வீடு தேடும் படலம்
3
வெகு நாளாகத் திறக்கப்படாத பூட்டைத் திறந்து
கொண்டு கடோ த்கஜராவ் அந்தப் பேய் வாழும் வீட்டுக்குள் புகுந்தார். மின்சார
விளக்குப் போடப்பட்ட வீடு. சில அறைகளில் பல்புகள் கழற்றப்படிருந்தன.
எனினும் சில அறைகளில் பல்புகள் இருந்தன. ஸ்விச்சைப் போட்டுப் பார்த்ததில்
விளக்குகள் எரிந்தன. இது முன்னைக் காட்டிலும் அதிக தைரியத்தைக் கடோ த்கஜராவுக்கு
அளித்தது.
வாசற் கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு விட்டுக் கொல்லைக் கதவு தாழ்ப்பாள் போட்டிருப்பதையும் பார்த்துக் கொண்டு வந்தார். பிறகு மச்சுமீது ஏறிப் பார்த்தார். அங்கே அவர் பார்த்த ஒரு விஷயம் சிறிது விசித்திரமாகத்தானிருந்தது. ஏனெனில் கீழே இருந்தது போல் மேல் மாடியில் அவ்வளவு குப்பையாக இல்லை. சமீபத்தில் பெருக்கிச் சுத்தம் செய்யப்பட்டதாகத் தோன்றியது. அது மட்டுமல்ல; மனிதர் நடமாடியதற்கு அறிகுறிகளும் காணப்பட்டன. மனிதருடைய நடமாட்டந்தான் என்பதில் சந்தேகமில்லை. பேய்களுக்குக் கால் கிடையாது. இருந்தாலும் அவற்றின் காலடிதான் தரையில் படாதே!
மேலும் கடோ த்கஜராயர் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது மச்சுப் படிகளுக்கு அடிப்புறத்தில் வெளிப்புறமாகத் திறக்கும் கதவு ஒன்று இருப்பதைக் கண்டார். அதற்கு உட்புறத்தில் தாள் இல்லை; அதாவது இருந்த தாளை யாரோ கழற்றிவிட்டிருந்தார்கள். இதுவும் கொஞ்சம் விசித்திரமாகவே தோன்றியது. சிற்சில சந்தேகங்களும் ஏற்பட்டன. எல்லாவற்றுக்கும் இன்று ஒரு இராத்திரி இந்த வீட்டில் கண் விழித்திருந்து பார்த்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தார்.
மின்சார தீபங்களையெல்லாம் அணைத்து விட்டுக் குளிர் அடக்கமான ஒரு அறைக்கு வந்து சேர்ந்தார். நல்ல வேளையாக அங்கே ஒரு பழங்காலக் கட்டில் கிடந்தது. அதில் துணியை விரித்துப் படுத்தார். மறுபடியும் ஏதோ தோன்றவே அறையின் கதவைத் தாளிட்டுக் கொண்டு வந்து படுத்தார்.
இராத்திரி முழுவதும் தூங்குவதில்லையென்ற திடசங்கற்பம் கொண்டிருந்தபடியால், கண்கள் மூடுவதற்கே இடம் கொடுக்கவில்லை. பக்கத்து வீடு ஒன்றில் கடிகாரம் பதினொரு மணி, பன்னிரண்டு மணி அடித்த வரையில் தூக்கம் கிட்ட நாடவில்லை. பன்னிரண்டு மணி அடித்த பிறகு சிறிது தூக்கம் கண்ணைச் சுற்றுவது போலிருந்தது. தூங்கக்கூடாது என்று கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார்.
எழுந்து உட்கார்ந்து சிறிது நேரத்துக்கெல்லாம் கடோ த்கஜராவுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் அறைக்கு வெளியே அந்த வீட்டுக்குள் எங்கேயோ 'ஜல்க்' 'ஜல்க்' என்ற சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் கிட்டக் கிட்ட நெருங்கி வருவதாகத் தோன்றியது. வர வர அந்த 'ஜல்க்' சத்தம் அருகில் வந்து அந்த அறைக்கு வெளியே நின்றது.
