சுபத்திரையின் சகோதரன்
3. மண வீட்டில் மரணம்
ஒரு வாரம் சென்றது. சுபத்திரைக்கு மணம்
நடந்திருக்க வேண்டிய தினத்துக்கு இரண்டு நாளைக்குப் பின்னர் எனக்கு ஒரு
கடிதம் வந்தது. உறையின் மீது விலாசம் இராஜகோபாலனுடைய கையெழுத்திலிருப்பதைக்
கண்டேன். அதை ஆவலுடன் பிரித்துப் படித்தேன் என்று சொல்லவும் வேண்டுமா?
ஆனால் அதனுள்ளே அவ்வளவு ஆச்சரியமும் துயரமும் எனக்குக் காத்திருக்கின்றனவென
ஒரு கணமும் நினைத்தேனில்லை. அக்கடிதம் வருமாறு:-
என் ஆருயிர் நண்பனே!
என் சிந்தை கலங்கியிருக்கிறது. தலை சுழல்கிறது. மதிமயங்குகிறாது. கரைகாணாத துயரக்கடலில் மூழ்கியிருக்கிறேன். உன்னிடம் கூறி ஆறுதல் பெறலாமென்றால் நீயும் இங்கில்லை. என் செய்வேன்! கடிதத்தில் எழுதியாவது ஓரளவு மனச்சாந்தி பெறலாமென்று இதை எழுதத் தொடங்கினேன்.
நண்ப, இங்கே நான் கல்யாண தடபுடலில் களித்திருப்பேனென நீ எண்ணியிருப்பாய். இங்கே நேர்ந்தவைகளையும், என் மனம் படும் பாட்டையும் அறிந்தாயானால்! - அன்று நாம் கடற்கரையில் பேசிக் கொண்டிருந்த போது, இப்படியெல்லாம் நேரிடுமென்று எண்ணினோமா, தியாகு? 'இக்கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு' என்று கூறினாய். தெய்வம் உன் கோரிக்கையை நிறைவேற்றி விட்டது. ஆனால், அதே சமயத்தில் என் தலையில் பெரிய பாறாங்கல்லைப் போட்டுவிட்டது.
அந்தோ! என் தாய்! பாவிக் கைகளால் அவள் உடலுக்குத் தீ மூட்டிவிட்டேன். இன்று அவள் எலும்புகளைப் பொறுக்கியும் புதைத்துவிட்டு வந்தேன். ஐயோ! அன்பு கனிந்த அவள் திருமுக மண்டலத்தை நினைக்கும் போதெல்லாம் என் உடம்பு ஏன் இப்படித் துடிக்கிறது? உயிர்விடப் போகுந்தறுவாயில், அவள் என்னைப் பார்த்த பார்வை என் மனக் கண்ணின் முன்பு எப்போதும் நின்று கொண்டிருக்கிறது. மறவேன் மறவேன்! அன்பும் இரக்கமும் கருணையும் கனிவும் நிறைந்த அப்பார்வையை என் உயிருள்ளளவும் மறவேன்.
துயரக் கடலில் மூழ்கியிருக்கிறேன் என்று சொன்னேன்? தவறு. என்னை மன்னித்துவிடு. ஆனந்த சாகரத்திலன்றோ மிதக்கிறேன். நான்! என் கண்களினின்றும் அருவிபோல் பெருகி, இதோ இந்தக் கடிதத்தையும் நனைத்து எழுத்துக்களை நாசமாக்குகிறதே. அது துயரக் கண்ணீர் அன்று அது ஆனந்தக் கண்ணீர். ஆம் நான் பெருமை கொள்கிறேன். "என் தாயார் வீரத் தாயார்" என்றெண்ணி இறுமாப்படைகிறேன். வீரத் தாய்மார்களைப் பற்றி நாம் புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் என் அன்னைக்கு முன்னால் அவர்கள் எல்லாரும் எம்மாத்திரம்? அவள் வயிற்றிலே இந்தப் பாவி, இந்தக் கோழை எப்படிப் பிறந்தேன்? அதுதான் தெரியவில்லை.
நண்ப! அளவு கடந்த துக்கத்தினால் நான் தான் பைத்தியம் பிடித்தவன் போலாகி விட்டேனென்றால், பொருத்தமில்லாமல் பிதற்றி உன்னையும் ஏன் பைத்தியமாக்க வேண்டும்? தயவு செய்து மன்னித்துவிடு. நடந்த விஷயங்களைத் தொடர்ச்சியாகக் கூற முயல்கிறேன். பின்னர், உன்னால் கூடுமானால், உனக்குத் தைரியமிருந்தால், எனக்கு ஆறுதல் சொல்லு.
