முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.096.திருநெல்வெண்ணெய்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.096.திருநெல்வெண்ணெய்
3.096.திருநெல்வெண்ணெய்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வெண்ணையப்பர்.
தேவியார் - நீலமலர்க்கண்ணம்மை.
3831 | நல்வெணெய்
விழுதுபெய் தாடுதிர் நாடொறும் நெல்வெணெய் மேவிய நீரே நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும் சொல்வண மிடுவது சொல்லே |
3.096.1 |
நல்ல வெண்ணெய் விழுதாகப் பெய்து செய்யப்பட்ட திருமஞ்சனம் நாள்தோறும் கொண்டருளுவீர். திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே! திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் உம்மைத் தினந்தோறும் துதித்துச் சொல்லப்படுகின்ற சொற்களே பயன்தரும் சொற்களாகும்.
3832 | நிச்சலு
மடியவர் தொழுதெழு நெல்வெணெய்க் கச்சிள வரவசைத் தீர கச்சிள வரவசைத் தீருமைக் காண்பவர் அச்சமொ டருவினை யிலரே |
3.096.2 |
நாள்தோறும் அடியவர்கள் தொழுது எழுகின்ற, நெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இளமையான பாம்பைக் கச்சாக இடையில் அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு கச்சாக இளம் பாம்பை அணிந்துள்ள உம்மைத் தரிசிப்பவரே துன்பங்களைக் கண்டு அச்சப்படாதவர், கொடிய வினைகளும் இல்லாதவர்.
3833 | நிறைவிரி
தொல்புகழ் நெல்வெணெய் மேவிய அரைவிரி கோவணத் தீரே அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு உரைவிரிப் போருயர்ந் தோரே |
3.096.3 |
வரிசையாக உலகெங்கும் பரந்த தொன்மையான புகழினையுடைய திருநெல்வெண்ணெயில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இடையில் விரித்துக் கட்டிய கோவணத்தையுடைய சிவபெருமானே! அவ்வாறு கோவணத்தை விரித்துக் கட்டிய உம்மை மலர்களைக் கொண்டு பூசித்து, உமது புகழைப் போற்றிப் பாடுபவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர்.
3834 | நீர்மல்கு
தொல்புகழ் நெல்வெணெய் மேவிய ஊர்மல்கி யுறையவல் லீரே ஊர்மல்கி யுறையவல் லீருமை யுள்குதல் பார்மல்கு புகழவர் பண்பே |
3.096.4 |
நீர்வளம்மிக்க தொன்மையான புகழ் பொருந்திய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தை விரும்பி அவ்வூரில் நிலையாக வீற்றிருந்தருளும் சிவபெருமானே! அவ்வாறு அவ்வூரில் நிலையாக வீற்றிருந்தருளுகின்ற உம்மை எப்போதும் இடையறாது தியானித்தலே உலகின் உயர்ந்த புகழையுடைய சிவஞானிகள் இயல்பாகும்.
3835 | நீடிளம்
பொழிலணி நெல்வெணெய் மேவிய ஆடிளம் பாப்பசைத் தீர ஆடிளம் பாப்பசைத் தீருமை யன்பொடு பாடுள முடையவர் பண்பே |
3.096.5 |
நீண்ட இளமரங்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, ஆடுகின்ற இளம்பாம்பினைக் கச்சாகக் கட்டியுள்ள சிவபெருமானே! அவ்வாறு ஆடுகின்ற இளம்பாம்பைக் கச்சாக அணிந்த உம்மை அன்போடு பாடுகின்ற உள்ளம் உடையவர்களின் பண்பே சிறந்ததாகும்.
3836 | நெற்றியோர்
கண்ணுடை நெல்வெணெய் மேவிய பெற்றிகொள் பிறைநுத லீரே பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல் கற்றறி வோர்கள்தங் கடனே |
3.096.6 |
நெற்றிக்கண்ணை உடையவரும், திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவரும், அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடைய வருமாகிய சிவபெருமானே! அவ்வாறு பிறைபோன்ற நெற்றியுடைய உமா தேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.