கடோ த்கஜராவ் பயப்படவில்லை. ஆனாலும் அவருடைய மார்பு மட்டும் கொஞ்சம் பட் பட் என்று அடித்துக் கொண்டது. மேற்படி 'ஜல்க்' சத்தம் கூட பரவாயில்லை. அது அந்த அறை வாசலில் வந்து சட்டென்று நின்றுவிட்டதுதான் கொஞ்சம் என்னமோ போலிருந்தது.
ஒரு நிமிஷத்துக்கெல்லாம் அறையின் கதவை யாரோ இரும்புக் கம்பியினால் தட்டுவது போல் கேட்டது.
"யார் அது?" என்றார் கடோ த்கஜராவ்.
"நீ யார்?" என்றது ஒரு கம்மலான குரல்.
"நான் இந்த வீட்டை வாடகைக்கு வாங்கிக் கொண்டு குடி வரப் போகிறேன். நீ யார்" என்றார் ராயர்.
"உனக்கு முன்னால் நான் குடி வந்தவன், உனக்கு இங்கே இடமில்லை. போய்விடு!"
"வீட்டு வாடகை அதிகாரியிடம் நீர் அநுமதி பெற்றுக் கொண்டீரா?"
"இல்லை"
"அப்படியானால் இரண்டு பேரும் விண்ணப்பம் போடுவோம். யாருக்குக் கிடைக்கிறதோ, அவர் இருக்கலாம்."
"அதெல்லாம் முடியாது. உடனே ஓடிப் போய் விடு!"
மறுபடியும் அந்த 'ஜல்க்' சத்தம் கேட்டது.
"நீ யார் என்னைப் போகச் சொல்வதற்கு?"
"கதவைத் திறந்து பார்! தெரிந்து கொள்வாய்!"
"கதவைத் திறக்காவிட்டால்?"
"கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து உன்னை விழுங்கி விடுவேன்."
"ஓஹோ! அப்படியா! யார் யாரை விழுங்குகிறார்கள் என்று பார்க்கலாம்."
"இவ்விதம் சொல்லிவிட்டுக் கடோ த்கஜராவ் எழுந்து மின்சார விளக்கைப் போட்டார். கதவைத் திறந்து பார்த்தார்.
அவர் எதிர்பார்த்தது போலவே அங்கே ஒரு பேய் நின்று கொண்டிருந்தது.
ராயர் மியூஸியத்தில் மனிதனுடைய உடலின் எலும்புக்கூடு வைத்திருப்பதைப் பார்த்திருந்தார்.
அதே மாதிரி இந்தப் பேய் இருந்தது. ஆனால் பேசிற்று. காலையும் கையையும் கழுத்தையும் ஆட்டிற்று. அப்படி ஆட்டியபோது எலும்புப் பூட்டுகள் 'ஜல்க்' 'ஜல்க்' என்று சத்தமிட்டன.
"போய்விடு! போய்விடு!" என்று அந்தப் பேய் காலினால் தரையில் உதைத்துக் கொண்டு அலறியது.
கடோ த்கஜராவ் தம் நெஞ்சை ஒரு கையினால் அமுக்கிக் கொண்டு சொன்னார்:- "இதோ பார்! உன்னுடைய மிரட்டலுக்கெல்லாம் நான் பயந்துவிடமாட்டேன். இந்த வீடு பெரியது; தாராளமாய் இருக்கிறது. என்னுடைய குடும்பம் பெரியதுதான் என்றாலும், இதில் நானும் என் குடும்பத்துடன் குடியிருக்கலாம், நீயும் இருக்கலாம். நீ இருப்பதில் எனக்கு ஆட்சேபமில்லை. ஆனால் ஒரு நிபந்தனை. இராத்திரி நாங்கள் தூங்குகையில், நீ 'ஜல்க்' 'ஜல்க்' என்று சத்தமிட்டுக் கொண்டு நடமாடக் கூடாது. நடமாடாமலேயிருந்தால் நல்லது. அப்படி நடமாடினாலும் சத்தம் கேட்காதபடி நடமாட வேண்டும். தெரிகிறதா? உன்னுடைய எலும்புப் பூட்டுகளில் இப்போது சதைப்பற்று இல்லாத படியால் இப்படிச் சத்தம் கேட்கிறது. கொஞ்சம் மோபில் ஆயில் வாங்கித் தருகிறேன். அதைப் போட்டுக் கொண்டு நடமாடினால் இவ்வளவு சத்தம் கேட்காது தெரிகிறதா?"
