முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.017.திருவேணுபுரம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.017.திருவேணுபுரம்
2.017.திருவேணுபுரம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
திருவேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
1645 | நிலவும்
புனலும் நிறைவா ளரவும் இலகுஞ் சடையார்க் கிடமா மெழிலார் உலவும் வயலுக் கொளியார் முத்தம் விலகுங் கடலார் வேணு புரமே. |
2.017. 1 |
பிறை, கங்கை, மிகக் கொடிய நாகம் ஆகியன விளங்கும் சடையினை உடைய சிவபெருமானுக்கு இடம், அழகிய மகளிர் உலாவுவதும், ஒளிபொருந்திய முத்துக்கள் வயல்களில் விளங்குவதும், விலகி உள்ள கடற்கரையை அடுத்துள்ளதுமான வேணுபுரம் ஆகும்.
1646 | அரவார்
கரவன் னமையார் திரள்தோள் குரவார் குழலா ளொருகூ றனிடங் கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு விரவா கவல்லார் வேணு புரமே. |
2.017. 2 |
பாம்பைக் கையில் கங்கணமாக அணிந்தவனும், மூங்கில் போன்று திரண்ட தோளினையும் குராமலர் அணிந்த கூந்தலினையும் உடைய உமையம்மையை ஒருகூறாக உடையவனும் ஆகிய சிவபிரானுக்கு இடம், மறையாதகொடையாளரும், தம்மோடு பழகியவர்களை நட்புக் கொண்டு ஒழுகுபவர்களும் ஆகிய நல்லோர் வாழும் வேணுபுரம் ஆகும்.
1647 | ஆகம்
மழகா யவள்தான் வெருவ நாகம் முரிபோர்த் தவன்நண் ணுமிடம் போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கண் மேகந் தவழும் வேணு புரமே. |
2.017. 3 |
அழகிய மேனியை உடைய உமையம்மை வெருவுமாறு யானையை உரித்துப் போர்த்த சிவபிரான் உறையும் இடம். மக்கட்கு விளைபொருள்களாகிய பயனைத்தரும் வயல்கள் சூழ்ந்துள்ள உயரிய பொழில்களில் மேகங்கள் தவழும் வேணுபுரம் ஆகும்.
1648 | காசக்
கடலில் விடமுண் டகண்டத் தீசர்க் கிடமா வதுவின் னறவ வாசக் கமலத் தனம்வன் றிரைகள் வீசத் துயிலும் வேணு புரமே. |
2.017. 4 |
முத்து பவளம் ஆகிய மணிகளை உடைய கடலில் எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடைய ஈசனுக்கு இடமாவது; இனிய தேன் நிறைந்ததும் மணம் நிறைந்ததுமான தாமரை மலரில் அன்னம் அலைகள் காற்று வீசத் துயில் கொள்ளும் வளம் நிறைந்த வேணுபுரம் ஆகும்.
1649 | அரையார்
கலைசே ரனமென் னடையை உரையா வுகந்தா னுறையும் மிடமாம் நிரையார் கமுகின் னிகழ்பா ளையுடை விரையார் பொழில்சூழ் வேணு புரமே. |
2.017. 5 |
இடையில் மேகலை அணிந்தவளும், அன்னம் போன்ற நடையினளும் ஆகிய உமையம்மையைப் புகழ்ந்து உரைத்து, சிவபிரான் மகிழ்வுடன் உறையும் இடம், வரிசையாக வளர்ந்துள்ள கமுக மரங்களின் பாளைகள் உடைதலால் மணம் பொருந்தித் தோன்றும் பொழில்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.
1650 | ஒளிரும்
பிறையும் முறுகூ விளவின் றளிருஞ் சடைமே லுடையா னிடமாம் நளிரும் புனலின் நலசெங் கயல்கள் மிளிரும் வயல்சூழ் வேணு புரமே. |
2.017. 6 |
ஒளிதரும் பிறையையும், வில்வத்தளிர்களையும் சடைமிசை உடையவனாகிய சிவபெருமானுக்குரிய இடம், குளிர்ந்த நீரில் நல்ல செங்கயல்மீன்கள் விளங்கும் வயல்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.
1651 | ஏவும்
படைவேந் தனிரா வணனை ஆவென் றலற அடர்த்தா னிடமாந் தாவும் மறிமா னொடுதண் மதியம் மேவும் பொழில்சூழ் வேணு புரமே. |
2.017.8 |
இலக்குத் தவறாது செல்லும் கணைகளொடுகூடிய விற்படையை உடைய இராவணனை ஆ என்று அலறுமாறு அடர்த்தருளிய சிவபிரானுக்குரிய இடம், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும், குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.
1652 | கண்ணன்
கடிமா மலரிற் திகழும் அண்ணல் லிருவர் அறியா இறையூர் வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள் விண்ணில் திகழும் வேணு புரமே. |
2.017. 9 |
திருமாலும், மணம் பொருந்திய சிறந்த தாமரை மலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருவரும் அறியாதவாறு உயர்ந்து நின்ற இறைவனது இடம், அழகிய சுதை தீட்டப்பட்ட மாளிகைகளின்மேல் கட்டப்பட்ட கொடிகள் வானத்தில் திகழும் வேணுபுரம் ஆகும்.
1653 | போகம்
அறியார் துவர்போர்த் துழல்வார் ஆகம் அறியா அடியார் இறையூர் மூகம் அறிவார் கலைமுத் தமிழ்நூல் மீகம் அறிவார் வேணு புரமே. |
2.017. 10 |
சிவபோகத்தின் சிறப்பை அறியாதவர்களும், துவராடை போர்த்துத்திரிபவர்களும் ஆகிய சமண புத்தர்களின் உடலை ஏறெடுத்தும் பாராத சிவனடியார்களுக்குத் தலைவனாகிய சிவபிரானது ஊர், மௌனத்தின் சிறப்பை அறிந்தவர்களும், கலைகளையும் முத்தமிழ் நூல்களையும் கற்றமேலான அறிவுடையவர்களும் வாழும் வேணுபுரம் ஆகும்.
1654 | கலமார்
கடல்போல் வளமார் தருநற் புலமார் தருவே ணுபுரத் திறையை நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன குலமார் தமிழ்கூ றுவர் கூர் மையரே. |
2.017. 11 |
மரக்கலங்களையுடைய கடல் போல் பரவிய வளங்களை உடையதும், நன்செய் நிலங்கள் நிறைந்ததும் ஆகிய வேணுபுரத்து இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன மேன்மைமிக்க இத்தமிழ் மாலையை அன்போடு பாராயணம் புரிவோர் மதிநுட்பமும் திருவருட்பெருக்கமும் உடையவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவேணுபுரம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வேணுபுரம், உறையும், திருவேணுபுரம், திகழும், சூழ்ந்த, பொழில்கள், சிறப்பை, பொழில்சூழ், அறிவார், குளிர்ந்த, இறையூர், நிறைந்த, உடையதும், கொடிகள், நிறைந்ததும், வாழும், விளங்கும், திருச்சிற்றம்பலம், திருமுறை, வயல்சூழ், தவழும், மலரில், கடலில், வயல்கள், சிவபிரான், அன்னம்