கைலாசமய்யர் காபரா
3
வண்டி நகரத் தொடங்கியது. அதே சமயத்தில்
அந்தத் தடுக்க முடியாத சம்பவம் நடந்து விட்டது. அலங்கோலமாக ஒரு மனிதர்
அவர்களுடைய வண்டியருகில் வந்து, "கதவைத் திறவுங்கள்! அவசரம்!" என்று
கதறிக் கொண்டே ரயிலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தொங்கினார். ரயிலின்
வேகமோ அதிகமாயிற்று. கைலாசமய்யருக்கு மனத்தில், "நல்லவேளை. ஒரு துணை
கிடைத்தது" என்ற எண்ணம் பளிச்சென்று எழுந்தது. தட்டுத் தடுமாறிக் கதவைத்
திறந்தார். வந்த மனுஷர் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து உள்ளே வந்து கைலாசமய்யருக்கு
எதிர் ஆசனத்தில் தொப்பென்று விழுந்தார். அதே பெஞ்சின் ஓரத்தில் இருந்த
மிஸ்ஸஸ் கைலாசமய்யர், சற்று அவசரமாகவே எழுந்திருந்து இன்னொரு மூலையில்
போய் உட்கார்ந்து கொண்டாள்.
ஆம்; அந்தப் புதிய மனிதரின் தோற்றம் யாரையும் அவசரமாக எழுந்திருக்கச் செய்வதாகத்தானிருந்தது. ரயில் அச்சமயம் மணிக்கு முப்பது மைல் வேகத்தில் போய்க் கொண்டிராவிட்டால், கைலாசமய்யர் மூட்டை முடிச்சுகள், மனைவி, மக்களுடன் அந்த வண்டியிலிருந்தே கிழே குதித்திருப்பார்.
அந்த மனிதரின் கிராப்புத் தலை எண்ணெய் கண்டு ஒரு யுகம் ஆகியிருக்கும். அந்த மாதிரி ரோமங்கள் குத்திட்டு நின்றன. கண்கள் செக்கச் செவேலென்று சிவந்து திறுதிறுவென்று விழித்தன. மேல் கோட்டு நனைந்திருந்தது. உள் ஷர்ட் கிழிந்திருந்தது. இரண்டிலும் பொத்தானகள் கழன்று போயிருந்தன. மூக்குக் கண்ணாடி ஒரு காதில் மட்டும் மாட்டிக் கொண்டு தொங்கிற்று. இத்தனை அலங்கோலத்திலும் அந்த மனுஷருடைய வாய் மட்டும் வெற்றிலை பாக்குப் புகையிலையை விடாமல் அரைத்துக் கொண்டிருந்தது.
அந்த அவசரக்காரர் தம்முடைய நனைந்த கோட்டைக் கழற்றினார். கழற்றும் போது அதிலிருந்து சாமான்கள் பொலபொலவென்று விழுந்தன. அப்படி விழுந்த சாமான்களில் ஒரு பெரிய பேனா கத்தியும் கிடந்தது.
"அட சனியனே!" என்று அந்த மனிதர் கிழே குனிந்து அந்தச் சாமான்களைத் திரட்டி எடுத்தார். மணிப்பர்ஸ், பேனா முதலியவைகளைப் பெஞ்சில் வைத்து விடுக் கத்தியை மட்டும் கையில் வைத்துக் கொண்டார். கைலாசமய்யரைப் பார்த்துக் கேட்டார்.
"ஏன் ஸார்! இந்த மாதிரி சின்னப் பேனாக் கத்தியினாலேயே ஒரு மனுஷனைக் கொன்று விடலாம் என்று சொல்கிறார்களே? அது முடியுமா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்றார்.
