கைலாசமய்யர் காபரா
5
மேற்கூறிய வரலாற்றையெல்லாம் சொல்லிவிட்டு
கைலாசமய்யர், "ஏற்கனவே நான் பயந்த மனுஷன் என்று தான் உமக்குத் தெரியுமே?
இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்த பிறகு கேட்க வேண்டுமா? அன்று முதல் எனக்கு
இராத் தூக்கம் கிடையாது. கண்ணை மூடினால் ரயில் பிரயாணம் செய்வது போலும்,
பிசாசு வருவது போலும் கதை சொல்வது போலும் சொப்பணம், உங்களுக்கு என்ன
தோன்றுகிறது?" என்று கேட்டார்.
"எதைப் பற்றி?" என்றேன்.
"பிரணதார்த்தி ஹரன் சாதாரண மரணமடைந்தாரா? கொலையுண்டு செத்தாரா?"
"நீர் அப்புறம் பத்திரிகை படிக்கவில்லையா, என்ன?"
"பத்திரிகையைக் கண்டாலே எனக்குப் பயமாயிருக்கிறது. தொடவே இல்லை" என்றார் கைலாசமய்யர்.
"மறுநாள் பத்திரிகையிலேயே 'பிரணதார்த்தி ஹரன் மரணமடையவில்லை; ஆகையால் பிரேத ஊர்வலமும் நடக்கவில்லை!' என்று திருத்தம் வெளியாகியிருந்ததே!"
"அப்படியா? ஓ ஹோ ஹோ! நானல்லவா ஏமாந்து போயிருக்கிறேன்? - அப்படியானால் அன்று என்னைக் காபராப்படுத்திய மனுஷன் தான் யார்?"
"சாஷாத் பிரணதார்த்தி ஹரன் தான்!"
"அடே அப்பா! ஒரே புளுகாய்ப் புளுகினானே? எழுத்தாளி என்றாலே எல்லாரும் இப்படித்தான் புளுகுவார்களோ?"
"அவர் சொன்னதில் கொஞ்சம் நிஜமும் உண்டு. அவருடைய எதிரி அவரைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்திக் கடிதம் எழுதியது உண்மை. அதை அவன் நிறைவேற்றியும் விட்டான்!"
"நிறைவேற்றி விட்டானா? அதெப்படி ஐயா! மூளை குழம்புகிறதே!"
"பிரணதார்த்தியின் ஆயுதத்தினாலேயே அவரைக் கொல்வதாக அவனுடைய எதிரி சொன்னானல்லவா? பிரணதார்த்தியின் ஆயுதம் என்ன? பேனா! அந்தப் பேனாவைக் கொண்டுதான் அவனைக் கொன்றான்!"
"கொன்றானா?"
"ஆமாம்; பிரணதார்த்தி ஹரன் காலமானதாகப் பத்திரிகைகளுக்கு எழுதி விட்டானல்லவா? இது பேனாவினால் கொன்றதுதானே?"
கைலாசமய்யருக்கு அவரையறியாமல் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. விழுந்து விழுந்து சிரித்தார். இடையிடையே 'அதிர்வேட்டுச் சுப்பன் நல்ல அதிர்வெடி போட்டானையா?' என்று சொல்லிக் கொண்டு சிரித்தார். "அந்தப் பிரகஸ்பதிக்கு நன்றாய் வேண்டும்! என்னை காபராப் படுத்தினானோ, இல்லையோ?" என்றும் இடையிடையே சொல்லிக் கொண்டார்.
கைலாசமய்யர் அவ்விதம் சிரித்த போது, அவர் தலைக்கு மேலே ஓர் அதிசயம் நடந்து கொண்டிருந்தது.
பயங்கரப் பிரயாண இரவில், 'ஜாப்கே' மசியைப் போல் கறுத்த அவருடைய தலைமயிரானது என் கண்ணெதிரே மளமளவென்று 'ரோம வர்த்தினி' தடவிய கூந்தலைப் போல வெளுத்து வெள்ளை வெளேரென்று ஆகிவிட்டது!
"கைலாசமய்யர்வாள்! இந்த வருஷம் நடந்தது உங்கள் மைத்துனன் தலை தீபாவளி அல்ல; உங்களுடைய தலை தீபாவளிதான்!" என்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைலாசமய்யர் காபரா - Kailasamiyar Kaabaraa - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பிரணதார்த்தி, ஹரன், என்ன, போலும், தான், கைலாசமய்யர்