பால ஜோசியர்
4
இன்னொரு நாள் சாயங்காலம் பாலன் வந்து
என்னை அம்மா அழைத்து வரச் சொன்னதாகக் கூறினான். உடனே நான் கிளம்பினேன்.
அப்போது நன்றாய் அஸ்தமித்துவிட்டது. வானத்தில் பூரண சந்திரனைக் கண்ட
கடலைப் போல் என் உள்ளமும் கொந்தளித்தது. பத்மாவைப் பார்க்கப் போகிறோமென்ற
எண்ணந்தான் அதற்கு காரணமென்று சொல்ல வேண்டியதில்லையல்ல்வா?
அன்று மாமி கட்டிலில் படுத்திருக்கவில்லை. கீழே தரையில் உட்கார்ந்திருந்தார்.
"உடம்பு கொஞ்சம் தேவலை போலிருக்கிறதே!" என்றேன்.
"கொஞ்சம் சுமாராயிருக்கிறது" என்றார் மாமி.
"இந்த வீட்டில் இன்னும் ஏதாவது மாறுதல் இருக்கிறதா, பாருங்கள்" என்றாள் பத்மா.
சுற்றுமுற்றும் பார்த்தேன். புதிதாக மின்சார விளக்கு போட்டிருந்தது சட்டென்று தெரிந்தது.
"ஓகோ! விளக்குப் போட்டிருக்கிறதே!" என்றேன்.
பத்மாவும் பாலனும், கூச்சல் போட்டுக் கொண்டு, விளக்குகளை ஏற்றியும் அணைத்தும் விளையாடத் தொடங்கினார்கள்.
"நீங்கள் என்ன பச்சைக் குழந்தைகளா? சும்மா இருங்கள்" என்றார், அவர்களுடைய தாயார். பிறகு என்னைப் பார்த்து, "உங்களை ஒரு காரியத்துக்காக அழைத்து வரச் சொன்னேன். ஒரு ரேடியோ வேண்டும். பார்த்து நல்ல ஸெட்டாக வாங்கித் தர வேண்டும். லண்டன் செய்திகள் நன்றாய்க் கேட்கும் ஸெட்டாய் இருக்க வேண்டும்" என்றார்.
மாமி அடிக்கடி வீட்டுக்கு மின்சார விளக்குப் போடவில்லையே என்று குறைப்பட்டதன் காரணம் அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. ரேடியோ வைக்க வேண்டுமென்று அவருக்கு ஆசை. அந்த ஆசையின் காரணமும் எனக்குப் புலப்படாமல் இல்லை. பிள்ளை சீமைக்குப் போயிருக்கிறபடியால், அவ்விடத்துச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்பினார்.
"அதற்கென்ன? பேஷாகப் பார்த்து நல்ல ஸெட்டாய் வாங்கிக் கொண்டு வருகிறேன். நான் கூட அடிக்கடி வந்து கேட்கலாமல்லவா?" என்றேன்.
"கூடவே கூடாது" என்றாள், தூரத்திலிருந்து பத்மா. "நீங்களே எல்லாவற்றையும் கேட்டுவிட்டால், பிறகு நாங்கள் என்னத்தைக் கேட்கிறது?" என்று விஷமமாகச் சொன்னாள்.
"அவள் கிடக்கிறாள். நீங்கள் கட்டாயம் வர வேண்டும். தினந் தினம் வந்து, யுத்தச் செய்திகளைக் கேட்டு எனக்குத் தமிழில் சொல்ல வேண்டும்" என்றார் மாமி.
பிறகு எல்லாரும் மாடிக்குப் போய், வெண்ணிலாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பாகீரதி மாமி தம்முடைய பிள்ளைகளைப் பற்றியே பேசினார். பேச்சு வேறு எந்தப் பக்கம் போனாலும், மறுபடியும் தமது பிள்ளைகளிடமே அவர் கொண்டு வந்து விட்டார். குழந்தை வயதில் அவர்கள் எவ்வளவு சமத்தாயிருந்தார்கள் என்று சொன்னார். இரட்டைப் பிள்ளை பெற்றது பற்றி ஊரார் தம்மைப் பரிகாசம் செய்ததையும், தாம் வெட்கப்பட்டதையும், ஆனால் குழந்தைகளைச் சேர்ந்தாற்போல் பார்க்கும்போதெல்லாம் தம் மனத்திற்குள் உண்டான சந்தோஷத்தையும் சொன்னார். சின்ன வகுப்புகளில் அவர்கள் ஒரே பள்ளிக் கூடத்தில் ஒரே வகுப்பில் படித்து வந்தார்களாம். கொஞ்சம் வயதான பிறகு அவர்களுக்கு வெட்கம் உண்டாகி வெவ்வேறு பள்ளிக் கூடங்களுக்குப் போய் விட்டார்களாம். படிப்பில் கெட்டிக்காரர்களாயிருந்தது போலவே, எல்லாக் காரியங்களிலும் கெட்டிக்காரர்களாம். வாயைப் போல் கையாம்.