கைலாசமய்யருக்கு அப்போது தாம் ஓர் ஆகாச விமானத்திலிருப்பது போலவும், அந்த விமானம் தலைகீழாகக் கீழே அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருப்பதைப் போலவும் தோன்றிக் கொண்டிருந்தது. நல்ல வேளையாக, அவருடைய பத்தினி அந்தப் பிரமையைக் கலைத்தாள். "ஏன்னா? அடுத்த ரயில்வே ஸ்டேஷன் எப்போது வரும்?" என்றாள். அதற்குக் கைலாசமய்யர், "சற்று வாயை மூடிண்டு இருக்க மாட்டாயா?" என்று வள்ளென்று விழுந்தார். பிறகு எதிரில் உள்ள மனுஷரைப் பார்க்க இஷ்டமில்லாமல் தாம் கொண்டு வந்திருந்த தினசரிப் பத்திரிகையைப் பிரித்து முகத்துக்கு நேராக வைத்துக் கொண்டு படிக்கத் தொடங்கினார். படிப்பதற்கு முயற்சி செய்தாரே தவிர, படிக்க முடியவில்லை. பத்திரிகை இங்கிலீஷ் பத்திரிகைதான். ஆனால் அச்சமயம் அதிலிருந்த எழுத்துக்கள் கிரீக் பாஷையோ லாடின் பாஷையோ என்று தெரியாதபடி கைலாசமய்யர் கண்ணுக்கு ஒரே குழப்பமாயிருந்தன.
ஆனால், எதிரிலிருந்த மனுஷரின் கண்கள் மட்டும் வெகு துல்லியமாயிருந்தது போல் தோன்றியது. ஏனெனில் அவர் எதிர் பெஞ்சியில் உட்கார்ந்திருந்தபடியே கைலாசமய்யர் கையிலிருந்த பத்திரிகையின் பின்புறத்தைப் படிக்கத் தொடங்கினார். ஒரு நிமிஷத்துக்கெல்லாம் "ஹா!" என்று சொல்லி பத்திரிகையைத் தாமும் ஒரு கையால் பிடித்துக் கொண்டு படித்தார். இலேசாகக் கைலாசமய்யர் கையிலிருந்து எடுத்துக் கொண்டு உற்றுப் பார்த்துப் படித்தார். "ஹா!ஹா!ஹா!" என்றார். கைலாசமய்யரால் வாயைத் திறந்து ஒரு 'ஹா!' கூட சொல்ல முடியவில்லை.
வந்த மனுஷர், "என்னைத் தெரியுமா?" என்று கேட்டார்.
"தெரியாது" என்று பளிச்சென்று கைலாசமய்யர் பதில் சொன்னார்.
"தெரியாதா? என் பெயரையாவது கேள்விப்பட்டிருப்பீர்கள்" என்றார் அந்த மனிதர்.
"சத்தியமாய் இல்லை" என்று கைலாசமய்யர் அழுத்தமாய்க் கூறினார்.
"ரொம்ப வந்தனம். இந்தச் செய்தியைப் பார்த்தீர்களா?" என்று வந்த மனிதர் பத்திரிகையில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார்.
கைலாசமய்யர் அந்த இடத்தைப் பார்த்தார். அது மரணச் செய்திகள் போடும் இடம். பின்வரும் செய்தி அங்கே காணப்பட்டது.
"ஒரு நிருபர் எழுதுகிறார்: பிரசித்தி பெற்ற தமிழ் எழுத்தாளரும், 'பிரகஸ்பதி சுப்பன்' என்ற புனைப்பெயரால் புகழ் பெற்றவருமான ஸ்ரீ பிரணதார்த்தி ஹரன் இன்று காலை மரணமடைந்த செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மயிலாப்பூரில் அவருடைய சொந்த ஜாகையில் திடீரென்று உயிர் போன காரணத்தினால் அவருடைய வருந்தத்தக்க மரணம் நேரிட்டது. அவருடைய அந்திம ஊர்வலத்துக்குக் கணக்கற்ற ஜனங்கள் - சுமார் ஒன்பது பேர் இருக்கலாம் - வந்து கௌரவித்ததிலிருந்து, இந்த எழுத்தாளர் தமிழ் வாசகர்களின் உள்ளத்தில் எவ்வளவு மகத்தான இடத்தைப் பெற்றிருந்தார் என்பதை ஊகிக்கலாம். அவருடைய அருமையான ஆத்மா சாந்தி அடைவதாக!"
