சிந்துப்பாவியல்
5. சிந்துப் பெயர்க்காரணம்
-
நாலடி என்னும் அளவின் இழிந்தே
ஒன்றே முக்கால் அடியின் உயர்ந்ததால்
சிந்தெனும் பெயரைச் செப்பினர் என்க.
விளக்கம் : சிந்துப்பாக்கள் எழுத்தளவால் பெயர் பெற்றிருத்தல் இயலாது. ஏனெனில் எழுத்து எண்ணிக்கையாலும், சீரெண்ணிக்கையாலும், அடிகளுக்குப் பெயரிடுவார்கள். எழுத்தளவு ஒன்றையே கொண்டு பாவகைக்குப் பெயரிடுவதில்லை.
மூன்று சீர்கள் கொண்ட அடி சிந்தடி எனப்படும். அப்படிப்பட்ட சிந்தடிகளால் ஆன பாடல் சிந்துப்பா எனப் பெயர் பெற்றது* என்பதும் பொருந்தவில்லை. ஏனெனில் குறளடி உடைய பாடலை குறட்பா என்று கூறுவதில்லை; அளவடி உடைய பாடலை அளவுப்பா என்றும் கூறுவதில்லை.
* கி.வா. ஜகந்நாதன், எஸ் இராமநாதன் ஆகியோர்
மேலும் மிகக் குறுகிய அடிகளை உடைய கிளிக்கண்ணி கூட யாப்பிலக்கணப்படி நாற்சீரடியால் அமைந்ததாகவே உள்ளது.
-
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
(பா.கவி..ப.196)
-
நெஞ்சு பொறுக்கு தில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
(பா.கவி..ப.199)
தாள நடையை அடிபடையாகக் கொண்டு சிந்துப்பாக்களின் சீர்கள் அலகிடப்படுவதால், அந்த அலகீட்டு முறைப்படி, சிந்துப் பாக்களில் சிந்தடியை காணல் அரிது. எனவே சிந்தடியால் ஆன பா ஆதலால் சிந்துப்பா என்று கூறுதல் பொருந்துவதாயில்லை.
-
மேவும் குறள்சிந் தொடுதிரி பாதிவெண் பாத்திலகம்
மேவும் விருத்தம் சவலைஎன் றேழுமினி அவற்றுள்
தாவும் இலக்கணம் தப்பிடில் ஆங்கவை தம்பெயரால்
பாவும் நிலையுடைப் போலியும் என்றறி பத்தியமே!
(வீரசோ. யாப்பு.20)
-
2 அடி 7 சீராய் வருவது குறள்
2 அடி அளவொத்து வருவது சிந்து
3 அடி அளவொத்து வருவது திரிபாதி
4 அடி 15 சீராய் நடுவே தனிச்சொல் பெற்றுவருவது வெண்பா
-
எழுசீர் அடிஇரண் டால்குறள் ஆகும்; இரண்டு அடிஒத்து
அழிசீர் இலாதது சிந்தாம்; அடிமூன்று தம்மில் ஒக்கில்
விழுசீர் இலாத திரிபாதி; நான்கடி மேவிவெண்பாத்
தொழுசீர் பதினைந்த தாய்நடு வேதனிச் சொல்வருமே!
(வீரசோ. யாப்பு.21)
காட்டு : வீசின பம்பரம் ஓய்வதன் முன்நான்
ஆசை அறவிளை நாடித் திரிவனே (வீரசோ - 3 (33))
ஒன்றே முக்காலடிப் பாடலாகிய குறளுக்கும், மூன்றே முக்காலடிப் பாடலாகிய வெண்பாவுக்கும் இடையில் 2 அடிப்பாடல், 3 அடிப்பாடல் என்று இரண்டு வகைகள் உள்ளன. எனவே குறளைவிட அளவால் நீண்ட இரண்டடிப் பாடலுக்குச் சிந்து என்று பெயர் கொடுத்தார். 3 அடிப்பாடல்லுக்கு வடமொழிக் குறியீடாகிய திரிபாதி என்பதைப் பெயராகக் கொடுத்தார் புத்தமித்திரனார்.
அளவொத்த இரண்டடி ஒரெதுகை பெற்றதாகத் தொடக்க காலத்தில் இருந்த சிந்துப்பாடல் பிற்காலத்தில் பல இயல்புகளில் மாறுதல் பெற்றாலும், அளவொத்த இரண்டடி ஒரெதுகை பெறல் என்ற அடிப்படை இயல்பினை மட்டும் இன்றளவும் பெரும்பாலும் போற்றிப் பாதுக்காத்து வருகிறது.
எனவே சிந்து என்பது இரண்டு சமமான அடிகள் ஓரெதுகை பெற்றுவரும் பாடலென்று பெறப்படுகிறது. ஆகவே மூன்றடியினும் அளவால் குறைந்ததாகவும் ஒன்றே முக்காலடி உள்ள குறளைவிட அளவால் நீண்டதாகவும் உள்ள ஓரெதுகை பெற்ற இரண்டடிப் பாடலே சிந்துப் பாடலாகும் என்பது தெளிவு.
