நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்)
3
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் அப்போது
மானேஜராக இருந்த ஸ்ரீ க.சந்தானம் எம்.ஏ.பி.எல்., ஏற்கனவே எனக்குப் பழக்கமானவர்.
திருப்பூர் கதர்போர்டில் அவரிடம் நான் வேலை பார்த்ததுண்டு. புத்தி சொல்லி
நல்ல வழியில் நடத்தக் கூடிய தமையனாரைப் போல் அவரிடம் அன்பும் மரியாதையும்
கொண்டிருந்தேன். 1920-ம் வருஷத்தில் காந்தி மகாத்மாவின் போதனையை மேற்கொண்டு
வக்கீல் வேலையை உதறித் தள்ளிய ஐந்தாறு அறிவாளிகளில் ஸ்ரீ சந்தானம் ஒருவர்.
ராஜாஜியிடம் அவருடைய பக்திக்கு எல்லையே இல்லை. ராஜாஜியுடன் சம நிலையில்
நின்று வாதம் செய்யக் கூடியவர் அவர் ஒருவரைத் தான் நான் கண்டிருக்கிறேன்.
ராஜாஜியும் அவருடைய அபிப்பிராயங்களுக்கு மிக்க மதிப்புக் கொடுப்பார்.
மூளைக்கு அதிக வேலையைத் தரக்கூடிய எந்தக் காரியத்தையும் ஸ்ரீ சந்தானத்திடந்தான்
ராஜாஜி ஒப்புவிப்பார்.
நான் வருவதற்கு முன்னாலேயே ராஜாஜியின் கடிதம் வந்திருந்தபடியால் ஸ்ரீ சந்தானம் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பனை ஓலை வேய்ந்த ஒரு குடிசையை "இதுதான் உன்னுடைய வீடு!" என்று காட்டினார். "இப்போதைக்கு ஆசிரமத்துக் கணக்கு எழுதும் வேலை தருகிறேன். ஆச்சாரியார் ஊரிலிருந்து வந்ததும் உசிதம் போல் மாற்றிக் கொள்ளலாம்" என்றார். எனக்குக் கணக்கு எழுதும் வேலை ரொம்பப் பிரியம். தினசரிக் கணக்குப் புத்தகத்திலிருந்து பேரேட்டில் பெயர்த்து எழுதி, மாதக் கடைசியில் மொத்தம் கூட்டிப் போட்டு, இரண்டு பத்தியிலும் மொத்தத் தொகை சரியாக வந்து விட்டால், ஏதோ இமய மலையின் சிகரத்தைக் கண்டு பிடித்து விட்டது போன்ற மகிழ்ச்சி உண்டாகும். எனவே சந்தோஷத்துடன் கணக்கு எழுதச் சம்மதித்தேன்.
பிறகு, "சம்பளம் என்ன வேண்டும்" என்று கேட்டார். "இங்கு ஏற்பாடு எப்படியோ அப்படிச் செய்யுங்கள்!" என்றேன். "ஐம்பது ரூபாய் சம்பளம் போடுகிறேன்!" என்றார். மானேஜரான ஸ்ரீ கே.சந்தானம் எம்.ஏ.பி.எல். அவர்களுக்கும் சம்பளம் ஐம்பது ரூபாய் தான் என்று அறிந்த போது ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போனேன். ஆசிரமத் தொண்டர்களுக்குள்ளே சம்பள வித்தியாசம் அதிகம் கிடையாதென்று தெரிந்தது. குடும்பஸ்தர்களுக்கு மாதம் ரூபாய் ஐம்பது; பிரம்மசாரிகளுக்கு அவர்களுடைய அவசியத்தை அநுசரித்துச் சம்பளம் இருபது முதல் நாற்பதுவரை தரப்பட்டது.
ராஜாஜியின் குமாரர் ஸ்ரீ சி.ஆர்.நரசிம்மன் ஆசிரமத் தொண்டர்களில் ஒருவர். அவருக்கு மாதம் ரூபாய் நாற்பது சம்பளம். இந்த நாற்பது ரூபாயிலேதான் ராஜாஜி, நரசிம்மன், நரசிம்மனுடைய சகோதரி லக்ஷ்மி, மேற்படி குடும்பத்துடன் வலிய ஒட்டிக் கொண்ட ஒரு நாய் இவ்வளவு பேருக்கும் காலட்சேபம் நடந்தது என்று தெரிந்தது.
பிரபல வக்கீலாயிருந்து ஆயிரக் கணக்கில் பணம் சம்பாதித்துத் தாராளமாய்ச் செலவழித்து நவநாகரிக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த குடும்பம் திடீரென்று வாழ்வு முறையை அடியோடு மாற்றிக் கொண்டு கிராமத்துக் குடிசையில் மாதம் நாற்பது ரூபாயில் வாழ்க்கை நடத்தியதை நினைக்க வியப்பாயிருந்தது. காந்தி மகாத்மாவின் ஆத்ம சக்தியின் பெருமைக்கு இதைக் காட்டிலும் வேறு உதாரணம் என்ன வேண்டும் என்று அடிக்கடி நான் எண்ணிக் கொள்வதுண்டு.