கைலாசமய்யருக்குப் 'பிரகஸ்பதிச் சுப்பன்' என்று எங்கேயோ, எப்போதோ, கேட்டிருப்பதுபோல ஞாபகம் வந்தது. நல்ல வேளையாகப் பேசுவதற்கு வாகாய் ஒரு விஷயம் அகப்பட்டதென்று உற்சாகமடைந்தவராய், "அடடா! நம்ம பிரஹஸ்பதிச் சுப்பனா இறந்து போனார்? எனக்குத் தெரியாமல் போச்சே! தெரிந்திருந்தால் நான் கூட மழையைப் பார்க்காமல் அவருடைய ஊர்வலத்துக்குப் போயிருப்பேனே?" என்றார்.
அவசரக்காரர் இன்னும் சில தடவை 'ஹா, ஹா' காரம் செய்துவிட்டு, மேற்படி பத்திரிகைச் செய்தியை மீண்டும் சுட்டிக் காட்டி, "இது சாதாரணச் சாவு இல்லை ஸார்! சாதாரணச் சாவில்லை. இது கொலை!" என்றார்.
"என்ன?" என்று கைலாசமய்யர் கத்திய போது ரயிலையே தூக்கி வாரிப் போட்டது போல் இருந்தது.
"ஆமாம்; நான் சொல்கிறதை நம்புங்கள், இது கொலை!"
கைலாசமய்யர் அப்போது தாம் பயப்படுவதாகக் காட்டிக் கொண்டால் காரியம் மிஞ்சிவிடும் என்பதை அறிந்தார். எனவே, தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு "கொலையாவது, கொத்தவரங்காயாவது? உமக்கு எப்படி ஐயா தெரியும்?" என்று கேட்டார்.
"ஆகா! அப்படிக் கேளுங்கள்; கேட்டால்தானே சொல்லலாம்? இது கொலைதான். சாதாரண மரணமில்லை என்பதை நிரூபிக்கிறேன். ரொம்ப ரொம்ப ஆச்சரியமான கதை. தூங்காமல் மட்டும் கேட்க வேண்டும்" என்றார்.
அந்தச் சமயம் கைலாசமய்யர் குழந்தைகள் இருவரும் அவரிடம் வந்து "கதை சொல்லுங்கள் மாமா! நாங்கள் கேட்கிறோம்" என்றன. கைலாசமய்யர் கண் விழி பெயரும்படியாக அக்குழந்தைகளை உற்றுப் பார்த்தார். ஆனால் குழந்தைகள் அவரைப் பார்க்கவேயில்லை.
அவசரக்காரர் குழந்தைகளை விழித்துப் பார்த்து "பயங்கரமான கதை; நீங்கள் பயப்படுவீர்கள்!" என்றார்.
"நாங்கள் பயப்பட மாட்டோம், மாமா! எங்களுக்குப் பயமே கிடையாது. அப்பாதான் பயப்படுவா!" என்றான் போக்கிரி மணி.
"அடே என் கண்மணிகளா! அப்படியானால் கேளுங்கள்" என்று சொல்லிவிட்டு, அந்த மனிதர் கதையை ஆரம்பித்தார்.
