எஸ். எஸ். மேனகா
2
அன்று சாயங்காலம் அஸ்தமன சமயத்தில், ரஜனி
அலங்காரம் செய்து கொள்வதைப் பார்த்து விட்டுப் பிரயாணிகள் அளவில்லாத
வியப்பும் அருவருப்பும் கொண்டார்கள்; அருவருப்பை வெளிப்படையாகவும் காட்டிக்
கொண்டார்கள்.
ரஜனி, அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. தனக்குள் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவளாய்த் தோன்றினாள். நேரமாக ஆக அவளுடைய பரபரப்பு அதிகமாயிற்று.
ரஜனி, மனோநிலையைப் பிரதிபலிப்பது போல் கப்பல் வழக்கத்தைவிட மிகவும் துரிதமாகச் சென்றது.
அதைப் பற்றி பிரயாணிகள் கவலையுடன் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்.
இரவு சுமார் எட்டு மணிக்கு ஜான் கப்பலின் மேல் தளத்துக்கு வந்ததும், ரஜனி விரைந்து எழுந்து வந்து அவன் பக்கத்தை அடைந்தாள்.
"தயார்தானே? மனதில் சந்தேகம் ஒன்று மில்லையே?"
"கொஞ்சங்கூட இல்லை."
"அப்படியானால் என்னோடு வா!" என்று சொல்லிவிட்டு ஜான் முன்னால் நடந்தான்.
யுத்தகாலமாதலால், கப்பலில் இராத்திரியில் விளக்குப் போடுவது கிடையாது. ஒரே இருட்டாயிருந்தது.
ஜானுடைய வெள்ளை உடுப்பின் அடையாளத்தைக் கொண்டு ரஜினி நடந்தாள்.
ஓரிடத்தில் அவளுக்குக் கால் தடுமாறிற்று.
ஜான் திரும்பி அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டான்.
ரஜனிக்கு மயிர் கூச்செறிந்தது.
இரண்டு பேரும் மௌனமாய்க் கொஞ்ச தூரம் நடந்தார்கள்.
"இங்கே படிக்கட்டு, ஜாக்கிரதையாய் இறங்கி வா!" என்றான் ஜான்.
இறங்கிப் போனார்கள்.
இவ்விதம் கால்மணி நேரம் இருட்டில் நடந்த பிறகு, ஜான் ஓரிடத்தில் நின்றான். கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
வெளியிலிருந்து குளிர்ந்த காற்று 'விர்'ரென்று ரஜனியின் முகத்தில் அடித்தது. அலைத்துளிகளும் தெறித்தன.
"கடைசித் தடவை கேட்கிறேன். கொஞ்சம் கூட உன் மனதில் சந்தேகம் இல்லையே?" என்றான் ஜான்.
"இல்லவே இல்லை."
"இந்தக் கதவுக்கு வெளியில் ஏணி தொங்குகிறது. அதன் வழியாகக் கீழேயுள்ள படகில் நாம் இறங்க வேண்டும். படகு பலமாய் ஆடும். அதற்காகப் பயப்பட வேண்டாம். என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்."
"செத்துப் போவதற்கு இவ்வளவு ஜாக்கிரதையும் தடபுடலுமா?" என்றாள் ரஜனி. ஆனாலும், ஜானின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
வெளியில் தொங்கிய ஏணி வழியாக இருவரும் படகில் இறங்கினார்கள்.
கப்பலின் ஓரத்தில் பயங்கரமாகக் கொந்தளித்த ஜலத்தில் படகு தத்தளித்துக் கொண்டிருந்தது.
ஜான் ஒரு கையால் ரஜனியைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் படகைக் கப்பலுடன் பிணைத்திருந்த சங்கிலியை அவிழ்த்து விட்டான்.
கப்பலிலிருந்து விடுபட்டதும் படகு அப்படியும் இப்படியும் வெகு பலமாக ஆடிற்று. ஆனாலும், அது உயிர் காக்கும் படகாதலால் கவிழவில்லை.
