காதறாக் கள்ளன்
5
அங்கே புளியந்தோப்பில் பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவனும்
ஜமீன்தார் கருடாசலத்தேவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். தில்லைமுத்துத்தேவன்
கருடாசலத்தேவர் மீது பல புகார்களைச் சொன்னான். தன்னை அவமதித்துப் பேசியதாகவும்
தன்னுடைய கிராமங்களில் மாடுகளை விட்டு மேய்த்ததாகவும் குற்றம் கூறினான்.
அதற்கெல்லாம் கருடாசலத்தேவர் சமாதானம் கூறினார். இப்படிக் கொஞ்ச நேரம்
போக்கிய பிறகு பாளையக்காரன் கடைசியாக முக்கியமான விஷயத்துக்கு வந்தான்.
"உம்முடைய மருமகள் மரகதவல்லியை எனக்குக் கல்யாணம் செய்து கொடுங்கள்.
மற்றக் குற்றங்களையெல்லாம் மறந்து விடுகிறேன்!" என்றான். "என்னுடைய ஜமீனில்
பாதி கேட்டாலும் கேள்; கொடுத்து விடுகிறேன்; என் மருமகளை மட்டும் கேட்காதே"
என்றார் கருடாசலத்தேவர், "அது என்ன பிடிவாதம்? யாருக்காவது கட்டிக் கொடுக்க
வேண்டியதுதானே? என்னைக் காட்டிலும் நல்ல மாப்பிள்ளை உமக்கு எங்கே கிடைக்கும்?"
என்று தில்லைமுத்துத்தேவன் பச்சையாகக் கேட்டான். "எனக்கோ வயதாகிவிட்டது.
வேறு யாரும் உற்றார் உறவினர் இல்லை. அவளும் இல்லாவிட்டால் வீடு பாழடைந்து
போகும்" என்றார் ஜமீன்தார். "அதெல்லாம் வெறும் ஜால்ஜாப்பு! நான் ஒப்புக்
கொள்ள மாட்டேன்" என்றான் பாளையக்காரன். கடைசியாக ஜமீன்தார் தம் மனதில்
உள்ளதை வெளியிட்டுச் சொன்னார். "ஒரு நாளைக்கு என் மகன் திரும்பி வருவான்
என்று ஆசை வைத்திருக்கிறேன். மரகதவல்லியை அவனுக்கென்று உத்தேசித்திருக்கிறேன்!"
என்றார். பாளையக்காரன் சிரித்தான். "ஆறு வருஷமாக வராதவன் இனிமேல் வரப்போகிறானா?
உமக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. அதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையைப்
பாழாக்கப் பார்க்கிறீர். அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது!" என்றான்.
இப்படி ஜமீன்தாருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போதே பாளையக்காரனுடைய
காது கவனமாக உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தது. சாலையில் குதிரை வரும்
சத்தம் கேட்கிறதா என்றுதான். ஏறக்குறைய சந்திரன் உச்சி வானத்துக்கு வந்தபோது
சற்றுத் தூரத்தில் குதிரை காலடிச் சத்தம் கேட்டது. உடனே பாளையக்காரன்
எழுந்தான். "நீர் ஏதோ உமது மருமகளைப் பத்திரமாய் அரண்மனையில் வைத்துப்
பாதுகாப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். நீர் இல்லாத சமயம் என்ன நடக்கிறதோ
என்னமோ! வயது வந்த பெண் எத்தனை நாளைக்கு உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்டிருப்பாள்?"
என்று சொன்னான். இதைக் கேட்டதும் ஜமீன்தாருக்கு இரத்தம் கொதித்துக் கண்கள்
சிவந்தன. "நீயும் ஒரு மனிதனா? உன்னிடம் பேச வந்தேனே?" என்று எழுந்தார்.
"கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும். குதிரையில் யார் வருகிறதென்று பார்த்துவிட்டு
வருகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தில்லைமுத்துத்தேவன் சாலையை நெருங்கிச்
சென்றான். அவனுடைய ஆட்கள் ஜமீன்தாரைச் சூழ்ந்து கொண்டு அவர் போவதைத்
தடுக்கும் பாவனையாக நின்றார்கள். "இப்படிப்பட்ட இக்கட்டில் நாமே வலிய
வந்து அகப்பட்டுக் கொண்டோ மே? இதிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது?"
என்று கருடாசலத்தேவர் யோசனையில் ஆழ்ந்தார்.
தில்லைமுத்துத்தேவன் சாலையருகிலே போய் நின்றான். குதிரை புளியந்தோப்பை நெருங்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. ரொம்பக் கூர்மையான காது உள்ளவனாதலால், வருகிற குதிரை மேல் இரண்டு பேர் ஏறி வருகிறார்கள் என்பதைக் குதிரைக் காலடிச் சத்தத்திலிருந்து தெரிந்து கொண்டான். அவனுடைய உற்சாகம் எல்லை கடந்தது. தன்னுடைய மனோரதம் நிறைவேறி விட்டதென்றே நம்பினான். இவ்வளவு சுலபமாக, உயிர்ச்சேதம் எதுவுமின்றி, காரியம் கைகூடி விட்டதை எண்ணிச் சந்தோஷப்பட்டான்.
குதிரை மேலும் நெருங்கி வந்தது. இதோ வந்து விட்டது! அதன் மேலே இரண்டு பேர் இருப்பதும் நிலா வெளிச்சத்தில் தெரிந்தது. அவன் நின்ற இடத்துக்கு நேரேயும் வந்தது. அதற்கு அப்பாலும் சென்றது. "நில்! நில்!" என்று கத்தினான். ஆனால் குதிரை நிற்கவில்லை. புளியந்தோப்பையும் அதையடுத்து நின்ற பொத்தையையும் தாண்டி மின்னல் மின்னும் நேரத்தில் இராமபிரானுடைய கோதண்டத்திலிருந்து கிளம்பிய பாணத்தைப் போல குதிரை போயே போய்விட்டது!
அப்புறந்தான் தில்லைமுத்துத்தேவன் விழித்துக் கொண்டான். கள்ளன் தன்னை ஏமாற்றிப் பெண்ணை அடித்துக் கொண்டு போகிறான் என்று தெரிந்து கொண்டான். உடனே "கொண்டு வா குதிரையை!" என்று அலறினான். அவனுடைய குதிரை வந்ததும் தாவி ஏறிக் கொண்டான். "மடையர்களே! என்னோடு வாருங்கள்!" என்று கத்தினான். மற்றும் ஏழு குதிரைகளிலும் ஆட்கள் ஏறிக் கொண்டார்கள்.
முன்னால் சென்ற கள்ளனுடைய குதிரையைத் தொடர்ந்து பாளையக்காரனுடைய எட்டுக் குதிரைகளும் பாய்ந்து சென்றன. குதிரைகளுக்குப் பின்னால் காலாட்களும் தலை தெறிக்க ஓடினார்கள்.
ஜமீன்தார் கருடாசலத் தேவருக்கு இது ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் திகைத்து நின்றுவிட்டுத் தம்முடைய ஆட்களைத் திரட்டிச் சேர்த்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காதறாக் கள்ளன் - Kaatharaak Kallan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - குதிரை, பாளையக்காரன், தில்லைமுத்துத்தேவன், கொண்டான், கருடாசலத்தேவர், கொண்டு, ஜமீன்தார், வந்து, என்றார், என்றான், அவனுடைய