வீடு தேடும் படலம்
4
மறுநாள் காலையில் கடோ த்கஜராவ் அந்த வீட்டுச்
சொந்தக்காரரிடம் சென்று வீட்டைக் கட்டாயம் வாடகைக்கு எடுத்துக் கொள்வதாகச்
சொல்லிப் போனார்.
வீட்டுக் கண்ட்ரோல் அதிகாரி லீவு முடிந்து காரியாலயத்துக்கு வந்ததாகத் தெரிந்தது. அவரைப் போய் பார்த்தார். எல்லா விபரமும் சொன்னார்.
அதிகாரி அவரைப் பார்த்து, "விடு ரொம்பப் பெரியதா? சௌகரியமானதா?" என்று கேட்டார்.
"ஆமாம், பெரிய வீடுதான். மிகவும் வசதியானது."
"நியாயமாக, அந்த வீட்டுக்கு என்ன வாடகை கொடுக்கலாம்?"
"மாதம் இருநூறு ரூபாய் கண்ணை மூடிக்கொண்டு கொடுக்கலாம்."
"வீட்டுக்காரச் செட்டியார் என்ன வாடகை கேட்கிறார்?"
"தொண்ணூறு ரூபாய்க்குத் தருவதாகச் சொல்கிறார்."
"ஒரு வேளை இன்னும் கொஞ்சம் குறைக்கவும் சம்மதிக்கலாம் அல்லவா?"
"அதுவும் சாத்தியந்தான்!"
"சரி, நீர் போகலாம். தீர விசாரித்து உத்தரவு போடப்படும்."
மறுநாள் ராயர் வீட்டுக்காரச் செட்டியாரைப் போய்க் கேட்கலாம் என்று போனார். வழியில் மேற்படி வீட்டைச் சுண்ணாம்பு அடித்துச் சுத்தம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து வியப்படைந்தார்.
செட்டியாரைப் போய் பார்த்தபோது தான் விஷயம் தெரிந்தது.
வீட்டு வாடகை உத்தியோகஸ்தர் மிஸ்டர் பேயாழ்வார் நாயுடுகாரு மேற்படி வீட்டை அறுபது ரூபாய் வாடகைக்குத் தாமே எடுத்துக் கொண்டு விட்டார்!
அந்த வீட்டுக்கு குடிவந்தவரின் பெயர் பொருத்தம் ஸ்ரீ கடோ த்கஜராயருக்கு மிக்க திருப்தி அளித்தது. அதோடு இன்னொரு ஆறுதலும் அடைந்தார். மிஸ்டர் பேயாழ்வார் நாயுடுவும் தம்மைப் போல் பெரிய குடும்பிதான் என்று தெரிய வந்தது. ராயரைக் காட்டிலும் நாயுடுவுக்கு மூன்று குழந்தைகள் அதிகம்! மொத்தம் ஒரு டஜன்!
"புது வீட்டில் அம்மனிதர் குடியும் குடித்தனமுமாக நன்றாயிருக்கட்டும், குடும்பத்தை மேலும் பெருக்கிக் கொள்ளட்டும்!" என்று ராயர் மனதிற்குள் ஆசீர்வதித்தார். ததாஸ்து!
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீடு தேடும் படலம் - Veedu Thedum Padalam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - வாடகை, அந்த