சில நிமிஷத்துக்குள் கப்பலுக்கும் படகுக்கும் நடுவில் வெகுதூரம் ஏற்பட்டுவிட்டதென்று மங்கிய நட்சத்திர வெளிச்சத்தில் தெரிந்தது.
"ஐயோ! மறுபடி கப்பலை எப்படிப் பிடிப்பீர்கள்!" என்றாள் ரஜனி.
"பார்த்தாயா, முன்னாமேதான் சொன்னேனே?"
"எனக்காகக் கேட்கவில்லை. நீங்கள் திரும்பிப் போகவேண்டாமா?"
"எதற்காகப் போகவேண்டும்?"
"எனக்குத்தான் உயிர் வாழ்வதில் சலிப்பு ஏற்பட்டு விட்டது."
"எனக்கும் அப்படித்தான்."
"ஆனால், கப்பலில் உங்களுக்கு வேலை இருக்கிறதே அதை யார் செய்வார்கள்?"
"இன்று இரவு எனக்கு வேலையில்லை, நாளைக்கு யாருமே செய்யவேண்டிய அவசியமிராது."
"என்ன சொல்லுகிறீர்கள்?"
"அரை மணி நேரம் பொறுத்துப் பார்த்தால் தெரியும்."
சற்றுநேரம் மௌனமாயிருந்த பிறகு ரஜினி, "நீங்களும் உயிரை விடுவதற்காகத்தான் வந்தீர்களா?" என்று கேட்டாள்.
"இல்லை; உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வந்தேன். சிலமணி நேரத்துக்கு..."
"ஒன்றும் புரியவில்லை."
"அவசியம் புரியத்தான் வேண்டுமானால் சொல்கிறேன். 'மேனகா'வை ஜப்பானி ஸப்மரின் பார்த்துவிட்டது. துரத்திக் கொண்டு வருகிறது. கப்பலில் உள்ளவர்களுக்கெல்லாம் இன்னும் அரைமணி நேரந்தான் உயிர் வாழ்க்கை."
"ஐயோ!"
"அவர்களைக் காட்டிலும் இன்னும் சில மணிநேரம் அதிகமாக நாம் உயிரோடிருக்கலாம்."
"எதற்காக இருக்க வேண்டும்."
"எதற்காக சாக வேண்டும்! பகவான் கொடுத்த உயிரை முடிந்தவரையில் காப்பாற்றிக் கொள்ளலாமே?"
இச்சமயம் பின்புறத்தில் ஏதோ பளிச்சென்று பிரகாசம் தோன்றவே ரஜனி, திரும்பிப் பார்த்தாள்.
இருண்ட கடலின் நடுவில் திடீரென்று தோன்றிய தீயின் ஒளி வெகு பயங்கரமாயிருந்தது.
அதே சமயத்தில் ஆயிரம் இடி சேர்ந்தாற்போல் இடித்தமாதிரி ஒரு கடூர சத்தம் கேட்டது.
மலாய் நாட்டில் வெடிகுண்டு வெடிக்கும் சத்தத்தை ரஜனி கேட்டிருந்தாள். இப்போது கேட்ட சத்தத்துக்கு முன்னால் அந்த வெடிகுண்டுச் சத்தம் ஒன்றுமே இல்லையென்று சொல்லும்படி இருந்தது.
அப்போது ரஜனி தன்னுடைய தலை பதினாயிரம் சுக்கல்களாக உடைந்துவிட்டதென்று கருதினாள்.
ஜான் அவளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு "ஒன்றுமில்லை; பயப்படாதே!" என்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எஸ். எஸ். மேனகா - S.S.Menaka - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ரஜனி, ஜான், பிடித்துக், கொண்டு, வேண்டும், படகு, உயிர், சத்தம், என்றான், இல்லை, கொண்டார்கள், கப்பலில்