கைலாசமய்யர் காபரா
1
எத்தனையோ பயந்த சுபாவமுடையவர்களை நீங்கள்
பார்த்திருக்கலாம். ஆனால் கைலாசமய்யரைப் பார்க்காதவரையில் சரியான பயந்த
சுபாவத்தை நீங்கள் பார்த்ததாகச் சொல்ல முடியாது. பயப்படுகிற விஷயத்தில்
அவரை மிஞ்சக் கூடியவர் யாருமில்லை. ஒரு சமயம், அவர் வீட்டு வாசலில் தேசியத்
தொண்டர்கள் "அச்சமில்லை; அச்சமில்லை" என்று பாடிக் கொண்டு போனார்கள்.
அந்தப் பயங்கரமான சத்தத்தைக் கேட்டுக் கைலாசமய்யர் பயந்து கட்டிலிருந்து
கிழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டார்!
மற்றொரு சமயம், அவர் தமது மேஜையில் உட்கார்ந்து எழுதப் போனவர், திடீரென்று 'பாம்பு' என்று அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருந்தார். எல்லாரும் கம்பும் கையுமாய் ஓடி வந்து 'எங்கே பாம்பு?' என்று கேட்டார்கள். "அதோ! மேஜை மேலே!" என்றார். மேஜைமேல் பாம்பைக் காணோம். அப்புறம் கிட்ட நெருங்கிப் பார்த்த போது, மேஜை மேல் கிடந்த ஒரு துண்டுக் காகிதத்தில் 'பாம்பு' என்று எழுதி இருந்தது தெரிந்தது. இந்த வேலை செய்தது யார் என்று விசாரித்ததில் கைலாசமய்யருடைய ஏழு வயதுப் பையன் மணி விஷமத்துக்காக அப்படி எழுதி வைத்திருந்தான் என்று வெளியாயிற்று. பாம்பை அடிக்க வேலைக்காரன் கொண்டு வந்த தடியைக் கைலாசமய்யர் பிடுங்கிக் கொண்டு பையனை அடிக்கப் போனார். நல்ல வேளையாக, அந்தச் சமயம் ஜோஷனாரா பிகம் வந்து குறுக்கிட்டதால் பையன் பிழைத்தான்!
ஜோஷனாரா பீகம் என்றதும், சில பேருக்குச் சுவாரஸ்யம் தட்டலாம். ஏதோ இந்தக் கதையில் நவாபுகளும் அவர்களுடைய அந்தப்புரத்து அழகிகளும் வரப் போகிறார்கள் என்று நினைக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கைலாசமய்யருக்கு வடக்கத்தி ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அதிகப் பிரியம். "பயமில்லாமல் கேட்கக் கூடியது ஹிந்துஸ்தானி சங்கீதந்தான்" என்பார். ரேடியோவில் அவர் அடிக்கடி லக்னௌ ஜோஷனாரா பீகத்தின் சங்கீதத்தைக் கேட்பதுண்டு. ஆனால், வீட்டிலே மற்றவர்களுக்கு - முக்கியமாக அவருடைய மனைவிக்கு - ஜோஷனாரா பீகமும், அவளுடைய சங்கீதமும் கொஞ்சமும் பிடிப்பதில்லை. எனவே, அவர்கள் வீட்டில் வளர்த்த ஒரு கறுப்புப் பூனைக்கு 'ஜோஷனாரா பீகம்' என்று பெயரிட்டிருந்தார்கள். இந்த ஜோஷனாரா பீகத்தைக் கண்டால் கைலாசமய்யருக்குக் குலை நடுக்கம்! அச்சமயம் அந்தப் பூனை வந்ததினால் தான் அவருடைய பையன் மண்டை உடையாமல் தப்பிப் பிழைத்தான்.
பட்ட காலிலே படும் என்பது போல், அவ்வளவு பயந்தவரான கைலாசமய்யருக்கு, அந்த மகா பயங்கரமான அநுபவம் ஏற்பட்டது. ஏற்கனவே தும்பைப் பூவைப் போல் நரைத்திருந்த அவருடைய தலை மயிர், அந்த ஒரு நாள் இரவில் 'ஜாப்கோ' மசியைப் போல் கறுத்து விட்டதென்றால், அந்த அநுபவம் எவ்வளவு பயங்கரமாயிருந்திருக்குமென்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்!
அவருடைய தலைமயிரைச் சுட்டிக் காட்டி "இது எப்படி நேர்ந்தது?" என்று நான் கேட்ட போது கைலாசமய்யர் முதலில் சிறிது நேரம் தலை முதல் கால் வரையில் நடுங்கினார். பிறகு கொஞ்ச நேரம் கால் முதல் தலை வரை நடுங்கினார்.
அவருக்கு நான் தைரியம் கூறிச் சமாதானப்படுத்தி ஒருவாறு விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அந்த வரலாறு தான் இது.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைலாசமய்யர் காபரா - Kailasamiyar Kaabaraa - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஜோஷனாரா, அவருடைய, கொண்டு, அந்த, போல், பாம்பு, அவர், கைலாசமய்யர், சமயம், பையன்