பால ஜோசியர்
2
ஒரு நாள் மாலை ஐந்து மணி இருக்கும். என்னுடைய
அறைக்குள் ஒரு சிறு பையன் வந்தான். அவனுக்குப் பத்து வயதிருக்கலாம்.
முகம் குறுகுறுவென்று களை வடிந்து கொண்டிருந்தது. அவன் வாழ்க்கையில்
மிக மேலான நிலைக்கு வரப் போகிறான் என்று ஜோசியம் சொல்வதற்கு ஜாதகம் பார்க்க
வேண்டியதில்லை; முகத்தைப் பார்த்தே சொல்லிவிடலாம்.
"ஸார்! ஜோசியர் நீங்கள் தானா, ஸார்?" என்று கேட்டான். அவன் குரலில் ஒரு கனிவு இருந்தது.
"ஆமாம், அப்பா! உனக்கு என்ன வேணும்?" என்றேன்.
"அம்மாவுக்கு உடம்பு சரியாயில்லை; உங்களைக் கூட்டிக் கொண்டு வரச்சொன்னாள்" என்றான்.
அவனுடைய முகத்தில் தோன்றிய சோகக் குறிக்கும், குரலில் தொனித்த கனிவுக்கும் எனக்குக் காரணம் தெரிந்தது. ஆனாலும், அவன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததற்காக நான் போய் என்ன பிரயோஜனம்?
"நான் வைத்தியனில்லையே, அப்பா!" என்றேன்.
"வைத்தியத்துக்காக இல்லை, ஸார்! ஏதோ ஜாதகம் பார்க்க வேணுமாம்; அதற்காகத்தான். உங்களை அவசியம் வந்துவிட்டுப் போகச் சொன்னாள், ஸார்!" என்றான்.
உடனே நான் அங்கவஸ்திரத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு அந்தப் பையனுடன் கிளம்பினேன்.
"வீடு எங்கே இருக்கிறது, தம்பி!" என்றேன்.
"கிட்டத்தான் ஸார், இருக்கிறது. நான் அழைத்துக் கொண்டு போகிறேன்" என்றான் பையன்.
சாலையில் நடந்து கொண்டே "வீட்டில் அப்பா இல்லையா, தம்பி?" என்று கேட்டேன்.
"எங்க அப்பா செத்துப் போய்ட்டார், ஸார்! ஆறு வருஷம் ஆச்சு" என்றான்.
சற்றுப் பொறுத்து, "உனக்கு அண்ணா இருக்கிறாரா?" என்று கேட்டேன்.
"இரண்டு அண்ணா இருக்கா, ஸார்! ஒருத்தன் தான், ஆகாசப் படையிலே சேர்ந்திருக்கான். உங்களுக்குத் தெரியாதா, ஸார்?" என்றான். அவனுடைய குரலில் பயத்தோடு பெருமையும் கலந்திருந்தது.
எழும்பூரிலிருந்து ஒரு பையன் 'ஏர் பைலட்டாகச் சேர்ந்திருக்கிறான் என்று நான் முன்னமே கேள்விப்பட்டிருந்தேன். பிற்பாடு அவன் சீமைக்கு 'ராயல் ஏர் போர்ஸில்' சேர்வதற்குப் போயிருக்கிறானென்றும் சொன்னார்கள். அவனுடைய தம்பி தான் இவன். அவன் தாயாரைத்தான் பார்க்கப் போகிறோமென்றதும் எனக்கு ஒருவிதப் பெருமை உண்டாயிற்று.
