எஸ். எஸ். மேனகா
3
ரஜனியின் அதிர்ச்சி நீங்கி மறுபடியும்
கண்ணைத் திறந்து பார்த்தபோது, முன்னர் தீயின் வெளிச்சம் தோன்றிய இடத்திலிருந்து
இப்போது கரும் புகைத்திரள் அடர்த்தியாகக் கிளம்பிக் கொண்டிருப்பதைக்
கண்டாள்.
"கப்பல் மூழ்கிவிட்டது" என்றான் ஜான்.
"ஐயோ! அவ்வளவு பேருடனுமா? என்ன கொடூரம்? எத்தனை பச்சைக் குழந்தைகள்? ஜப்பானியர் மனிதர்களா, ராட்சஸர்களா?"
கப்பல் முழுகிய இடத்திலிருந்து கிளம்பிய பிரம்மாண்டமான அலைகள் வந்து படகை மோதத் தொடங்கின. அத்தனைத் தாக்குதலுக்கும் படகு முழுகாமலிருந்தது ரஜனிக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் கரும் புகைப்படலம் நாலாபுறமும் வியாபித்து வானையும் கடலையும் மூடி ஒரே இருள் மயமாகச் செய்து விட்டது. அம்மாதிரியான பயங்கர இருட்டை ரஜனி அதற்கு முன் பார்த்ததே கிடையாது.
பயத்தினால் நடுங்கிய கரங்களினால் அவள் ஜானின் தோள்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள்.
சற்று நேரத்துக்கெல்லாம் புகைத்திரள் விலகத் தொடங்கியது. வானில் நட்சத்திரங்கள் மறுபடியும் கண் சிமிட்டின.
"ஐயோ! என்னத்திற்காக என்னை இப்படி அழைத்துக் கொண்டு வந்தீர்கள்? எல்லாரோடு நானும் இதற்குள்..."
"அதோ பார்!" என்றான் ஜான்.
கீழ்த்திசையின் அடிவானத்தில் தங்க நிறமான பிரகாசம் காணப்பட்டது.
"அது என்ன? ஐயோ ஒரு வேளை இன்னொரு கப்பலோ?"
"இல்லை இல்லை; கிழக்கே சந்திரோதயம் ஆகிறது."
பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சந்திரன் கடலில் குளித்துவிட்டு எழுந்திருப்பதுபோல் மேலே வந்தான். வானும் கடலும் சேருமிடத்தில் கடல் நீர் தங்கம் உருகித் தழலாகியது போல் தக தகா மயமாயிருந்தது.
"ஆகா! என்ன அற்புதம்?"
"அற்புதமாயிருக்குமென்று எனக்குத் தெரியும். இந்த அற்புதத்தைப் பார்த்துவிட்டுச் சாகலாம் என்றுதான் உன்னை அழைத்து வந்தேன்."
"சாவைப்பற்றி ஏன் பேச வேண்டும்? இருக்கிற வரையில் சந்தோஷமாயிருக்கலாமே?"
"எப்படிச் சந்தோஷமாயிருப்பது? ஐயோ அவ்வளவு ஜனங்களும் இதற்குள் செத்துப் போயிருப்பார்களல்லவா? பச்சைக் குழந்தைகள் எப்படி தவித்திருக்கும்?"
"பார்த்தாயா? சந்தோஷமாய்ப் பேசலாமென்று சொல்லிவிட்டு?"
"என்ன சந்தோஷமான விஷயம் இருக்கிறது, பேசுவதற்கு?"
"அவரவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷமான சம்பவத்தைப் பற்றி சொல்லலாம்."
"நீங்கள் ஆரம்பியுங்கள்."
"இந்த நாளில் எந்தக் காரியத்திலும் ஸ்திரீகளுக்கு முதன்மை கொடுப்பதுதான் சம்பிரதாயம்."
"என் வாழ்நாளில் ஒரே ஒரு மாத காலம் நான் சந்தோஷமாயிருந்திருக்கிறேன். ஆனால், அந்த ஒரு மாதத்தை நினைத்துப் பின்னால் எப்போதும் துக்கப்பட்டிருக்கிறேன்."
