சுபத்திரையின் சகோதரன்
2. சந்திரமண்டலப் பிரயாணம்
அன்றிரவு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வண்டியில்
இராஜகோபாலன் ஊருக்குப் பிரயாணமானான். அவனை ரயில் ஏற்றிவிட்டு வருவதற்காக
நானும் எழும்பூர் புகை வண்டி நிலையத்திற்குச் சென்றேன். வண்டி புறம்படுந்தறுவாயில்
கடைசியாக அவன் என் கையைப் பிடித்துக் கொண்டு "தியாகு, மனிதர்கள் விதியை
எதிர்த்துப் போராட நினைத்தல் மதியீனம். இது எனது கொள்கை. நீ மணஞ் செய்து
கொள்வதற்கு இதுவரை இருந்த தடை இப்போது நீங்கிவிட்டப்படியால், நான் திரும்பி
வந்ததும் இங்கே இன்னொரு கல்யாணச் சாப்பாடு கிடைக்குமென நம்புகிறேன்"
என்று கூறிப் புன்னகை புரிந்தான். இயற்கையான மகிழ்ச்சியினின்றெழாமல்
முயன்று வருவித்துக் கொண்ட அந்தப் புன்னகையிலே எல்லையற்ற துக்கம் குடி
கொண்டிருந்தது. இதற்குமுன் எப்போதும் குதூகலமும் புன்னகையும் தவழ்ந்து
கொண்டிருந்த என் நண்பனின் சுந்தரவதனத்தில், அன்றைக்குப் பிறகு நகை யென்பதையே
காணமாட்டேன் என்று பாவியேன் அப்போது அறிந்தேனில்லையே!
புகை வண்டி நிலையத்திலிருந்து வீடு திரும்பியதும் உணவும் அருந்தாமல் படுக்கச் சென்றேன். நீண்ட நேரம் வரை தூக்கம் வரவில்லை. இராஜ கோபாலன் கூறிய விவரங்கள் என் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தன. அவனுடைய துயரத்தைப் பற்றி நினைத்து நினைத்து வருந்தினேன். என்னுடைய ஆசை நிராசையாய்ப் போனது குறித்துப் பெருமூச்சு விட்டேன். என்னுடைய வருங்கால வாழ்க்கையை முடிவற்ற ஒரு பாலைவனம் போல் உருவகப் படுத்திப் பார்த்தேன். இடையிடையே, சுபத்திரையின்,
அமுதூற்றினை யொத்த இதழ்களும்
- அறி
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப் பொன்னொத்த (நின்) மேனியும்
என் மனக் கண்ணின் முன்பு தோன்றிக் கொண்டிருந்தன. அப்பாட்டை அவள் பாடியதும்
இன்றுதான் பாடியது போல் என் செவிகளில் வந்து ஒலித்தது. நெடு நேரத்துக்குப்
பின்னர் என் கண்ணிமைகள் சோர்வுற்று மூடிக் கொண்டன. எண்ணங்கள் பொருத்தமின்றிக்
குழப்பமுற்றன.வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப் பொன்னொத்த (நின்) மேனியும்
இதென்ன அதிசயம்? நான் எங்கே இருக்கிறேன். வீட்டில் படுத்துக்கொண்டிருந்தவன் இங்கெப்படி வந்தேன்? ஆச்சரியம்! ஆச்சரியம்! மேலும் கீழும் சுற்று முற்றும் பார்த்தேன். அழகிய சிறு படகு ஒன்றில் நான் உட்கார்ந்திருந்தேன். அதன் ஒரு மூலையில் ஏதேதோ விசைகள் வேலை செய்து கொண்டிருந்தன. அப்படகு தரையில் கிடந்ததோ? நீரில் மிதந்ததோ? இல்லை, இல்லை ஆகாய வெளியில் அதிவேகமாகப் பறந்து மேலே மேலே சென்று கொண்டிருந்தது! சந்திரன், அது சந்திரன் தானா? ஆயின், அதற்கு அவ்வளவு பிரமாண்டமான வடிவம் எங்கிருந்து வந்தது! சாதாரண சந்திரனைவிடச் சுமார் நூறு மடங்கு பெரிய ஒரு கோளம் வானத்தில் ஒளிமயமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் ஒளி, பௌர்ணமியின் நிலவைவிடப் பன்மடங்கு பிரகாசமாயிருந்ததாயினும், வெயிலைப் போல் வெறுப்பளிப்பதாயில்லை. எல்லையற்ற இனிமையும் குளிர்ச்சியும் அவ்வொளியில் குடிகொண்டு, உடம்புக்கும் உயிருக்கும் உற்சாகமளித்தன. கீழே அதல பாதாள மென்னக்கூடிய தூரத்தில் பூமியின் மலைச்சிகரங்களும், நீர்ப் பரப்புகளும் காணப்பட்டன. கண்களை ஒரு முறை உற்றுப் பார்த்தேன். அந்தோ! அந்த விசைகளுக்கு அருகில் உட்கார்ந்து அவற்றை முடுக்கிக் கொண்டிருப்பவன் யார்? அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பது யார்? வேறு யாருமில்லை! அவர்கள் என் ஆருயிர் நண்பன் இராஜகோபாலனும் என்னுயிரைக் கொள்ளை கொண்ட இன்பச் சிறுமி சுபத்திரையுமே. படகு செல்லும் வேகம் ஒருபுறம்; இவர்களைக் கண்ட ஆச்சரியம் ஒருபுறம் என் தலை கிறுகிறுவென்று சுழல ஆரம்பித்தது. சிறிது முயன்று சமாளித்துக் கொண்டேன்.
