சிந்துப்பாவியல்
13. சிறப்பிலசை
- இறுதிச் சீர்களின் இறுதி மொழிந்த
இடங்களில் ஈரசை யாய்வரும் குறிலசை,
சீர்முதற் குறிலசை சிறப்பி லசையாகும்.
விளக்கம்: சிந்துப் பாடல்களில் குறிலசைகள் ஒலிக்கும் அளவு ஓரசையாகும். (இக்குறிலசைகள் அரையடி இறுதி, அடியிறுதிகளில் நீட்டம் பெற்று ஒலிக்கலாம்)
சிந்துப் பாடல்களில் அரையடி இறுதிச் சீர், அடியிறுதிச் சீர் ஒழிந்த சீர்களில் இக்குறுலசைகள் சில இடங்களில் நீட்டம் பெற்று இரண்டசையாகவும் ஒலித்து வருகின்றன. அவ்வாறு ஒலித்து வரும் இடங்களில் பாடலின் ஓசை சிறப்பாக இராது. ஆகவே அவ்வாறு வரும் குறிலசைகள் சிறப்பில்லாத அசைகளாகக் கருதப் படும்.
காட்டு : ‘பொன்னுலவு சென்னிகுள’ என்ற பாடலில் ஒன்பதாவது, பதினோராவது வரியில் வரும் து, து என்ற குறிலசைகள் நீட்டம் பெற்று வந்தன. அவை சிறப்பிலசைகள். (பாடலைப் பின் இணைப்பில் பார்க்கவும்)
அதே போன்று ஒரு சீரின் தொடக்கத்தில் குறில் ஒற்று, நெடில், நெடிலொற்று வரும்போது பாடலோசை சிறந்திருப்பது போலக் குறிலசை வரும்போது சிறப்பதில்லை. ஆகவே அவ்வாறு சீர்முதலில் வருகின்ற குறிலசைகளும் சிறப்பில்லாத அசைகளாகக் கொள்ளப்படும்.
காட்டு : ‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற பாடலில் சீர் முதலில் வருகின்ற
க-ன-ரு என்ற குறிலசைகள் சிறப்பிலசைகளாம்.
-
ஆறுமு கவடி வேலவ னேகலி
வெள்ளைத்த னமாகத் துள்ளுகி றாய்நெஞ்சில்
தங்கும்மு ருகோனே
14. வழுவசை
- ஈருயிர் அசையும் இரண்டிறந் தொலிக்கும்
எவ்வகை அசையும் வழுவசை யாகும்
கருத்து : சிந்துப் பாடல்களில் இரண்டு உயிரெழுத்துகளைக் கொண்டிருக்கும் ஓர் அசையும், அரையடி இறுதி, அடியிறுதி ஒழிந்த இடங்களில் இரண்டு அசைகளுக்கு மேலும் நீண்டு ஒலிக்கும் குறிலசை, நெடிலசையாகிய எப்படிப்பட்ட அசைகளும் வழுவசைகள் எனப்படும்.
காட்டு : இரட்டைக் கும்மி
-
தில்லைச்சி தம்பரம் தன்னிலொ ருநாள்
திருநட்ட மாடும்சி வனுடனே
தேவிசி வகாமி நாயகி அந்தத்
திருநீல பத்தன்நெ றிஉரைக்கச்
சொல்லசெ விதனில் கேட்டாள் நாளும்
சோதித்த வன்தன்னைச் சூதாக்கிச்
சொன்னமொ ழிநிலை யாமலெந் நாளும்
சுகத்தினில் வாழநி னைத்திடென்றார்
(திரு. நீ. பள்ளு. தொடை: 284)
விளக்கம் : சிந்துப் பாடலில் ஒவ்வோர் உயிரும் அல்லது உயிர்மெய்யும் ஓரசையாகக் கொள்ளப்படும் என்று முன்னரே விளக்கப்பட்டது. (நூ. 6) எனவே இக்கட்டுப்பாட்டை மீறி ஓரசை இரண்டு உயிர்களைப் பெற்று வருமாயின் அது வழுவசையாகும். (முடிகியலில் ஓரசை இரண்டுயிர் பெற்று வருதல் பின்னர் விளக்கப்படும் நூ.15)
அரையடி இறுதிகளிலும் அடி இறுதிகளிலும் வரும் அசைகள் ஓசை நீட்டம் பெற்று இரண்டிறந்து ஓலிப்பதுண்டு. அது இயல்பு. ஆனால், பாடலின் மற்ற இடங்களில் உள்ள அசைகள் இரண்டசைக்கு மேல் நீண்டு ஒலிப்பதில்லை. அப்படி எங்கேனும் நீண்டு ஒலித்து வருமாயின் அவ்வசையும் வழுவசையாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்