காந்தி ஆசிரமத்தில் அப்போது நடந்த முக்கியமான வேலை கதர் உற்பத்தி. சுற்றுப் புறக் கிராமங்களில் பல வீடுகளில் பழைய இராட்டைகள் பரண்களில் கிடந்தன. முன்னொரு காலத்தில் அவற்றில் நூல் நூற்றுக் கொண்டிருந்த ஸ்திரீகளும் நூற்றுக்கணக்காக இருந்தார்கள். அவர்களைத் தூண்டி பஞ்சு கொடுத்து, நூற்கும்படி செய்ய, ஆரம்பத்தில் மிகவும் பிரயாசையாக இருந்தது. நான் ஆசிரமத்துக்குச் சென்றபோது மேற்படி ஸ்திரீகளில் பலர் நூற்க ஆரம்பித்தார்கள். நூற்ற நூலை வாரத்திற்கு ஒரு முறை ஆசிரமத்தில் கொண்டு கொடுத்து நூற்ற கூலியும், மேலும் நூற்கப் பஞ்சும் வாங்கிக் கொண்டு போவார்கள். நூலை எடை போட்டு வாங்க வேண்டும். பஞ்சை நிறுத்துக் கொடுக்க வேண்டும். கணக்குப் பார்த்துக் கூலி கொடுக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக அறியாமையில் மூழ்கிக் கிடந்தவர்களான அந்த ஸ்திரீகளுடன் பேரம் பேசிக் கணக்குச் சொல்லிக் கூலிப் பணம் கொடுத்து அனுப்புவது, பிரம்மப் பிரயத்தனமான காரியம். பல ஸ்திரீகள் ஏக காலத்தில் பேசுவார்கள். புதிதாக அந்த ஸ்திரீகளின் பேச்சைக் கேட்பவர்களுக்கு, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே விளங்காது. சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டாலோ, கேட்க வேண்டியதேயில்லை.
இப்படிப்பட்ட கஷ்டமான காரியத்தைச் செய்து சமாளித்துக் கொண்டிருந்த தொண்டரின் பெயர் ஸ்ரீ இராமதுரை. இன்றைக்குச் சுமார் பதினெட்டு மாதங்களுக்கு முன்னால் திருச்செங்கோடு தேர்தல் சம்பந்தமாகத் தமிழ் நாட்டில் பிரசித்தியடைந்தாரே, அந்த இராமதுரைதான்! அவர் மேற்படி ஸ்திரீகளின் கூச்சலையெல்லாம் சமாளித்துக் கொண்டு, அவர்களுடைய பேச்சையும் புரிந்து கொண்டு, அவ்வப்போது சரியான பதில்களைச் சொல்லிக் கொண்டு, இடையிடையே தமாஷ் செய்து சிரிக்கப் பண்ணிக் கொண்டு, கூலி தீர்த்துக் கொடுத்து அனுப்புவதை அளவில்லாத ஆச்சரியத்துடன் நான் பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தப் பெண்களின் பேச்சை எப்படித்தான் இராமதுரை புரிந்து கொண்டு பதிலும் சொல்கிறாரோ என்று எனக்கு ஒரே அதிசயமாயிருக்கும்.
ஆரம்பத்தில் எனக்கு அந்தக் கிராமத்துப் பெண்களின் பேச்சு விளங்குவதே இல்லை. இராமதுரையின் பேச்சோ அதைக் காட்டிலும் விளங்காமலிருக்கும். சுருங்கச் சொன்னால், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்களின் தமிழைப் போலவும், தற்கால தனித் தமிழ்ப் பேராசிரியர்களின் வசன நடையைப் போலவும் அபாரமான தெளிவுடன் அவர்களுடைய சம்பாஷணை விளங்கும்! வித்வான் பரீட்சைக்குப் பாடமாக வைப்பதற்குக்கூடத் தகுதியாக இருக்கும்!
சில காலம் கவனித்துக் கேட்டுப் பழகிய பிறகு, அவர்களுடைய பேச்சு ஓரளவு விளங்க ஆரம்பித்தது. விளங்க ஆரம்பித்ததும் வேடிக்கையாகவும் இருந்தது. இராமதுரைக்கும் ஒரு கிராமத்துக் கிழவிக்கும் ஒருநாள் பெரிய விவகாரம் நடந்து கொண்டிருந்தது.
வார்த்தைகள் வர வரத் தடித்து உப்பிக் கொண்டே இருந்தன. கடைசியில் ஒரே கூச்சலாயிற்று. இவ்வளவு கலாட்டாவுக்கும் காரணம் என்னவென்று கேட்டால், விஷயம் இதுதான்: அந்தக் கிழவி தன்னுடைய கணக்குப் பிரகாரம் "நூல் நூற்ற கூலி ஐந்தே காலணா வரவேண்டும்" என்கிறாள். நமது இராமதுரையோ, "அதெல்லாம் இல்லை; உன் கணக்கு தப்பு. என் கணக்குப்படி ஐந்தணா எட்டுத் தம்பிடி ஆகிறது. ஆகையால் ஐந்தணா எட்டுத் தம்பிடிதான் கொடுப்பேன்" என்கிறார்.
