தியாக பூமி - 2.6. ஸ்ரீதரன் சங்கடம்
நெடுங்கரையில் சாவித்திரி, 'தீபாவளி சமயத்தில் தானா இப்படியெல்லாம் வரவேணும்?' என்று சங்கடப்பட்டுக் கொண்டிருக்கையில், கல்கத்தாவில் ஸ்ரீதரனும் தீபாவளியை நினைத்துப் பெரிதும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தான்.
கல்யாணம் ஆன இரண்டு மாதத்துக்கெல்லாம் ஸ்ரீதரனுக்குக் கல்கத்தாவில் பெரிய உத்தியோகம் ஆனபோது, தன்னுடைய அபாரமான புத்திசாலித்தனத்துக்காகத்தான் மேற்படி வேலை தனக்குக் கிடைத்தது என்று அவன் நினைத்தான்.
சாவித்திரியைக் கல்யாணம் பண்ணின முகூர்த்தந்தான் ஸ்ரீதரனுக்கு வேலை கிடைத்தது என்றும், அவளுடைய அதிர்ஷ்டந்தான் காரணமென்றும் தங்கம்மாள் சொன்னாள்.
ராஜாராமய்யர் ஒன்றும் நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை. ஏனெனில், உத்தியோகம் எப்படிக் கிடைத்ததென்பது அவருக்கு நன்றாய்த் தெரியும். கல்கத்தாவில் ராஜாராமய்யர் உத்தியோகம் பார்த்தபோது அவருக்கு மேலதிகாரியாயிருந்த ஆங்கில துரை அவரிடம் மிகவும் விசுவாசம் வைத்திருந்தார். ஆனால், அவருடைய மனோதத்துவ சோதனைகள், ஆவி உலக ஆராய்ச்சிகள் இவற்றைப் பரிகாசம் செய்து வந்தார். ராஜாராமய்யர் உத்தியோகத்திலிருந்து விலகி ஊருக்கு வந்த பிறகு, மேற்படி துரையின் அருமை மனைவி இறந்து போனாள். இதன் காரணமாக, துரைக்கும் ஆவி உலக ஆராய்ச்சிகளில் சிரத்தை உண்டாயிற்று. ஒரு வேளை ராஜாராமய்யரின் நம்பிக்கையில் உண்மையிருக்குமோ, சாத்தியமாயிருக்குமோ என்றெல்லாம் அவருக்குச் சபலம் உண்டாயிற்று. ராஜாராமய்யருடன் கடிதப் போக்குவரவு தொடங்கினார். பிறகு, ராஜாராமய்யர் கல்கத்தாவுக்கே வந்துவிட்டால் தான் அந்த ஆராய்ச்சிகளை நன்கு நடத்த முடியுமென்று தோன்றியது. எனவே, ராஜாராமய்யரைக் கல்கத்தாவுக்கு வரப் பண்ணுவதற்காக, துரை அவருடைய பிள்ளை ஸ்ரீதரனுக்கு கே அண்டு ஓ பாங்க் என்னும் பிரசித்திபெற்ற இங்கிலீஷ் பாங்கின் கல்கத்தா கிளை ஆபீஸில் உதவி மானேஜர் வேலை செய்து வைத்தார்.
ஆகவே, ஆனி மாதத்திலேயே ராஜாராமய்யருடைய குடும்பம் கல்கத்தாவுக்குப் போக வேண்டியதாயிற்று. கல்கத்தாவில் தென்னிந்தியர் வசித்த பகுதியில் ஒரு தனி வீடு எடுத்துக் கொண்டு குடித்தனம் தொடங்கினார்கள். ஸ்ரீதரன் அப்படி ஒன்றும் அசடு இல்லையாதலால், உத்தியோகத்தைத் திறமையாகப் பார்த்து, துரைக்குத் திருப்தியளித்து வந்தான்.
தங்கம்மாளுக்கு மட்டும் ஒரு மனக்குறை இருந்து கொண்டுதான் இருந்தது. ஆடி, ஆறாம் மாதம், ஆவணியவிட்டம் இவற்றுக்கெல்லாம் நெடுங்கரைக்குப் போய் அதிகாரம் பண்ணிச் சீர்செனத்தி கொண்டு வரவில்லையே யென்பது தான் அந்தக் குறை. ஆனால், எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து, தலை தீபாவளிக்குப் போய்க் கொண்டு வந்துவிடலாமென்று அவள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாள். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னாலிருந்தே பிள்ளைக்கு அவள் உரையேற்ற ஆரம்பித்து விட்டாள்.
ஸ்ரீதரனுக்கோ இது கொஞ்சங்கூட இஷ்டமில்லை. ஏற்கனவே, அவனுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கவில்லை; சாவித்திரியை நினைத்தால் அவனுக்கு அருவருப்பாயிருந்தது; நெடுங்கரையையும், சம்பு சாஸ்திரியையும் எண்ணினால் அவனுடைய உடல் குன்றியது. இவ்வளவுடன் இப்போது ஒரு புதிய காரணமும் சேர்ந்திருந்தது.
ஸ்ரீதரன் உத்தியோகம் பார்த்த பாங்கில் டைப் அடிக்கும் வேலைக்கு ஆங்கிலோ-இந்தியப் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள். ஸ்ரீதரன் வேலைக்குப் போன அன்று, அவர்களில் ஒருத்தி அவனுடைய அறைக்குள் வந்தாள். "ஆர் யூ மிஸ்டர் ஸ்ரீதர்?" என்று கேட்டாள். அந்தக் குரல் ஸ்ரீதரனுக்கு தேவகானம் போல் இருந்தது. கண்கொட்டாமல் அவளைப் பார்த்தபடி, ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் ஸ்ரீதரன். "வாட் எ லவ்லி நேம்!" என்றாள் அந்தப் பெண். ஸ்ரீதரனுக்கு அப்போது தன் பெற்றோர்கள் மீது மிகவும் நன்றி உண்டாயிற்று. தனக்கு எத்தனையோ விதத்தில் அவர்கள் கெடுதல் செய்திருந்தாலும், இவ்வளவு அழகான பெயரைக் கொடுத்தார்களே என்று எண்ணினான். பிறகு, அந்தப் பெண், ஸ்ரீதரனுடைய கடிதங்களை டைப் அடிப்பதற்குத் தன்னை நியமித்திருப்பதாகவும், அவன் கூப்பிடும்போது வருவதாகவும் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
2.6. ஸ்ரீதரன் சங்கடம் - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஸ்ரீதரன், ஸ்ரீதரனுக்கு, ராஜாராமய்யர், உத்தியோகம், கல்கத்தாவில், கொண்டு, உண்டாயிற்று, கல்யாணம், இருந்தது, அவனுக்கு, அந்தப், அவனுடைய, அந்தக், அவருக்கு, மேற்படி, சங்கடப்பட்டுக், கிடைத்தது, ஒன்றும், அவருடைய, மிகவும், செய்து