சனிக்கிழமை இரவு சென்னையை விட்டுப் புறப்பட்டேனல்லவா? மறுநாள் மாலை இங்கு வந்து சேர்ந்தேன். ஊருக்குள் அடி வைத்ததும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஓடி வந்து, "மாமா மாமா, தொந்திக் கணபதிக்கும் சுபத்திரைக்கும் கல்யாணம், தெரியுமா உனக்கு?" என்று கூவின. எனக்கோ வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. வீடு சென்றதும் என் அருமைத் தங்கை வழக்கம்போல் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். ஆனால் அவள் வாயினின்றும் ஒரு வார்த்தையேனும் கிளம்பவில்லை. அவள் வதனத்தில் எப்போதும் குடி கொண்டிருந்த முல்லைச் சிரிப்பையும் காணோம். முன்னெல்லாம் நான் போனதும் எவ்வளவு கேள்விகள் கேட்பாள்? எப்படியெல்லாம் கொஞ்சுவாள்? எனக்கும் அவளுடன் பேசுவதற்கு நாவெழவில்லை. தாயார் நான் வந்த சத்தம் கேட்டு வெளியே வந்தாள். "ராஜு, வா அப்பா" என்றாள். அவள் கண்களில் நீர் ததும்புவதையும் மிகுந்த பிரயாசையுடன் அவள் கண்ணீரை அடக்கிக் கொள்வதையும் கண்டேன்.
பின்னர், சற்று நேரத்துக்கெல்லாம் என் தாயார் தனியாகச் சமையலறையில் இருக்கும் சமயம் பார்த்து அங்கே போனேன். இப்போது அவள் தங்கு தடையின்றித் தாராளமாகக் கண்ணீர் பெருக்கினாள். "அம்மா, இதென்ன அநியாயம்? அப்பாவுக்கு ஏன் இப்படிப் புத்திப் போயிற்று?" என்றேன். "குழந்தாய் அதைப் பற்றி இனிப் பேசுவதில் பயன் என்ன?" என்று பெருமூச்சு விட்டாள். நான் வற்புறுத்திக் கேட்டதின் மேல், இந்தக் கல்யாணம் ஏற்பாடானதைப் பற்றி அவள் ஆதியோடந்தமாகக் கூறினாள். நண்ப! நீயல்லாமல் வேறு யாராவதாயிருப்பின் எனக்கு அவ்விவரங்களைக் கூறவும் வெட்கமாக இருக்கும். நான் எதிர்பார்த்ததுபோல் பண ஆசையே முதன்மையான காரணம் என்று அன்னை தெரிவித்தாள். வேறு தகுந்த வரன்களும் அமையவில்லை. இவ்வருஷம் கல்யாணம் கட்டாயம் செய்துவிடவேண்டும் என்று ஊரிலுள்ளவர்கள் சொல்லி விட்டார்களாம். இந்த அநியாயம் வேறெங்கேனும் உண்டா தியாகு? அம்மா மட்டும் கூடாதென்று சொல்லி வந்தாளாம். ஆனால் வீட்டிலுள்ள கிழவிகள் - அத்தையும் பாட்டியும் அப்பாவும் அனுசரணையாம். இரண்டு மூன்று முறை வீட்டில் சண்டை ஏற்பட்டு அம்மா அப்பாவின் கையில் அடிபட்டாளாம். ஆனால், என் தாயார் கூறிய விவரங்களுள் எல்லாவற்றையும் விட ஒன்று என் உள்ளத்தை உருக்கிவிட்டது. இந்தக் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் சுபத்திரை அடுத்த வீட்டில் இந்த விவரத்தை கேள்விப்பட்டு ஓட்டமாக ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு, "அம்மா குள்ளநரிக்கு என்னைக் கொடுக்கப் போகிறீர்களாமே! நிஜந்தானா?" என்று கதறினாளாம். "குழந்தாய் நான் உயிரோடிருக்கும்வரை அப்படி ஒன்றும் நேராது" என்று அன்னை பதில் சொன்னாளாம். இதைக் கேட்டதும் நான் சலசலவென்று கண்ணீர் பெருக்கிக் கோவென்று அழுது விட்டேன். "குழந்தைக்கு அப்படி வாக்குறுதி கொடுத்தேனே ராஜு இப்போது என்ன செய்வேன்?" என்று அம்மா என்னைக் கேட்டாள். நான் என்ன பதில் சொல்வேன்? ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவளுடைய வாக்குறுதியை இப்படி நிறைவேற்றி வைக்கப் போகிறாள் என்று நினைத்தேனோ?