"அதெல்லாம் முடியாது. என்னை எண்ணெய் போட்டுக் கொள்ளும்படி சொல்ல நீ யார்? நான் நடமாடும் போது 'ஜல்க்' 'ஜல்க்' என்று சத்தம் கேட்டால் தான் எல்லோரும் பயப்படுவார்கள்."
"நீ சொல்வது தவறு. அதற்கெல்லாம் இந்தக் காலத்தில் யாரும் பயப்பட மாட்டார்கள். என் குழந்தைகள் பொல்லாதவர்கள், உன்னைப் பார்த்து விட்டால் மியூஸியத்திலிருந்து தப்பி வந்துவிட்டதாக எண்ணி, உன்னை எலும்பு எலும்பாகக் கழற்றி எடுத்து விடுவார்கள்."
இதைக் கேட்டவுடனே அந்தப் பேய் 'ஓ ய் ய் ய் ய்' என்று சத்தம் போட்டுவிட்டு ஓடியது. மச்சுப்படியின் பக்கத்தில் போய் நின்று திரும்பிப் பார்த்து, "இரு, இரு! என் அண்ணனை வரச் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஓடியது.
ஸ்ரீ கடோ த்கஜராவ் நின்ற இடத்திலேயே நின்றார்! மற்றொரு பேய் இரண்டு கையாலும் தலைக்கு மேலே ஒரு பழம் பெட்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தது. இதுவும் எலும்புக் கூட்டுப் பேய்தான். ஆனால் காவித்துணியினால் ஆன ஒரு நீண்ட அங்கியைக் கழுத்திலிருந்து கால் வரை போட்டுக் கொண்டு வந்தது.
ராயரின் அருகில் வந்ததும் "போடட்டுமா? போடட்டுமா?" என்றது.
ராயர், "பேயே! நீ ஸினிமா பார்ப்பதுண்டா?" என்று கேட்டார்.
"உனக்கு எப்படித் தெரிந்தது?" என்றது பேய்.
"நீ பார்த்த ரத்னகுமார் படத்தை நானுந்தான் பார்த்தேன். அதில் ஒரு பேய் 'போடட்டுமா? போடட்டுமா?" என்று அசடு வழிய உளறுகிறதே, அதைப் பார்த்துத்தானே நீயும் உளறுகிறாய்?"
அதைக் கேட்ட அந்தப் பேய் திடீரென்று பெட்டியைக் கீழே போட்டது. பெட்டி அதன் கால் மேலேயே விழுந்தது! வலி பொறுக்காமல் 'வீல்' என்று கூச்சல் போட்டுக் கொண்டு ஓட்டம் பிடித்தது.
பிறகு கடோ த்கஜராயர் இனி நிம்மதியாகத் தூங்கலாம் என்று எண்ணிக் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார். பயன் என்ன? சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடியும் 'ஜல்க்' சத்தம் கேட்டது. முன்னை விட அதிகமாகவே கேட்டது. கதவைத் திறந்து பார்த்தால் உடம்பில் இரும்புக் கவசமும், தலையில் இரும்புத் தொப்பியும் தரித்த ஒரு எலும்புக் கூட்டுப் பேய் நின்றது. அது அணிந்திருந்த கவசங்களினால் தான் அதிக சத்தம் என்று ராயர் அறிந்து கொண்டார்.
