காதறாக் கள்ளன்
4
கள்ளன் போன இடத்தில் என்ன நடந்தது என்று
தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாய்த் தானிருக்கும். அதை இப்போது சொல்கிறேன்.
கோழிகூவாப் புத்தூர் அரண்மனையிலிருந்து கருடாசலத்தேவன் ஆட்களுடன் புறப்பட்டுப்
போய்விட்டார் என்பதைக் கள்ளன் வழியிலேயே தெரிந்து கொண்டான். ஆகையால்
ஊருக்குள்ளே தைரியமாக நுழைந்து போனான். வருகிறவன் காதறாக் கள்ளன் என்பதை
ஊரார் அறிந்து கொண்டு பயந்து கதவைச் சாத்திக் கொண்டார்கள். அரண்மனையின்
வாசலில் வந்ததும் கள்ளன் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து ஒரு வெடி
தீர்த்தான். ஏற்கெனவே பயந்திருந்த காவற்காரர்கள் சிதறி ஓடிப் போனார்கள்.
முன் வாசல் திறந்திருந்தபடியால் திருடன் அரண்மனை முன் கட்டில் பிரவேசித்தான்.
ஆனால் இதற்குள் விஷயம் தெரிந்துகொண்டு வேலைக்கார ஸ்திரீகள் பின் கட்டுக்
கதவுகளைத் தாள் போட்டார்கள். கள்ளன் முற்றத்தின் நடுவில் நின்று இன்னொரு
வெடி தீர்த்தான். கதவுகளையெல்லாம் உடனே திறக்கும்படியும் இல்லாவிட்டால்
அதாஹதம் செய்துவிடுவேன் என்றும் கள்ளன் சத்தமிட்டுக் கூவினான். அரண்மனைப்
பின் கட்டின் மச்சிலேயிருந்து மரகதவல்லியும் அவளுடைய தாதிப் பெண்களும்
இந்தக் காட்சியைப் பார்த்தார்கள். அச்சமயம் கள்ளன் தன் முகத்தின் கீழ்ப்
பாதியை மறைத்துக் கட்டியிருந்த துணி தற்செயலாக அவிழ்ந்து விழுந்தது.
அப்போது அவனுடைய முகம் பூரண சந்திரனுடைய நிலா வெளிச்சத்தில் நன்றாய்த்
தெரிந்தது. தாதிப் பெண்களில் ஒருத்தி ஆச்சரியத்தினால் அலறினாள். மரகதவல்லியின்
காதில் ஏதோ சொன்னாள். கள்ளனுடைய அட்டகாசம் இதற்குள்ளே இன்னும் அதிகமாயிற்று.
அரண்மனைப் பின் கட்டின் கதவு சீக்கிரத்தில் திறக்கப்பட்டது. மரகதவல்லியும்
தாதிப் பெண்ணும் நிலா முற்றத்திற்கு வந்தார்கள்.
கள்ளன் இதற்குள்ளே தன் முகத்தின் பாதியை மூடி மறைத்துக் கொண்டான். அதனால் அவனுடைய உருவம் கோரமாகத்தானிருந்தது. ஆயினும் மரகதவல்லி சிறிதும் அஞ்சவில்லை.
"கள்ளா! ஏன் இப்படிக் கூச்சல் போட்டுத் தடபுடல் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாள்.
நிலவின் வெளிச்சத்தில் மரகதவல்லியின் முகத்தை பார்த்த கள்ளன் ஒரு நிமிஷம் தயங்கி நின்றான். அவனுடைய இரும்பு மனமும் இளகிப் போய்விட்டது.
மறுபடியும் மரகதவல்லி "இங்கே ஆண்பிள்ளைகள் யாரும் இல்லை. பெண்பிள்ளைகள் இருக்கிறோம். இங்கே வந்து ஏன் ஆர்ப்பாட்டம் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? நகை நட்டுகள் வேண்டுமானால் கழற்றித் தந்து விடுகிறோம். வாங்கிக் கொண்டு பேசாமல் போய்விடு!" என்றாள்.
கள்ளனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தயங்கித் தயங்கி "எனக்கு உன் நகை நட்டுகள் வேண்டாம்" என்றான்.
"வேறு என்ன உனக்கு வேண்டும்?" என்று மரகதவல்லி கேட்டாள்.
"நீ என்னோடு புறப்பட்டு வரவேண்டும்!" என்றான் கள்ளன்.
"இப்போதே வர வேண்டுமா? அல்லது மாமா வருகிற வரையில் காத்திருக்க முடியுமா? மாமா வந்ததும் அவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டால் நிம்மதியாயிருக்கும்."
