 |
குழல் இசை போன்ற மொழியினை உடைய இவள், மழலைச்சொல்லே கிளக்கும் இயல்பினள்; தெரியுமாறு சொற்களைப்பேசா இயல்பினளாய்க் கூறிய மொழிகளைக் கேட்பீர்களாக; "அழகனே! கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம் தலைவனே! என்னை இகழ்வதோ? ஏற்றுக்கொள்" என்கின்றாள்.
1470 | செய்ய மேனிவெண் ணீறணி வான்றனை மைய லாகி மதிக்கில ளாரையும் கைகொள் வெண்மழு வன்கழிப் பாலையெம் ஐய னேயறி வானிவள்தன்மையே. |
5.040.4 |
சிவந்த மேனியும், அதில் வெண்ணீறு அணியும் கோலமும் உடைய சிவபெருமானின்மேல் மையல் உடையவளாகி, இவள் ஆரையும் மதிக்கிலள்; கையிற் பிடித்த வெண்மழுவினனும், கழிப்பாலையில் உறைவானும் ஆகிய இறைவனே இவள் தன்மையை அறிவான்.
1471 | கருத்த னைக்கழிப் பாலையுள் மேவிய ஒருத்த னைஉமை யாளொரு பங்கனை அருத்தி யாற்சென்று கண்டிட வேண்டுமென் றொருத்தி யாருள மூசல தாடுமே. |
5.040.5 |
ஒருத்தியின் உள்ளம், கருத்தின்கண் இருப்பவனும், கழிப்பாலையுள் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவனும், உமையாளை ஒருபங்கில் உடையவனும் ஆகிய பெருமானை விருப்பத்தாற்சென்று கண்டிடவேண்டும் என்று ஊசலாடுகிறது.
1472 | கங்கை யைச்சடை வைத்து மலைமகள் நங்கை யையுட னேவைத்த நாதனார் திங்கள் சூடித் திருக்கழிப் பாலையான் இங்கு வந்திடு மென்றிறு மாக்குமே. |
5.040.6 |
இப்பெண், சடையிற் கங்கையை வைத்து மலைமகளாகிய நங்கையைத் தன்னொரு பங்கில் வைத்த இறைவனாகிய திருக்கழிப்பாலைப் பெருமான் இளம்பிறை சூடி இங்குத் திருவுலாப்போதற்கு எழுந்தருள்வான் என்று இறுமாப்பு அடைகின்றாள்.
1473 | ஐய னேயழ கேயன லேந்திய கைய னேகறை சேர்தரு கண்டனே மையு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம் ஐய னேவிதி யேயரு ளென்னுமே. |
5.040.7 |
இவள், "தலைவனே! அழகனே! தழலை ஏந்திய கரத்தவனே! திருநீலகண்டனே! மேகங்கள் உலாவுகின்ற பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம் அழகியவனே! நன்மை தீமைகளை விதிப்பவனே! அருள்வாயாக!" என்று கூறுகின்றாள்.
1474 | பத்தர் கட்கமு தாய பரத்தினை முத்த னைமுடி வொன்றிலா மூர்த்தியை அத்த னையணி யார்கழிப் பாலையெம் சித்த னைச்சென்று சேருமா செப்புமே. |
5.040.8 |
இவள், அன்பர்கட்கு அமுதாயுள்ள மேலானவனை, முத்தியை அளிப்பவனை, முடிவு ஒன்று இல்லாத மூர்த்தியை, தலைவனை, அழகு நிரம்பிய கழிப்பாலையில் வீற்றிருப்பவனாகிய என் சித்தத்தவனைச் சென்று சேருமாறு ஒரு நெறி எனக்குச் செப்புவீர்களாக!" என்கின்றாள்.
1475 | பொன்செய் மாமுடி வாளரக் கன்தலை அஞ்சு நான்குமொன் றும்மிறுத் தானவன் என்செ யான்கழிப் பாலையு ளெம்பிரான் துஞ்சும் போதும் துணையென லாகுமே. |
5.040.10 |
பொன்னாற் செய்யப்பட்ட முடியணிந்தவனும், வாளுடையவனுமாகிய இராவணன் தலைகள் பத்தும் இறுத்தவன்! கழிப்பாலையுள் எம் தலைவன் என்ன செய்யாதவன்? ஆதலின் அப்பெருமானே தூங்கும்போதும் நமக்குத் துணை எனற்குப் பொருந்தியவன் ஆவன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கழிப்பாலை - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கழிப்பாலையில், பாலையெம், வீற்றிருக்கும், வைத்து, இருப்பவனும், பரிந்து, சிந்தையுள், ளெம்பிரான், மூர்த்தியை, என்கின்றாள், ளென்னுமே, பாலையு, கழிப்பாலையுள், தலைவனே, வன்கழிப், லாம்பொழில், சூழ்கழிப், கண்டிலள், திருச்சிற்றம்பலம், திருமுறை, கழிப்பாலை, இறைவனின், அறிவான், இறைவனே, சூழ்ந்த, பொழில், திருக்கழிப்பாலை