நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்)
8
'விமோசனம்' பத்திரிகை நடந்து கொண்டிருந்த
காலத்தில் சென்னையில் இரட்டை ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இரட்டையாட்சி
சர்க்கார் மாகாணத்தில் மது அரக்கனுடைய தீமைகளைப் பிரசாரம் செய்வதற்காக
ஒவ்வொரு ஜில்லாவிலும் கமிட்டிகளையும் பிரசாரகர்களையும் ஏற்படுத்தியிருந்தார்கள்.
"டெம்பரன்ஸ் கமிட்டி" என்று பெயர் கொண்டிருந்த இந்தக் கமிட்டிகளைச் சிலர்
"மிதக்குடி பிரசாரக் கமிட்டி" என்று பரிகாசம் செய்தார்கள். ஆயினும் மேற்படி
கமிட்டிகள் சில ஜில்லாக்களில் சிறந்த வேலை செய்து வந்தன. அந்தக் கமிட்டிகளின்
வேலைக்கு 'விமோசனம்' மிக்க உதவியாயிருந்தது. சில ஜில்லாக் கமிட்டிகள்
பத்துப் பிரதிகள் பதினைந்து பிரதிகள் தருவித்து மது விலக்குப் பிரசாரகர்களுக்குக்
கொடுத்தன.
பொதுவாக அச்சமயம் தமிழ் நாடெங்கும் மதுவிலக்குப் பிரசாரத்தில் உற்சாகம் ஏற்பட்டிருந்தது. காந்தி ஆசிரமத் தொண்டர்கள் தீவிரமான மதுவிலக்குப் பிரசாரம் செய்தார்கள். விமோசனத்தில் வெளியான படங்கள் பிரசாரத்துக்கு மிக்க உதவியாயிருந்தன. மேற்படி படங்களைப் பெரிதாக எழுதச் செய்து துணியில் ஒட்டி வைத்திருந்தோம். மொத்தம் சுமார் முத்திரண்டு படங்கள் இருந்தன. இந்தப் படங்களையும் பெட்ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக்கொண்டு ஆசிரமத்தின் பெரிய கட்டை வண்டியில் ஏறி வாரத்துக்கு இரண்டு நாள் கிராமப் பிரசாரத்துக்குப் போவோம். ஆசிரமத்தில் ராஜாஜி இருந்த போதெல்லாம் அவர்களும் வருவார்கள். ஒரு கிராமத்துக்குப் போனதும் முதலில் கிராமச் சாவடிக்குச் சென்று பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்றிக் கொள்வோம். பிறகு மதுவிலக்குப் பாட்டுப் பாடிக் கொண்டு ஊரைச் சுற்றி வருவோம். அந்தச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றது போல் நாமக்கல் கவிஞர் மதுவிலக்குப் பாட்டு ஒன்று பாடிக் கொடுத்தார்:
குற்றமென்று
யாருமே
கூறுமிந்தக் கள்ளினை
விற்க விட்டுத் தீமையை
விதைப்ப தென்ன விந்தையே
பாடுபட்ட கூலியைப்
பறிக்கு மிந்தக் கள்ளினை
வீடு விட்டு நாடு விட்டு
வெளியிலே துரத்துவோம்!"
என்பது போன்ற பாட்டின் அடிகள் கிராமவாசிகளுக்கு எளிதில் புரியக்
கூடியதாயும் அவர்கள் மனதில் பதியக் கூடியதாயும் இருந்தன. மேற்படி மதுவிலக்குப்
பாட்டு ராஜாஜிக்குப் பெரிதும் பிடித்திருந்தது. இது காரணமாக நாமக்கல்
கவிஞர் மீது ராஜாஜிக்கு அபாரமான அபிமானமும் மதிப்பும் ஏற்பட்டன.கூறுமிந்தக் கள்ளினை
விற்க விட்டுத் தீமையை
விதைப்ப தென்ன விந்தையே
பாடுபட்ட கூலியைப்
பறிக்கு மிந்தக் கள்ளினை
வீடு விட்டு நாடு விட்டு
வெளியிலே துரத்துவோம்!"