கள்ளனுக்கு மேலும் திகைப்பு உண்டாயிற்று. "என்னை ஏய்க்கவா பார்க்கிறாய்? அதெல்லாம் முடியாது. உடனே புறப்பட்டு வருகின்றாயா, அல்லது உன்னைப் பலாத்காரமாய்த் தூக்கிக் கொண்டு போகட்டுமா?" என்று கர்ஜித்தான்
"உனக்கு அவ்வளவு கஷ்டம் வேண்டாம். நானே இதோ வருகிறேன்" என்று சொல்லிவிட்டு மரகதவல்லி அவனுக்கு முன்னால் நடந்தாள்.
கள்ளன் அடங்காத வியப்புடன் அவளை அழைத்துக் கொண்டு அரண்மனை வாசலுக்குச் சென்று முதலில் அவளைக் குதிரை மேல் ஏற்றினான். பிறகு தானும் தாவி ஏறிக் கொண்டான். குதிரையை மெதுவாகவே செலுத்தினான்.
மரகதவல்லி அவ்வளவு சுலபமாகத் தன்னுடன் வரச் சம்மதித்தது கள்ளனுக்குச் சொல்ல முடியாத ஆச்சரியத்தை உண்டாக்கியிருந்தது. ஆகையால் கோழிகூவாப் புத்தூரைக் குதிரை தாண்டிச் சென்றதும், "பெண்ணே! என்னுடன் வருவதற்கு உனக்குப் பயமாயில்லையா?" என்று கேட்டான்.
"எனக்கு என்ன பயம்? நீ 'காதறாக் கள்ளன்' என்பது எனக்குத் தெரியும். பெண்களுக்கு எவ்விதத் தீங்கும் நீ செய்யமாட்டாய் என்று உலகமெல்லாம் தெரிந்ததுதானே? ஆகையால் எனக்கு என்ன பயம்?" என்றாள் மரகதவல்லி.
"உலகம் சொல்லுவதை நம்பியா நீ கள்ளனோடு புறப்பட்டாய்?"
"உலகம் வேறுவிதமாய்ச் சொல்லியிருந்தாலும் நான் கிளம்பித்தானிருப்பேன். ஐந்து வருஷமாகக் கூண்டிலே கிளி அடைபட்டிருப்பது போல் அடைப்பட்டிருந்தேன். அப்படி அடைபட்டுக் கிடப்பதைக் காட்டிலும் கள்ளனோடு வெளியே புறப்படுவது கூட நல்லது தான் என்று தோன்றியது."
"பெண்ணே! உன்னை உன் மாமன் அவ்வளவு கஷ்டப்படுத்தி வந்தாரா!"
"ஐயோ! பாவம் அவர் என்னை கஷ்டப்படுத்தவே இல்லை. என் பேரில் உயிராயிருந்தார். ஆனாலும் எனக்கு வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தது கஷ்டமாகத்தானிருந்தது. அந்தக் கடும் சிறைச்சாலையிலிருந்து என்னை நீ விடுதலை செய்தாயே! உனக்கு நான் எந்த விதத்தில் கைமாறு செய்யப் போகிறேன்?"
"அசட்டுப் பெண்ணே! அதிகமாகச் சந்தோஷப்பட்டு விடாதே!..."
"ஏன்? நான் அதிகமாகச் சந்தோஷப்படுவது உனக்குப் பொறுக்கவில்லையா?"
"உன்னை நான் எதற்காக அழைத்துப் போகிறேன் என்பதை தெரிந்து கொண்டு அப்புறம் சந்தோஷப் படு! பாளையக்காரர் தில்லைமுத்துத்தேவர் என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?"
"ஆமாம்; அந்த மனுஷர் என்னைக் கல்யாணம் கட்டிக் கொள்ள ஆசைப் படுவதாகக் கேள்விப்பட்டேன்."
"அவரிடம் உன்னைக் கொண்டு போய் ஒப்புவிக்கப் போகிறேன். அதற்காகவே உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன்."
"அடபாவி!"
"ஏன் என்னைத் திட்டுகிறாய்? தில்லைமுத்துத்தேவர் ரொம்பப் பெரிய மனிதர். அவரிடமுள்ள பணத்துக்கு கணக்கே கிடையாது. அவருடைய எல்லைக்குள் அவர்தான் ராஜா. நீ அவரை கலியாணம் செய்து கொண்டால் ராணி மாதிரி இருக்கலாம்."
"சீச்சீ! நான் எதற்கு ராணியாகிறேன்? ஐயையோ இப்படியா செய்யப் போகிறாய்? இது தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேனே!"
"அதனாலேதான் அவசரப்பட்டுச் சந்தோஷப்படாதே என்று சொன்னேன். இப்போது தெரிகிறதா?"
"கூண்டிலிருந்து கிளியை விடுதலை செய்து காட்டுப் பூனையிடமா ஒப்புவிக்கப் போகிறாய்? இந்த மாதிரிப் பாவம் யாராவது செய்வார்களா?"