இராஜகோபாலன் பேசினான்:- "நண்பா, உறக்கம் தெளிந்து எழுந்தாயா?" என்றான்.
"ஆம். ராஜு, நாம் எங்கே போகிறோம்?"
"இன்னும் தெரியவில்லை? சந்திரமண்டலத்துக்குப் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். ஜெர்மனிய ஆசிரியர் கொடார்ட் கண்டுபிடித்துள்ள புதிய விமானம் இது."
சமீபத்தில் இதைப்பற்றிப் பத்திரிகைகளில் படித்தது எனக்கு நினைவு வந்தது. ஆனால், படித்த விவரத்துக்கும் இந்தப் பறக்கும் படகுக்கும் அவ்வளவு பொருத்தமிருப்பதாகத் தோன்றவில்லை.
"சரிதான், ஆனால் சந்திர மண்டலத்துக்கு நாம் ஏன் போகிறோம்?" என்று வினவினேன்.
"அதென்ன புதிதாகக் கேட்கிறாய், ராஜு, நேற்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேனே? இதோ இருக்கும் உன் இன்னுயிர் காதலியைக் குள்ளநரி கொண்டு போகாமல் காப்பாற்றும் பொருட்டுதான்."
அப்போது, அந்த நள்ளிரவிலே, ஆகாய வெளியிலே சோதிமயமான நிலவொளியிலே, வானம்பாடியின் இனிய கீதத்தினும் பன்மடங்கு இனியதாய், கல்லையும் மரத்தையும் கனியச் செய்யும் குரலில்,
பகைவனுக் கருள்வாய் -
நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய்
என்ற பாட்டு எழுந்தது. பாடியவள் சுபத்திரை. நான் புளகாங்கிதமடைந்தேன்.பகைவனுக் கருள்வாய்
திடீரென்று பயங்கரமான புயற்காற்று தோன்றிற்று. படகு மேலும் போகாமல் கீழும் போகாமல், அந்தரத்தில் அப்படியும் இப்படியும் ஆடிக் கொண்டு நின்றது. பிரமாண்ட கழுகு போன்ற ஒரு பறவை நெடுந்தூரத்திலிருந்து எங்கள் படகை நோக்கிப் பறந்து வருவதைக் கண்டேன். சில நிமிஷங்களில் அது எங்கள் படகை அணுகி விட்டது. அப்போது அதை உற்றுப் பார்த்தேன். அதன் முகம் மட்டும் குள்ளநரியின் முகம் போலிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன். அப்போது இராஜகோபாலன் சுபத்திரையை அவசரமாக அழைத்துக் கொண்டு வந்து அவளுடைய ஒரு கையை என் கையில் வைத்து, "நண்பா, இதோ என் தங்கையை உன்னடைக்கலமாக ஒப்புவிக்கின்றேன். அவளைப் பாதுகாப்பாய்!" இதற்குள், நரி முகங்கொண்ட அந்தப் பயங்கரப் பறவை படகுக்கு வந்து விட்டது. இராஜகோபாலன் அது படகில் வராமல் தடுக்கத் தொடங்கினான். பறவை, இராஜகோபாலனை லட்சியஞ் செய்யாமல் சுபத்திரையை அணுகமுயன்றது. அவன் அதை ஒரு தடியினால் அடித்து உள்ளே வரவொட்டாமல் செய்து கொண்டிருந்தான். சில நிமிஷங்கள் ஆனதும், அவன் திடீரென்று திரும்பி, "தியாகு இந்த விமானத்தின் விசை கெட்டுப் போய் விட்டது. இனிப் பயன்படாது. உடனே சுபத்திரையை அழைத்துக் கொண்டு இறங்கிவிடு" என்றான். சுபத்திரை நடுநடுங்கியவளாய்த் தன் இரு கரங்களாலும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அப்படியே இருவரும் படகை விட்டிறங்கி, ஆகாய வெளியில் எவ்வகை ஆதரவுமின்றி நின்று கொண்டு இராஜ கோபாலனையே பார்த்துக் கொண்டிருந்தோம். அவன் சிறிது நேரம் அந்தப் பறவையுடன் சண்டையிட்ட பிறகு, கையிலிருந்த தடியால் ஓங்கி ஒருமுறை அடித்தான். அது பயங்கரமாக ஒருமுறை கூவி விட்டுக் கிழே அதிவேகமாய் விழத் தொடங்கியது.
