இமயமலை எங்கள் மலை
புது டில்லியில் இந்திய சர்க்காரின்
காரியாலயம் ஒரு பெரிய சமுத்திரம். அந்தச் சமுத்திரத்தில் ஒரு பெரிய திமிங்கிலம்
போன்றவர் ஸ்ரீயக்ஞசாமிஐயர். மாதச் சம்பளம் அவருக்கு இரண்டாயிரம் ரூபாய்.
பெரிய பங்களாவில் வசித்தார். பெரிய கார் வைத்திருந்தார். அந்தக் காரின்
ஹாரன் போடும் பெரிய சத்தம், "இதோ, ராவ் பகதூர் யக்ஞசாமி வருகிறார் பராக்!
பராக்!" என்று அலறுவது போலத் தொனிக்கும்.
யக்ஞசாமி ஐயரின் குமாரி ஹேமாவதி அறிவில் கலைமகளையும், திருவில் லக்ஷ்மியையும் நிகர்த்திருந்தாள். எஸ்.பி.சிவனுடைய கண்களுக்கு அவள், சௌந்தரிய தேவதையாக விளங்கினாள்.
எஸ்.பி.சிவன் மேற்படி இந்திய சர்க்கார் காரியாலயமாகிய சாகரத்தில் ஒரு சிறு மீனை நிகர்த்தவன். அதாவது டைப் அடிக்கும் குமாஸ்தா. சம்பளம் மாதம் ரூபாய் எண்பது. பஞ்சப்படி ரூபாய் பதினாறு. ஆனாலும் அவனுடைய வாழ்க்கை உற்சாகத்தைப் பார்த்தால் ஏதோ சமஸ்தானத்தின் பட்டத்துக்குரிய இளவரசன் என்று தோன்றும்.
சங்கீதம், நடனம், நாடகம், முதலிய கலைகளில் அவனுக்கிருந்த ஆர்வமே அத்தகைய வாழ்க்கை உற்சாகத்தை அளித்தது. புதுடில்லி அகில இந்திய ரேடியோவில் நடைபெறும் நாடகங்களில் அவன் அடிக்கடி ஏதாவது ஒரு பாத்திரமாக நடிப்பதுண்டு. வேறு எந்தப் பாத்திரமாகவும் நடிக்க முடியாவிட்டால் பல பேர் சேர்ந்து சிரித்தல், கை தட்டுதல் ஆகியவற்றிலாவது அவன் அவசியம் சேர்ந்து கொள்வான்.
யக்ஞசாமி ஐயரின் புதல்வி ஹேமாவுக்குச் சங்கீதம் வரும். புதுடில்லி ரேடியோவில் கர்நாடக சங்கீதத்தைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் நேரும் போதெல்லாம் ஹேமாவதியை அவசியம் அழைத்து விடுவார்கள். யக்ஞசாமி ஐயருக்கே, தம்முடைய மோட்டார் ஹாரனின் சத்தத்துக்கு அடுத்தபடியாக ஹேமாவின் குரல்தான் அதிகம் பிடிக்கும். தம் குமாரியின் சங்கீதக் கலைத் திறமையைப் பற்றி அவருக்கு அசாத்தியப் பெருமை. எனவே, ரேடியோக்காரர்கள் ஹேமாவைப் பாடுவதற்கோ, ஏதாவது கதம்ப நிகழ்ச்சியில் ஈடுபடுவதற்கோ அழைக்கும் போதெல்லாம் யக்ஞசாமி ஐயர் தாமே பெருமித மகிழ்ச்சியுடன் ஹேமாவதியை ரேடியோ நிலையத்துக்கு கொண்டு போய் விடுவார்.
ரேடியோவில் ஹேமாவதிக்குக் கச்சேரி என்றால் ஒரு வாரம் முன்னாலிருந்து வீட்டில் ஒரே ரகளையாயிருக்கும். ஹேமாவதி காலில் 'ஸிலிப்பர்' போடாமல் வெறுந்தரையில் நடக்கக் கூடாது; குளிர்ந்த நீர் சாப்பிடக் கூடாது; கொஞ்சம் தொண்டையைக் கனைத்துவிட்டால் போதும், உடனே டாக்டரை அழைத்துவரக் கார் பறக்கும். கழுத்தில் ஓயாமல் கம்பளி மப்ளரைச் சுற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். தப்பித் தவறி தும்மி விட்டால், "ஐயோ குழந்தை தும்முகிறாளே, ரேடியோக் கச்சேரி இருக்கிறதே!" என்று வீட்டில் எல்லோரும் தவித்துப் போவார்கள்.
