இமயமலை எங்கள் மலை
"ஆமாம், 'மன்னும் இமயமலை எங்கள் மலையே'
என்று பாடிய அதே பாரதியார், 'இன்னறு நீர்க் கங்கை ஆறெங்கள் ஆறே' என்றும்
பாடியிருக்கிறார். ஆகையால் கங்கை ஆற்றுக்கு நேரே போய் அதில் விழுந்து
விடு!" என்றார் யக்ஞசாமி ஐயர்.
இதையெல்லாம் கதவுக்குப் பின்னாலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ஹேமாவதி விம்மி விம்மி அழுதாள்.
அவள் தன்னுடைய மை தீட்டிய கண்களைத் துடைத்துத் துடைத்துப் பன்னிரெண்டு கைக்குட்டைகள் பாழாய்ப் போயின. ஆனாலும் என்ன பயன்! சிவன் கங்கையில் விழுவதை அவளால் தடுக்க முடியுமா? அல்லது அப்படி விழுந்தவனைக் காப்பாற்றத் தான் முடியுமா? அவளுக்கு நீந்தத் தெரியாதே! மேலும் கங்கை நீர் மிக்க குளிர்ச்சியாக ஜில்லென்று இருக்கும் என்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அப்படிப்பட்ட குளிர்ந்த நீரில் கால் பட்டால் குரல் என்னத்துக்கு ஆகும்? கர்நாடக சங்கீதம் என்ன கதி ஆவது?
ஹேமாவதி தனக்குக் கிட்ட மாட்டாள் என்று நிச்சயமானதும், எஸ்.பி.சிவனுக்கு உண்மையிலேயே வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு விட்டது. யக்ஞசாமி ஐயர் சொன்னபடி செய்து விடுவது என்று அவன் தீர்மானித்தான். உத்தியோகத்தை சம்பளம், பஞ்சப்படி உள்பட ராஜினாமா செய்துவிட்டுப் புறப்பட்டான். கங்கையின் உற்பத்தி ஸ்தானமாகிய கங்கோத்ரிக்கே போய் விழுந்து உயிரை விடுவதென்று யாத்திரை தொடங்கினான்.
கங்கோத்ரிக்குப் போகும் வழியில் இமயமலைச் சாரலில் அவன் பிரயாணம் செய்யும்படி நேரிட்டது. வெள்ளிப் பனிமூடிய இமயமலையின் ஆயிரமாயிரம் சிகரங்களைப் பார்க்கப் பார்க்க, அவனுக்குக் கங்கையில் விழுந்து உயிரை விடுவதில் அவ்வளவு உற்சாகம் ஏற்படவில்லை. மேலும் கங்கோத்ரியில் முழங்கால் அளவு தண்ணீர் ஓடியதாலும் அதுவும் பனிக்கட்டியைப் போல் சில்லென்று இருந்த படியாலும் அங்கே கங்கையில் விழுவதற்கு அவன் இஷ்டப்படவில்லை.
"மன்னும் இமயமலை எங்கள் மலையே!" என்று பாரதியார் நமக்கெல்லாம் பட்டயம் எழுதி வைத்திருக்கிறார். அத்தகைய அற்புத மலைப் பிரதேசத்தை இன்னும் கொஞ்ச நேரம் சுற்றிப் பார்க்க விரும்பினான். அப்படிப் பார்த்துக் கொண்டே சில காலத்துக்கெல்லாம் அழகுக்குப் பெயர் போன காஷ்மீர தேசத்துக்குப் போய்ச் சேர்ந்தான்.
காஷ்மீரத்தைப் பார்த்த பிறகு உயிரை விடும் எண்ணம் அவனுடைய உள்ளத்தை விட்டு அடியோடு அகன்றது. இந்த உலகத்தில் பார்த்து அனுபவிக்க இவ்வளவு சௌந்தர்யங்கள் இருக்கும்போது, எதற்காக உயிரை விட வேண்டும்? ஹேமாவதியும் இந்தச் சௌந்தர்யங்களையெல்லாம் பார்த்து அனுபவிக்கத் தன்னுடன் இருந்தால் நன்றாய்த்தானிருக்கும்! அவளுக்குக் கொடுத்துவைக்கவில்லை; அவ்வளவுதான்! போயும் போயும் யக்ஞசாமி ஐயரின் பெண்ணாகப் போய்ப் பிறந்தாளே! என்ன துரதிர்ஷ்டசாலி!
ஆனால் அங்கே புது டில்லியில் ஸ்ரீ யக்ஞசாமி ஐயருக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிருஷ்டமாக அடித்துக் கொண்டிருந்தது. எல்லைப்புற மாகாணத்தின் வரவுசெலவுக் கணக்கு மிக்க மோசமாயிருந்தபடியால், அதைப் பரிசீலனை செய்து ஒழுங்கு படுத்துவதற்காக ஸ்ரீ யக்ஞசாமி ஐயரை மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில் விசேஷ உத்தியோகஸ்தராக இந்திய சர்க்கார் நியமித்தார்கள். ஸ்ரீ யக்ஞசாமி ஐயர் குடும்பத்துடன் ராவல்பிண்டிக்குப் போய்ச் சேர்ந்தார்.
மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளம், ஐந்து மாதம் வாங்கிய பிறகு, எல்லைப்புறமெங்கும் கலகம் மூண்டது. ஹிந்துக்களைப் பூண்டோ டு ஒழிக்கக் கங்கணங் கட்டிக் கொண்டு மலைச் சாதியார் துராக்கிரஹப் போர் துவங்கினார்கள்.
"உயிர் போனாலும் பாதகமில்லை; சம்பளம் பென்ஷன் எல்லாம் போய் விடுமே" என்று யக்ஞசாமி ஐயர் கவலை அடைந்தார். அதிக நாள் கவலைப்படுவதற்குள்ளே ராவல்பிண்டியை நோக்கிக் காட்டுமிராண்டிகள் படையெடுத்து வருவதாகத் தெரிந்தது. தன் மனைவி மக்களை அழைத்துக் கொண்டு ஸ்ரீ யக்ஞசாமி ஐயர் தம்முடைய சொந்தக் காரில் அவசரமாகப் புறப்பட்டார். வழி தெரியாமல் தட்டுத் தடுமாறி, பல அபாயங்களுக்குத் தப்பித்துக் கடைசியில் பெட்ரோல் இன்றி வண்டியை ஓரிடத்தில் நிறுத்த வேண்டியதாயிற்று. நல்ல வேளையாக வண்டி நின்ற இடத்துக்குப் பக்கத்தில் காஷ்மீரத்தின் எல்லையிருந்தது. எவ்வளவோ கஷ்டங்களுக்கு உள்ளாகிப் பல மலைத்தொடர்கள் கால் நடையாக ஏறிக் கடந்து, காஷ்மீர் நாட்டில் புகுந்தார். இதற்குள் கையில் கொண்டு வந்திருந்த பணம், குடும்பத்தார் அணிந்திருந்த நகைகள் எல்லாம் தீர்ந்து விட்டன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இமயமலை எங்கள் மலை - Imayamalai Engal Malai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - யக்ஞசாமி, ஐயர், ஸ்ரீ, உயிரை, சம்பளம், மாதம், கொண்டு, கங்கையில், போய், விழுந்து, என்ன, கங்கை, அவன்