நாமக்கல் கவிஞர் பாட்டுப் புத்தகத்துக்கு ராஜாஜி எழுதியுள்ள முன்னுரையில் "சில அம்சங்களில் நாமக்கல் கவிஞர் பாரதியாரைக் காட்டிலும் மேல்" என்று எழுதியிருப்பதை நேயர்கள் பலர் கவனித்திருக்கலாம். ராஜாஜி உபசாரத்துக்காக இப்படி ஒரு விஷயத்தை எழுதக்கூடியவர் அல்ல. மனதில் உண்மையாகப் பட்டதையே எழுதுவார். எனவே, நாமக்கல் கவிஞரைப் பாரதியாருக்கு மேலே மதிப்பிட்டதற்குக் காரணம் இருக்க வேண்டுமல்லவா? அதற்குக் காரணம் மேற்படி மதுவிலக்குப் பாட்டுத்தான் என்று நான் கருதுகிறேன். மதுவிலக்கு இயக்கம் ராஜாஜியின் உள்ளத்தில் அவ்வளவு முக்கியமான ஸ்தானம் பெற்றிருந்தது.
புதுப்பாளையம் காந்தி ஆசிரமம் ஏற்பட்ட பிறகு நூற்றல் கூலி, நெசவுக் கூலி மூலமாய் பக்கத்துக் கிராமங்களுக்கு லட்சக் கணக்கான ரூபாய் பட்டுவாடா ஆகி வந்தது. ஆயினும் கிராமவாசிகளின் நிலைமை மொத்தத்தில் அபிவிருத்தியடையவில்லை. தரித்திர நாராயணர்களின் வாசஸ்தலங்களாகவே கிராமங்கள் இருந்து வந்தன. இதற்குக் காரணம் கள்ளு, சாராயக் கடைகளே என்பதை ராஜாஜி கண்டார். மதுபானத்தில் ஏழை எளிய மக்களின் வீடுகள் நரகக் குழிகளாகியிருப்பதையும், அவர்கள் நாளுக்கு நாள் க்ஷீணமடைந்து வருவதையும் ராஜாஜி பார்த்தார். கள்ளுக் கடைகளை மூடினால் ஒழிய கிராமவாசிகளுக்கு விமோசனமே கிடையாது என்ற உறுதியான எண்ணம் அவர் மனதில் நிலை பெற்றது. தேசத்தில் வேறு எந்த திட்டமும் இதைப் போல் முக்கியமானதல்ல என்ற எண்ணமும் உண்டாயிற்று. ஆகையினால்தான் மதுவிலக்குப் பிரசாரத்துக்காக ஆரம்பித்த பத்திரிகைக்கு 'விமோசனம்' என்று பெயரிட்டார். அவ்வளவு பரம முக்கியமாக அவர் கருதிய மதுவிலக்கு இயக்கத்தைப் பற்றிப் பாடிய நாமக்கல் கவிஞர் மீது அவருக்கு மிக்க மதிப்பும் அபிமானமும் ஏற்பட்டதில் வியப்பில்லையல்லவா?
பெட்ரோமாக்ஸ் விளக்கைப் பொருத்தி வைத்துவிட்டு மதுவிலக்குப் பாட்டைப் பாடிக்கொண்டு ஊரைச் சுற்றி வருவோம். எங்களைத் தொடர்ந்து கிராமவாசிகள் சிலரும் வருவார்கள். வரவரக் கூட்டம் அதிகமாகும். கடைசியில் வசதியான இடம் ஒன்றில் ஊர்வலம் முடிந்து, பொதுக் கூட்டம் ஆரம்பமாகும். மதுவிலக்குப் பிரசாரப் படங்களை ஒவ்வொன்றாக விரித்து விளக்கு வெளிச்சத்தில் ஒருவர் காட்ட, இன்னொருவர் அதைச் சுட்டிக் காட்டி விளக்கிப் பேசியது கிராமவாசிகளின் மனதில் மிகவும் நன்றாகப் பதிந்தது. 'விமோசன'த்தில் வெளியான படத் தொகுதிகளில் ஒரு குறிப்பிட்ட தொகுதியைக் கிராமவாசிகள் - முக்கியமாகப் பெண்கள் - மிகவும் ரஸித்துச் சிரிப்பார்கள்.