இவ்வளவு சர்வ ஜாக்கிரதையாக ஹேமாவின் குரலைக் கவனித்துக் கொண்டு வந்த யக்ஞசாமி ஐயர், அவளுடைய உள்ளத்தைப் பற்றிக் கொஞ்சம் அலட்சியமாயிருந்து விட்டார்.
ரேடியோ நிலையத்தில் அடிக்கடி ஹேமாவதியும் எஸ்.பி.சிவனும் சந்திக்க நேரிட்டது. இந்தச் சந்திப்புகளின் காரணமாக, ஒருவருடைய இருதயத்தில் ஒருவர் இடம் பெற்றுவிட்டார்கள். விஷயம் முற்றி வளர்ந்து ஒருவரையொருவர் கலியாணம் செய்து கொள்வது என்று தீர்மானித்து விட்டார்கள்.
இந்தச் செய்தி புதுடில்லியிலிருந்த தென்னிந்திய சமூகம் முழுவதற்கும் தெரிந்த பிறகு, யக்ஞசாமி ஐயருக்கும் தெரிந்து விட்டது. உடனே அவர் ரௌத்ராகாரம் அடைந்து, "புதுடில்லி ரேடியோவும் கர்நாடக சங்கீதமும் எக்கேடாவது கெட்டுப் போகட்டும்; ஹேமாவதியை இனி அங்கு அனுப்புவதில்லை!" என்று முடிவு செய்து விட்டார்.
ஸ்ரீ எஸ்.பி.சிவனுக்கு இந்த விவரம் தெரிந்த போது அவன் வெந்நீரில் விழுந்த மீனைப் போல் துடிதுடித்தான். கடைசியாக ஒருவாறு ஐயரிடம் நேரிலேயே வந்து ஹேமாதியைத் தன் வாழ்க்கைத் துணைவியாக அருளும்படி கோரினான்.
யக்ஞசாமி ஐயர் அவனைப் பார்த்து, "நீ என்ன படித்திருக்கிறாய்?" என்று கேட்டார்.
"ஷேக்ஸ்பியர், மில்டன், கோல்ட்ஸ்மித், ஷெல்லி, காளிதாசன், கம்பன், டாகூர், பாரதி இவர்களுடைய கவிதைகளையெல்லாம் படித்திருக்கிறேன்" என்றான் சிவன்.
"அதைக் கேட்கவில்லை. எந்தப் பரீட்சை பாஸ் செய்திருக்கிறாய்?" என்று கேட்டார்.
"எஸ்.எஸ்.எல்.சி., இண்டர்மீடியட், பி.ஏ.யில் முதல் பார்ட், ஷார்ட் ஹாண்ட், டைப்ரைட்டிங் பரீட்சைகளில் பாஸ் செய்திருக்கிறேன்" என்றான் சிவன்.
"வெறும் அரட்டைக் கல்லியாயிருக்கிறாய்; சொத்து, சுதந்திரம், நிலம், புலம் ஏதாவது உண்டா?" என்று கேட்டார்.
"நிலம் புலன் ஏராளமாய் உண்டு. ஆயிரம் மைல் அகலம், இரண்டாயிரம் மைல் நீளம் உள்ள இமயமலை என்னுடையதுதான்!" என்று ஒரே போடாய்ப் போட்டான் சிவன்.
"என்னப்பா உளறுகிறாய்? இமயமலை உன்னுடையதா?"
"ஆம் ஐயா! மகாகவி பாரதியார் அப்படிப் பாடியிருக்கிறாரே, தெரியாதா? 'மன்னும் இமயமலை எங்கள் மலையே!' என்னும் வரகவி வாக்கு பொய்யாகுமா?"
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இமயமலை எங்கள் மலை - Imayamalai Engal Malai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - யக்ஞசாமி, பெரிய, சிவன், ஹேமாவதியை, ஐயர், கேட்டார், இமயமலை, அவசியம், ரேடியோவில், ரூபாய், புதுடில்லி, இந்திய, அவன், ஏதாவது