காதறாக் கள்ளன்
பின்னுரை
மேற்கண்ட கதையை அந்தப் பெரியவர் சொல்லி
முடித்தார். இதற்குள்ளே எங்கள் மோட்டார் வண்டியைப் பத்து முப்பது ஆட்கள்
வந்து சேர்ந்து தள்ளி அக்கரையிலே கொண்டு சேர்த்திருந்தார்கள். என்னை
வரும்படி சொல்லி மோட்டாரின் குரல் அலறியது.
"கதை ரொம்ப நன்றாயிருக்கிறது" என்று சொல்லி கிழவனாரிடம் ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தேன்.
அவர் அதை வாங்கி மடியில் செருகிக் கொண்டே, "கதை இல்லை, ஐயா! உண்மையாக நடந்தது!" என்றார்.
"உண்மையாக நடந்ததென்று எப்படிச் சொல்கிறீர்? நீர் பார்த்தீரா?" என்று கேட்டேன்.
"ஆமாம் பார்க்கத்தான் பார்த்தேன்!" என்று கிழவர் சொன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"ஓகோ! கள்ளன் தப்பித்துக் கொண்டு போவதற்கு நீர் ஒருவேளை உதவி செய்தீரா?" என்று கேட்டேன்.
"இல்லை, ஐயா! நான் அவனுக்கு உதவி செய்யவில்லை. எனக்குத்தான் அவனால் ரொம்ப உதவி ஏற்பட்டது. காதறாக் கள்ளன் உயிரோடிருக்கும் போதும் எத்தனையோ பேருக்கு உதவி செய்தான். இறந்த பிறகும் ஒரு பெரிய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறான். அவன் புண்ணியவான்!" என்றார் பெரியவர்.
"உமக்கு அவன் என்ன உதவி செய்தான்?" என்று கேட்டேன்.
பெரியவர் தம்முடைய மடியில் வைத்திருந்த ஒரு பழைய நைந்த காகிதத்தை எடுத்துப் "பாருங்கள்!" என்று சொல்லிக் கொடுத்தார். அதில் இங்கிலீஷில் பின் வருமாறு 'டைப்' எழுத்தில் எழுதிச் சர்க்கார் முத்திரையும் பதிந்திருந்தார்.
"காது அறுக்காத கள்ளன் என்று இந்தப் பக்கங்களில் பிரசித்தி பெற்றிருந்த முத்து விஜய சேதுத்தேவன் என்னும் பக்காத் திருடனைப் பிடிப்பதற்கு உளவுகூறி ஒத்தாசை செய்த கொள்ளை முத்துத்தேவனுக்கு இந்தப் போலீஸ் சர்டிபிகேட்டும் மாதம் பதினைந்து ரூபாய் வீதம் ஜீவிய காலம் வரையில் பென்ஷனும் காருண்ய பிரிட்டிஷ் துரைத்தனத்தாரால் அளிக்கப்படுகிறது."
இதைப் படித்ததும் அந்தப் பெரியவரை கொஞ்சம் அருவருப்புடன் பார்த்துவிட்டு எழுந்தேன்.
"அந்தப் புண்ணியவானுக்கு நான் எவ்வளவோ நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். சென்ற ஐம்பது வருஷமாக அவனால் என்னுடைய குடும்பம் பிழைத்து வருகிறது. அவனுக்கு நான் ஏழு தலைமுறையும் கடமைப் பட்டவன்!" என்று சொன்னார் பெரியவர்.
வேகமாக ஆற்றைக் கடந்து அக்கரையில் நின்ற மோட்டாரைப் பிடித்து ஏறிக் கொண்டேன். அந்தக் கிழவனார் இருந்த இடத்திலிருந்து சீக்கிரத்தில் போனால் போதும் என்று இருந்தது.
பாரத தேசம் குடியரசுப் பதவியை அடையப் போகும்நாள் நெருங்கும் சமயத்தில் எனக்கு அந்தக் கிழவனார் சொன்னக் கதை ஞாபகத்துக்கு வருகிறது. காதறாக் கள்ளனை காட்டிக் கொடுத்து நன்மையடைந்த அக்கிழவனார் அந்தக் கள்ளனை இன்றுவரை நினைத்துக் கொண்டு அவனிடம் நன்றியோடாவது இருக்கிறார்.
பாரதத்தின் மக்களாகிய நாம் நமக்கு அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலையளித்த காந்தி மகாத்மாவை யமனிடம் காட்டிக் கொடுத்துவிட்டோம்! அவரை நன்றியோடு ஞாபகம் வைத்துக் கொண்டாவது இருக்கப் போகிறோமா?
தேடல் தொடர்பான தகவல்கள்:
காதறாக் கள்ளன் - Kaatharaak Kallan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - உதவி, பெரியவர், நான், அந்தக், கள்ளன், கேட்டேன், சொல்லி, கொண்டு, அந்தப்