"இல்லை! ஐந்தே காலணாதான். நான் சரியாகக் கணக்குப் பார்த்துக் கொண்டுதான் வந்தேன்" என்கிறாள் அந்தக் கிழவி.
"சும்மா இரு; என்னை விட உனக்கு ரொம்பக் கணக்குத் தெரியுமோ? ஐந்தணா எட்டுத் தம்பிடிதான்! வாங்கிக் கொள்ளாவிட்டால் போ! உனக்குக் கூலி கிடையாது" என்கிறார் இராமதுரை.
"கூலி கிடையாதா? இதென்ன நாயம்? கை வலிக்க கொட்டை நூற்றுக் கூலி இல்லையென்றால் அடுக்குமா? நான் போய் வக்கீல் ஐயா ("வக்கீல் ஐயா" என்று அந்த ஸ்திரீ குறிப்பிட்டது ராஜாஜி அவர்களைத்தான்) கிட்டச் சொல்கிறேன்" என்றாள் அந்த ஸ்திரீ.
"வக்கீல் ஐயா கிட்டச் சொல்லி விடுவாயோ? சொல்லு போ! வக்கீல் ஐயா அலகாபாத்தில் இருக்கிறார்; போய்ச் சொல்லு!" என்று ஆத்திரமாய்ப் பேசுகிரார் இராமதுரை.
"அந்த ஊரு எங்கே இருக்கு?" என்று அந்த மூதாட்டி கேட்கிறாள்.
"எல்லாம் கிட்டத்தான் இருக்கு. சங்கரியிலே இன்று ராத்திரி ரயில் ஏறினால் நாளைக்கு மறுநாள் பாதி தூரம் போய்விடலாம்" என்று சொல்லிவிட்டு இராமதுரை இடி இடி என்று சிரிக்கிறார். பக்கத்திலே நின்ற என்னைப் பார்த்து, "என்ன பாருங்க, ராவன்னா கீனா! இந்த மாதிரி அறியாத ஜனங்களோடு பேசித் தொண்டைத் தண்ணீர் வற்றிப் போகிறது. ஐந்தே காலணாவைக் காட்டிலும் ஐந்தணா எட்டுத் தம்பிடி அதிகம் என்று இவர்களுக்குத் தெரிகிறதில்லை. சொன்னாலும் கேட்க மாட்டார்கள்! எப்படி இருக்கிறது கதை?" என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரிக்கிறார்.
"என்ன ஐயா, எகத்தாளம் பண்ணுகிறே! உங்களைப் போல நாங்கள் பள்ளிக்கூடத்திலே படிச்சிருக்கோமா?" என்று கிழவி சண்டைக்கு வருகிறாள்.
இராமதுரை அந்தக் கிழவியை விட உரத்த சத்தம் போட்டு, "அதென்னமா நான் எகத்தாளம் பண்ணறேன் என்று நீ சொல்லலாம்?" என்று சண்டை பிடிக்கிறார்.
இப்படியாக, மிகவும் தொல்லையான காரியத்தைத் தமாஷும் வேடிக்கையுமாகச் செய்து கொண்டு இராமதுரை ஆசிரமத்தில் தொண்டு செய்து வந்தார்.
அவரைப் போலவே ஸ்ரீ நாராயண ராவ், டாக்டர் ரகுராமன், சிவகுருநாதன், அனந்தராமன், வெங்கட்ராமன், விசுவநாதன், அங்கமுத்து, முனுசாமி முதலியவர்களும் ஆசிரமத்தில் வசித்துப் புனிதமான கிராமத் தொண்டில் ஈடுபட்டிருந்தார்கள்.
சிலர் ஆசிரமம் ஆரம்பமானதிலிருந்து தொண்டு செய்து வந்தார்கள். எனக்குப் பிறகு வந்து சேர்ந்தவர்களும் உண்டு. டாக்டர் ரங்கநாதன், எம்.கே. வெங்கட்ராமன், ஏ.கிருஷ்ணன், வி.தியாகராஜன் முதலியவர்கள் பிற்பாடு வந்து சேர்ந்தவர்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்) - Neenda Mugavurai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், கொண்டு, ஸ்ரீ, அந்த, இராமதுரை, கூலி, வக்கீல், சம்பளம், என்ன, செய்து, ஆசிரமத்தில், வேண்டும், அவர்களுடைய, ஐந்தணா, அந்தக், காந்தி, எட்டுத், கொடுத்து, ரூபாய், கணக்கு, இல்லை, கணக்குப், வேலை, சந்தானம், ராஜாஜி, கிழவி, ஐந்தே, போட்டு, பார்த்துக், மேற்படி, நாற்பது, ஐம்பது, கொண்டிருந்த, பிறகு, நூற்ற, வந்து, காட்டிலும், மாதம்