3837 | நிறையவர்
தொழுதெழு நெல்வெணெய் மேவிய கறையணி மிடறுடை யீரே கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர் உறைவதும் உம்அடிக் கீழே |
3.096.7 |
நிறையுடையவர்கள் தொழுது எழுகின்ற திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவபெருமானே! அவ்வாறு விடமுண்ட கறுத்த கண்டத்தையுடைய உம்மைத் தரிசிப்பவர்கள் உம் திருவடிக்கீழ் என்றும் வீற்றிருப்பர்.
3838 | நெருக்கிய
பொழிலணி நெல்வெணெய் மேவியன் றரக்கனை யசைவுசெய் தீர அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய் திருக்கவல் லாரிட ரிலரே |
3.096.8 |
நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும் திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுப வரும், அரக்கனான இராவணனை வலிகுன்றச் செய்தவருமான சிவபெருமானே! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச் செய்தவரான உம்மை அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே இல்லாதவர்கள் ஆவர்.
3839 | நிரைவிரி
சடைமுடி நெல்வெணெய் மேவியன் றிருவரை யிடர்கள் செய்தீரே இருவரை யிடர்கள் செய்தீருமை யிசைவொடு பரவவல் லார்பழி யிலரே |
3.096.9 |
வரிசையாக விரிந்த சடைமுடியினை உடையவராய்,திரு நெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவராய், அன்று திருமாலும், பிரமனும் உம் அடிமுடி காணாமல் துன்பம் அடையச் செய்த சிவபெருமானே! அவ்வாறு திருமால், பிரமன் என்னும் இருவரைத் துன்பம் அடையச் செய்தவராகிய உம்மை உள்ளும், புறமும் ஒத்து வணங்கிப் போற்று பவர்கள் பழியில்லாதவர் ஆவர்.
3840 | நீக்கிய
புனலணி நெல்வெணெய் மேவிய சாக்கியச் சமண் கெடுத் தீரே சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது பாக்கிய முடையவர் பண்பே |
3.096.10 |
வறுமை, பிணி முதலியவற்றை நீக்கியவரும், திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவரும், புத்தமும், சமணமும் கெடுத்தவருமாகிய சிவபெருமானே! அவ்வாறு புத்தமும், சமணமும் கெடுத்த உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது புண்ணியம் செய்தவர்களின் பண்பாகும்.
3841 | நிலமல்கு
தொல்புகழ் நெல்வெணெ யீசனை நலமல்கு ஞானசம் பந்தன் நலமல்கு ஞானசம் பந்தன் செந்தமிழ் சொலமல்கு வார்துய ரிலரே |
3.096.11 |
நிலவுலகெங்கும் நிறைந்த தொன்மையான புகழையுடைய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, நன்மைகளைத் தருகின்ற ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுவதில் மகிழ்ச்சி மிக்கவர்கள் துன்பம் இல்லாதவர்கள் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெல்வெண்ணெய் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னும், திருநெல்வெண்ணெய், நெல்வெணெய், சிவபெருமானே, திருத்தலத்தில், அவ்வாறு, விரும்பி, வீற்றிருந்தருளுகின்ற, தொன்மையான, தொல்புகழ், தீருமை, கச்சாக, துன்பம், உம்மைத், வீற்றிருந்தருளும், கறுத்த, சோலைகள், ஆடுகின்ற, கண்டத்தையுடைய, விடமுண்ட, கறையணி, பிறைநுத, மேவியன், மிடறுடை, பந்தன், பெற்றிகொள், ஞானசம், சாக்கியச், அடையச், சார்வது, புத்தமும், நலமல்கு, யிடர்கள், இல்லாதவர்கள், சமணமும், அரக்கனை, வலிகுன்றச், முடையவர், யசைவுசெய், ஊர்மல்கி, காண்பவர், வரவசைத், தொழுது, எழுகின்ற, நெல்வெண்ணெய், கச்சிள, தொழுதெழு, திருமுறை, திருச்சிற்றம்பலம், நாடொறும், நாள்தோறும், இடையில், அணிந்துள்ள, நிலையாக, அவ்வூரில், புகழையுடைய, பொழிலணி, ஆடிளம், யுறையவல், கட்டிய, அரைவிரி, கோவணத், வரிசையாக, விரித்துக், பாப்பசைத்