புன்னைவனத்துப் புலி - அத்தியாயம் 4
மறுநாள் சந்திரசூடன் பண்ணையாரின் வீட்டுக்குப்
போனான். மனோகரன் அவனை உற்சாகமாக வரவேற்றுப் பண்ணையாருக்கும் அவர் மனைவிக்கும்
அறிமுகப்படுத்தி வைத்தான். சந்திரசூடன் பி.எல். பாஸ் செய்தவன் என்று
அறிந்ததும் பண்ணையாருக்கு அவன் மீது தனிப்பட்ட சிரத்தை ஏற்பட்டது. மறுபடியும்
அவனை வரும்படியாகச் சொன்னார்.
சந்திரசூடன் மனோகரனுடன் சில நாள் மலை மேல் வேட்டையாடுவதற்காகச் சென்று வந்தான். முயல், நரி, பெருச்சாளி முதலிய பிராணிகள் சில அற்பாயுளில் மாண்டன. புலி மட்டும் அகப்படவில்லை.
பண்ணையார் தனிப்படச் சந்திரசூடனைச் சந்கிக்க நேர்ந்த ஒருநாள் 'உயில்' எழுதும் முறைகளைப் பற்றி அவனிடம் விசாரித்தார். தம்முடைய சொத்துக்கள் பெரும்பாலும் சுயார்ஜிதம் என்றும் அவற்றைத் தம் இஷ்டப்படி யாருக்காவது எழுதி வைக்கலாமா என்றும் கேட்டார். சுயார்ஜித சொத்தில் சொந்தப் பிள்ளையின் உரிமை என்ன, பேரனின் உரிமை என்ன, சுவீகார புத்திரனுடைய பாத்தியதைகள் என்ன - என்றெல்லாம் விவரமாகக் கேட்டார்.
மனோகரனும் அதே விஷயத்தைப் பற்றித் தன்னிடம் விசாரித்தது சந்திரசூடனுக்கு வியப்பாயிருந்தது. ஒரு மாதிரி அவர்களுடைய பேச்சிலிருந்து ஊகம் செய்து நிலைமையை அறிந்து கொண்டான். மனோகரன் பண்ணையாரின் சொத்துக்களைத் தன்பெயருக்கு உயில் எழுதி வைத்து விடும்படி வற்புறுத்தி வருவதாகத் தெரிந்தது. பண்ணையாரின் மனத்தில் இது நியாயமா என்ற கேள்வி எழுந்து உறுத்திக் கொண்டிருந்தது. அத்துடன் சட்டப்படி செல்லுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டிருந்தது.
சந்திரசூடன் பண்ணையாரிடம் கொஞ்சம் நெருங்கிப் பழகி அவருடைய அபிமானத்தை ஓரளவு சம்பாதித்துக் கொண்ட பிறகு, "நீங்கள் இப்படியெல்லாம் மர்மமாய்க் கேட்டால் ஒன்றும் தெளிவாகாது. மனத்தில் உள்ளதை மனம் விட்டுச் சொன்னால், நான் சட்டங்களைப் பார்த்துத் திட்டமாகச் சொல்ல முடியும்" என்றான்.
அதன் பேரில் பண்ணையாரும் மனம் விட்டுப் பேசினார். தம் ஒரே பிள்ளையாகிய தர்மராஜன், தம் பேச்சைக் கேட்காமல் ஒரு கீழ் சாதிப் பெண்ணை மணந்து கொண்டதைப் பற்றியும், அவனைத் தாம் நிராகரித்து விட்டதைப் பற்றியும் கூறினார். அவன் சில காலத்துக்கு முன் ஒரு விமான விபத்தில் மாண்டு போனதாக வதந்தி என்றும், ஆனால் நிச்சயம் தெரியவில்லையென்றும், அந்தச் செய்தி வருவதற்கு முன்பே மனோகரனைத் தாம் அழைத்துக் கொண்டது பற்றியும் தெரிவித்தார். மகன் வீட்டை விட்டுப் போனதற்குப் பிறகு அவனைப் பற்றியோ, அவன் குடும்பத்தைப் பற்றியோ தாம் ஒன்றும் விசாரிக்கவில்லையென்று கூறினார். ஒரு வேளை அவனுடைய மனைவி இருந்தால், சொத்தில் அவர்களுக்குப் பாத்தியதை உண்டா என்று கேட்டார்.
நிராகரித்த மகனைப் பற்றிப் பண்ணையார் இன்னமும் தாட்சண்யமின்றிக் கடுமையாகவே பேசினார். ஆனாலும், அவனுக்கு நேர்ந்ததாகக் கேள்விப்பட்ட கதியைப் பற்றிப் பேசும்போது அவர் நெஞ்சு சிறிது இளகியிருந்ததாகத் தோன்றியது.
சந்திரசூடன் அவருடைய நெஞ்சு இளக்கத்தை அதிகமாக்குவதற்கு முயன்றான்.
"பையனுடைய தலைவிதி அப்படியிருந்தது. அதற்காக மற்றவர்களை ஏன் கோபிக்க வேண்டும்? அவனுக்குக் குழந்தைகள் உண்டா என்பது பற்றி விசாரிப்பது அவசியம். இந்த உலகத்தில் கடவுளை நேரில் தரிசிப்பது என்றால் குழந்தைகளிடந்தான் தரிசிக்கலாம். உலகப் பற்றுக்களை ஒழித்த பெரிய மகான்கள் கூடக் குழந்தைகளிடம் ஆசை காட்டினார்கள் என்று அறிந்திருக்கிறோம் அல்லவா?" என்றான் சந்திரசூடன்.
"இந்தப் பெரிய வீட்டில் தவழ்ந்து விளையாட ஒரு குழந்தை இல்லையே என்று நானுந்தான் ஏங்குகிறேன். அந்தப் பாவி இப்படி எங்களை விட்டு விட்டுப் போய் விட்டானே?" என்றார் பண்ணையார்.
பின்னர் இந்த விஷயத்தைப் பற்றி அடிக்கடி பேச்சு நடந்தது. பண்ணையாரின் மனைவியும் அதில் சேர்ந்து கொண்டாள். "எங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு அவன் தான் போய்விட்டான். அவனுக்கு ஏதாவது குஞ்சு குழந்தை இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டுமென்று நான் சொல்லிக் கொண்டுதானிருக்கிறேன். இவர் ஒரே பிடிவாதமாயிருக்கிறார். ரொம்ப கல் நெஞ்சுக்காரர்!" என்றாள் பண்ணையாரின் மனைவி.
"எப்படியடி விசாரிக்கிறது? எப்படி விசாரிக்கிறது என்று கேட்கிறேன். பத்திரிகையில் விளம்பரம் போடச் சொல்கிறாயா? அல்லது ஊர் ஊராகப் போய் டமாரம் அடிக்கச் சொல்கிறாயா?" என்றார் பண்ணையார்.
இந்த மாதிரிப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் மனோகர் திடீரென்று உள்ளே வந்து விட்டான். அவன் முகத்தின் சுளிப்பைச் சந்திரசூடன் கவனித்து, உடனே அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 4 - Punnaivanathu Puli - புன்னைவனத்துப் புலி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சந்திரசூடன், அவன், பண்ணையாரின், பண்ணையார், பற்றியும், விட்டுப், தாம், என்றும், பற்றி, கேட்டார், என்ன