"துக்கப்பட்டதைப் பற்றி இப்போது சொல்ல வேண்டாம். சந்தோஷமாயிருந்ததைப் பற்றிச் சொன்னால் போதும்."
"சொல்ல ஆரம்பித்தால் அழுகை வந்துவிடும்."
"கதை மாதிரி சொல்லப் பாரேன்."
சற்று நேரம் மௌனமாயிருந்துவிட்டு ரஜனி சொல்ல ஆரம்பித்தாள்.
"இருபது வருஷங்களுக்கு முன்னால் ராயபுரத்தில் ஒரு அப்பாவும் அம்மாவும் அவர்களுடைய பெண்ணும் ஒரு சின்ன வீட்டில் வசித்து வந்தார்கள். ஒரு காலத்தில் அவர்கள் ரொம்பப் பணக்காரர்களாயிருந்தவர்கள். அப்பா வியாபாரத்தில் பெருத்த நஷ்டமடைந்து சொத்தையெல்லாம் இழந்தார். இதனால் அவருடைய மனதே குழம்பிப் போய் விட்டது. இழந்த சொத்தை திரும்பச் சம்பாதிப்பதற்காக அவர் குதிரைப் பந்தயத்திற்கு போகத் தொடங்கினார். வீட்டில் பாக்கியிருந்த நகை நட்டுக்களுக்கும் சனியன் பிடித்தது. அம்மாவும் பெண்ணும் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவர்களுடைய வீட்டின் மச்சில் ஒரு அறை இருந்தது. அதை வாடகைக்கு விட்டால் கொஞ்சம் பணம் கிடைக்கலாமென்று 'டு லெட்' போர்டு போட்டார்கள். அதை ஒரு வாலிபப் பிள்ளை வந்து வாடகைக்கு எடுத்துக் கொண்டார். அவருக்கு ஹார்பரில் வேலை. அப்பாவுக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. நாலு நாளைக்கெல்லாம், "நீ என்னத்துக்குகாக ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்? இங்கேயே சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமே?" என்றார். அவரும் 'சரி' என்று சொல்லி, வீட்டிலேயே சாப்பிடவும் ஆரம்பித்தார்.
அந்தப் பேதைப் பெண், தன்னை உத்தேசித்துத் தான் அந்த வாலிபர் அவ்விதம் வீட்டில் சாப்பிட ஒப்புக் கொண்டதாக எண்ணினாள். அவள் ஒரு வருஷத்துக்கு முன்பு வரையில் 'கான்வெண்டு' ஸ்கூலில் படித்து வந்தவள். அதற்குப் பிறகு அகப்பட்ட நாவல்களையெல்லாம் படித்து, 'காதல்' 'பிரேமை' என்னும் உலகத்திலே வசித்து வந்தாள். 'கண்டதும் காதல்' என்பது தங்களுக்குள் நேர்ந்து விட்டது என்று அவள் நம்பினாள். அந்தப் பேதைப் பெண்ணின் நம்பிக்கையை அந்த மனுஷரும் ஊர்ஜிதப்படுத்தினார். அவளைத் தனிமையில் சந்திக்கும் சந்தர்ப்பங்களை அவர் தேடினார். "உன்னைக் கண்ட பிறகு நான் புது மனுஷனாகிவிட்டேன் என்றும், இவ்வளவு சந்தோஷத்துடன் இதற்கு முன் நான் இருந்ததே இல்லை" என்றும் அடிக்கடி சொன்னார். அந்தப் பெண்ணோ, தான் சுவர்க்க வாழ்க்கையையே அடைந்து விட்டதாக எண்ணினாள். ஆனாலும் சங்கோசத்தினால் வாயைத் திறந்து ஒன்றும் பேசவில்லை. அவர் சொல்லியதையெல்லாம் மட்டும் கேட்டுக் கொண்டு மௌனமாயிருந்தாள்.
"ஒருநாள் அவர் நான் என்னவெல்லாமோ பிதற்றிக் கொண்டிருக்கிறேன். நீ வாயை திறக்க மாட்டேன் என்கிறாயே?" என்றார். அதற்கும் அவள் மௌனமாயிருக்கவே இந்த ஒரு கேள்விக்காவது பதில் சொல்லு, "நான் இந்த வீட்டில் இருக்கட்டுமா, போகட்டுமா?" என்று கேட்டார்.
