வீடு தேடும் படலம்
1
துவாபர யுகத்து பெர்னார்ட்ஷா என்று பெயர்
பெற்ற புரொபஸர் வேதவியாசர் மொத்தம் மூன்றரைக் கோடி வார்த்தைகளைக் கொண்ட
பதினெட்டுப் புராணங்களை இயற்றினார் அல்லவா! அந்தப் பதினெட்டுப் புராணங்களையும்
நைமிசாரண்ய வனத்தின் சூத புராணிகர் சௌனகாதி முனிவர்களுக்கு எடுத்துச்
சொன்னார். அவ்வளவையும் கேட்டுவிட்டு அம்முனிவர்கள் "அடடா! பதினெட்டுப்
புராணத்திற்குப் பிறகு பத்தொன்பாவது புராணம் இல்லாமற் போய் விட்டதே!
இனிமேல் நாங்கள் எதைக் கேட்டுக் கொண்டு தூங்குவோம்?" என்று புலம்பினார்கள்.
அதற்குச் சூதர், முனிவர்களே கவலை வேண்டாம். பத்தொன்பதாவது புராணமாகிய
கலி புராணம் ஒன்று இருக்கிறது. அதைக் கேட்டுக் கொண்டே நிம்மதியாக தூங்குங்கள்!"
என்று சொல்லி கமண்டலத்திலிருந்து ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஆசமனம் செய்துவிட்டு,
பத்தொன்பதாவது கலி புராணத்தைக் கூறத் தொடங்கினார்.
அவ்வளவு பெருமை வாய்ந்த கலி புராணத்தில் நாட்டுப் படலத்துக்கும் நகரப் படலத்துக்கும் அடுத்தபடியான வீட்டுப் படலம் வருகிறது. வீட்டுப் படலம் என்றும் சொல்லலாம்! வீடு தேடும் படலம் என்றும் சொல்லலாம்! அல்லது ஒன்றும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டும் இருக்கலாம். எனினும் "கடமையைச் செய்யுங்கள்!" "கடமையைத் தானே செய்யுங்கள்!" "கடமையைக் கட்டாயம் செய்யுங்கள்!" என்று பகவத் கீதையில் பேராசிரியர் கிருஷ்ணபகவான் முக்காலே மூன்று வாட்டியும் கதறியிருப்பதை முன்னிட்டு, இங்கே நாம் எம் கடமையைச் செய்யத் தொடங்குகிறோம்.
திருவல்லிக்கேணியில் திக்கற்ற விக்ன விநாயகர் கோயில் வீதியில் ஸ்ரீ கடோ த்கஜராயர் என்பவர் பன்னெடுங்காலமாகக் குடியிருந்து வந்தார்.
அந்தத் தெருவில் அவர் குடியிருந்த காலத்தில் அவருடைய குடும்பம் வளர்ந்து கொண்டே வந்தது. ஒன்பது குழந்தைகளுக்குத் தகப்பனாராகி ஹிந்து சமூகத்தின் வளர்ச்சிக்குத் தொண்டு புரிந்து வந்தார். இந்தத் தொண்டின் பெருமையைச் சிறிதும் அறியாதவனான அந்த வீட்டின் சொந்தக்காரன் ஒருநாள் திடீரென்றுத் தோன்றி, "என் சொந்த வீட்டுக்கு நான் குடிவர எண்ணியிருக்கிறேன். ஆகையால் வீட்டைக் காலி செய்து அருள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.
ஸ்ரீ கடோ த்கஜராயருக்கு இது ஒரு விதத்தில் மகிழ்ச்சியே அளித்தது. எத்தனை காலந்தான் மாறுதல் என்பதே இல்லாமல் ஒரே இடத்தில் வாழ்க்கை நடத்துவது? ஒரே பாழும் வீட்டில் எத்தனை காலம் குடியிருப்பது? அதைக் காட்டிலும் இன்னொரு பாழும் வீட்டுக்கு குடிபோவது ஒரு மாறுதலாயிருக்கலாமல்லவா? பழைய வீட்டுக்காரனுக்கு வாடகை கொடுக்காமல் பல வருஷம் நாமம் போட்டு வந்ததுபோல் புதிய வீட்டுக்காரனுக்கும் நாமம் போடலாம் அல்லவா?