"பாவமாவது? புண்ணியமாவது! பெரிய பாவத்தை நான் தடுத்தேன். நான் வந்து உன்னை இப்படி அழைத்துப் போகாவிட்டால் தில்லைமுத்துத்தேவர் இருநூறு ஆட்களோடு வந்திருப்பார். உன் மாமனின் உயிருக்கும் ஆபத்து வந்திருக்கும். ஊரே பற்றி எரிந்திருக்கும். எத்தனையோ பேர் செத்துப் போயிருப்பார்கள். இவ்வளவு பாவங்களையும் தடுப்பதற்காகவே நான் வந்தேன்."
"ஐயையோ! என்னாலேயா இவ்வளவு சங்கடம்? மாமா சாயங்காலம் ஐம்பது ஆட்களோடு புறப்பட்டுப் போனாரே? எங்கே போனாரோ தெரியவில்லையே?"
"எனக்குத் தெரியும் சொல்லுகிறேன். அதோ கொஞ்ச தூரத்தில் ஒரு பொத்தை தெரிகிறதல்லவா?"
"ஆமாம், அதோ தெரிகிறது."
"அதற்குப் பக்கத்தில் ஒரு புளியந்தோப்பு இருக்கிறது. அதில் தில்லைமுத்துத்தேவரும் அவருடைய ஆட்கள் இருநூறு பேரும் திரண்டு இறங்கியிருக்கிறார்கள். உன்னுடைய மாமன் அங்கேதான் போயிருக்கிறார்."
"ஐயோ! அங்கே இரண்டு கட்சிக்கும் சண்டை வந்திருக்குமோ?"
"வந்திராது. சண்டை நடவாமல் தடுப்பதற்காகத் தான் நான் உன்னைக் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தேன். தில்லைமுத்துத்தேவர் இப்போது உன் மாமாவுடன் சமாதானமாகப் பேசிக் கொண்டிருப்பார்."
"என்னை அங்கே கொண்டு போய் விட்டால் அப்புறம் என்ன ஆகும்?"
"நீ பாளையக்காரரைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிப்பதாகச் சொன்னால் சண்டை ஒன்றும் வராது. உன் மாமாவும் ஒத்துக் கொள்வார்."
"உயிர் போனாலும் நான் அதற்குச் சம்மதிக்க மாட்டேன். நான் சம்மதித்தாலும் என் மாமா சம்மதிக்க மாட்டார். சம்மதிக்கிறவராயிருந்தால் இத்தனை நாள் காத்திருப்பாரா?"
"பெண்ணே! உன் மாமாவின் உத்தேசந்தான் என்ன? உன்னை எப்போதும் கன்னிப் பெண்ணாகவே அவருடைய வீட்டில் வைத்திருக்க உத்தேசமா?"
"இல்லை, இல்லை, அவருக்கு ஒரு பைத்தியக்கார ஆசை இருந்தது."
"அது என்ன பைத்தியக்கார ஆசை?"
"மாமாவின் மகன் ஆறு வருஷத்துக்கு முன்னால் கோபித்துக் கொண்டு ஓடிப்போய் விட்டானாம். அவன் என்றாவது ஒரு நாளைக்குத் திரும்பி வருவான். அவனுக்கு என்னைக் கட்டிக் கொடுக்கலாம் என்று அவருக்கு ஆசை. கள்ளா! இது பைத்தியக்கார ஆசைதானே?"
கள்ளன் இதற்குப் பதில் சொல்லாமல் மௌனமாயிருந்தான். குதிரை இரண்டு பேரைத் தாங்கிக் கொண்டு சாலையில் மெள்ள மெள்ளப் போய்க் கொண்டிருந்தது. கள்ளனும் அதை விரட்டவில்லை. அவனுடைய மனம் யோசனையில் ஆழ்ந்திருந்தது. புளியந்தோப்பும் நெருங்கி வந்து கொண்டிருந்தது.
சிறிது நேரத்துக்கெல்லாம் மரகதவல்லி, "கள்ளா! என்ன யோசனை செய்கிறாய்?" என்று கேட்டாள்.
"என்னமோ யோசனை செய்கிறேன். உனக்கென்ன அதைப்பற்றி?"
"அதைப்பற்றி எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் உன்னை ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன்" என்றாள்.
"என்ன கேள்வி? சீக்கிரம் கேட்டுத் தொலை! அதோ புளியந்தோப்பு நெருங்கி வந்துவிட்டது."
"கள்ளா! நீ ஒன்றும் உனக்காகத் திருடுவதில்லை. மற்ற ஏழை எளியவர்களுக்காகவே திருடுகிறாய் என்று உலகத்தார் சொல்லுகிறார்களே, அது உண்மையா?"