"ஆனால் பிடிவாதம் மட்டும் ரொம்ப அதிகம். அவரவர்கள் பிடித்ததையே சாதிப்பார்கள். யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அன்று மாதிரிதான் இன்றும் என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்" என்று அந்த அம்மாள் சொல்லிப் பெருமூச்சு விட்ட போது, எனக்கு அந்தப் பிள்ளைகள் மீது வெகு கோபம் வந்தது.
"எத்தகைய மூர்க்கர்கள்! இப்படிப்பட்ட தாயாரை சந்தோஷமாய் வைத்திருக்க அவர்கள் கொடுத்து வைக்கவில்லையே! பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்னும் பழமொழி எவ்வளவு சரியாயிருக்கிறது!" என்று எண்ணினேன்.
மறுநாளே நல்ல ரேடியோ ஸெட்டு ஒன்று வாங்கி அவர்கள் வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தேன். ரேடியோக் கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து, 'ஏரியல்' முதலியவை அமைத்து விட்டுப் போனார்கள்.
"ராமு மட்டும் இருந்தால், இதெல்லாம் அவனே செய்து விடுவான். ஆளையே கூப்பிட மாட்டான்" என்றார் மாமி. அப்படிச் சொல்லும் போதே அவருடைய தொண்டையை அடைத்துக் கொண்டது. தாயின் அன்பு என்பது எவ்வளவு மகத்தானது என்பது எனக்கு மேலும் மேலும் நன்றாய்த் தெரிந்தது. தாயின் அன்பை அறியாத என்னுடைய வாழ்க்கை எவ்வளவு சூன்யமானது என்றும் உணர்ந்தேன்.
ரேடியோ வைத்தது முதல், நான் தினந்தோறும் மாலை நேரத்தில் அவர்கள் வீட்டுக்குப் போகத் தொடங்கினேன். பாதி நாள் அங்கேயே சாப்பிட்டு விடுவேன். இராத்திரி 9.30க்கு லண்டன் ரேடியோச் செய்திகள் கேட்டு மாமிக்குச் சொல்லிவிட்டுப் பிறகுதான் திரும்புவேன்.
இப்படி மூன்று, நாலு மாதங்கள் சென்றன. நாள் போவதே தெரியவில்லை. என் வாழ்க்கையில் இவ்வளவு சந்தோஷமாக இதற்கு முன் நான் இருந்தது கிடையாது. உலகமே மோகனம் பெற்று விளங்கியது. சந்திரன் புதிய ஒளியுடன் பிரகாசித்தான். தென்றல் புதிய இனிமையுடன் வீசிற்று. அந்தி வானம் முன்னெப்போதுமில்லாத அழகு பெற்று விளங்கிற்று. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் என்னைக் கண் சிமிட்டிக் கூப்பிட்டுத் தங்கள் காதல் கதைகளை என்னிடம் அந்தரங்கமாகக் கூறின. புஷ்பங்களின் ஸுகந்தம் என்னைப் பரவசப்படுத்திற்று. பட்சிகளின் கானம் அமுதகீதமாக என் செவியில் பாய்ந்தது. மனுஷர்கள் யாரைப் பார்த்தாலும், நல்லவர்களாகவும் சிநேகத்துக்கு உரியவர்களாகவும் தோன்றினார்கள்.
ஆனாலும், இத்தகைய ஆனந்தம் நிலைத்திருக்க வேண்டும் என்ற பயம் மட்டும் எனக்கு அடிக்கடி தோன்றும். ஏதோ ஒரு பெரிய விபத்து வரப்போகிறதென்று திகிலுடன் கூடிய உணர்ச்சி உள்ளத்தின் அடிவாரத்தில் இருந்து கொண்டேயிருந்தது.