எனவே, புதிய வீடு ஒன்றை வாடகைக்குத் தேடிப் பிடிப்பது என்று கடோ த்கஜராயர் தீர்மானித்தார். அப்போதுதான் மறைந்துபோன அந்தப் பழையக் காலத்தை நினைத்து அவர் பெருமூச்சு விட நேர்ந்தது. அந்த மனிதர் சென்னைப் பட்டணத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்க்கை தொடங்கிய போது சென்னை நகரில் எங்கே பார்த்தாலும் 'டு லெட்' பலகை தொங்கிக் கொண்டிருக்கும். மலையாளத்து நம்பூதிரி ஒரு தடவை சென்னைப் பட்டணத்தை வந்து பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்றதும் என்ன சொன்னான் என்று ஞாபகமிருகிறதல்லவா? "மதராஸிலே உள்ள பணக்காரர்களிலே டு லெட் துரைதான் பெரிய பணக்காரன். எந்தத் தெருவிலே பார்த்தாலும் பத்து எட்டு வீட்டுக்குக் குறையாமல் டு லெட் துரையின் போர்டு தொங்குகிறது" என்று நம்பூதிரி மலையாளத்தில் சொன்னதை நான் மேலே தமிழில் எழுதியிருக்கிறேன்.
அப்படிப்பட்ட வளமையான காலம் இனி எப்போது வரப்போகிறதோ? இன்றைக்குச் சென்னை நகரம் முழுதும் தேடி அலைந்தாலும் 'டு லெட்' பலகை ஒன்றைக்கூடப் பார்க்க முடியவில்லையே!
யாரோ சொன்ன யோசனையைக் கேட்டுக் கொண்டு கடோ த்கஜராயர் வீட்டுக் கட்டுப்பாடு அதிகாரியின் காரியாலயத்தைத் தேடிச் சென்றார். காலி வீடுகளுக்கெல்லாம் அந்த அதிகாரியிடம் ஜாபிதா இருக்கும் என்றும், அவரைக் கேட்டால் ஒருவேளை ஏதேனும் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொடுக்கலாம் என்றும் அவர் கேள்விப்பட்டார்.
எனவே, வீட்டுக் கட்டுப்பாடு அதிகாரியின் ஆபீஸ் எங்கே என்று துப்பு வைத்து விசாரித்துக் கொண்டு, அந்தக் காரியாலயத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.
மேற்படி காரியாலயத்தில் ஒரு மனிதர் மேஜை நாற்காலி போட்டுக் கொண்டு எதிரில் பெரிய தஸ்தாவேஜிக் கட்டுக்களை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
அவருடைய படாடோப தோரணையைப் பார்த்த கடோ த்கஜராயர் மிக்க பயபக்தியுடன் நின்று, "ஸார்! தாங்கள்தான் வீட்டுக் கட்டுப்பாடு அதிகாரியோ?" என்று கேட்டார்.
"ஆம், நாம் தான்! சொல்லுங்கள்!" என்றார் அந்த அதிகார தோரணைக்காரர்.
அவர் 'நாம் தான்' என்று சொன்னது கடோ த்கஜராயருக்குச் சிறிது சந்தேகத்தை அளித்தது.
தஞ்சாவூர் ஜில்லா மிராசுதாரர் ஒருவரின் மனைவிக்கு உடம்பு அசௌகரியம் என்று அறிந்த சலுகையுள்ள பண்ணைக்காரன், "எஜமான்! நம்ப சம்சாரத்துக்கு உடம்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்டானாம்! அந்த மாதிரியல்லவா இருக்கிறது கதை? இந்த அதிகாரி 'நாம் தான்!' என்று சொன்னதன் மர்மம் என்ன?
அந்தச் சந்தேகத்தை மனதிலேயே வைத்துக் கொண்டு "வாடகைக்கு ஒரு வீடு தேவையாயிருக்கிறது. உங்களைக் கேட்டால் கிடைக்கும் என்று சொன்னீர்கள்" என்றார் கடோ த்கஜராவ்.
"நீங்கள் கெஜடட் ஆபீஸரா! அல்லது நான் - கெஜடட் ஆபீஸரா?" என்று மேற்படி 'நாம் தான் பேர்வழி' கேட்டார்.
"நான் கெஜடட் ஆபீஸருமில்லை; நான் கெஜடட் ஆபீஸருமில்லை. அதாவது இந்தச் சமயம் நான் ஒரு வித ஆபீஸருமில்லை. நீங்கள் பார்த்து கெஜடட் உத்தியோகமோ, நான் - கெஜடட் உத்தியோகமோ, எது போட்டுக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்கிறேன். நான் பெரிய குடும்பி; ஒன்பது குழந்தைகளுக்குத் தகப்பன். ஒன்பதுதான் இதற்கு மேலே இல்லை என்று சொல்லவும் முடியாது" என்றார் கடோ த்கஜராயர்.
"விளையாட வேண்டாம்!" என்றார், 'நாம் தான் பேர்வழி'.
"நான் விளையாடவில்லை. விளையாட்டுக்கு நான் பூரண விரோதி! 'விளையாட்டு ஒழிக!' என்று ஓர் இயக்கம் யாராவது ஆரம்பித்தால் அதில் முதலில் நான் தான் சேர்வேன்!" என்றார் ராயர்.