"உண்மையாயிருக்கலாம்; அதற்கு என்ன இப்போது?"
"இன்றைக்கு ஒரு நாள் உனக்காகத் திருடலாமே என்று சொல்கிறேன்."
"எனக்காக என்னத்தைத் திருடச் சொல்கிறாய்? நீ நகை நட்டுக் கூட அதிகமாகப் போட்டுக் கொள்ளவில்லையே? எல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டு வந்திருக்கிறாயே?"
"சே! உன்னைப் போய் நகை திருடும்படி நான் சொல்வேனா?"
"பெண்ணே! வேறு என்னத்தைத் திருடும்படி சொல்கிறாய்?"
"தெரியவில்லையா உனக்கு! உன்னைப்பற்றி என்னவெல்லாமோ பிரமாதமாக்ச் சொலுகிறார்களே? இவ்வளவு புத்தி கட்டையான மனுசனா நீ? அந்தப் பாளையக்காரனுக்கு நாமத்தைப் போட்டுவிட்டு நீயே என்னைத் திருடிக் கொண்டு போகும்படிதான் சொல்லுகிறேன்."
இந்த வார்த்தைகளைக் கேட்டக் கள்ளனுடைய உடம்பு சிலிர்த்தது. குதிரையை ஒரு நிமிஷம் நிறுத்திவிட்டு முன்னால் பார்த்து உட்கார்ந்திருந்த மரகதவல்லியைத் தன்னைப் பார்க்கும்படி திரும்பி உட்கார வைத்துக் கொண்டான். இருபுறமும் மரமடர்ந்த அச்சாலையில் அந்த இடத்தில் இடைவெளியிருந்தது. வெண்ணிலாவின் வெளிச்சம் அவளுடைய முகத்தில் பட்டது. கள்ளன் தன் முகமூடியையும் நீக்கிக் கொண்டான். மரகதவல்லியின் முகத்தைத் தூக்கிப் பிடித்துக் கனிவுடன் உற்றுப் பார்த்தான்.
"பெண்ணே! நீ சொல்வது இன்னதென்று தெரியாமால் சொல்லுகிறாய். நான் வீடுவாசல் இல்லாதவன். மலையிலும் காட்டிலும் அலைந்து திரிகிறவன். அரண்மனையில் சுகமாக வாழ்ந்த நீ என்னோடு எப்படி வாழ்வாய்?"
"கள்ளா! உன்னுடைய அரண்மனையே எல்லாவற்றிலும் பெரிய அரண்மனை! பூமியே உன் வீட்டின் தரை, ஆகாசமே கூரை. இதைக்காட்டிலும் பெரிய மாளிகை ஏது? அந்தப் பாளையக்காரனை ஒரு தடவை நான் பார்த்திருக்கிறேன். அன்று இராத்திரியெல்லாம் தூக்கத்தில் பயந்து உளறினேன். அவனிடம் என்னை நீ ஒப்புவித்தால் உடனே உயிரை விடுவேன். ஸ்திரீஹத்தி தோஷம் உனக்கு வரும். உன்னோடு வெளிக் கிளம்பிய பிறகு, மாமா வீட்டிற்குத் திரும்பிப் போகவும் முடியாது. கள்ளா! என்னை உன்னோடு அழைத்துக் கொண்டு போ!"
"பெண்ணே! என்னைப் போலீஸாரிடம் பிடித்துக் கொடுக்க ஏற்கனவே பலர் பிரயத்தனம் செய்கிறார்கள். இன்று முதல் பாளையக்காரரின் இருநூறு ஆட்களும் நம்மை வேட்டையாடுவார்கள்."
"வேட்டை நாய்களைக் கண்டால் நான் கொஞ்சங்கூடப் பயப்படுவதில்லை. கள்ளா! உனக்குப் பயமா?" என்று கேட்டாள் அந்த மரக்குலத்து மங்கை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காதறாக் கள்ளன் - Kaatharaak Kallan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், கொண்டு, கள்ளன், என்ன, பெண்ணே, உனக்கு, மரகதவல்லி, கள்ளா, என்னை, உன்னை, எனக்கு, கொண்டான், மாமா, போகிறேன், தில்லைமுத்துத்தேவர், இப்போது, இல்லை, கேட்டாள், அவனுடைய, பெரிய, செய்து, பைத்தியக்கார, உனக்குப், அவருடைய, அந்த, சண்டை, இவ்வளவு, இருநூறு, போய், என்றாள், உடனே, தாதிப், பின், அரண்மனை, தெரிந்து, ஆகையால், மரகதவல்லியின், செய்கிறாய், முன்னால், அழைத்துக், அவ்வளவு, வந்து, வேண்டும், குதிரை