"அம்மா கல்யாணத்தை நிறுத்திவிடத்தான் வேண்டுமென்று சண்டைபிடித்துப் பார்க்கட்டுமா?' என்று கேட்டேன். "ஐயோ! வேண்டாம். அவர் பிடிவாதத்தை மாற்ற முடியாது. நான் ஒருத்தி கேட்டுக் கொண்ட வசவுகள் போதும், அப்பா" என்றாள்.
மறுநாள் நான் என் கைப்பெட்டியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டிருக்கும்போது, அம்மா அங்கு வந்து "எப்போதும் மருந்துகள் கொண்டு வருவாயே, ராஜு இம்முறை கொண்டு வந்திருக்கிறாயா?" என்று கேட்டாள். பெண்களின் உள்ளத்தைக் கண்டு பிடிக்க முடியாது என்று சொல்கிறார்களே, அது எவ்வளவு உண்மை! என் அன்னைதான்; ஆனால் அவள் என்ன கருத்துடன் கேட்கிறாள் என்பதை அப்போது அணுவளவும் அறிந்தேனில்லையே! நான் ஊருக்குப் போனால் 'டாக்டர் வந்துவிட்டார்' என்று எல்லோரும் வைத்தியத்துக்கு வந்துவிடுவார்களென்பதும், அதற்காக நான் எப்போதும் சிற்சில மருந்துகள் எடுத்துப் போவது வழக்கமென்பதும் உனக்குத் தெரியுமே! அவ்வாறே இம்முறை எடுத்துச் சென்றிருந்தேன். அவற்றை இன்னின்ன மருந்து என்றும், இந்த இந்த நோய்க்கு உபயோகமென்றும் அம்மாவுக்குக் காட்டினேன். அப்போது, விஷமருந்து இருந்த ஒரு புட்டியையும் பாவி ஏன் அவளுக்குக் காட்டி விட்டேன். மறுநாள் அதாவது கல்யாணத்துக்கு முதல் நாள் காலையில் என்னுடைய பெட்டிச் சாவியைக் கேட்டாள். "ஜாக்கிரதையாகச் சில நகைகள் உன் பெட்டியில் வைத்திருக்க வேண்டும், ராஜு! அந்தச் சாவி என்னிடமே இருக்கட்டும்" என்றாள். நான் நம்பிக் கொடுத்தேன். நம்பிய பிள்ளையைத் தாயே மோசம் செய்து விட்டாளே!
அன்றிரவுதான், தியாகு, மகா பயங்கரமான பேரிடி என் தலையில் விழுந்தது. நிச்சயதார்த்தத்துக்கு மாப்பிள்ளையை ஊர்வலத்துடன் அழைத்து வருவதற்காக எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிருந்தோம். வெற்றிலை பாக்கு வழங்கிக் கொண்டிருந்தபோது, ஒருவர் வேகமாக வந்து என் காதோடு அம்மா அவசரமாகக் கூப்பிடுவதாகத் தெரிவித்தார். என் அன்னை மற்ற பெண்களுடன் மாப்பிள்ளை வீட்டுக்கு வரவில்லையென்பதை அப்போதுதான் கவனித்தேன். ஏதோ முக்கிய விஷயமாகவே இருக்குமென்று எண்ணி உடனே வீட்டுக்கு விரைவாகச் சென்றேன். வீட்டில் சமையற்காரனையும் சுபத்திரையையும் தவிர வேறு யாருமில்லை. "அம்மா சாமான் அறையில் இருக்கிறாள் அண்ணா! உன்னை உடனே கூப்பிடுகிறாள்" என்றாள் சுபத்திரை. சாமான் அறையில் நான் கண்ட காட்சியை என்னவென்று சொல்வேன்? அம்மா படுத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் என் பெட்டியின் மேலிருந்த விஷமருந்துப் புட்டியில் பாதி காலியாய் இருந்தது. எனக்கு வயிற்றைப் பகீர் என்றது. அம்மா அருகில் ஓடிப் போய் பார்த்தேன். அவள் புன்னகை புரிந்தாள். ஆனால் விஷம் நன்கேறி விட்டதென்றும் இனி உயிர் பிழைக்க வழியில்லையென்றும் அறிந்தேன். அப்போது ஒரே எண்ணந்தான் தோன்றிற்று. அந்த விஷப் புட்டியைத் தாவி எடுக்கப் போனேன். அப்போது அன்னை சட்டென்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு, மிகுந்த பிரயாசையுடன் எழுந்து உட்கார்ந்தாள். "என்ன செய்யப் போகிறாய் குழந்தாய்?" என்று ஈனசுரத்தில் கேட்டாள். நான் பதில் சொல்லவில்லை.