ஜன நடமாட்டம் அதிகமில்லாத ஒதுக்குப்புறமான சாலையில் அவர்கள் வீடு இருந்தது. வாசலில் மதிள் சுவர் தாண்டியதும் ஒரு சின்னஞ்சிறு தோட்டம், அதற்குப் பின்னால் வீடு. வீட்டு வாசலில் சின்னத் தாழ்வாரம் இருந்தது. நாங்கள் வீட்டை அடைந்ததும், பையன், "இதோ நான் போய் அம்மாவிடம் சொல்கிறேன், ஸார்!" என்று கூறிவிட்டு உள்ளே போனான். வெளித் தாழ்வாரத்தில் கிடந்த நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். அடுத்த நிமிஷம் உள்ளிருந்து யாரோ வந்த சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஓர் இளம் பெண் என் முன்னால் நின்றாள். முக ஜாடையிலிருந்து, அவள் பையனுடைய தங்கையென்று ஊகித்துக் கொண்டேன். ஆச்சரியம் நிறைந்த தன் பெரிய கண்களை அகல விரித்து அவள் என்னை நோக்கினாள். என்னுடைய நெஞ்சை என்னமோ செய்தது. இப்படி ஓர் இளம் பெண்ணுடன் நேருக்கு நேர் பார்த்துப் பேசி எனக்கு வழக்கம் கிடையாது. எனவே, கலக்கத்துடன் எழுந்து நின்றேன்.
"நீங்கள் தான் பால ஜோசியரா?" என்று அந்தப் பெண் கேட்டாள்.
உடனே, கொஞ்சம் தைரியம் வந்து, "ஆமாம்" என்றேன்.
அவளுடைய இதழ்களில் ஒரு விஷமச் சிரிப்பின் ரேகை காணப்பட்டது.
"பால ஜோசியர் என்றால், பச்சைக் குழந்தையாயிருப்பீர்களாக்கும் என்று நினைத்தேன்!"
நான் கொல்லென்று சிரித்துவிட்டேன்.
அவள் சட்டென்று தன் வாயைப் பொத்திக் கொண்டதும் என் சிரிப்பு நின்றது. அவள் இரகசியம் பேசும் குரலில், "எங்க அம்மாவுக்கு உடம்பு சரியாயில்லை. அவளுக்கு மன வருத்தம் உண்டாகும்படியாக நீங்கள் ஒன்றும் சொல்லக்கூடாது. உங்களை ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்" என்றாள்.
என்னைக் கூப்பிட்ட காரணம் ஒருவாறு எனக்குப் புலப்படத் தொடங்கியது.
மறுபடியும் அவள், "எங்கள் அண்ணா ஆகாசப் படையில் சேர்ந்திருக்கிறான், தெரியுமோ, இல்லையோ? அவன் ஜாதகத்தைப் பார்க்கச் சொல்வாள். ஒன்றும் ஆபத்து இல்லை என்று நீங்கள் சொல்லிவிட வேணும் தெரிகிறதா?" என்று மன்றாடும் குரலில் சொல்லி, என்னை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுடைய கண்களில் நீர் துளித்திருப்பதைக் கண்டேன். அந்தக் கண்ணீர்த் துளிகள் என் நெஞ்சைப் பிளந்தன.
பையன் உள்ளேயிருந்து ஓடி வந்து, "அம்மா வரச் சொல்கிறாள், ஸார்!" என்றான்.
உள்ளே போனேன். இதற்குள் மணி ஆறு ஆகிவிட்டபடியால் வெளிச்சம் வெகுவாக மங்கியிருந்தது. அது பழைய நாள் முறையில் கட்டி வீடு. முற்றம், தாழ்வாரம், கூடம் இப்படியிருந்தது. கூடத்தில், ஒரு நாடாக் கட்டில் போட்டிருந்தது. அதில் ஒரு அம்மாள், படுத்திருந்தவர், என்னைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார். அவருக்கு வயது சுமார் ஐம்பது இருக்கும். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒருவித பயபக்தி உண்டாயிற்று. (அடிக்கடி "ஒருவித" என்று சொல்கிறேனில்லையா? இந்த உணர்ச்சிகளெல்லாம் எனக்கு முற்றும் புதியவையானபடியால் அப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது.)
நான் அருகில் சென்றதும், "நீங்கள் ஏன் அம்மா எழுந்திருக்கிறீர்கள்? படுத்துக் கொள்ளுங்கள்" என்றேன்.
"பாதகமில்லை; நீங்கள் உட்காருங்கள்" என்று அந்த அம்மாள் கூறினார்.
கீழே விரித்திருந்த பாயில் நான் உட்கார்ந்ததும், அந்த அம்மாள், "ஒரு ஜாதகம் பார்ப்பதற்காக உங்களைக் கூப்பிட்டனுப்பினேன். எனக்கு உடம்பு சரியாயில்லை. இல்லாவிட்டால் நானே வந்திருப்பேன்" என்றார்.