ரேடியோவில் தினம் லண்டன் செய்திகள் தொடங்கும்போது, மாமியின் முகத்தில் ஆவல் ததும்பிக் கொண்டிருக்கும். செய்திகள் முடிந்ததும் அந்த முகத்தில் ஏமாற்றம் காணப்படும். மாமி என்ன எதிர்பார்த்தார்! ரேடியோவில் பிள்ளையைப் பற்றியச் செய்தி வருமென்றா? இது என்ன பைத்தியக்கார ஆசை! இப்படி எண்ணிய நான் சீக்கிரத்திலேயே என் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. ஒரு நாள் லண்டன் பி.பி.ஸி. செய்தி அறிவிப்பின் கடைசியில், "நாளைய தினம் ஒரு விசேஷ சம்பவம். வழக்கம் போல் செய்திகள் முடிந்ததும், ராயல் ஆகாசப் படையைச் சேர்ந்த இந்திய விமானி ஒருவர் தமது அநுபவங்களைச் சொல்வார்" என்று அறிவிக்கப்பட்டது. இது எனக்கே ஒருவிதப் பரபரப்பை அளித்தது. மாமிக்குக் கேட்கவா வேண்டும்? இரவில், அவர் தூங்கவேயில்லையென்றும், பத்மாவை அடிக்கடி எழுப்பி, "ஒருவேளை ராமு பேசுவானோ?" என்று கேட்டுக் கொண்டிருந்ததாகவும் மறுநாள் அறிந்தேன்.
அன்று மாலை மாமி ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாகக் கழிக்கிறார் என்று நன்கு தெரிந்தது. கடைசியாக, 9.30 அடித்தது. லண்டன் செய்தியும் ஆரம்பமாயிற்று. பத்து நிமிஷம் செய்திகள் படித்தானதும், "இப்போது இந்திய ஆகாச விமானி பேசுவார்" என்று அறிவிக்கப்பட்டது. உடனே, தொண்டையைக் கனைத்துக் கொண்டு, ஓர் இந்திய இளைஞனின் குரல் பேசத் தொடங்கியது. ஆகா! அப்போது மாமியின் முகத்தைப் பார்க்கணுமே! 'கன்றின் குரலைக் கேட்டுக் கனிந்து வரும் பசுப்போல' என்ற பாட்டின் அர்த்தம் அதற்கு முன்னால் எனக்கு விளங்கியதேயில்லை. அப்போதுதான் விளங்கிற்று.
பேச்சு முடியும் வரையில் மாமி கண் கொட்டாமல் ரேடியோவையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த உயிரற்ற கருவியில், பிள்ளையின் முகத்தையே அவர் பார்த்தது போலிருந்தது. பேச்சு முடிந்ததும், கண்களில் ததும்பிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, தழதழத்த குரலில், "குழந்தை என்ன சொன்னான்?" என்று கேட்டார். நான் சொன்னேன். முதலில் லண்டன் நகர் மீது ஜெர்மன் விமானங்கள் வந்து கண்ட இடத்தில் குண்டு போடும் அக்கிரமத்தை அவன் விவரித்தான். பிறகு, லண்டன் ஜனங்கள் ஸ்திரீகளும் குழந்தைகளும் உள்பட எவ்வளவு தீரத்துடன் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினான். மகாபாரத யுத்தத்தைப் போல் இதுவும் தர்ம யுத்தம் தானென்றும் சொல்லி, இப்பேர்ப்பட்ட யுத்தத்தில் பங்கு எடுத்துக் கொள்ளத் தனக்குக் கிடைத்த பாக்கியத்தைப் பாராட்டினான். கூடிய சீக்கிரத்தில் பகைவர்களுடைய நாட்டுக்குச் சென்று பழிக்குப் பழி வாங்கும் விருப்பம் தனக்கு அபரிமிதமாக இருப்பதாகவும், அதை நிறைவேற்றும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினான். கடைசியாக, இந்திய மக்கள் எல்லாரும் தங்களுடைய சொந்த சண்டை சச்சரவுகளையெல்லாம் மறந்து விட்டு மனித நாகரிகத்தைக் காப்பதற்காகப் போராடும் பிரிட்டனுக்குப் பூரண ஒத்தாசை செய்யவேண்டுமென்று வேண்டிக் கொண்டு பேச்சை முடித்தான்.
இதையெல்லாம் நான் தெரிவித்தபோது, மாமி, பத்மா, பாலன் எல்லாரும் ராமுவையே நேரில் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு, சற்று நேரம் மௌனம் குடி கொண்டிருந்தது.