6. அசை
- சிந்துப் பாக்களின் சீர்களில் உள்ள
ஒவ்வோர் உயிரும் ஓரசை யாகும்
விளக்கம் : சிந்து ஒருவகை இசைப்பா. இயற்பாக்கள் கவி, கவிதை, செய்யுள் என்று குறிப்பிடப் பெறும்.
இயற்பாக்கள், சந்தப்பாக்கள், வண்ணப்பாக்கள், சிந்துப்பாக்கள், ஆகியவற்றில் ஒன்றின் இலக்கணமுறை மற்றவற்றிற்குப் பொருந்தி வரவில்லை.
இயற்பாக்களில்: குறில், குறிலொற்று, நெடில், நெடிலொற்று (ப, பல், பா, பால்) நேரசை என்றும்;
குறிலிணை, குறிலிணைஒற்று, குறில்நெடில், குறில்நெடில்ஒற்று, (அணி, அணில், கடா, கடாம்) நிரையசை என்றும் கொள்ளப்படுகின்றன.
சந்தப்பாக்களில்: குறில் ஒரு மாத்திரை, குறிலொற்று, நெடில், நெடிலொற்றுகள் இரண்டு மாத்திரை என்ற முறையில் சந்த மாத்திரை அளவாகக் கொள்ளப்படுகின்றன.
(எழுத்திலக்கணத்தில் குறில், குறிலொற்று, நெடில், நெடிலொற்று முறையே ஒன்று, ஒன்றரை, இரண்டு, இரண்டரை மாத்திரை பெறும்.)
வண்ணப்பாக்கள்: சந்தக் குழிப்புகளின் வழி நடக்கின்றன.
சிந்துப்பாக்கள்: தாள அளவின் வழி நடக்கின்றன.
சிந்துப் பாடல்கள் தாள அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளதால்தான் மற்ற பாக்களான இயற்பா, சந்தப்பா, வண்ணப்பாக்களுக்கான அசை, சீர், அடி, தொடை, மாத்திரை முதலியன இதற்கு ஒத்துவராமற் போகின்றன.
தாள அடிப்படையில் அமைந்த சிந்துப்பாடல்களில் உள்ள அசைகளையும், சீர்களையும் உணர வேண்டுமெனில் முதலில் தாளத்தையும் அதன் உள்ளுறுப்புகளையும் உணர வேண்டும். தாளம் ஏழு: அவை: துருவம், மட்டியம், ரூபகம், சம்பை, திருபுடை, அட, ஏக என்பனவாகும். இவற்றில்ன் உள்ளுறுப்புகள் மூன்று; அவை: கோல் (இலகு) - சுழி (திருதம்) - அரைச்சுழி (அனுத்திருதம்).
கோல் 1 என்றும், சுழி 0 என்றும், அரைச்சுழி அரைவட்ட வடிவிலும் குறிக்கப்பெறும்.
சுழி இரண்டு எண்ணிக்கையுடையது. அரைச்சுழி ஒர் எண்ண்ணிக்கை உடையது. இவையிரண்டும் எண்ணிக்கையில் மாறாதவை. கோல் மட்டும் இனத்தைப் பொறுத்து எண்ணிக்கை மாறக் கூடியது.
கோலும் இனங்களும் (சாதிகளும்):
மேற்குறித்த ஏழு தாளங்களுக்கும் இனங்கள் உண்டு. அவை மும்மை (திசிரம்), நான்மை (சதுசிரம்), ஐம்மை (கண்ட), எழுமை (மிசிரம்), ஒன்பான்மை (சங்கீரணம்) என ஐந்தாகும். இவற்றின் எண்ணிக்கை முறையே மூன்று, நான்கு, ஐந்து, எழு, ஒன்பது என்பனவாகும்.
ஒரு தாளத்தில் உள்ள கோல் இந்த ஐந்து இனத்துக்குரிய எண்ணிக்கைகளைத் தனித்தனியே பெறும்போது அத்தாளம் ஐந்து வகையாகிறது. இப்படியே ஏழு தாளங்களும் (7 தாளம் x 5 இனம்)= 35 வகையாகும். எடுத்துக்காட்டாகத் திரிபுடைத் தாளம் மும்மை இனமாயின் ‘மும்மையினத் திரிபுடை’ (திசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதனை ‘1300’ என்று குறிப்பார்கள். இதன் மொத்த எண்ணிக்கை (3+2+2) ஏழாகும். இதே திரிபுடைத் தாளம் நான்மை இனமாயின் நான்மைத் திரிபுடை (சதுசிர சாதித் திரிபுடை) என்று பெயர்பெறும். அதன் குறியீடு ‘1400’ ஆகும். இதன் மொத்த எண்ணிக்கை (4+2+2) எட்டாகும். இப்படியே முப்பத்தைந்து தாளத்துக்கும் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும்.