"நீர் கெஜடட் ஆபீஸர் இல்லை; ஆகையால் உமக்கு வீடு கிடைக்காது! போகலாம்!"
"அப்படிச் சொல்லாதீர்கள்! நான் கெஜடட் ஆபீஸருக்கும் மேலே!"
இதைக் கேட்ட அந்த 'நாம் தான்' கொஞ்சம் பயமடைந்து மேசைமேல் கிடந்த தமது பாத தாமரைகளைக் கீழே எடுத்து வைத்துவிட்டு, "அப்படியானால் உட்கார்ந்து கொண்டு பேசுங்கள்!" என்று ஒரு நாற்காலியைக் காட்டினார்.
"கெஜடட் ஆபீஸருக்கும் மேலே என்றால், ஒரு வேளை ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தரோ? அல்லது ரெவினியூ போர்டு மெம்பரோ?" என்று கேட்டார்.
"இல்லை; அதற்கும் மேலே!"
"ஹைகோர்ட் ஜட்ஜோ?"
"இன்னும் மேலே!"
"ஆண்டவனே! அப்படியானால் தாங்கள் சட்டசபை அங்கத்தினரோ?"
"இன்னும் கொஞ்சம் மேலே போங்கள், பார்க்கலாம்."
"எம்.எல்.சி.யோ?"
"இல்லை; இன்னும் மேலே!"
"எம்.எல்.சி.யின் மாமனாரோ? அல்லது மைத்துனரோ? அல்லது ஷட்டகரோ?"
"கிடையாது; இன்னும் கொஞ்சம் மேலே போய்ப் பாருங்கள்!"
"மன்னிக்க வேணும்! ஒரு வேளை தாங்கள் சர்வ வல்லமையுள்ள மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரோ?"
"அதுவும் இல்லை!"
"பின்னே நீ யார்?"
"உம்முடைய சட்டசபை அங்கத்தினர்களையும் மந்திரிகளையும் உண்டாக்கியவன். உம்முடைய ஐ.சி.எஸ். காரர்களுக்கெல்லாம் மாதந்தோறும் சம்பளம் - படி அளக்கிறவன். உமக்கும் கூடத்தான்!"
"அது யார் ஐயா, நீர்?"
"இந்த தேசத்துக்கு ராஜா நான். சர்தார் படேல் அவர்களால் கூட அசைக்க முடியாத ராஜா. 'நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்று பாரதியார் சொன்னாரே. அந்த மன்னர்களில் நான் ஒரு மன்னன். அதாவது இந்தியா தேசத்துச் சுதந்திரப் பிரஜை!"
இதைக் கேட்ட அந்த மனிதர் கடகடவென்று சிரித்தார். என்ன ஹாஸ்யத்தைக் கண்டு சிரித்தாரோ தெரியவில்லை.
"ஓஹோ! பாரதியாரின் பாட்டை நம்பிக் கொண்டா வந்தீர்? அழகுதான்! உமக்கு வீடு வாடகைக்குக் கிடைக்காது. சும்மா வேண்டுமானால் தங்க இடம் கிடைக்கும். கீழ்ப்பாக்கத்துக்கும் பெரம்பூருக்கும் நடுவில் அந்த ஜாகை இருக்கிறது. லுனாடிக் அஸைலம் என்று பெயர்."
"அப்படியானால் அந்த ஜாகைக்குத் தான் சீட்டுக் கொடுங்களேன்!"
"நான் இந்த ஆபீஸின் தலைமை அதிகாரி அல்ல. அதிகாரியின் சொந்த அந்தரங்க குமாஸ்தாதான். ஆகையால் உத்தரவு அவர் கையெழுத்தில்லாமல் நான் போட்டுக் கொடுக்க முடியாது. ஆபிஸர் ஒரு வாரம் லீவில் இருக்கிறார். அடுத்த வாரம் வந்து அவரிடம் நேரில் விண்ணப்பம் போடும்."
மிக்க ஏமாற்றத்துடனே கடோ த்கஜராவ் அங்கிருந்து கிளம்பினார். பிறகு இன்னும் சில சிநேகிதர்களை விசாரித்ததில் "ஏதேனும் ஒரு வீடு காலியாயிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளும். அதன் சொந்தக்காரனிடம் 'வீட்டை இன்னாருக்குக் கொடுக்கச் சம்மதம்' என்று எழுதி வாங்கிக் கொண்டு வீட்டுக் கண்ட்ரோல் ஆபீஸரிடம் போனால், சல்லிஸாக வீடு கிடைக்கலாம்" என்று சொன்னார்கள்.
