முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.038.திருக்கடவூர்மயானம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.038.திருக்கடவூர்மயானம்
5.038.திருக்கடவூர்மயானம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர்.
தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.
1448 | குழைகொள் காதினர் கோவண ஆடையர் உழையர் தாங்கட வூரின் மயானத்தார் பழைய தம்மடி யார்செய்த பாவமும் பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே. |
5.038.1 |
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் சங்கவெண்குழையணிந்த காதினர்; கோவண ஆடையினர்; அன்பு செய்யும் அடியார்கட்கு மிக்க அண்மையில் உள்ளவர்; தம் பழைய அடியார்கள் செய்த பாவமும் பிழையும் தீர்ப்பவர்.
1449 | உன்னி வானவ ரோதிய சிந்தையில் கன்னல் தேன்கடவூரின் மயானத்தார் தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம் பின்னை யென்னார் பெருமா னடிகளே. |
5.038.2 |
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், தம்மை உன்னித் தேவர்கள் ஓதும் போது அவர்சிந்தையில்கன்னல் போன்றும் தேன் போன்றும் இனிப்பவர்; தம்மை நோக்கித் தொழுது எழும் அடியவர்கட்கெல்லாம் 'பிறகு அருள்செய்வோம்' என்னாது அப்போதே அருளும் பெருங்கருணை உடையவர்.
1450 | சூல மேந்துவர் தோலுடை ஆடையர் ஆல முண்டமு தேமிகத் தேக்குவர் கால காலர் கடவூர் மயானத்தார் மாலை மார்பர் பெருமா னடிகளே. |
5.038.3 |
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், சூலம் ஏந்தியிருப்பவர்; புலித்தோலை உடுத்திருப்பவர்; ஆலம் உண்டு அமுதைப் பிறர்க்குத் தேக்கி அளிப்பவர் . காலனுக்கும் காலர்; மாலையணிந்த மார்பினர்.
1451 | இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல் மறவ னார்கட வூரின் மயானத்தார் அறவ னாரடி யாரடி யார்தங்கள் பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே. |
5.038.4 |
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், தேவர்கள் தொழுகின்ற பைங்கழலை உடைய இறைவர்; வீரம் உடையவர்; அறமே வடிவானவர்; அடியார்களின் பிறவி நோயைத் தீர்ப்பவர்.
1452 | கத்து காளி கதந்தணி வித்தவர் மத்தர் தாங்கட வூரின் மயானத்தார் ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு பித்தர் காணும் பெருமா னடிகளே. |
5.038.5 |
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் கத்துகின்ற காளியின் சினத்தைத் தணிவித்தவர்; மதம் பொருந்தியவர் (ஊமத்தமலரைச் சூடியவர்) ஒத்தும் ஒவ்வாதும் செய்யும் செயல் பலவற்றைச் செய்து உழல்கின்ற பித்தர்போல்வர்; காண்பீர்களாக.
1453 | எரிகொள் மேனி யிளம்பிறை வைத்தவர் கரியர் தாங்கட வூரின் மயானத்தார் அரிய ரண்டத்து ளோரயன் மாலுக்கும் பெரியர் காணும் பெருமா னடிகளே. |
5.038.6 |
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், சிவந்த தழல் வண்ணம் கொண்ட திருமேனியும், இளம்பிறை வைத்த சடையும் உடையவர்; அயிராவணம் என்ற ஆனையை உடையவர்; அயன், திருமால் முதலிய தேவர்கள் யாவருக்கும் காண்டற்கு அரியர்; பெரியர்; காண்பீர்களாக.
1454 | அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார் வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும் பிணங்கொள் காடர் பெருமா னடிகளே. |
5.038.7 |
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், உமை ஒருபாகம் உடையவர்; ஆரணங்களாகிய நான் மறைகளின் தொகுதிகள் தொழுது சேரும் தகைமை உடையவர்; தம்மை வணங்குவார்களது துன்பங்களைத் தீர்ப்பவர்; மயக்கம் மிகுவிக்கும் பிணங்களைக் கொண்ட சுடுகாடே பெரும்பதியாக் கொண்டவர்.
1455 | அரவு கையின ராதி புராணனார் மரவு சேர்கட வூரின் மயானத்தார் பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வர் பிரமன் மாற்கும் பெருமா னடிகளே. |
5.038.8 |
கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், அரவம் உடைய கையினர்; ஆதியிற்றோன்றிய பழமையானவர்; தம்மைப் பரவும் அடியார்களது இடர்களைத் தீர்ப்பவர்; அவர்களைப் பணியும் கொள்பவர்; பிரமன், மாலுக்கும் பெரிய இயல்புடையவராவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கடவூர்மயானம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கடவூர், னடிகளே, பெருமா, மயானத்தாராகிய, அடிகள், மயானத்தார், பெருமான், வூரின், உடையவர், தீர்ப்பவர், தீர்ப்பர், தாங்கட, தேவர்கள், காணும், காண்பீர்களாக, பெரியர், பிரமன், வாரிடர், சேர்கட, தொழுது, மாலுக்கும், நோக்கித், காதினர், ஆடையர், பாவமும், திருச்சிற்றம்பலம், திருக்கடவூர்மயானம், செய்யும், திருமுறை, போன்றும்