பத்மா, திடீரென்று, "ஏனம்மா, இந்தப் பேச்சைக் கிருஷ்ணசாமி கேட்டிருப்பானா, அம்மா!" என்றாள்.
மாமி பதில் சொல்லவில்லை.
"கேட்டிருந்தால் கிருஷ்ணசாமிக்குக்கூட மனமும் மாறிப் போயிருக்கும்" என்றாள் பத்மா.
மறுநாள் தான் அவர்கள் வீட்டுக்குப் போன போது, மாமி நாடாக் கட்டிலில் படுத்திருப்பதைக் கண்டேன். பழையபடி அவருக்கு உடம்பு அசௌகர்யம் என்று தெரிந்தது.
"அண்ணாவிடமிருந்து வந்த கடிதத்தை வாசித்துக் காட்டு" என்று பத்மாவிடம் சொன்னார்.
"எந்த அண்ணா?" என்று கேட்டேன்.
"ராமு அண்ணாவிடமிருந்துதான். இன்றையத் தபாலில் வந்தது. ஆனால் போஸ்டு பண்ணி ஒரு மாதத்துக்கு மேலாச்சு" என்றாள் பத்மா.
பிறகு, கடிதத்தை வாசித்தாள். கிட்டத்தட்ட ரேடியோவில் பேசியது போலவே கடிதத்தின் முற்பகுதி இருந்தது. கடைசியில், பின்வருமாறு உருக்கமாக எழுதியிருந்தான்.
"அம்மா! கூடிய சீக்கிரத்தில்
நான் பகைவர்களுடைய தேசங்களுக்கு விமானத்தில் செல்வேன். ஒரு நாளைக்குத்
திரும்பி வராமல் போனாலும் போவேன். சர்க்கார் உனக்கு சமாசாரம் தெரிவிப்பார்கள்.
தாயாருக்குப் பிள்ளை செய்யவேண்டிய கடமை ஒன்றும் நான் செய்யவில்லை. இருந்தாலும், உலகத்தில் தர்மத்தையும் நாகரிகத்தையும் காப்பாற்றுவதற்காக உன் பிள்ளை உயிரை விட்டான் என்றால், அது உனக்குப் பெருமை இல்லையா, அம்மா?
தெரிந்தோ, தெரியாமலோ உன மனதுக்கு வருத்தமுண்டாகும்படியான காரியங்கள் எவ்வளவோ நான் செய்திருப்பேன். அதற்காகவெல்லாம் என்னை நீ மன்னித்து விட வேண்டும்.
சிறு பிராயத்தில் என்னுடைய பிடிவாதங்களையெல்லாம் நீ பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றி வளர்த்தாய். இன்னமும் நான் உனக்குக் குழந்தைதானே? இப்போதும் என்னுடைய பிடிவாதத்தை மன்னித்து விடு.
கிருஷ்ணசாமி, பத்மா, பாலன் எல்லாருக்கும் என்னுடைய அன்பைத் தெரியப்படுத்து, நான் அவர்களுடைய ஞாபகமாகவே இருக்கிறேன். அவர்களுக்கு நான் கொடுத்த தொந்தரவுகளையெல்லாம் மறந்து மன்னித்துவிடும்படி சொல்லு.
பத்மா இப்படி வாசித்து முடித்தபோது, அவர்கள்
மூன்று பேர்களுடைய கண்ணிலும் ஜலம் தளும்பிற்று.தாயாருக்குப் பிள்ளை செய்யவேண்டிய கடமை ஒன்றும் நான் செய்யவில்லை. இருந்தாலும், உலகத்தில் தர்மத்தையும் நாகரிகத்தையும் காப்பாற்றுவதற்காக உன் பிள்ளை உயிரை விட்டான் என்றால், அது உனக்குப் பெருமை இல்லையா, அம்மா?
தெரிந்தோ, தெரியாமலோ உன மனதுக்கு வருத்தமுண்டாகும்படியான காரியங்கள் எவ்வளவோ நான் செய்திருப்பேன். அதற்காகவெல்லாம் என்னை நீ மன்னித்து விட வேண்டும்.
சிறு பிராயத்தில் என்னுடைய பிடிவாதங்களையெல்லாம் நீ பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றி வளர்த்தாய். இன்னமும் நான் உனக்குக் குழந்தைதானே? இப்போதும் என்னுடைய பிடிவாதத்தை மன்னித்து விடு.