"பழி! பழி!" என்று பேய் கத்திற்று.
"இதோ பார்! வீண் கூச்சல் போடாதே. நீ ஹாம்லெட் நாடகத்தில் வரும் தகப்பன் - பேய்தானே?"
"ஆமாம்!... பழி! பழி!"
"நீ கையினால் ஆகாத உபயோகமற்ற பேய் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் தானே உனக்குத் துரோகம் செய்த மனைவியையும் சகோதரனையும் உன்னால் பழி வாங்க முடியவில்லை? உன் மகனை ஏவி விட்டு அவன் வாழ்வையும் கெடுத்தாய்! சீ! முட்டாளே! கோழைப் பேயே! போ! நீ கெட்ட கேட்டுக்கு கவசம் வேறு கேடா? இங்கே நின்றாயோ, பிடித்து மியூஸியத்துக்கு அனுப்பி விடுவேன்!"
ஹாம்லெட்டின் தகப்பன் - பேய் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.
சற்று நேரத்திற்கெல்லாம் வந்த இன்னொரு பேயைப் பார்த்து, கடோ த்கஜராயர் "நீ யார்" என்றார்.
"நான் ஜோசியப் பேய்!"
"எதற்காக வந்தாய்?"
"நீ என்னைப் பற்றி இன்று டிராம் வண்டியில் அவதூறு கூறினாய் அல்லவா! என் உண்மையை நிரூபிக்கவே வந்தேன். உன்னுடைய காரியம் பலிக்காமல் செய்வதற்காகவே வந்தேன்!"
"பாவம்! இதற்காகவா உயிரை விட்டாய்? உன்னுடைய விதி இன்னதென்று உன் ஜோசியத்தில் தெரிந்ததா!"
"தெரியாமல் என்ன? பேஷாய்த் தெரிந்திருந்தது."
இச்சமயத்தில் "ஜயபேரிகை கொட்டடா!" என்ற ஒரு கம்பீர முழக்கம் கேட்டது.
முழக்கம் வந்த திசையைப் பார்த்தால் பாரதியார் வந்து கொண்டிருந்தார். அதே அல்பாகா சட்டை; கழுத்தில் அதே விதத் துண்டு; அதே மீசை; தலையில் அதே மாதிரி குஞ்சம் விட்ட தலைப்பாகை.
"பயமெனும் பேய்தனை அடித்தோம்!" என்று பாரதியார் முழங்கினார்.
அவ்வளவுதான்; ஜோசியப் பேய் ஓட்டம் பிடித்தது. அந்தப் பேயைத் துரத்திக் கொண்டு பாரதியார் விரைந்து ஓடினார்.
மறுபடியும் இன்னொரு அனல்வாய்ப் பேய் வந்தது. அது வாயைத் திறந்தால் தணல் சுடர்விட்டது. மனோகரன் நாடகத்துப் பேய் அது என்று கடோ த்கஜராவ் உடனே தெரிந்து கொண்டார்.
"ஏ பேயே! நானே மனோகரன் நாடகத்தில் பேயாக நடித்திருக்கிறேன். உன்னைவிடப் பிரமாதமாக என்னுடைய வாயிலிருந்து அனலைக் கக்குவேன். தெரியுமா!" என்றார் ராயர்.
அந்தப் பேயும் ஓட்டம் எடுத்தது.
கடைசியாக கடோ த்கஜராவ் கூடச் சிறிது மிரளும்படியாகப் பத்துப் பதினைந்து பேய்கள் சேர்ந்தாற் போல் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டன. "பசி பசி" என்று அவை கூச்சலிட்டன.
கடோ த்கஜராவ் இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று ஒரு நிமிஷம் யோசனை செய்தார். அதற்குள் அப்பேய்கள், "பசி! உன்னை விழுங்கி விடப் போகிறோம்!" என்று ஆவேசமாக ஆர்ப்பரித்தன.
