முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.038.திருமயிலாடுதுறை
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.038.திருமயிலாடுதுறை
1.038.திருமயிலாடுதுறை
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாயூரநாதர்.
தேவியார் - அஞ்சநாயகியம்மை.
404 |
கரவின் றிநன்மா மலர்கொண்டு இரவும் பகலுந் தொழுவார்கள் சிரமொன் றியசெஞ் சடையான்வாழ் வரமா மயிலா டுதுறையே. |
1.038.1 |
நெஞ்சிற் கரவின்றி மணம் மிக்க சிறந்த மலர்கள் பலவற்றையும் பறித்துக் கொண்டு வந்து இரவும் பகலும் தொழும் அடியார்களுக்கு, தலைமாலை பொருந்தும் செஞ்சடை உடைய சிவ பெருமான் வாழும் பதியாகிய மயிலாடுதுறை மேம்பட்ட தலமாகும். வள்ளன்மை யுடையான் உகந்தருளும் இடமுமாம்.
405 |
உரவெங் கரியின் னுரிபோர்த்த பரமன் னுறையும் பதியென்பர் குரவஞ் சுரபுன் னையும்வன்னி மருவும் மயிலா டுதுறையே. |
1.038.2 |
வலிமை பொருந்திய கொடிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும் பதி, குராமரம், சுரபுன்னை வன்னி ஆகிய மரங்கள் செறிந்த திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.
406 |
ஊனத் திருணீங் கிடவேண்டில் ஞானப் பொருள்கொண் டடிபேணும் தேனொத் தினியா னமருஞ்சேர் வானம் மயிலா டுதுறையே. |
1.038.3 |
இப்பிறப்பில் நமக்குள்ள குறைபாடாகிய ஆணவம் என்னும் இருள் நம்மை விட்டு நீங்க வேண்டில், ஞானப் பொருளாய் உள்ள சிவபெருமான் திருவடிகளை வணங்குங்கள். தேனை ஒத்து இனியனாய் விளங்கும் அப்பெருமான் தனக்குச் சேர்வான மயிலாடுதுறையில் விரும்பி உறைகிறான்.
407 |
அஞ்சொண் புலனும் மவைசெற்ற மஞ்சன் மயிலா டுதுறையை நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேற் றுஞ்சும் பிணியா யினதானே. |
1.038.4 |
ஐம்பொறிகளைப் பற்றும் ஒள்ளிய புலன்களாகிய அவைகளைக் கெடுத்த பெருவீரனாகிய சிவபெருமான் எழுந்தருளிய மயிலாடுதுறையை மனம் ஒன்றி நினைந்து வழிபட எழுவார் மேல்வரும் பிறவி முதலாகிய பிணிகள் அழிந்தொழியும்.
408 |
தணியார் மதிசெஞ் சடையான்றன் அணியார்ந் தவருக் கருளென்றும் பிணியா யினதீர்த் தருள்செய்யும் மணியான் மயிலா டுதுறையே. |
1.038.5 |
குளிர்ந்த பிறைமதியை அணிந்துள்ள சிவந்த சடைமுடியை உடையவனாகிய சிவபெருமானை அணுகியவருக்கு என்றும் அருள் உளதாம். பிணி முதலானவற்றைப் போக்கி அருள்புரியும் மணி போன்றவனாய் அப்பெருமான் மயிலாடுதுறையில் உள்ளான்.
409 |
தொண்ட ரிசைபா டியுங்கூடிக் கண்டு துதிசெய் பவனூராம் பண்டும் பலவே தியரோத வண்டார் மயிலா டுதுறையே. |
1.038.6 |
தொண்டர்களாயுள்ளவர்கள் கூடி இசை பாடியும், தரிசித்தும் துதிக்கும் சிவபெருமானது ஊர் முற்காலத்தும் இக்காலத்தும் வேதியர்கள் வேதங்களை ஓதித் துதிக்க, வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த மயிலாடுதுறையாகும்.
410 |
அணங்கோ டொருபா கமமர்ந்து இணங்கி யருள்செய் தவனூராம் நுணங்கும் புரிநூ லர்கள்கூடி வணங்கும் மயிலா டுதுறையே. |
1.038.7 |
உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று வீற்றிருந்து அருள் புரிபவன் ஊர், முப்புரி நூல் துவளும் அந்தணர்கள் கூடி வணங்கும் திருமயிலாடுதுறை ஆகும்.
411 |
சிரங்கை யினிலேந் தியிரந்த பரங்கொள் பரமேட் டிவரையால் அரங்கவ் வரக்கன் வலிசெற்ற வரங்கொண் மயிலா டுதுறையே. |
1.038.8 |
பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலர் இல்லங்களிலும் சென்று இரந்த மேன்மை கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனை நெரியுமாறு அடர்த்த நன்மையாளனாகிய அப்பெருமானை அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை.
412 |
ஞாலத் தைநுகர்ந் தவன்றானும் கோலத் தயனும் மறியாத சீலத் தவனூர் சிலர்கூடி மாலைத் தீர்மயிலா டுதுறையே. |
1.038.9 |
உலகை விழுங்கித் தன் வயிற்றகத்தே வைத்தி திருமாலும், அழகிய நான்முகனும் அறியாத தூயவனாகிய சிவபெருமானது ஊர், அடியவர் ஒருங்கு கூடி வழிபட்டுத் தம் அறியாமை நீங்கப் பெறும் சிறப்புடைய திருமயிலாடுதுறை ஆகும்.
413 |
நின்றுண் சமணுந் நெடுந்தேரர் ஒன்றும் மறியா மையுயர்ந்த வென்றி யருளா னவனூராம் மன்றன் மயிலா டுதுறையே. |
1.038.10 |
நின்றுண்பவர்களாகிய சமணர்களும் நெடிதுயர்ந்த புத்தர்களும் ஒரு சிறிதும் தன்னை அறியவாதவர்களாய் ஒழியத்தான் உயர்ந்த வெற்றி அருள் இவைகளைக் கொண்டுள்ள சிவபெருமானது ஊர் நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை ஆகும்.
414 |
நயர்கா ழியுண்ஞா னசம்பந்தன் மயல்தீர் மயிலா டுதுறைமேல் செயலா லுரைசெய் தனபத்தும் உயர்வா மிவையுற் றுணர்வார்க்கே. |
1.038.11 |
ஞானத்தினால் மேம்பட்டவர் வாழும் சீகாழிப் பதியுள் வாழும் ஞானசம்பந்தன், தன்னை வழிபடுவாரின் மயக்கத்தைத் தீர்த்தருளும் மயிலாடுதுறை இறைவனைப் பற்றித் திருவருள் உணர்த்தும் செயலால் உரைத்தனவாகிய இத்திருப்பதிகப் பாடல்களாகிய இவை பத்தும் உற்றுணர்வார்க்கு உயர்வைத் தரும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமயிலாடுதுறை - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - டுதுறையே, திருமயிலாடுதுறை, சிவபெருமானது, வாழும், அடியவர், விரும்பி, பிணியா, வணங்கும், பெறும், மயிலாடுதுறையில், சிவபெருமான், திருச்சிற்றம்பலம், திருமுறை, இரவும், மயிலாடுதுறை, என்னும், அப்பெருமான்