"இருங்கள்" என்று அந்தப் பெண் சொன்னாள். உடனே, அவர் வெகு துணிச்சலுடன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு 'ரொம்ப வந்தனம்' என்றார். அப்போது அவர் பார்த்த பார்வையானது, 'உனக்காக என் பிராணனை வேண்டுமானாலும் தியாகம் செய்வேன்' என்று சொல்லுவது போலிருந்தது.
ரஜனி சற்று நேரம் மௌனமாயிருந்தாள்.
"அப்புறம்?" என்றான் ஜான்.
"அப்படிப்பட்டவர் இருபது ரூபாயைத் தியாகம் செய்வதற்கு மனமில்லாமல் போய்விட்டார்."
"அந்தப் பெண் இருபது ரூபாய் கேட்டு, அவன் கொடுக்க மறுத்துவிட்டானா?"
"இல்லை, இல்லை. அவரிடம் போய் இருபது ரூபாய் கேட்பதைக் காட்டிலும் அந்தப் பெண் பிராணனையே விட்டிருப்பாள்" என்றாள் ரஜனி.
"இப்படி அவர்கள் இருவரும் ஆனந்த மனோராஜ்ய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், ஒரு நாள் அந்தப் பெண்ணின் அப்பா அவளிடன், 'உன்னுடைய டிரங்குப் பெட்டியின் சாவியைக் கொஞ்சம் கொடு, அம்மா! என்னுடைய மேஜைச் சாவி கெட்டுப் போய் விட்டது. உன் பெட்டிச்சாவி சரியாயிருக்கிறதா, பார்க்கிறேன்' என்றார். அந்தப் பெண் அவ்விதமே சாவியைக் கொடுத்தாள்."
"மறுநாள், மாடி அறைக்காரர் வந்து, 'வீட்டு வேலைக்காரி எப்படி திருட்டு புரட்டு உண்டோ ?' என்று கேட்டார். மாடி அறையில் இருந்த தம்முடைய பெட்டியிலிருந்து பத்து ரூபாய் பணத்தைக் காணோம் என்று சொன்னார். 'பெட்டியைப் பூட்டியிருக்கிறீர்களா?' என்று அந்தப் பெண் கேட்டதற்கு, 'பூட்டியிருந்தாலென்ன? டிரங்குப் பெட்டியை மறுசாவி போட்டுத் திறப்பதுதானா கஷ்டம்?' என்றார். உடனே அந்தப் பெண்ணுக்கு, அவருடைய அப்பா டிரங்குப் பெட்டிச்சாவியைக் கேட்டு வாங்கிக் கொண்டது ஞாபகம் வந்தது. அதோடு நேற்றுக் குதிரைப் பந்தய தினம் என்பதும் நினைவுவரவே, அவளுடைய மனது குழப்பமடைந்தது. அந்த மனக்குழப்பம் அவள் முகத்திலும் தெரிந்திருக்கத்தான் வேண்டும். அவர் அதைக் கவனித்தாரோ, மனதில் என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியாது. ஒன்றும் சொல்லாமலே போய் விட்டார்."
"அன்று மத்தியானம் அப்பாவிடம் அந்தப் பெண் 'பெட்டிச்சாவி எங்கே?' என்று கேட்டாள் 'எங்கேயோ தொலைந்து போய்விட்டது அம்மா! இன்னொரு சாவி உன்னிடம் இருக்கிறதல்லவா?' என்றார். இதனால் அந்தப் பெண்ணின் சந்தேகம் அதிகமாயிற்று. அடுத்து ஐந்தாறு நாள் அவள் தன் மனத்திற்குள் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதை வெளியில் காட்டாமலிருப்பதற்கு முயன்றாள். அந்த வாலிபரும் அவளுடைய மனோ நிலைமையைப் பற்றி அறிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. பணம் திருட்டுப் போனதைப் பற்றி மறுபடியும் பிரஸ்தாபிக்கவும் இல்லை.