வட்டணை (ஆவர்த்தம்)
நான்மை இனத் திரிபுடைத் தாளத்திற்கு நடைமுறையில் ஆதி தாளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஒரு தாளத்தின் முழுநீளம் ஒரு வட்டணை எனப்படும்.
தாளம் போடும் முறை:
கோல் - ஒரு தட்டுத் தட்டி அதற்குரிய எண்ணிக்கை (தட்டுடன் சேர்த்து) எண்ண வேண்டும். சுழி - ஒரு தட்டுத் தட்டித் திருப்ப வேண்டும். அரைச்சுழி - ஒரு தட்டுத் தட்ட வேண்டும்.
சிந்துப் பாடல்களில் பெரும்பாலன ஆதி தாளத்தில் அடங்குமாறு அமைந்துள்ளன. அவற்றைப் பாடும்போது அடியின் முற்பகுதி ஒரு கோலிலும், 14 அடுத்தபகுதி இரண்டு சுழிகளிலும் ‘00’ அடங்குகின்றன. இப்படித் தாளத்தின் ஒரு வட்டணையிலோ, பல வட்டணைகளிலோ ஓரடி அடங்குகிறது.
1 | 2 | 3 | 4 |
ஓம் சக்தி | ஓம் சக்தி | ஓம் . ப | ரா சக்தி |
5 | 6 | 7 | 8 |
ஓம் சக்தி | ஓம் சக்தி | ஓம் . . | . . . |
மேற்காட்டிய கோலிற்குரிய நான்கு எண்ணிக்கையில் முதல் அரையடியும், இரு சுழிகளுக்குரிய நான்கு எண்ணிக்கையில் அடுத்த அரையடியும் ஆக ஓர் ஆதிதாள வட்டணையில், இதன் ஓரடி முழுவதும் அடங்குவதைக் காணலாம். எட்டாம் எண்ணிக்கையில் எழுத்துகளே இல்லையென்றாலும் எழாம் இடத்தில் இறுதியாக வரும் அசை எட்டாம் சீராக நீண்டு இசைக்கிறது. இந்த இரண்டு வரிகளும் சேர்ந்து ஓரடி. எனவே இவ்வடியில் 8 சீர்கள் உள்ளன. இதனை எண்சீர்க் கழிநெடிலடி எனலாம். இந்தப் பாடலில் ஒவ்வோரடியும் ஓர் ஆதிதாள வட்டணையில் அடங்குகிறது.
இந்தப் பாடலில் கோடிட்டுக் காட்டியபடி 8 சீர்கள் உள்ளன. ஒற்று நீக்கிய உயிர்நெடில், உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் ஆகிய பதினெட்டு உயிரெழுத்துகள் (சிந்துப்பாடலில் உயிரும் உயிர்மெய்யும் உயிராகவே கொள்ளப்படும்) எட்டு சீர்களாக இசைக்கின்றன.
சிந்துப்பாக்களில் அசைகள், இயற்ப்பாக்களுக்குச் சொல்லப்படும் நேரசை, நிரையசை இவற்றினின்றும் வேறுபட்டவை. சிந்துப்பாவின் அசைகள் நீளத்தில் சமமானவை என்று கூறலாமேயன்றி அவற்றை அளவிட்டு இத்தனை மாத்திரை என்று கூறமுடியாது.
சிந்துப்பாடல்களில் உள்ள சீர்களும் இயற்பாக்களுக்கு அமைந்துள்ள மா, விளம், காய், கனி, பூ, நிழல் முதலிய சீர்களினின்றும் வேறுபட்டவை என்பதை உணர வேண்டும். சிந்துப்பாக்களைத் தாளம் போட்டு பாடும்போது ஒரு தட்டில் அடங்குவது ஒரு சீர். அந்தச்சீர் ஒரு எழுத்தாலோ, பல எழுத்துகளாலோ, ஒரு சொல்லாலோ, பல சொற்களாலோ அமைந்திருக்கலாம். எழுத்துக் குறைவாக உள்ள சீர்கள் தாள எண்ணிக்கையின் நீளத்திற்கு நீண்டு ஒலிக்கும்.
மும்மை நடைப்பாடலாயின் ஒவ்வொரு சீரிலும் மும்மூன்று உயிர்களும், நான்மை நடைப்பாடலாயின் நான்கு நான்கு உயிர்களும், ஐம்மையாயின் ஐந்தைந்து உயிர்களும், எழுமையாயின் ஏழேழு உயிர்களும், ஒன்பான்மையாயின் ஒன்பதொன்பது உயிர்களும் இருக்கும். எழுத்துக் குறைகின்ற சீர்களில் ஓசை நீட்டம் இருக்கும்.
-
‘அவ்வெழுத்து
அசைத்து இசைகோடலின் அசையே’
(யா.கலம்.நூ.1 உரை மேற்கோள்)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்