"ஆயிரம், பதினாயிரம், லட்சம், முந்நூறு லட்சம் வருஷங்களுக்கு முன்னால் போங்கள். அந்தக் காலத்தில் மனிதர்களே இல்லை. உலகமெல்லாம் காடும், மலையும், தண்ணீருமாய் இருந்தன. பெரிய பெரிய மிருகங்கள், விநோதமான மிருகங்கள் அக்காடுகளில் ஊர்ந்து திரிந்தன. அந்த மிருகங்களுக்கு நீண்ட வாலும், குட்டைச் சிறகுகளும் உண்டு. அவை வாலினால் பறக்கும்; சிறகுகளினால் நடக்கும். இந்த மிருகங்களில் ஒன்றுக்கு ரொமாண்ட மல்லன் என்று பெயர். இன்னொன்றுக்கு பிரமாண்டமல்லன் என்று பெயர். ஒரு நாளைக்கு ரொமாண்டமல்லன், பிரம்மாண்டமல்லனைப் பார்த்து, 'உன் வாலைக் காட்டிலும் என் வால் தான் நீளம்' என்றது. 'இல்லை உன் வால் தான் குட்டை!' என்றது பிரம்மாண்டமல்லன். உடனே இரண்டுக்கும் பயங்கரமான போர் மூண்டது. வாலினால் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு, முந்நூறு வருஷம் அவை சண்டை போட்டன. போட்டும் ஜயம் தோல்வி ஏற்படவில்லை. அப்போது ரொமாண்டமல்லன், இனிமேல் என்னால் சாப்பிடாமல் சண்டை போட முடியாது; "இதோ பிராணனை விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் பிராணனை விட்டது. பிரமாண்டமல்லன், "நானும் இதோ பிராணனை விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு பிராணனை விடப் பார்த்த போது, தன்னுடைய பிராணன் ஏற்கனவே போய்விட்டதென்பதைப் பார்த்து அதிசயித்தது. தெரிந்ததா, குழந்தைகளே! அப்புறம் இரண்டு லட்சம் வருஷத்தைத் தள்ளுங்கள்!"
"தள்ளிவிட்டோ ம்!" என்றான் போக்கிரி மணி.
"எங்களுக்குப் பயமாகவே இல்லை!" என்றாள் ஸரோஜா.
அவசரக்காரர் மேலும் சொன்ன கதை விசித்திரமாயும் பயங்கரமாயும் இருந்தது. அந்த இரண்டு பழங்கால மிருகங்களும் வெகு காலத்துக்குப் பிறகு ஒன்று கிஷ்கிந்தா புரியில் வானரமாகவும், இன்னொன்று இலங்கையில் ராட்சதனாகவும் பிறந்தனவாம். இராவண சம்ஹாரம் ஆகி, சீதையை இராமன் சேர்த்துக் கொண்டு புஷ்பக விமானத்தில் எல்லாரும் கிளம்பும் வரையில் மேற்படி வானரமும் ராட்சதனும் மட்டும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்களாம். இதைப் பார்த்த அனுமார் இரண்டு பேரையும் பிடித்துத் தலைக்கு நாலு குட்டுக் குட்ட வானரமும் ராட்சதனும் அவமானப்பட்டு ஓடி, அனுமான் கொண்டு வந்திருந்த சஞ்சீவி மலையில் தடுக்கி விழுந்து செத்துப் போனார்களாம்.
அப்புறம் பல்லாயிரம் வருஷங்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் மகாபாரதக் காலத்தில் பூமியிலே பிறந்தார்கள். குருக்ஷேத்திரத்தில் ஒருவன் பாண்டவர் சைன்னியத்தில் இருந்தான். இன்னொருவன் துரியோதனன் கட்சியில் இருந்தான். அவர்கள் அந்தப் பெரும் போரில் மாண்ட விதம் மகா விசித்திரமானது. தென்னாட்டிலிருந்து மதுரைப் பாண்டியன் சாப்பாடு கொண்டு வந்து குருக்ஷேத்திர யுத்த களத்தில் இரண்டு கட்சி வீரர்களுக்கும் சோறு போட்டானல்லவா? அந்தச் சாப்பாட்டைப் போட்டி போட்டுக் கொண்டு அளவுக்கு மீறிச் சாப்பிட்டு வயிறு வெடித்து அவர்கள் இறந்து போனார்களாம்!