அந்தப் படத் தொகுதியில் சட்டைத் தொப்பி போட்ட மனிதன் ஒருவன் ஒரு சாராயப் புட்டியை முதலில் ஒரு மாட்டினிடம் கொண்டு நீட்டுகிறான். மாடு குடிக்க மாட்டேன் என்கிறது. பிறகு குதிரையிடம் போகிறான். குதிரையும் வேண்டாம் என்கிறது. பிறகு நாய் குடிக்க மறுக்கிறது. பன்றி கூட 'வேண்டாம்' என்று மறுதளிக்கிறது. கடைசியில் அந்தச் சட்டைக்காரன் ஒரு கிராமத்துக் குடியானவனிடம் கொண்டு போய் புட்டியை நீட்டுகிறான். அந்தக் குடியானவன் அதை வாங்கிக் குடிக்கிறான். "நாயும் பன்றியுங் கூட விஷம் என்று குடிக்க மறுக்கும் மதுவை மனிதன் குடிக்கிறான், பார்த்தீர்களா?" என்று படத்தைச் சுட்டிக் காட்டிப் பிரசங்கி சொன்னதும் கூட்டத்தில் உள்ள ஸ்திரீகள் எல்லாரும் சிரிப்பார்கள். ஆண்களில் சிலர் சிரிப்பார்கள்; இன்னும் சிலர் "ஆமாம்; அது வாஸ்தவம் தானே?" என்பார்கள்.
கிராமவாசிகளின் மனதைக் கவர்ந்த இன்னொரு படம்:-
முதலில் ஒரு குடித்தனக்காரர் பெண்டு பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்வதைக் காட்டுகிறது; பத்து வருஷம் குடித்த பிறகு அவர் வீடு பாழாய்க் கிடப்பதையும், உடைந்த புட்டிகளுக்கும் கலயங்களுக்கும் மத்தியில் அந்த மனிதன் தலையில் கையை வைத்துக் கொண்டு தனியே உட்கார்ந்திருப்பதையும் காட்டுகிறது.
இரண்டாவது படத்தைக் காட்டி விஷயத்தைச் சொன்னதும் கிராம வாசிகள், "ஆஹா!" "ஐயோ!" என்று பரிதபிக்கும் குரல்கள் கேட்கும். இப்படியெல்லாம் கிராமவாசிகளின் மனதில் படும்படி பிரசாரம் செய்யும் முறை ராஜாஜியின் மனதிலேதான் முதன் முதலாக உதித்தது. மேற்படி மதுவிலக்குப் படங்கள் பின்னால் அச்சிடப்பட்டு தொகுதி தொகுதியாகப் பல இடங்களுக்கு பிரசாரங்களுக்காக அனுப்பப்பட்டன.
படங்களைச் சுட்டிக் காட்டி நாங்கள் ஒவ்வொருவரும் பிரசங்கம் செய்வதுண்டு. படங்களின் உதவியில்லாமல் வாசாம கோசரமாக மதுவின் தீமைகளைப் பற்றிப் பேசுவதும் உண்டு. ஆயினும் ராஜாஜி பேசும்போது கிராமத்து ஜனங்களின் மனதிலே பதிவது போல் எங்களுடைய பேச்சு பதிவதில்லை. ஏனெனில் ராஜாஜியைப் போலக் கிராமத்து ஜனங்களின் கஷ்டங்களை நாங்கள் உணரவில்லை. எங்களுடைய பேச்செல்லாம் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயர் பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிப்பது போலிருக்கும். ராஜாஜியின் பேச்சோ குழந்தையிடம் உயிரை வைத்திருக்கும் தாயார் அன்புடன் புத்தி சொல்வது போலிருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்) - Neenda Mugavurai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மதுவிலக்குப், நாமக்கல், ராஜாஜி, பிறகு, கவிஞர், மேற்படி, மனதில், கிராமவாசிகளின், கொண்டு, சுட்டிக், அவர், பிரசாரம், காட்டி, சிரிப்பார்கள், குடிக்க, மனிதன், ராஜாஜியின், காரணம், விமோசனம், படங்கள், முதலில், போல், மிக்க, சிலர், ஆயினும், பெட்ரோமாக்ஸ்