என்ன ஆச்சரியம்! இராஜகோபாலன், அப்போது புதியதோர் ஒளி வடிவமும் விசாலமான சிறகுகளும் பெற்றவனாய், அப்படகிலிருந்து மேலே கிளம்பிச் செல்லத் தொடங்கினான். "குழந்தைகளே, நான் சந்திர மண்டலத்துக்குச் செல்கிறேன். நீங்கள் நெடுங்காலம் பூமியில் வாழ்ந்துவிட்டு வந்து சேர்வீர்கள்" என்று கூறிவிட்டு அவன் மேலே மேலே பறந்து சென்று சிறிது நேரத்துக்கெல்லாம் மறைந்து போனான்.
ஆகாய வெளியில் அந்தரமாகத் தொங்கிக் கொண்டிருந்த என் கழுத்தைக் கட்டிக் கொண்டு நின்றாள் சுபத்திரை. அவள் முகம் என் மார்புக்கு நேராக இருந்தது. இப்போதுதான் குனிந்து அவள் முகத்தைப் பார்த்தேன். அவளுடைய அழகிய கண்களும் என்னை நோக்கின. ஓ! அந்தக் கண்கள்!
"சுபத்திரா! நஞ்சு தடவிய அம்புகள் போல் உன் கண்கள் என் இதயத்தில் பாய்கின்றனவே! என் செய்வேன்!" என்றேன்.
சுபத்திரை தன் பவழச் செவ்வாய் திறந்து, முத்தன்ன பற்கள் சிறிது வெளித்தோன்ற, தேனினுமினிய குரலில் "நாதா! தாங்கள் ஏன் கவலையுறவேண்டும்? அவற்றிற் கருகிலேயே அமுதூற்றிருக்கின்றதே?" என்று கூறிப் புன்னகை செய்தாள். நான் பரவசமடைந்தேன். பின்னர் - சொல்ல வெட்கமாயிருக்கிறது - அமுதூற்றென்று அவள் வருணித்த இதழ்களில் முத்தமிட்டேன். அந்தக் கணத்தில் என் தலை சுழல ஆரம்பித்தது. மயக்கங் கொண்டேன். கீழே இறங்குவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. வரவரக் கீழிறங்கும் வேகம் அதிகப்பட்டது. அளவிடப்படாத நெடுந்தூரத்துக்கு, மனதினாலும் எண்ணமுடியாத வேகத்துடன், கீழே கீழே கீழே போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றிற்று. கடைசியாகத் தொப்பென்று பூமியில் வீழ்ந்தேன்.
திடீரென்று கண் விழித்துப் பார்த்தேன். கட்டிலிருந்து புரண்டு கீழே தரையில் வீழ்ந்திருப்பதைக் கண்டேன். விழுந்த அதிர்ச்சியினால், முதுகு வலித்துக் கொண்டிருந்தது. எழுந்து மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டேன். நான் கண்ட அதிசயக் கனவை நினைத்தபோது என் உடல் நடுங்கிற்று. அன்றிரவு நான் தூங்கவேயில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுபத்திரையின் சகோதரன் - Subhathraiyin Sagodharan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், கொண்டு, கீழே, பார்த்தேன், இராஜகோபாலன், அப்போது, மேலே, அவன், ஆச்சரியம், ஆகாய, சிறிது, செய்து, வந்து, அவள், கொண்டிருந்தது, போல், சுபத்திரை, முகம், திடீரென்று, சுபத்திரையை, படகை, விட்டது, பறவை, படகு, அந்தப், வண்டி, கொண்டிருந்தன, வெளியில், கொண்டேன், பறந்து, போகாமல்