கிருஷ்ணசாமி, பத்மா, பாலன் எல்லாருக்கும் என்னுடைய அன்பைத் தெரியப்படுத்து, நான் அவர்களுடைய ஞாபகமாகவே இருக்கிறேன். அவர்களுக்கு நான் கொடுத்த தொந்தரவுகளையெல்லாம் மறந்து மன்னித்துவிடும்படி சொல்லு.
இப்படிக்கு
உன் பிடிவாதக்காரப் பிள்ளை
ராமு.
உன் பிடிவாதக்காரப் பிள்ளை
ராமு.
"பின் குறிப்பையும் வாசி!" என்று மாமி சொன்னார்.
"நான் மாட்டேன்" என்று பத்மா நாணத்துடன் கூறினாள்.
"அப்படியானால் கடிதத்தை அவரிடம் கொடு" என்றார் மாமி.
பத்மாவிடமிருந்து கடிதத்தை வாங்கிப் பார்த்தேன். அதில் கையெழுத்துக்குப் பிறகு பின்வருமாறு எழுதியிருந்தது.
"பத்மாவுக்குக் கல்யாணமாகிக் குழந்தை பிறக்கும் போது, முதலில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு என் பெயரை வைக்கச் சொல்லு - ராமு"
பத்மா கடிதத்தை என்னிடம் கொடுத்தவுடனேயே பாலனுடன் மாடிக்குப் போய் விட்டாள். அவள் வெட்கப்பட்டது இயற்கையேயல்லவா?
பிறகு, மாமி என்னைப் பார்த்து, "உங்களை முதலில் அழைத்து வரச் சொன்னது எதற்கு என்று ஞாபகமிருக்கிறதா?" என்று கேட்டார்.
"ஞாபகமிருக்கிறது. பத்மாவுக்கு வரன் ஜாதகம் பார்க்க" என்றேன்.
"அப்போது ஒரு ஜாதகத்தோடு நிறுத்தி விட்டோ ம். இன்னும் சில வரன்களின் ஜாதகம் இன்று பார்க்கலாமா? பத்மாவுக்குக் கல்யாணம் ஆகி விட்டால், என் மனதிலிருந்து பெரிய பாரம் நீங்கும். எது எப்படியிருக்குமோ?" என்றார்.
நான் சற்று யோசித்து, "அம்மா, நான் ஒரு சமாசாரம் சொல்லட்டுமா?" என்றேன்.
மாமி பேசாமல் என் முகத்தைப் பார்த்தார்.
"வேறு ஜாதகங்கள் என்னத்திற்காகப் பார்க்க வேண்டும்? நானே பத்மாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன். உங்களுக்கெல்லாம் சம்மதமாயிருந்தால்" என்றேன்.
மாமியின் முகத்தில் அப்போதுதான் கொஞ்சம் மலர்ச்சியைப் பார்த்தேன். அவர் சற்று நிதானித்து, "எனக்குப் பூரண சம்மதம். ஆனால், உங்களைச் சேர்ந்த பந்துக்கள் - பெரியவர்களைக் கேட்க வேண்டாமா?" என்றார்.
"எனக்கு ஒருவருமேயில்லை. நீங்கள் தான்" என்றேன்.
"அப்படியானால், பத்மாவை மட்டுந்தான் கேட்கவேண்டும். அவளை நீங்களே கேட்டு விடுங்கள். இந்தக் காலத்திலேயெல்லாம் அப்படித்தான் வழக்கமாயிருக்கிறது" என்றார்.
"நான் அவ்வளவு நாகரிகக்காரன் இல்லை, மாமி! நீங்கள் தான் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றேன் நான்.
இரண்டு நாள் கழித்து ஒரு நாள் காலையிலேயே பாலன் வந்து கூப்பிட்டான். கிருஷ்ணசாமி அண்ணா வந்திருப்பதாய்ச் சொன்னான். நான் வீட்டுக்குள் நுழையும் போதே, "வாருங்கள், மாப்பிள்ளை!" என்று கிருஷ்ணசாமி அழைத்ததும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
நான் போய் உட்கார்ந்ததும் மாமி, "கிருஷ்ணசாமியிடம் சமாசாரத்தைச் சொன்னேன். அவனுக்குப் பூரண சம்மதமென்கிறான்" என்றார்.