பிறகு, அந்த மகாவீரர்கள் நாநூறு வருஷத்துக்கு முன்பு வீர இராஜபுத்திர நாட்டில் பிறந்தார்களாம். பிறந்து பேசத் தெரிந்ததும் முதல் காரியமாக அவர்கள் ஒருவரையொருவர் கொன்று விடுவதாகச் சபதம் செய்து கொண்டார்களாம்! சபதத்தை நிறைவேற்றுவதற்கு நல்ல சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சீக்கிரத்திலே சமயம் கிடைத்தது. ஓர் இராஜபுத்திரப் பெண் அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே சமயத்தில் ஒரு செய்தி சொல்லியனுப்பினாள். தன்னை ஒரு பாதுஷா பலாத்காரமாய் அபகரித்துச் சென்று அந்தப்புரத்தில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்து அழைத்துப் போக வேண்டுமென்றும் தெரிவித்திருந்தாள். உடனே மேற்படி இரண்டு ராஜகுமாரர்களும் அந்த இராஜகுமாரியை யார் காப்பாற்றுவது என்று தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினார்கள். அந்தச் சண்டையில் ஒருவன் தன்னுடைய தலை முண்டாசில் கத்தி பாய்ந்ததின் பலனாக இறந்து போனான். இன்னொருவன் மேற்படி இராஜகுமாரியைப் பாதுஷாவின் அந்தப் புரத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்து, அன்றிரவே அவள் கொடுத்த விஷத்தைக் குடித்து விட்டு இறந்து போனான்.
இன்னும் மேற்கண்ட விதமாகப் பல ஜன்மங்களில் போராடிய பிறகு, அவர்கள் கடைசியாக இந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் அவதரித்தார்கள். இவர்கள் குழந்தைகளாயிருந்த போதே மசியைக் கொட்டி மெழுகுவதும், பேனாவை விழுங்குவதுமாயிருந்ததைப் பார்த்தவர்கள் எல்லாம், "வருங்காலத்தில் இவர்கள் சிறந்த எழுத்தாளர் ஆகி, உலகத்தையே ஒரு கலக்கு கலக்கப் போகிறார்கள்" என்று சொல்லி விட்டுக் கண்ணீர் விடுவதுண்டு! அவர்கள் பயந்தபடியே வாஸ்தவத்தில் நடந்தது.
'பிரகஸ்பதி சுப்பன்', 'அதிர்வெடிக் குப்பன்' என்னும் புனைப் பெயர்கள் தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் உலகப் பிரசித்தி அடைந்து வந்தன! இவர்கள் பத்திரிகை நடத்தாத போது புத்தகம் எழுதுவார்கள். புத்தகம் எழுதாதபோது பத்திரிகை நடத்துவார்கள்.
'பிரகஸ்பதி சுப்பன்' பத்திரிகை நடத்தும் போது 'அதிர்வெடிக் குப்பன்' எழுதிய புத்தகங்களையெல்லாம் எழுத்தெழுத்தாகப் பிய்த்து எறிந்து விடுவார். 'அதிர்வெடிக் குப்பன்' பத்திரிகை நடத்தும் சமயத்தில் 'பிரகஸ்பதி சுப்ப'னின் புத்தகங்களையெல்லாம் கடித்துத் தின்று உமிழ்ந்து விடுவார். இவ்விதமாக அவர்களுடைய ஆங்காரம் முற்றிக் கொண்டே வந்தது. கடைசியாக நேற்றைய தினம் 'பிரகஸ்பதி சுப்ப'னுக்கு 'அதிர்வெடிக் குப்ப'னிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதிலிருந்து "ஜாக்கிரதை! நாளைய தினம் உன்னை நான் உன்னுடைய ஆயுதத்தினாலேயே கொல்லப் போகிறேன். ஓடித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாலும் விடமாட்டேன்" என்று எழுதியிருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கைலாசமய்யர் காபரா - Kailasamiyar Kaabaraa - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அந்த, கைலாசமய்யர், கொண்டு, என்றார், இரண்டு, வந்து, மட்டும், அவருடைய, இல்லை, பிரகஸ்பதி, போது, பத்திரிகை, பிறகு, மனிதர், இறந்து, தமிழ், மேற்படி, பிராணனை, அதிர்வெடிக், அந்தப், சுப்பன், அந்தச், அவசரக்காரர், லட்சம், பார்த்து, சமயம், காலத்தில், சண்டை, இவர்கள், கேட்டார், அப்போது, குப்பன், நான், நல்ல, ரொம்ப, கைலாசமய்யருக்கு, வந்த, பிடித்துக், பெரிய, தாம், வந்தது, என்பதை, சமயத்தில்