"அடுத்த குதிரைப்பந்தய நாளான சனிக்கிழமை வந்தது. அன்று காலையிலிருந்து அப்பாவின் போக்குவரவுகளை அந்தப் பெண் ஜாக்கிரதையாகக் கவனித்து வந்தாள். வழக்கம் போல் மாடிக்காரர் காலை எட்டு மணிக்கே ஹார்பருக்குப் போய்விட்டார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அப்பா மாடிப்படி ஏறிப்போவதைப் பெண் பார்த்தாள். அவருக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து போய், என்ன செய்கிறார் என்று கவனித்தாள். செய்கிறது என்ன? அவள் பயந்தபடியேதான் நடந்தது. மாடி அறையில் இருந்த டிரங்குப் பெட்டியைத் திறந்து அதற்குள்ளேயிருந்து இரண்டு பத்து ரூபாய் நோட்டை எடுத்தார். அந்தப் பெண்ணுக்கு தலையில் இடி விழுந்தது போலிருந்தது. அப்பா தன்னைப் பார்க்காதபடி கீழே ஓடி வந்தாள். வெகு நேரம் யோசனை செய்தாள். அந்தச் சமயத்தில் அப்பாவிடம் அதைப்பற்றிக் கேட்டால் நிச்சயம் கொலை நடந்துவிடும் என்று அவளுக்குத் தெரியும். குதிரைப்பந்தயப் பிசாசு அவ்வளவு பொல்லாதது அல்லவா? தகப்பனார் சாப்பிட்டுவிட்டுப் போகும் வரையில் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள். அவள் பள்ளிக் கூடத்தில் படித்த காலத்திலிருந்து அப்பாவுக்குத் தெரியாமல் சேகரித்து வைத்திருந்த பணம் முப்பது ரூபாய் இருந்தது. அதில் இருபது ரூபாய் எடுத்துக் கொண்டு, தன்னிடமிருந்த டிரங்குப்பெட்டி சாவியையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் மாடிமேல் ஏறினாள். கைநடுக்கத்துடன் பெட்டியைத் திறந்து இருபது ரூபாய் நோட்டை அதில் வைக்கப் போனாள். அச்சமயத்தில் பின்னால் ஏதோ சத்தம் கேட்டுச் சட்டென்று திரும்பினாள். மச்சுப்படிகளுக்கு மேலே யாரோ ஒருவரின் தலைக் கிராப்புத் தெரிந்தது. தடதடவென்று அவர் கீழே இறங்கிப் போகும் சத்தமும் கேட்டது. அந்தப் பெண் கை கால் வெலவெலத்துப் போய் ஐந்து நிமிஷம் ஸ்தம்பமாய் உட்கார்ந்திருந்தாள். பிறகு அவள் கீழே இறங்கிப் போய் பார்த்த போது, அவரைக் காணோம். அவ்வளவுதான்; அதற்குப் பிறகு அவர் திரும்பி வரவே இல்லை! இரண்டு நாளைக்கெல்லம் அவரிடமிருந்து ஒரு கடிதம் மட்டும் வந்தது. அவசர காரியமாக லீவு எடுத்துக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டுப் போவதாகவும், திரும்பி வருவது நிச்சயமில்லையென்றும், வாடகைக்கும் சாப்பாட்டுச் செலவுக்கும் பெட்டியிலுள்ள பணத்தையும் சாமான்களையும் எடுத்துக் கொள்ளும்படியும் அந்தக் கடித்தத்தில் எழுதியிருந்தது."
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எஸ். எஸ். மேனகா - S.S.Menaka - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அந்தப், பெண், அவர், அவள், போய், ரூபாய், என்ன, இல்லை, என்றார், இருபது, நான், அந்த, அப்பா, கொண்டு, எடுத்துக், வீட்டில், மறுபடியும், பற்றி, பெண்ணின், திறந்து, சற்று, டிரங்குப், விட்டது, பிறகு, ரஜனி, கீழே, மாடி, வந்தாள், வந்தது, நேரம், ஜான், என்றான், அவ்வளவு, வந்து, சொல்ல, வரையில், பணம்