இமயமலை எங்கள் மலை
கடைசியாக, இவர்களைப் போல் ஆயிரக்கணக்கில்
காஷ்மீரத்துக்குள் புகுந்த அகதிகளின் கோஷ்டியில் சேர்ந்து ஸ்ரீ நகரை
நோக்கிப் பிரயாணமானார்கள்.
ஸ்ரீநகருக்குச் சமீபமாக இந்தக் கூட்டம் வந்து சேர்ந்தபோது, அகதிகளுக்கு தொண்டு செய்யும் படையில் சேர்ந்திருந்த எஸ்.பி.சிவன், ஸ்ரீயக்ஞசாமி ஐயரையும், அவர் குடும்பத்தாரையும் சந்தித்தான். முதலில் அவர்களை அவன் இனம் கண்டு கொள்ளவில்லை. அவ்வளவாக அவர்கள் இளைத்து 'மெலிந்து' அழுக்கடைந்த கந்தல் துணிகளை அணிந்து காட்சி அளித்தார்கள்.
"மிஸ்டர் சிவன்! எங்களைத் தெரியவில்லையா?" என்று ஸ்ரீயக்ஞசாமி ஐயர் ஈனஸ்வரத்தில் கேட்ட பிறகுதான் அவனுக்கு அவர்களை அடையாளம் தெரிந்தது.
"அப்பனே! நாங்கள் எல்லோரும் உயிரோடு திரும்பி ஊருக்குப் போகப் போவதில்லை. ஹேமாவதி ஒருத்தியையாவது நீ காப்பாற்றி அழைத்துக் கொண்டு போ!" என்றார் யக்ஞசாமி ஐயர். மேலும் அவர், "புதுடில்லி போனதும், ஒரு நல்ல நாள் பார்த்துக் கலியாணம் செய்து கொள்ளுங்கள்! தீர்க்காயுளுடன் சௌக்கியமாயிருங்கள்!" என்றும் சொன்னார்.
எலும்புந் தோலுமாயிருந்த உடம்பைக் கந்தல் துணியினால் மறைக்கப் பிரயத்தனம் செய்து கொண்டு பல நாள் எண்ணெய் காணாத கூந்தலுடன் தலை குனிந்து நின்ற ஹேமாவதியைப் பார்த்துச் சிவன் திடுக்கிட்டான். அவனுடைய உள்ளம் ஆயிரம் சுக்கலாக உடைந்தது. உடைந்த சுக்கல்களை ஒன்று சேர்த்துச் சரிப்படுத்திக் கொண்டு, நிலைமை எப்படி தலைகீழாக மாறிவிட்டது என்பதைப் பற்றி ஒரு கனம் சிந்தித்துப் பார்த்தான்.
முன்னொரு காலத்தில் தக்ஷன் பரமசிவனுக்குப் பார்வதியைக் கலியாணம் செய்துகொடுக்க மறுத்ததற்காகத் தவம் செய்ததும், அப்போது எஸ்.பரமசிவனுக்கு நினைவு வந்தது.
அதே சமயத்தில் காலதேச வர்த்தமானங்களைத் தெரிந்து கொண்டு, உருவிலியான மன்மதனும் சில புஷ்ப பாணங்களைப் போட்டு வைத்தான்.
ஆனால் எஸ்.பரமசிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரிக்கவில்லை. ஒரு தடவை எரிந்து போன மன்மதனை மறுபடியும் எரிக்க முடியாதல்லவா?
யக்ஞசாமி ஐயரைப் பார்த்து, "ஐயர்வாள்! புதுடில்லி போகும் வரையில் காத்திருப்பானேன்? எங்களுக்குச் சொந்தமான இமயமலைப் பிரதேசத்திலேயே கலியாணத்தை நடத்தி விடுவோமே! சாக்ஷாத் பரமசிவனுக்கும், இமவானுடைய குமாரிக்கும் அந்தக் காலத்தில் இமயமலைச் சாரலிலேதானே திருமணம் நடந்தது" என்றான் சிவன்.
அவன் விருப்பப்படியே சௌந்தரியலக்ஷ்மி குடி கொண்ட ஸ்ரீநகரில் அவர்களுடைய திருமணம் நூறு ரூபாய் செலவில் நடந்தேறியது.
எத்தனையோ பொருள் நஷ்டம் தமக்கு நேர்ந்திருந்த போதிலும், ஹேமாவதியின் கலியாணத்துக்காகத் தாம் செலவழிக்க எண்ணியிருந்த ரூபாய் நாற்பதயிரம் மிச்சந்தானே என்று எண்ணி யக்ஞசாமி ஐயரும் சந்தோஷப்பட்டார். மேற்படி சம்பவங்கள் எல்லாம் ஆறு மாதத்துக்கு முந்தி நடந்தவை. எனவே சென்ற வாரத்துத் தினப் பத்திரிகைகளில் வெளியானபின் வரும் செய்தி எனக்கு வியப்பை அளிக்கவில்லை.
"காஷ்மீர் மீது படையெடுத்து வந்த எதிரிகளோடு போராடுவதற்காக முதலில் சென்ற படையின் தலைவர் கமாண்டர் எஸ்.பி.சிவன், தீரச் செயல்கள் பல புரிந்து பிறகு காயமடைந்து விழுந்தார். இப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்!"
தன்னுடைய குலதனமான இமயமலையை எதிரிகள் வந்தடையாமல் பாதுகாப்பதற்கு ஸ்ரீ எஸ்.பி.சிவன் தீவிரமாகப் போராடியதில் வியப்பில்லைதானே? ஆண்டவன் அருளினாலும், ஹேமாவதியின் மாங்கல்ய பலத்தினாலும் கமாண்டர் பரமசிவன் சிக்கிரம் குணமடைந்து ஹேமாதியுடன் நெடுங்காலம் வாழ்வாராக!
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இமயமலை எங்கள் மலை - Imayamalai Engal Malai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சிவன், கொண்டு, யக்ஞசாமி