"விஷத்துக்கு மாற்று மருந்து எடுக்கவா, இப்போது எழுந்தாய்?"
"இல்லை மாற்று மருந்து இனிப் பயன்படாது. அந்தப் புட்டியில் பாக்கியுள்ளதை நான் குடிக்கப் போகிறேன்.
"அது தெரிந்தே கையைப் பிடித்துக் கொண்டேன். நல்லது, ராஜு, நீ உயிரை விட விரும்பினால் நான் குறுக்கே நிற்கவில்லை. துன்பம் நிறைந்த இந்தப் பாழும் உலகில் இருந்து ஆவதென்ன? ஆனால் குழந்தாய் அவசரப்படாதே. நான் இன்னும் சற்று நேரந்தானே உயிரோடிருப்பேன்? அதற்குள் நான் சொல்ல விரும்புவதைக் கேட்டுவிட மாட்டாயா?"
"சரி, சொல்லு; கேட்கிறேன்."
"என் கண்மணி சுபத்திரைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். நான் உயிரோடிருக்கும்போது இந்தக் கல்யாணம் நடைபெறாது. நீ என்ன செய்யப் போகிறாய் உன் தங்கைக்காக?"
"நீ செய்ததையே நானும் செய்கிறேன்."
"குழந்தாய் நீ சொல்வது நன்றாயில்லை. நான் பெண். உயிர் விடுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது. நீ ஆண் பிள்ளையாயிற்றே?"
"இனிச் செய்ய என்னவிருக்கிறது அம்மா?"
"நான் உயிர் துறந்தது வீண் போக வேண்டுமென்றா சொல்கிறாய்? இன்னமும் என் குழந்தையைப் பாழுங்கிணற்றிலேயா தள்ளப் போகிறீர்கள்?"
"அம்மா நான் என்ன செய்யவேண்டுமென்று சொல். செய்து முடிப்பதாக இதோ ஆணையிடுகிறேன்."
"குழந்தாய், ஆணை வேண்டாம் நீ சொன்னால் போதாதா? நான் இறந்தால் நாளை முகூர்த்தம் நின்றுவிடும். அபசகுனம் என்று சொல்லி இந்தக் கல்யாண ஏற்பாட்டையே மாற்றிவிடுவார்கள் அல்லது நீ கொஞ்சம் பிடிவாதம் செய்தால் முடிந்துவிடும். பின்னர், சுபத்திரைக்குத் தக்க வரன் தேடிக் கல்யாணம் செய்து வைப்பது உன் பொறுப்பு. ராஜு பிச்சை வாங்கிப் பிழைக்கும் பிரம்மசாரி பையன் ஒருவன் உனக்குக் கிடையாமலா போகிறான்? யாருக்கு வேண்டுமானாலும் கொடு. என் கண்மணியை இந்தக் கொடுமைக்கு மட்டும் ஆளாக்காதே. ஆகால மரணமடைந்தவர்களின் ஆவி பூமியின் மீதே சுற்றிக் கொண்டிருக்கும் என்பார்கள். மீண்டும் இந்த மாப்பிள்ளைக்கே சுபத்திரையைக் கொடுக்கும் பட்சத்தில், இவ்வுடலை நீத்த பிறகும் என் உயிர் ஒருக்காலும் அமைதியடையாது"
"அம்மா சத்தியமாகச் சொல்கிறேன். நான் உயிர் விடுவதாயிருந்தால் சுபத்திரைக்குத் தகுந்த கணவனை நிச்சயம் செய்துவிட்டே உயிர்விடுவேன். அதுவரை என் உயிர் நீங்காது" என்றேன்.