"ஏ பேய்களே! உங்களுடைய பொய் எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்! பஞ்சத்தினால் நீங்கள் செத்துப் போனதாகப் பொய் சொல்லி ஊரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்! காங்கிரஸ் மந்திரிகளுக்கு அபகீர்த்தி உண்டாக்குவதற்காகவே இப்பேர்பட்ட சதியாலோசனை செய்திருக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் பஞ்சத்தினாலோ பசியினாலோ இறக்கவில்லை. வயது முடிந்ததனாலேயே செத்தீர்கள். அது உங்கள் தலைவிதி; யார் என்ன செய்ய முடியும்? உடனே எல்லோரும் ஓடிப் போய் விடுங்கள்! இல்லாவிட்டால் எங்களுடைய உணவு மந்திரி கனம் முன்ஷியைக் கூப்பிட்டுக் கொண்டு வருவேன்!" என்றார் ராயர்.
"உணவு மந்திரி முன்ஷி வந்தால் எங்களை என்ன செய்து விடுவார்?"
"எலும்பிலே பாஸ்பரஸ் என்னும் சத்து இருக்கிறது. பூமிக்கு அது மிக நல்ல உரம். உங்கள் எலும்புகளையெல்லாம் சுக்கு நூறாய் இயந்திரத்தில் கொடுத்து உடைத்து நிலத்துக்குப் போட்டு உழும்படி செய்து விடுவார்!"
இதைக் கேட்டதும் அந்தப் பஞ்சப் பேய்கள் ஒரே ஓட்டம் பிடித்தன. அப்போது எழுந்த பெரும் 'ஜல்க்' ஓசையில் கும்பகர்ணன் கூட விழித்தெழுந்திருப்பான். ஸ்ரீ கடோ த்கஜராவ் விழித்துக் கொண்டதில் வியப்பு இல்லையல்லவா? தாம் தூங்காமலிருக்கத் தீர்மானித்திருந்தும் எப்படியோ தூங்கிப் போய் விட்டதையும், அத்தனை நேரம் கண்டது கனவுதான் என்பதையும், உணர்ந்து கொண்டார்.
எழுந்து உட்கார்ந்து தம் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
"பேயுமில்லை, கீயுமில்லை! எல்லாம் பிரமை!" என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கும்போது மறுபடியும் ஏதோ சத்தம் கேட்டது. 'ஜல்க்' 'ஜல்க்' என்றும், 'சல்' 'சல்' என்றும் 'கலீர்' 'கலீர்' என்றும் ஓசைகள் எழுந்தன.
இது என்ன கூத்து?
கடோ த்கஜராவ் நன்றாக விழித்துக் கொண்டார். அறைக் கதவைத் திறந்தார். அந்த வீட்டின் மாடியில் ஏதோ ஒரு மூலை அறையிலிருந்து அந்தச் சத்தங்கள் வந்தன. அடிமேல் அடிவைத்து மெள்ள மெள்ள நடந்து மச்சுப்படி ஏறினார். சத்தம் வந்த அறைக்கு அருகே சென்று பார்த்தார். ஜன்னல் கதவு ஒன்றே ஒன்று மட்டும் திறந்திருந்தது. அதன் வழியாக எட்டிப் பார்த்தார். உள்ளே ஐந்தாறு ஆசாமிகள் உட்கார்ந்து பணம் வைத்து சீட்டு ஆடிக் கொண்டிருந்தார்கள். வெள்ளிப் பணத்தை அங்குமிங்கும் நகர்த்திய சத்தந்தான் அவர் கேட்ட சப்தம். மேலே கூறிய விநோதமான கனவை உண்டாக்கிய ஓசையும் அதுதான் போலும்!
கடோ த்கஜராவ் அடிமேல் அடிவைத்து நடந்து சென்று திறந்திருந்த வாசற்படி வழியாக வெளியேறினார். தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனைத் தேடிப் போனார் கதவை இடித்தார். ஒரு போலீஸ் சேவகர் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்து கதவைத் திறந்தார்.