"அதற்கென்ன, மாமி! எனக்கு வருவதற்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை" என்றேன்.
அந்த அம்மாள் தன் தலைமாட்டிலிருந்து ஒரு சிறு கைப்பெட்டியைத் திறந்து, அதற்குள்ளிருந்த ஒரு ஜாதகத்தை எடுத்தார்.
"பாலா! உள்ளே போய் ஹரிகேன் லாந்தர் ஏற்றி வாங்கிக் கொண்டு வா!" என்றார்.
அந்த வீட்டுக்கு மின்சார விளக்குப் போடவில்லை என்பதை அப்போதுதான் கவனித்தேன்.
"வீட்டுக்காரனிடம் நாங்கள் எவ்வளவோ சண்டைபிடிக்கிறோம், இன்னமும் லைட் போட மாட்டேனென்கிறான்" என்றார் அந்த அம்மாள்.
"அதனாலென்ன, மாமி! ஹரிகேன் வெளிச்சமே போதும்" என்றேன்.
லாந்தர் வந்ததும், ஜாதகத்தை வாங்கிப் பார்த்தேன். வாசலில் எனக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை நன்றாய் ஞாபகத்திலிருந்தது. ஜாதகம் எப்படியிருந்தாலும் அதைப் பற்றி ஒன்றும் கெடுதலாய்ச் சொல்வதில்லையென்று தீர்மானித்துக் கொண்டேன். ஆனால், என்ன ஆச்சரியம்! அந்த ஜாதகத்தில் கெடுதலாக ஒன்றுமேயில்லை! எவ்வளவோ கவனமாக ஆராய்ந்து கணக்குப் போட்டுப் பார்த்தேன். அது ஒரு சாதாரண ஜாதகம். நன்மையோ, கெடுதலோ, பிரமாதமாக ஒன்றுமில்லை. முக்கியமாக, இந்த வருஷத்தில் விசேஷ சம்பவம் எதுவும் ஜாதக ரீதிப்படி நேர்வதற்கில்லை.
எனக்கு இன்னது சொல்வதென்று தெரியவில்லை. உள்ளது உள்ளபடி "ஒன்றுமேயில்லை" என்றால், அந்த மாமிக்கு நம்பிக்கை உண்டாகாது. எனக்கு ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்துப் போகச் சொல்லி விடலாமல்லவா? அவர் என்னைப் பற்றி அம்மாதிரி அபிப்பிராயங் கொள்வதை நான் விரும்பவில்லை. ஆகவே, கொஞ்சம் யோசனை செய்து 'ரொம்ப உயர்ந்த ஜாதகம் அம்மா! இந்த மாதிரி ஜாதகம் சாதாரணமாய்ப் பார்க்க முடியாது. இந்த வருஷத்திலே ஒரு கண்டம் இருக்கிறது. ஆனால் ஆபத்து ஒன்றும் வராது, நிச்சயம். சுபகிரஹங்களின் சக்தி பலமாய் இருக்கிறது" என்றேன்.
என்னுடைய பேச்சின் பாதியிலேயே அந்த அம்மாளின் முகத்தில் புன்னகை ஏற்பட்டதைப் பார்த்தேன். நான் பேசி முடித்ததும் அது சிரிப்பாக மாறிற்று. பலவீனத்தினால், சிரிப்பு இருமலில் முடிந்தது.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ தப்புப் பண்ணி விட்டோ ம் என்று மட்டும் உணர்ந்தேன்.
"இப்படித்தான் நீங்கள் எல்லாருடைய ஜாதகமும் பார்த்துச் சொல்கிறதா?" என்று அந்த மாமி கேட்டபோது, நான் பதில் சொல்லத் தெரியாமல் சிரித்து மழுப்பப் பார்த்தேன்.
அவர் விடவில்லை "வாசலில் வந்து பத்மா உங்களிடம் என்ன சொன்னாள்? ஒன்றும் ஆபத்தில்லையென்று சொல்லச் சொன்னாளா? அவள் அங்கு அவசரமாய் ஓடி வந்தபோதே எனக்குத் தெரியும்" என்றார்.
