பால ஜோசியர்
1
பிரசித்தி பெற்ற பால ஜோசியம் பட்டாபிராமன்
பி.ஏ.யைப் பற்றி அநேகர் கேள்விப்பட்டிருக்கலாம். அவனுடைய ஜோசிய விளம்பரங்களையும்
பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். பட்டாபிராமன் நல்ல புத்திசாலி; குணவான்;
யோக்யன்; சுறுசுறுப்புள்ளவன்; யாருக்கும் கெடுதல் நினைக்காதவன்; எல்லாரும்
ஒன்றாயிருக்க வேண்டுமென்று நினைக்கப் பட்டவன். இதெல்லாம் உனக்கெப்படித்
தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். எனக்குத் தெரிவதற்குக் காரணம் இருக்கிறது.
ஏனெனில் அந்தப் பிரசித்தி பெற்ற பாலஜோசியம் பட்டாபிராமன் என்பது அடியேன்
தான்!
இந்தக் காலத்தில் சில பேர் "ஜோசியர்" என்று பெயர் வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றிப் பிழைக்கிறார்களே, அந்த மாதிரி மோசக்காரர் கூட்டத்தில் சேர்ந்தவன் நானல்ல. உண்மையாகவே ஜோதிட சாஸ்திரத்தில் அறிவைச் செலுத்தி வெகுவாக ஆராய்ச்சி செய்தேன். அந்த சாஸ்திரத்தில் உண்மைத் தத்துவம் இருக்கிறது என்பதை ஐயமின்றி உணர்ந்தேன். என்னுடைய ஆராய்ச்சி அறிவை நன்கு பயன் படுத்தி, ஜாதகம் முதலியவை நன்கு பார்த்துத்தான் மற்றவர்களுக்குப் பலன் சொல்லி வந்தேன். "ஆமாம் இதெல்லாம் ஏன் இறந்த காலத்தில் சொல்கிறாய்?" என்று நீங்கள் கேட்கக்கூடும். வாஸ்தவம்; இறந்த காலத்தில் தான் சொல்கிறேன். ஏனெனில் ஜோசியத் தொழிலை நான் விட்டு விட்டேன். என் ஜோசிய விளம்பரங்களை நீங்கள் பத்திரிகைகளில் இனிமேல் பார்க்கமாட்டீர்கள். என் சொந்த விஷயத்தில் நான் நம்பிக்கை இழந்த ஒரு சாஸ்திரத்தை மற்றவர்கள் விஷயத்தில் உபயோகப்படுத்தவும், அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் எனக்கு விருப்பமில்லை. என் மனச்சாட்சி அதற்கு இடங்கொடுக்கவில்லை.
ஜோசியத்தில் நான் நம்பிக்கை இழந்தது எப்படி? அதைச் சொல்வதற்குத்தான் முன் வந்திருக்கிறேன். ஆனால், ஜோசியத்தில் நான் ஏன் நம்பிக்கை இழந்தேன் என்று சொல்வதற்கு முன்னால், அதில் எனக்கு நம்பிக்கை வந்தது எப்படி என்பதைச் சொல்ல வேண்டும்.
பள்ளிக் கூடத்திலும் சரி கலாசாலையிலும் சரி, படிப்பில் நான் முதன்மையாகவே இருந்து வந்தேன். எல்லாப் பரீட்சைகளிலும் நல்ல மார்க்குகள் வாங்கி வந்தேன். பி.ஏ. வகுப்பில் படித்த போது எனக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய துக்கம் நேர்ந்தது. என் தகப்பனார் திடீரென்று காலஞ் சென்றார். அவர் தாலுகா குமாஸ்தா உத்தியோகத்திலிருந்தவர். தமது சொற்ப சம்பளத்தில் பணம் மீத்து என்னைப் படிக்க வைத்து வந்தார். சிறு பிராயத்திலேயே தாயாரை இழந்த துரதிர்ஷ்டசாலி நான். ஆகவே, தகப்பனார் தான் எனக்கு தாயாகவுமிருந்து என்னைக் காப்பாற்றி வந்தார். அவருடைய மரணம் என்னைக் கலங்கச் செய்துவிட்டது. பரீட்சைக்கு ஒரு மாதம் இருக்கும் போது அவர் இறந்தபடியால், அந்த வருடம் நான் பரீட்சைக்குப் போக முடியவில்லை. அடுத்த செப்டம்பரில் பரீட்சைக்குப் போனேன். அது வரைக்கும் எல்லாப் பரீட்சைகளிலும் முதல் வகுப்பிலேயே தேறி வந்த நான், பி.ஏ. பரீட்சையில் மூன்றாம் வகுப்பில் தான் தேறினேன்.
