நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்)
2
காந்தி மகானிடம் எனக்கு இருந்த பக்தி
அப்போது ராஜாஜியிடமும் இருந்தது. ஒருபடி அதிகமாகவே இருந்தது. ராஜாஜியின்
தோற்றம், பேச்சு, அவருடைய ஒழுக்கத்தையும் தியாக வாழ்க்கையையும் பற்றி
நான் தெரிந்து கொண்டிருந்த விவரங்கள் எல்லாம் அத்தகைய பக்தியை எனக்கு
உண்டாக்கி இருந்தன.
காந்தி மகாத்மா எவ்வளவோ பெரிய மகாத்மா தான். ஆனாலும் அவர் தமிழ் அறியாத குஜராத்திக்காரர்தானே? எனவே, அவருடைய போதனை உள்ளத்தில் ஒட்டுவது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது. ஆனால் ராஜாஜியோ, நமது சொந்தத் தமிழ் நாட்டவர். நமது தாய் மொழியில் நமது உள்ளத்தில் ஒட்டும்படி பேசக் கூடியவர்.
ராஜாஜி "சென்னையில் வேலையில்லாமல் இருந்தால் கெட்டுப் போவாய்!" என்று சொன்னது எனக்கு அளவுக்கடங்காத வியப்பையும் திகைப்பையும் அளித்தது. நம்முடைய சமாசாரம் ராஜாஜிக்கு எப்படித் தெரிந்தது என்றுதான் வியப்பு.
சென்னை ராயப்பேட்டையில் நான் இருந்த போது ஒருநாள் இரவு சந்திரக் கிரகணம் பிடித்தது. கிரகணம் பார்ப்பதற்கும் ஸ்நானம் செய்வதற்கும் திருவல்லிக்கேணி கடற்கரைக்குப் போயிருந்தேன். இரவு ஒரு மணிக்குக் கிரகணம் விட்டதும் ஸ்நானமும் முடிந்தது. ராயப்பேட்டைக்குக் குறுக்கு வழியாகப் போக எண்ணித் திருவல்லிக்கேணி சந்து ஒன்றில் புகுந்தேன். போகப் போகப் புதிய புதிய சந்தும் பொந்தும் வந்து கொண்டிருந்தனவே தவிர, ராயப்பேட்டையைக் காணவேயில்லை. "ராயப்பேட்டை கெட்டுப் போய் விட்டதா? அல்லது நான் தான் காணாமற் போய்விட்டேனா?" என்ற யோசனை உண்டாகிவிட்டது. கடைசியில் நான் வந்திருந்தது மயிலாப்பூர் மந்தைவெளி என்று தெரிந்தது. அங்கிருந்து டிராம் ரோட்டைப் பிடித்துக்கொண்டு காலை நாலு மணிக்கு ராயப்பேட்டை சேர்ந்தேன்!
எனவே, சென்னையில் இருந்தால், அதுவும் சும்மா வேலையின்றி இருந்தால், நான் கெட்டுப் போகக் கூடியவன் தான் என்பது எனக்கு முன்பே தெரிந்திருந்தது! ராஜாஜியும் இதையே சொல்லவே ஒரு நிமிஷம் கூடத் தாமதிக்கக்கூடாது என்று மறுநாளே வீட்டைக் காலி செய்து விட்டுப் புறப்பட்டேன். (அடாடா! அந்தக் காலி வீடு மட்டும் இப்போது காலியாகவே இருந்தால்...!)
சங்கரிதுர்க்கம் ஸ்டேஷனில் இறங்கித் திருச்செங்கோட்டுக்கு ஐந்து மைல் பஸ்ஸில் போகவேண்டும். திருச்செங்கோட்டிலிருந்து ஏழு மைல் குதிரை வண்டியிலோ மாட்டு வண்டியிலோ போக வேண்டும். பழைய குதிரை வண்டி அநுபவத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு, மாட்டு வண்டியிலேதான் போனேன். மாட்டு வண்டி அவசரப்படாமல் நிதானமாக ஆடி அசைந்து கொண்டு சென்றது. சாலையின் இரு பக்கமும் புன்செய் நிலக்காடுகள். சில இடங்களில் மொட்டைப் பாறைகள். ஒரு இடத்தில் ஒரு பெரிய பனந்தோப்பு. அதில் சுமார் ஆயிரம் பனை மரங்கள் இருக்கும். இப்போது நினைத்தாலும் அந்தப் பனந்தோப்பு என் கண் முன் நிற்கிறது!
மனசுக்கு அவ்வளவு உற்சாகமளிக்கக்கூடிய காட்சிகள் அல்ல; கண்ணுக்கினிய காட்சிகளுமல்ல. ஆனாலும் மனசு என்னமோ பிரமாத குதூகலத்தை அநுபவித்துக் கொண்டிருந்தது. பனைமரங்களுக்கெல்லாம் மேலே பறந்து, பறந்து, பறந்து வான வெளியிலே உல்லாசமாக உலாவிற்று. ஆகா! இந்த மனசின் பொல்லாத்தனத்தை என்னவென்று சொல்ல? ஆகாச விமானத்தில் பதினாயிரம் அடி உயரத்தில் மணிக்கு இரு நூறு மைல் வேகத்தில் பிரயாணம் செய்யும்போது இந்த மனசு பூமியில் ஒரு சின்ன வீட்டில் சின்ன அறையில் குப்புறப் படுத்துக் கொண்டு அசைய மாட்டேன் என்கிறது! ஆனால் பட்டிக் காட்டுச் சாலையில் கட்டை வண்டியில் உட்கார்ந்து செல்லும்போது மனசு வான வெளியில் உயர உயரப் பறந்து நட்சத்திர மண்டலங்களை க்ஷேமம் விசாரித்து விட்டு வருகிறது! அடடா! நம்முடைய மனசே மனசுதான்!
"அதோ தெரிகிறதே தோப்பு! அதுதான் புதுப்பாளையம்! அந்த தோப்பிலேதான் ஆசிரமம் இருக்கிறாங்க!" என்றான் வண்டிக்காரன். காந்தி ஆசிரமத்தைப் பற்றித்தான் அப்படி மரியாதையாக பேசினானோ, அல்லது ஆச்சாரியாரை நினைத்துக் கொண்டுதான் சொன்னானோ தெரியாது.
ஆசிரமத்தை நெருங்க நெருங்க உற்சாகம் அதிகமாயிற்று. என் வாழ்க்கையில் ஒரு புதிய அற்புதமான அத்தியாயம் ஆரம்பமாகப் போகிறது என்ற உணர்ச்சி உள்ளத்தில் ததும்பிக் கொண்டிருந்தது. வண்டியிலிருந்து குதித்து ஓடலாமா என்று தோன்றியது. அவ்விதமெல்லாம் மனசில் ஏற்பட்ட உற்சாகம் பொய்யாகப் போய்விடவில்லை. திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நான் வசித்த மூன்று வருஷந்தான் என் வாழ்க்கையிலேயே உற்சாகமும் குதூகலமும் நிறைந்திருந்த காலமாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீண்ட முகவுரை (பாங்கர் விநாயகராவ்) - Neenda Mugavurai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், பறந்து, காந்தி, இருந்தால், எனக்கு, மாட்டு, கொண்டு, மனசு, மைல், கிரகணம், நமது, தான், கெட்டுப், உள்ளத்தில்