முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.023.திருவானைக்கா
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.023.திருவானைக்கா
2.023.திருவானைக்கா
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சம்புகேசுவரர்.
தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.
1710 | மழையார்
மிடறா மழுவா ளுடையாய் உழையார் கரவா உமையாள் கணவா விழவா ரும்வெண்நா வலின்மே வியஎம் அழகா எனும்ஆ யிழையாள் அவளே. |
2.023. 1 |
நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன் பூண்ட என் மகள், மேகம் போன்ற கரிய மிடற்றினனே, மழுவாகிய படைக் கலனை உடையவனே, மான் ஏந்திய கரத்தினனே, உமையாள் கணவனே, விழாக்கள் பல நிகழும் வெண்ணாவல் ஈச்சுரம் என்னும் திருவானைக்காவில் மேவிய எம் அழகனே! அருள்புரி, என்று உன்னையே நினைந்து கூறுகின்றாள்.
1711 | கொலையார்
கரியின் உரிமூ டியனே மலையார் சிலையா வளைவித் தவனே விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய் நிலையா அருளா யெனுநே ரிழையே. |
2.023. 2 |
அவயவங்கட்கு ஏற்ற அணிகலன்கள் பூண்ட என் மகள், கொல்ல வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவனே, மலையை வில்லாக வளைத்தவனே, தன்னைத்தந்து என்னைக் கொள்ளும் விலையால் என்னை அடிமையாக ஆளும் வெண்ணாவல் என்னும் தலத்தில் விளங்குபவனே! நிலையாக என்னை ஆண்டருள் எனக் கூறுகின்றாள்.
1712 | காலா
லுயிர்கா லனைவீ டுசெய்தாய் பாலோ டுநெய் யாடிய பால்வணனே வேலா டுகையா யெம்வெணா வலுளாய் ஆலார் நிழலா யெனுமா யிழையே. |
2.023.3 |
என் ஆயிழையாள், காலால் காலன் உயிரைப் போக்கியவனே, பால், நெய் முதலியவற்றை ஆடும் பால்வண்ணனே, வேல் ஏந்திய கையனே, வெண்ணாவலின் கீழ் விளங்குபவனே கல்லால மரநிழலின் கீழ் வீற்றிருந்து அறம் அருளியவனே! என்று பலவாறு கூறிகின்றாள். அருள்புரி.
1713 | சுறவக்
கொடிகொண் டவன்நீ றதுவாய் உறநெற் றிவிழித் தஎம் உத் தமனே விறன்மிக் ககரிக் கருள்செய் தவனே அறமிக் கதுவென் னுமென் ஆயிழையே. |
2.023. 4 |
என் ஆயிழையாள், மீன் கொடியை உடைய மன்மதன் எரிந்து நீறாகுமாறு நுதல் விழியைத் திறந்த எங்கள் உத்தமனே, வலிமை மிக்க யானைக்கு அருள் செய்தவனே, நீ அருள் செயாதிருப்பதைக் கண்டு அறம் தவறுடையது என்று கூறுவாள்.
1714 |
செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன் அங்கட் கருணை பெரிதா யவனே வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய் அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே. |
2.023.5 |
ஆராய்ந்து எடுத்த அணிகலன்களைப் பூண்ட என் மகள், செங்கண்ணான் எனப் பெயர் பூண்ட சோழமன்னனுக்கு அழகிய கண்களால் கருணை பெரிதாகப் புரிந்தருளியவனே, கொடிய கண்களை உடைய விடையூர்தியை உடையவனே, எமது வெண்ணாவல் என்னும் பெயரிய திருஆனைக்காக் கோயிலில் உறைபவனே! என்று பலவாறு நைந்து கூறி உடல் சோர்வுற்றாள்.
1715 |
குன்றே யமர்வாய் கொலையார் புலியின் தன்தோ லுடையாய் சடையாய் பிறையாய் வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளாய் நின்றா யருளா யெனும்நே ரிழையே. |
2.023. 6 |
தன் உடல் உறுப்பிற்கு ஏற்ற அணிகலன்களைப் பூண்ட என் மகள், கயிலைமலையில் வீற்றிருப்பவனே, கொல்லும் தொழில் வல்ல புலியினது தோலை உடுத்தவனே, சடைமுடியினனே, பிறை சூடியவனே, முப்புரங்களை அழித்து அவற்றின் தலைவர்களை வென்றவனே, வெண்ணாவல் என்னும் தலத்துள் எழுந்தருளியவனே! அருளாய்! என்று அரற்றுகின்றாள்.
1716 | மலையன்
றெடுத்த அரக்கன் முடிதோள் தொலையவ் விரலூன் றியதூ மழுவா விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய் அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே. |
2.023. 8 |
ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள், கயிலைமலையை அன்று எடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியன அழியுமாறு கால் விரலை ஊன்றிய தூய மழுவாளனே! என்னைக் கொண்டு தன்னைத்தரும் விலையால் என்னை ஆண்டருளும் வெண்ணாவல் தலத்தில் வீற்றிருப்பவனே! என்னை அலைக்காமல் அருள்புரிவாய் என்று கூறுகிறாள்.
1717 | திருவார்
தருநா ரணன்நான் முகனும் மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய் விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம் அரவா எனும்ஆ யிழையா ளவளே. |
2.023. 9 |
ஆராய்ந்தெடுத்த அணிகளைப் பூண்ட என் மகள், திருமகள் மார்பிடை மருவிய திருமாலும், நான்முகனும் அடிமுடி காண மருவி வெருவுமாறு அழலுருவாய் நிமிர்ந்தவனே, மணம் கமழும் வெண்ணாவலுள் மேவிய எம் அரவாபரணனே! என்று கூறுகின்றாள்.
1718 | புத்தர்
பலரோ டமண்பொய்த் தவர்கள் ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார் மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய் அத்தா அருளாய் எனும் ஆயிழையே. |
2.023.10 |
ஆராய்ந்து பூண்ட அணிகலன்களை உடைய என் மகள் புத்தர்கள் பலரோடு, பொய்யான தவத்தைப் புரியும் சமணர்கள், தமக்குள் ஒத்த உரைகளைக்கூறி உன்னை அறியாதவராயினர். உண்மைத் தேவர்கள் வந்து வணங்கும் வெண்ணாவலுள் வீற்றிருக்கும் இறைவனே, அத்தனே, அருளாய்! என்று கூறுவாள்.
1719 | வெண்நா
வலமர்ந் துறைவே தியனைக் கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன் பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார் விண்ணோ ரவரேத் தவிரும் புவரே. |
2.023. 11 |
வெண்ணாவலின் கீழ் அமர்ந்துறையும் வேதங்களை அருளிய இறைவனை, கண்களில் நிலைத்து நிற்பதும் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதிக்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன், பண்ணோடு பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லார் விண்ணோர்களால் ஏத்தி விரும்பப்படுபவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவானைக்கா - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வலுளாய், வெண்ணாவல், என்னும், ஆராய்ந்து, யிழையே, எனும்ஆ, கூறுகின்றாள், வெண்ணாவலுள், வெண்ணாவலின், ஆயிழையாள், வீற்றிருப்பவனே, விளங்குபவனே, பலவாறு, ஆயிழையே, தலத்தில், அணிகலன்களைப், அணிகலன்களை, அருளாய், கூறுவாள், எடுத்த, ரிழையே, வியஎம், உடையவனே, ரும்வெண்நா, உமையாள், திருமுறை, திருச்சிற்றம்பலம், ஏந்திய, கொலையார், திருவானைக்கா, என்னைக், ளும்வெண்நா, லெனையா, விலையா, விலையால்