அதற்குப் பிறகு என்ன செய்வதென்று கவலை உண்டாயிற்று. சட்ட கலாசாலையில் படிக்கலாமென்று முன்னால் எண்ணமிருந்தது. இப்போது அது முடியாத காரியமாயிற்று. பணத்துக்கு எங்கே போவது? ஏதாவது உத்தியோகம் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை. சென்னைப் பட்டணத்துக்கு வந்து உத்தியோகம் தேடத் தொடங்கினேன். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எனக்கு வேலை கிடைக்க வில்லை. முப்பது ரூபாய் சம்பளந்தான் நான் தேடியது. அது கூடக் கிடைக்கவில்லை. என்னைவிடக் குறைந்த படிப்புள்ளவர்களுக்கெல்லாம் கிடைத்தது. எனக்கு மட்டும் கிடைக்கவில்லை. "அவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள், நமக்கு அதிர்ஷ்டமில்லை" என்று எண்ணத் தொடங்கினேன்.
அப்போது நான் அறிந்த இன்னொரு செய்தி அதிர்ஷ்டத்தின் மேல் எனக்கு அதிக நம்பிக்கை உண்டாக்கிற்று. என்னுடன் ஹை ஸ்கூலில் நாலாவது பாரம் முதல் கோபாலகிருஷ்ணன் என்ற பையன் படித்து வந்தான். மார்க்கு வாங்குவதில் அவனுக்கும் எனக்குந்தான் முக்கியமான போட்டி. ஆனாலும், அநேகமாக நான் தான் அவனைவிட அதிக மார்க்கு வாங்குவேன். என் தகப்பனாரின் மரணத்தினால் நான் பரீட்சைக்குப் போக முடியாத வருஷத்தில் அவன் பி.ஏ. முதல் வகுப்பில் தேறினான். அவனுடைய கெட்டிக்காரத்தனத்தைக் கண்ட மயிலாப்பூர் வக்கீல் ஒருவர், தம் பெண்ணை அவன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையின் பெரில், அவனை ஐ.சி.எஸ். பரீட்சைக்குப் படிக்க அனுப்பியிருக்கிறார் என்று அறிந்தேன். இதைப் பற்றி அவனுடைய சிநேகிதர்கள் சிலர் பரிகாசம் செய்தார்கள். "ஐ.சி.எஸ். உத்தியோகத்துக்காக அடிமை ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள். ஆனால், இது பொறாமையால் எழுந்த பேச்சு என்பதை நான் அறிவேன். இன்று இப்படி பரிகாசம் செய்கிறவர்கள், நாளைக்கு அவன் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஸப் கலெக்டராக வந்ததும், அவனிடம் போய்க் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்கள். அதுவரை எனக்கு வேலை கிடைக்காவிட்டால் நானும் அவனிடம் போனாலும் போவேன். ஒருவேளை, அவன், "இப்போது பார்க்கமுடியாது" என்று டவாலிச் சேவகனிடம் சொல்லி அனுப்பிவிடுவான். என்னைப் பார்ப்பதற்கு அவன் மனமுவந்து சம்மதித்தாலும், உத்தியோகம் என்று சொன்னதும், "உத்தியோகத்துக்கு நான் எங்கே அப்பா போவேன்? முன் காலத்திலே போல இப்போது கலெக்டர்களுக்கு அதிகாரம் ஏது? பப்ளிக் ஸர்விஸ் கமிஷன் அல்லவா நியமனம் செய்கிறது? 'கம்யூனல் ரொடேஷன்' வேறு இருக்கிறது" என்பான்.