அப்போது அம்மாவின் முகம் மலர்ந்தது. பின்னர், நண்ப, அவளுக்கு இவ்விஷயமாக உன்னுடைய விருப்பத்தைப் பற்றியும் சொன்னேன். அவள் இணையற்ற மகிழ்ச்சியடைந்தாள் என்பதை அவள் முகக் குறியால் அறிந்தேன். சற்று நேரத்துக்கெல்லாம் என் ஆருயிர் அன்னை இப்பாவ உலக வாழ்வை நீத்துப் பரகதிக்குச் சென்றாள். அதுவரை கண்ணீர் ஒரு துளியும் பெருக்காமல் பிரமை கொண்டவன் போல் பேசி வந்த நான், கோவென்று கதறிப் புரண்டழுதேன். அப்போதும் ஆண்டவன் அருளால் கொஞ்சம் சுயபுத்தியிருந்தது. புட்டியைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினேன். பின்னர் என் வீட்டில் நேர்ந்த அலங்கோலத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
நண்ப, கடைசியாக ஒன்று கூறி, உனக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மனக் கவலையை நீக்கிவிட விரும்புகிறேன். சுபத்திரையைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றி உன் விருப்பத்தை என் அன்னையிடம் கூறியதனால் அவள் மன நிம்மதியுடன் மரணமடைந்தாள். ஆனால், இது சம்பந்தமாக உன்னை நான் வற்புறுத்துவேனென்று நீ பயப்பட வேண்டாம். எனக்கு நேர்ந்த துயரத்தைக் கேட்டு மனங்கசிந்திருந்த போது கூறிய மொழியை ஆதாரமாகக் கொண்டு உன் வாக்குறுதியை நிறைவேற்றி வைக்கும்படி கேட்கமாட்டேன். ஆனால் சுபத்திரைக்குத் தக்க வரன் தேடிக் கல்யாணம் செய்து வைக்கும் முயற்சியில் உதவி செய்ய வேண்டுமென்று கேட்க எனக்குரிமை யுண்டென எண்ணுகிறேன். ஏனெனில் நண்ப, அம்மா இறந்தாலும், வேறு என்ன துயரம் நேர்ந்தாலும் சுபத்திரையின் கல்யாணத்தை என்னவோ இவ்வருஷமே நடத்தியாக வேண்டும். நமது சமூகக் கட்டுப்பாடுகளின் கொடுமையை என்னவென்பேன்?
இங்ஙனம்,
அபாக்கியனான நின் நண்பன்
இராஜகோபாலன்.
மேற்கண்ட கடிதத்தைப் படித்து வரும்போது
என் மனதிலெழுந்த பலவகை உணர்ச்சிகளை இங்கே எழுதி வாசகர்களின் காலத்தை
வீண்போக்க நான் விரும்பவில்லை. கல்யாணம் நின்று போயிற்றென்பதைப் படித்ததும்,
அளவு கடந்த மகிழ்ச்சியுண்டாயிற்று. இராஜகோபாலன் அன்னை மரணமடைந்த செய்தியை
படித்ததும், இடி விழுந்தது போல் திடுக்கிட்டேன். கடிதத்தின் பிற்பகுதியை
அழுதுகொண்டே படித்தேன். கடைசிப் பகுதி, இராஜகோபாலன் மீது ஓரளவு கோபத்தை
உண்டாக்கிற்று. நீண்ட பதில் எழுதினேன். அதில் முதலில் ஏதேதோ ஆறுதல் கூறியிருந்தேன்.
கடைசியில், சுபத்திரையும் நானும் மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்பது
ஆண்டவன் விருப்பமென்று குறிப்பிட்டு என் உறுதியைச் சந்தேகித்தது குறித்த
அவனைச் சிறிது கடிந்து கொண்டேன்.அபாக்கியனான நின் நண்பன்
இராஜகோபாலன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுபத்திரையின் சகோதரன் - Subhathraiyin Sagodharan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், அவள், அம்மா, என்ன, கல்யாணம், இந்தக், வந்து, ராஜு, பின்னர், அன்னை, குழந்தாய், செய்து, உயிர், நண்ப, எனக்கு, வீட்டில், அப்போது, கொண்டு, கண்ணீர், தாயார், வேறு, எப்போதும், என்றாள், கேட்டாள், பதில், பற்றி, இராஜகோபாலன், செய்ய, முடியாது, மருந்து, வேண்டாம், வாக்குறுதியை, சுபத்திரைக்குத், சற்று, ஆறுதல், நிறைவேற்றி, தியாகு, கொண்டிருந்த, மறவேன், வேண்டும், இப்போது, இங்கே, மறுநாள், சொல்லி