அப்போது, கிருஷ்ணசாமி, "பத்மாவுக்குத் தகுந்த வரனா என்று அம்மா கேட்டாள். 'நம்ம பத்மாவுக்கு தகுந்த வரன் ஒரு நாளும் கிடைக்கப் போவதில்லை. யார் பண்ணிக்கிறேன்னு வரானோ அவன் கழுத்திலே கட்டி விடு' என்று சொல்லிண்டிருந்தேன். அதற்குள் நீரே வந்துவிட்டீர்" என்றான்.
"ஒன்றுமில்லை - அவருக்குத் தகுந்த பெண் கிடைக்கிறதுதான் கஷ்டம்" என்றாள் பத்மா.
இப்படிப் பத்மா எனக்குப் பரிந்து பேசியது எவ்வளவோ எனக்கு சந்தோஷமளித்தது. ஆனால், கிருஷ்ணசாமிக்கு என் பேரிலிருந்த அருவருப்பு நீங்கி அவன் கல்யாணத்துக்குச் சம்மதித்தது அதைவிட மகிழ்ச்சியளித்தது.
"பத்மாவுக்குத் தகுந்த வரன் கிடைப்பது கஷ்டந்தான். நீங்கள் தமையன்மார்கள் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். செய்யாதது உங்கள் தவறுதானே?" என்றேன்.
"ஆமாம், மாப்பிள்ளை, ஆமாம்! எங்கள் தப்புத்தான். ஆனால் எங்களுக்கு இதற்கெல்லாம் சாவகாசம் ஏது? நான் தேசத்தைக் காப்பாற்றப் போகிறேன். ராமு உலகத்தையே காப்பாற்றுவதற்குப் போயிருக்கிறான்!" என்றான் கிருஷ்ணசாமி. பிறகு, ராமுவின் ரேடியோப் பேச்சைப் பற்றி திட்டு திட்டென்று திட்டத் தொடங்கினான்.
கடைசியில், "இன்று ராத்திரி நான் மறுபடியும் கோயமுத்தூர், மலையாளம் பக்கம் போகிறேன். வருவதற்கு ஒரு மாதம் ஆகும். அதற்குள் கல்யாணத்துக்கு முகூர்த்தம் வைத்தால், எனக்குத் தந்தி அடியுங்கள். எங்கள் ஆபீஸில் கேட்டால், விலாசம் சொல்வார்கள். ஒருவேளை நான் வராமற் போனாலும், கல்யாணத்தை நடத்திவிடுங்கள். என்னுடைய ஸ்தூல சரீரம் வராவிட்டாலும் சூக்ஷ்ம சரீரத்தில் அன்று உங்களுடன் இருப்பேன்" என்றான் கிருஷ்ணசாமி.
எங்கள் கல்யாணம் நிச்சயமாகி, முகூர்த்தத் தேதியும் வைக்கப்பட்டது. திருவான்மியூர் கோவிலில் கல்யாணத்தை நடத்துவதென்று தீர்மானமாயிற்று.
இதற்குப் பிறகு நாலைந்து நாள் பாகீரதி மாமி வெகு உற்சாகமாக இருந்தார். கல்யாணத்தை அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டுமென்று, திட்டம் போடவும் சாமக்கிரியைகள் வாங்கிச் சேர்க்கவும் ஆரம்பித்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பால ஜோசியர் - Bala Josiyar - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், மாமி, பத்மா, வேண்டும், பிறகு, என்றார், என்றேன், கொண்டு, வந்து, நாள், லண்டன், கிருஷ்ணசாமி, அம்மா, பிள்ளை, செய்திகள், என்றாள், ராமு, எனக்கு, நீங்கள், என்ன, தெரிந்தது, என்னுடைய, எவ்வளவு, கடிதத்தை, அவர், அடிக்கடி, எனக்குத், தகுந்த, போய், இந்திய, சொன்னார், கல்யாணம், அந்த, அன்று, கொஞ்சம், போல், அப்போது, பாலன், என்னைப், பூரண, பார்த்து, ரேடியோ, அவன், சற்று, முதலில், பார்த்துக், கடைசியில், கூறினான், முடிந்ததும், தான், என்றான், எங்கள், கல்யாணத்தை, அப்போதுதான், அழைத்து, வரச், வரன், முகத்தில், ரேடியோவில், பேச்சு, போனாலும், குழந்தை, பார்த்தேன், எல்லாரும், தினம், கேட்டு, எனக்குப், சொன்னேன், நல்ல, இப்படி, கூடிய, வேண்டுமென்று, சொல்ல, மட்டும், போது, மாமியின்