நான் மௌனமாயிருந்தேன்.
"பத்மா! இங்கே வா!" என்று மாமி கூப்பிட்டாள். பத்மா, வெண்ணெய் திருடிய கிருஷ்ணன் முகத்தைப் போல முகத்தை வைத்துக் கொண்டு வந்தாள். "ஏன் அம்மா" என்று பரிவாகக் கேட்டாள்.
"உனக்கு எத்தனை வயது இப்போது?"
"புருஷர்களிருக்கும் போது ஸ்திரீகள் வயதைச் சொல்லலாமா அம்மா?" என்றாள் பத்மா குறும்புச் சிரிப்புடன்.
"பாதகமில்லை, சொல்லு!"
"பதினேழு வயது."
"எனக்கெத்தனை வயது?"
"ஐம்பத்திரண்டு வயது."
"உன்னை விட எனக்கு முப்பத்தைந்து வயது அதிகமாயிற்றே! என்னைக் காட்டிலும் சமத்து நீயென்று நினைத்துக் கொண்டு காரியம் செய்யலாமா?" என்றார்.
பத்மா என்னைக் கோபமாய்ப் பார்த்தாள்.
"அவர் பேரில் குற்றமில்லை, பத்மா! சாமர்த்தியமாய்த்தான் பொய் சொல்லப் பார்த்தார். ஆனால் ஜாதகமே வேறேயாயிருந்தால், அவர் என்ன செய்வார்? உன் அண்ணா ஜாதகத்தைப் பார்க்க இவரைக் கூப்பிடவில்லை, பத்மா! அதைப் பார்த்து இப்போது என்ன ஆகப் போகிறது? உன் கல்யாணத்துக்காக வந்திருக்கும் வரன் ஜாதகம் இது" என்றார்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. பத்மாவைப் பார்த்தேன். அவள் தலையைக் குனிந்து கொண்டிருந்தாள்.
மாமி மறுபடியும், "நீ போ, பத்மா!" என்றார்.
பத்மா மாடிப் படிகளின் மேல் குதித்துக் கொண்டு ஏறினாள். அவள் போவதையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். மாடித் திருப்பத்தில் சற்று நின்று திரும்பிப் பார்த்தாள். கண்களை ஒரு தடவை சிமிட்டு, தலையை நாலு தடவை இப்படியும் அப்படியும் அசைத்தாள். பிறகு ஓடிப் போனாள். அந்த தலையசைத்தலுக்கு என்ன அர்த்தம்? "ஜாதகப் பொருத்தம் சரியாயில்லை" யென்று சொல்லச் சொல்கிறாளா?
பிறகு நான் பத்மாவின் அம்மாவைப் பார்த்து, "நான் ஏமாந்துதான் போனேன். உங்களையும் ஏமாற்றப் பார்த்தேன். தயவு செய்து மன்னிக்க வேண்டும்" என்றேன்.
"இப்போது சரியாய்ப் பார்த்துச் சொல்லுங்கள்" என்றார் பத்மாவின் தாயார்.
இதில் ஒன்றும் எனக்குக் கஷ்டம் ஏற்படவில்லை. முன்னமே நான் சொன்னதுபோல, அந்த ஜாதகம் ரொம்ப சாதாரண ஜாதகம் விசேஷம் ஒன்றுமே கிடையாது. பத்மாவை நான் பார்த்து அரை மணிக்கு மேல் ஆகவில்லையெனாலும், "அவளுக்குத் தகுந்த வரனில்லை" என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டேன். அப்படிப் பட்டவர்த்தனமாய் அவள் தாயாரிடம் சொல்லவில்லை. குறிப்பாகத் தெரியப்படுத்தினேன். மேலும், "இந்த ஜாதகத்திற்கு இந்த வருஷம் கல்யாணம் ஆகுமென்று தோன்றவில்லையே" என்றும் சொல்லி வைத்தேன்.
