தியாக பூமி - 2.2. பஜனை
அக்கிரகாரத்தின் மேலண்டைப்புறத்தில், பெரிய தெருவையும் சின்னத் தெருவையும் சேர்க்கும் பாதை ஒன்று இருந்தது. அந்தப் பாதைக்கு மேற்கே விசாலமான படித்துறைக்குளம் காணப்பட்டது. குளத்தின் வட கரையில் பாதையை யொட்டி பஜனை மடம் இருந்தது.
இந்தப் பஜனை மடத்தில் அன்று இரவு ஏழு மணிக்கு ஜனங்கள் வந்து கூட ஆரம்பித்தார்கள். சங்கரநாராயண தீக்ஷிதர், சாமா ஐயர், ரமணி ஐயர், ராமய்யா வாத்தியார், முத்துசாமி ஐயர் எல்லாரும் வந்தார்கள். குழந்தைகளும், ஸ்திரீகளுங்கூடச் சிலர் வந்து சேர்ந்தார்கள்.
சங்கர தீக்ஷிதர் வந்ததும், கையில் ஓர் ஓட்டை விசிறியுடன் சம்பு சாஸ்திரியிடம் வந்து, "எங்கணும், சாஸ்திரி! ரொம்ப இறுக்கமாயிருக்கே! வேர்க்கிறதோ இல்லையோ?" என்று கிறுதக்காகச் சொல்லிக்கொண்டு, சாஸ்திரியின் மேல் விசிறினார். இந்த மாதிரி விளையாட்டுக்கெல்லாம் சாஸ்திரியின் பதில் புன்னகைதான். அந்தப் பதிலையே இப்போதும் அளித்தார். உடனே தீக்ஷிதர், "ஓய், இன்னிக்குத் திவ்ய நாம சங்கீர்த்தனம் எல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம். சீக்கிரமாய் உட்கார்ந்தபடியே நாலு பாட்டுச் சொல்லிப் பஜனையை முடிச்சுடும். மழை பலமாய்ப் பிடிச்சுக்கறதுக்கு முன்னாலே, அவாவாள் வீட்டுக்குப் போய்ச் சேரலாம்" என்றார்.
"அப்படித்தான் உத்தேசம் பண்ணியிருக்கேன். இந்த மழையிலே நீங்கள்ளாம் வந்தேளே, அதுவே பெரிய காரியம்!" என்றார் சாஸ்திரியார்.
ஆனால், சங்கர தீக்ஷிதரின் எண்ணம் பலிக்காமற் போவதற்கே தானோ என்னவோ, பஜனை ஆரம்பித்த சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடியும் மழை பலமாய்ப் பிடித்துக் கொண்டது.
பஜனை மடத்தின் சுவர்களின் மீதும் கதவுகளின் மீதும் மழையும் புயலும் தாக்கியபோது உண்டான சப்தம் பஜனையின் சப்தத்தையும் மூழ்க அடிப்பதாயிருந்தது. இடையிடையே கதவுகள் படீர் படீர் என்ற சப்தத்துடன் திறப்பதும் மூடுவதுமாயிருந்தன.
அதே சமயத்தில் சம்பு சாஸ்திரியின் வீடும் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அடிக்கடி திறந்து கொண்ட ஜன்னல் கதவுகளின் வழியாகக் காற்றும் மழையும் புகுந்து அடித்தன. அந்த வருஷம், கல்யாணச் சந்தடி காரணமாக சாஸ்திரியாரின் வீடு ஓடு மாற்றப்படவில்லை. இதனால் சில இடங்களில் ஏற்கெனவே சொட்டுச் சொட்டென்று சொட்டிக் கொண்டிருந்தது. இப்போது அடித்த பெருங்காற்றிலும் மழையிலும் ஓடுகள் இடம் பெயர்ந்தபடியால், சில இடங்களில் தண்ணீர் தாரையாகக் கொட்டிற்று.
பாவம்! சாவித்திரி, சுண்டல் எடுத்துக்கொண்டு போவதற்காக வந்தவள், வீட்டுச் சாமான்கள் நனையாமல் காப்பாற்றுவதற்குப் பெருமுயற்சி செய்தாள். முகத்தில் வந்து அடித்த மழையைப் பொருட்படுத்தாமல் ஜன்னல் கதவுகளைச் சாத்தினாள். அப்பாவின் புஸ்தகங்கள், கணக்கு நோட்டுகள் முதலியவற்றை எடுத்துப் பத்திரப்படுத்தினாள். ஜலம் தாரையாகக் கொட்டிய இடங்களில் அண்டா, தவலை முதலிய பெரிய பாத்திரங்களைக் கொண்டு வைத்தாள். தரையில் தேங்கியிருந்த ஜலத்தை விளக்குமாற்றால் பெருக்கித் தள்ள முயன்றாள்.
அந்தச் சமயத்தில் அவளுடைய மனம், 'தீவாளிக்கு இவாள் வர்றபோது இப்படியே மழை கொட்டிண்டிருந்தா என்ன பண்றது? இந்த வீட்டைப் பார்த்துட்டுப் பரிகாசம் பண்ணுவாளே? அதற்குள்ளே மழை நின்று போகணுமே, ஸ்வாமி!' என்று வேண்டிக் கொண்டிருந்தது.
அந்தச் சமயம், மங்களம் சமையலறையிலிருந்து கையில் ஒரு கிழிசல் குடையுடன் வந்து, 'ஏண்டி, சாவித்திரி! உங்க அப்பாகிட்டச் சொல்லி இந்தக் குடையை ரிப்பேர் பண்ணி வைக்கறதற்குக்கூட விதியில்லையா? பாக்கிக்கெல்லாம் மட்டும் வாய் கிழியறதே!" என்று சொல்லிக் குடையைத் தொப்பென்று கீழே எறிந்தாள்.
பகவானுடைய பக்தியில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய குடும்ப காரியங்களைச் சரியாகக் கவனிப்பதில்லையென்பது நமது நாட்டில் தொன்றுதொட்ட சம்பிரதாயமாயிருந்து வந்திருக்கிறது. அந்தப் பரம்பரையில் வந்த சம்பு சாஸ்திரி மட்டும் இந்த வழக்கத்துக்கு விரோதமாயிருக்க முடியுமா? ஆகவே, மங்களம் அவர்மேல் எரிந்து விழுவதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
2.2. பஜனை - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கொண்டிருந்தது, சாஸ்திரியின், இடங்களில், தீக்ஷிதர், அந்தப், அடித்த, ஜன்னல், தாரையாகக், அந்தச், மட்டும், மங்களம், சாவித்திரி, கதவுகளின், சாஸ்திரி, கையில், இருந்தது, பலமாய்ப், என்றார், மழையும், தெருவையும், மீதும், சமயத்தில்