இதை நினைக்க நினைக்க, வாழ்க்கையின் விசித்திரத்தைப் பற்றி எனக்கு மேலும் மேலும் வியப்புண்டாயிற்று. கோபாலகிருஷணன் என்னைவிட எந்த விதத்திலும் புத்திசாலி அல்ல; ஆனாலும், அவன் ஏன் கலெக்டராக வேண்டும்? நான் ஏன் இப்படி வேலைக்குத் திண்டாட வேண்டும்? இதற்கு அதிர்ஷ்டம் காரணமில்லாது வேறு என்ன இருக்க முடியும்? இன்னும், உலகத்தை நான் சுற்று முற்றும் பார்த்து, வாழ்க்கை விசித்திரங்களைக் கவனிக்கத் தொடங்கினேன். கொஞ்சமும் லாயக்கில்லாதவர்கள் எல்லாம் பெரிய பெரிய பதவிகளில் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செலுத்தினார்கள். புத்திசாலிகளும் குணசாலிகளும் ஜீவனோபாயத்துக்கே திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எதிர்பாராத விதத்தில் சிலர் திடீரென்று பணக்காரர்கள் ஆனார்கள்; அதே மாதிரி எதிர்பாராத விதங்களில் சிலர் திடீரென்று ஏழைகளானார்கள்.
நான் உத்தியோகம் தேடி அலைந்த போது, இம்மாதிரி விசித்திரங்கள் பலவற்றை அறிந்தேன். இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்க, "நம்முடைய சாமர்த்தியத்தினாலும் முயற்சியினாலும் மட்டும் ஒன்றும் நடப்பதில்லை. மனுஷ்யனுடைய காரியங்களை நடத்தும் வேறு சக்திகள் இருக்கின்றன" என்ற உறுதி பலப்பட்டு வந்தது. இந்த உலக வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் எல்லாரும் தங்கள் சாமர்த்தியத்தினாலேயே வெற்றியடைந்து விடவில்லை; சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு உதவி செய்திருக்கின்றன. தோல்வியடைந்தவர்கள் எல்லாரும், தங்கள் முட்டாள்தனத்தினாலேயே தோல்வியடைந்து விடவில்லை. சந்தர்ப்பங்கள் உதவி செய்யாதபடியினாலேயே தோல்வியடைந்தார்கள்.
இவ்வாறு ஒரு மனுஷனுக்குச் சந்தர்ப்பங்கள் உதவி செய்வதும் செய்யாததும், குருட்டுத்தனமாக நடக்கும் காரியமா? அல்லது, ஏதாவது ஒரு நியதியின்படி நடக்கிறதா? அதாவது அதிர்ஷ்டம் என்பதெல்லாம் குருட்டு அதிர்ஷ்டந்தானா? அல்லது காரண காரியக்கிரமம் உண்டா?
ஒருவனுடைய வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் அவ்வப்போது தற்செயலாகவே உண்டாகின்றனவா? அல்லது, பிறக்கும்போதே, இந்த ஜீவனுக்கு இந்திந்தக் காலத்தில் இன்னின்ன மாதிரி நடக்குமென்று ஏற்பட்டு விடுகின்றதா?
இத்தகைய சிந்தனைகளில் என் மனம் அடிக்கடி ஈடுபடத் தொடங்கியது. அதன் பயனாக, "மனித வாழ்க்கையில், எல்லாம் முன்னால் நியமித்தபடிதான் நடக்கிறது" என்ற ஒரு நம்பிக்கை என் உள்ளத்தில் பலமாக வேரூன்றிவிட்டது. எல்லாம் முன்னால் நியமித்தபடியே நடக்கின்றனவென்றால், அப்படி நடக்கப் போவதை முன்னதாகவே அறிந்து கொள்வது சாத்தியமா? "இது சாத்தியம்" என்பதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது. அதில் உண்மை இருக்குமோ?
ஒரு மனிதனுடைய பிறந்த வேளையை வைத்துக் கொண்டு அவனுடைய வருங்காலத்தையெல்லாம் நிர்ணயிப்பது சாத்தியமாயிருக்குமோ? கிரகசஞ்சாரத்தைக் கொண்டு மனிதனுடைய வாழ்வை நிர்ணயிக்க முடியுமோ? இவ்வாறு ஜோசியத்தில் என்னுடைய புத்தி பிரவர்த்தித்தது.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பால ஜோசியர் - Bala Josiyar - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், எனக்கு, நம்பிக்கை, அவன், தான், கொண்டு, வாழ்க்கையில், பரீட்சைக்குப், எல்லாம், வேறு, உத்தியோகம், முன்னால், காலத்தில், அவனுடைய, தொடங்கினேன், எல்லாரும், நீங்கள், சிலர், அல்லது, உதவி, சந்தர்ப்பங்கள், பற்றி, இப்போது, திடீரென்று, பட்டாபிராமன், ஜோசியத்தில், அந்த, மாதிரி, வேண்டும், வகுப்பில், வந்தேன், பெரிய, போது, இருக்கிறது