இந்த ஆராய்ச்சியின் போது, பத்மாவின் தாயாருக்கு ஜோசியம், ஜாதகம் பார்த்தல் முதலியவைகளைப் பற்றி நல்ல பரிச்சயமுண்டென்று தெரிந்தது. இன்னும், அவர் உயர்ந்த படிப்பும், உலக ஞானமும் உள்ளவரென்றும் தெரிந்து கொண்டேன்.
"என் தலையில் இந்தப் பெரிய பொறுப்பைச் சுமத்திவிட்டு அவர் போய் விட்டார். இவளுடைய தமையன்கள் தலைக்கு ஒரு போக்காயிருக்கிறார்கள். எனக்கோ நாளுக்கு நாள் உடம்பு நன்றாயில்லை. இந்தப் பெண்ணுக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிட்டால், என் மனம் நிம்மதியடையும். தகுந்த வரன் கிடைக்கமாட்டேனென்கிறது. ஒன்று சரியாயிருந்தால், இன்னொன்று சரியாயில்லை" என்று அந்த அம்மாள் சொல்லிப் பெருமூச்சு விட்டார்.
"உங்களுடைய பெண்ணுக்கு தகுந்த வரனாய்க் கிடைப்பது கஷ்டந்தான்" என்று நான் சொன்னேன். சொன்னவுடனே, ஏதாவது பிசகாய்ச் சொல்லி விட்டோ மோ என்று சந்தேகம் வந்துவிட்டது.
"இன்னும் ஏதாவது பார்க்க வேணுமா, நான் போகலாமா, மாமி!" என்று கேட்டேன்.
"இன்றைக்கு நாழிகையாகிவிட்டது. இன்னொரு நாள் வருகிறீர்களா? என் பிள்ளைகளின் ஜாதகத்தையும் காட்டுகிறேன்" என்றார்.
"கட்டாயம் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு, நான் எழுந்து சென்றேன்.
நான் வாசல் பக்கம் போய், மதில் சுவரைத் தாண்டியதும், பின்னால், "ஸார், ஸார்" என்று சத்தம் கேட்டது. பாலன் நின்று கொண்டிருந்தான். "கொஞ்சம் இருக்கச் சொல்கிறா, ஸார்!" என்றான். திரும்பிப் போனேன். அதற்குள் பத்மா வந்து தன் கையிலிருந்த ஏதோ ஒன்றைப் பாலனிடம் கொடுத்து, என்னிடம் கொடுக்கச் சொன்னாள். அது ஒரு ஐந்து ரூபாய் நோட்டு. நான் அதை வாங்கி மறுபடியும் பாலனுடைய சட்டைப் பையில் போட்டுவிட்டு, "இன்னொரு நாளைக்கு வரப்போகிறேன். அப்போது வாங்கிக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனேன். மறுபடியும் மதில் வாசலைத் தாண்டும் போது திரும்பிப் பார்த்தேன். பத்மா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்புறம் நான் திரும்பிப் பார்க்காமலே சென்றேன். ஆனால், பத்மாவின் கண்களும், முகமும் என் மனத்தை விட்டகலவில்லை. இது எனக்கு ஒரு புதிய அநுபவமாயிருந்தது. ஒரு பெண்ணின் கண்களுக்கு அவ்வளவு சக்தி உண்டென்று அதற்கு முன் நான் நினைத்ததேயில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பால ஜோசியர் - Bala Josiyar - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், ஸார், அந்த, எனக்கு, பத்மா, ஜாதகம், என்றேன், என்றார், அவள், பார்த்தேன், ஒன்றும், என்றான், கொண்டு, என்ன, நீங்கள், அவர், வயது, மாமி, அவன், அம்மாள், பார்க்க, சரியாயில்லை, உடம்பு, பையன், குரலில், போய், அம்மா, திரும்பிப், மறுபடியும், சொல்லி, என்னைக், வந்து, கொண்டேன், இருக்கிறது, போனேன், பத்மாவின், அப்பா, வாசலில், வீடு, அண்ணா, நாள், பார்த்து, போது, தகுந்த, இப்போது, பற்றி, தான், அவனுடைய, எனக்குக், அம்மாவுக்கு, உனக்கு, என்னுடைய, இல்லை, சொன்னாள், எழுந்து, கொஞ்சம், உள்ளே, கேட்டேன், தம்பி, பார்த்தாள்