இதன் பேரில் சென்னைப் பட்டணத்தில் காலி வீடு எங்கேனும் இருக்கிறதா என்று கடோ த்கஜராவ் பலரிடமும் விசாரிக்க ஆரம்பித்தார். தேனாம்பேட்டையில் சில நாளாக ஒரு வீடு காலியாக இருக்கிறதென்று கேள்விப்பட்டார். அந்த வீட்டைப் பார்த்துவிட்டு, வீட்டுக்காரனையும் கேட்டு வருவதாகக் கிளம்பினார்.
அன்று சகுனம் அவ்வளவு சரியாக இருந்ததென்று சொல்ல முடியாது. பூனை ஒன்று வீட்டு வாசலில் சிறிது நேரம் நின்று குறுக்கே போகலாமா, வேண்டாமா என்று யோசித்துவிட்டு, பிறகு எதிரே ஓடி வந்து கடோ த்கஜராயரின் கால்களின் வழியாகப் புகுந்து சென்றது.
ஆனால் ராயருக்குச் சகுனத்தில் அவ்வளவு நம்பிக்கை கிடையாது. எத்தனையோ தடவை நல்ல சகுனத்துடன் புறப்பட்டுச் சென்று, காரியம் கைகூடாமல், கைக்குடையையும் தொலைத்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார். ஆகையால் "பூனையும் ஆச்சு, ஆனையும் ஆச்சு!" என்று துணிச்சலுடன் இன்றைக்குப் புறப்பட்டுச் சென்றார். ஒரு டிராம் வண்டியில் இடம் பிடித்து உட்கார்ந்து விட்டார்.
அந்த டிராம் வண்டியில் கொஞ்சம் எக்கச்சக்கமான சம்பாஷணை அப்போது நடந்து கொண்டிருந்தது.
ஒருவர் கையில் பத்திரிகையை வைத்துக் கொண்டு அதில் போட்டிருந்த வார பலனை இரைந்து படித்தார்.
இன்னொருவர் குறுக்கிட்டு, "ஜோசியமாவது கீசியமாவது; எல்லாம் சுத்த ஹம்பக்!" என்றார்.
"அப்படி ஒரே அடியாய்ச் சொல்லக் கூடாது! ஜோசியமும் ஒரு ஸயன்ஸ்தானே?" என்றார் இன்னொருவர்.
"எல்லாம் அவரவர்களுடைய நம்பிக்கையைப் பொறுத்தது. வீண் சண்டை எதற்கு?" என்றார் மற்றொரு சமாதானப் பிரியர்.
"பாரதியார் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? புதிய ஆத்திச் சூடியில் "சோதிடம் தனை இகழ்" என்று ஸ்பஷ்டமாக எழுதியிருக்கிறார்!"
"பாரதியார் சொல்லிவிட்டால் வேதவாக்கோ இப்படியெல்லாம் கண்டதைச் சொன்னதனாலேதான் அவர் திண்டாடிப் புதுச்சேரித் தெருவிலே நின்றார்!"
இப்படியாக விவாதம் தடித்துக் கொண்டிருந்த போது நமது கடோ த்கஜராயர் சும்மா இருக்கக் கூடாதா?
"இவ்வளவு என்னத்திற்கு? பரணி நட்சத்திரத்துக்கு இந்த வாரம் என்ன பலன் போட்டிருக்கிறது என்று படித்துக் காட்டுங்கள். அதன்படி நடக்கிறதா இல்லையா என்று பரிசோதித்துப் பார்த்து விடுவோம்!" என்று சொல்லி வைத்தார்.
பரணி நட்சத்திரத்துக்கு அந்த வாரத்திய பலன் முதல் மூன்று நாளும் அவ்வளவு சுகமில்லை என்று இருந்தது. "எடுத்த காரியத்தில் தோல்வி, மனக் கிலேசம் வியாபாரத்தில் நஷ்டம்' என்று இப்படிப் படுமோசமாகச் சொல்லியிருந்தது.
கடோ த்கஜராயருக்கு ஒரே கோபமாக வந்தது. போகிற காரியத்தில் வெற்றியடையாமல் திரும்புவதில்லை என்று மனதில் தீர்மானித்துக் கொண்டு வெளிப்படையாகவும் சபதம் கூறினார்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீடு தேடும் படலம் - Veedu Thedum Padalam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், அந்த, கொண்டு, மேலே, கெஜடட், வீடு, என்றார், நாம், தான், அவர், த்கஜராயர், இன்னும், என்ன, இல்லை, அல்லது, இருக்கிறது, லெட், கொஞ்சம், ஆகையால், என்றும், அவ்வளவு, கேட்டுக், வீட்டுக், த்கஜராவ், வாரம், பாரதியார், கேட்டார், அப்படியானால், முடியாது, ஆபீஸருமில்லை, வந்து, காலி, மனிதர், செய்யுங்கள், படலம், பிறகு, சென்னைப், பதினெட்டுப், போட்டுக், அதிகாரியின், கட்டுப்பாடு, பெரிய, வைத்துக்