"அங்கே ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெறுகிறது. உடனே வந்தால் குற்றவாளிகளைக் கைப்பிடியாகப் பிடிக்கலாம்!" என்று சொன்னார் ராயர்.
"உமக்கு எப்படித் தெரியும்?" என்று போலீஸ்காரர் கேட்டார்.
"வாடகைக்கு அந்த வீட்டைப் பேசியிருக்கிறேன். அந்த வீட்டில் இராத்திரி படுத்துக் கொண்டிருந்தேன்..."
"எந்த வீட்டில்?"
வீதியையும் வீட்டு நம்பரையும் கடோ த்கஜராவ் சொன்னதும், "ஐயோ!" என்று கூச்சல் போட்டு விட்டுப் போலீஸ்காரர் கதவைச் சாத்திக் கொண்டார்.
தம்மைப் பேய் என்று நினைத்து அவர் பயந்து போய்விட்டார் என்பது ராயருக்குத் தெரிந்து போயிற்று. அதிலிருந்து ஒரு யுக்தி உதயமாயிற்று.
திரும்பவும் அந்த வீட்டுக்கே போனார். திறந்த கதவு வழியாகப் பிரவேசித்தார்.
"ஓய்ய்ய்ய்" என்று ஒரு கூச்சல் போட்டார். "இய்ய்ய்ய்" என்று இன்னொரு சத்தம் போட்டார்.
சீட்டாடிய அறையிலிருந்து குழப்பமான குரல்கள் வந்தன.
மறுபடியும் ராயர் 'கிறீச்' என்றும் 'ஐயோ!' என்றும் கத்தினார். கனவில் பேய்கள் போட்ட சத்தத்தையெல்லாம் இவரும் போட்டார்.
மாடிப்படியில் இரண்டு முறை தடதடவென்று ஏறி இறங்கினார்.
சீட்டாட்ட அறைக் கதவு திறந்தது. சீட்டு ஆடியவர்கள் வெளியில் வரத் தொடங்கினார்கள்.
மச்சுப் படியில் பத்து அடிக்கு மேலே கடோ த்கஜராவ் நின்று கொண்டார். தன்னுடைய கறுப்புக் கம்பளியை எடுத்துத் தலை முதல் கால் வரை போட்டு மறைத்துக் கொண்டு நின்றார்.
அறையிலிருந்து வந்தவர்களில் ஒருவன் அந்த உருவத்தைப் பார்த்தான். 'அதோ!' என்று பீதி நிறைந்த குரலில் சொன்னான். மற்றவர்களும் பார்த்தார்கள் அவ்வளவுதான்! ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்கள். அவசரத்தில் கொஞ்சம் ரூபாய்களைக்கூட இறைத்து விட்டுப் போனார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீடு தேடும் படலம் - Veedu Thedum Padalam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பேய், கொண்டு, ஜல்க், சத்தம், த்கஜராவ், அந்த, ராயர், யார், வந்து, கதவைத், கொண்டார், கேட்டது, அந்தப், கொஞ்சம், மறுபடியும், அவர், என்றும், நான், என்றார், கதவு, என்ன, திறந்து, பார்த்தார், கால், போடட்டுமா, சிறிது, போட்டார், போய், ஓட்டம், போட்டு, அறைக்கு, வீட்டில், இராத்திரி, உன்னுடைய, உடனே, போட்டுக், எழுந்து, அங்கே, கூச்சல், மேலே, வந்தது, பார்த்து, போனார், இன்னொரு, பாரதியார், வந்த, பேய்கள், அறையிலிருந்து, பேயே, கதவை, இல்லை, தோன்றியது, த்கஜராயர், போல், பிறகு, மின்சார, வீடு, கதவைச், உட்கார்ந்து, என்றது, தெரிந்து, உள்ளே, உன்னை, பார், இரண்டு, உனக்கு, போய்விடு, நின்று