புன்னைவனத்துப் புலி - அத்தியாயம் 6
மற்றும் சில தினங்கள் சென்றன. இந்த நாட்களில்
சந்திரசூடன் அடிக்கடி பண்ணையார் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசுவதில்
அதிக நேரம் செலவிட்டு வந்தான்.
இடையிடையே வேட்டையாடுவதற்கு மலை மேலும் போய்க் கொண்டிருந்தான். ஆனால் சீக்கிரத்தில் சலிப்பு அடைந்துவிட்டான். புலியோ அவர்கள் கண்ணில் சிக்காமலே இருந்துவந்தது. மற்ற சிறிய பிராணிகளைச் சுட்டு கொல்லுவதில் சந்திரசூடனுக்குச் சிரத்தையிருக்கவில்லை.
மனோகரனுடன் தினந்தோறும் வந்த சாயபுவுடன் சந்திரசூடன் பேச்சுக் கொடுக்கப் பார்த்தான். அப்துல் ஹமீது வாயைத் திறக்கிற வழியாக இல்லை. ஏதாவது கேள்வி கேட்டால், ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டு வாயை மூடிக் கொள்வான்.
சாயபு வேட்டையில் ரொம்பக் கெட்டிக்காரனா என்று மனோகரனைச் சந்திரசூடன் ஒரு நாள் கேட்டான். "அவன் முகத்திலே கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறானே, தெரியவில்லையா? ஒரு தடவை ஒரு சிறுத்தைப் புலி அவன் பாய்ந்து விட்டது. அதனுடன் மல்யுத்தம் செய்து ஜயித்தான். அந்தப் போரில் புலி அவனுடைய இரண்டு கன்னங்களையும் பிறாண்டி விட்டது. அப்படியும் வேட்டையாடுவதை நிறுத்தவில்லை. இந்த ஊர் புலியைக் கண்டு பிடித்துச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதில் அவன் என்னைவிடத் துடியாயிருக்கிறான். ஆனால் புலி தென்பட்டால் என்னிடம் தான் சொல்லவேண்டும் என்றும் அவன் துப்பாக்கியில் கையை வைக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கிறேன். இத்தனை நாள் மலைமேல் அலைந்துவிட்டு, புலியை இன்னொருவன் சுடுவதற்கு விடுவேனா?" என்றான் மனோகரன்.
"அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. புன்னைவனத்துப் புலி தங்களுக்குச் சொந்தமா, என்ன? அதுவும் பண்ணையார் சங்கரசேதுராயரின் சொத்தா? என் கண்ணில் அகப்பட்டால் நான் சுடுவேன்" என்றான் சந்திரசூடன்.
அன்று மலைமேல் அவன் மற்ற இருவரையும் விட்டுப் பிரிந்து, "நான் வேறு பக்கம் போய்ப் பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனான். மலைமேல் ஓரிடத்தில் புதர்கள் மனிதனை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து வளர்ந்திருந்தன. அங்கே ஒரு வேளை புலி மறைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆகையால் சந்திரசூடன் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டு போனான். எதிரிலும் இரண்டு பக்கமும் பார்த்தானே தவிர, பின்புறத்தில் பார்க்கவில்லை. திடீரென்று அந்த நிசப்தமான மலைப் பிரதேசத்தில் சாயபுவின் குரல் 'புலி! புலி' என்று கூச்சலிட்டது. அதே சமயத்தில் பின்னால் புதர்களில் சலசலப்புக் கேட்டது. சந்திரசூடன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். ஆம்; புதர்களுக்கு மத்தியில் புலி மறைந்து வந்து கொண்டிருந்தது. புலியின் முகம் தெரியவில்லை. ஆனால் உடம்பின் கோடுகல் தெரிந்தன. சந்திரசூடன் எவ்வளவோ துணிச்சல் உள்ளவனாயினும் அச்சமயம் வெலவெலத்துப் போனான். எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துவிட்டோ ம் என்ற எண்ணம் அவனுக்கு அத்தகைய வெலவெலப்பை உண்டாக்கிற்று. அன்றைக்கென்று அவன் இன்னொரு காரியத்தையும் அலட்சியம் செய்து விட்டான். துப்பாக்கியில் குண்டு போட்டுக் கெட்டித்து தயாராக வைத்திருக்கவில்லை. புலியோ வெகு சமீபத்தில் வந்திருந்தது. ஆகையால் ஓடித் தப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவன் முடிவு செய்த அதே சமயத்தில் ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது. புதருக்குள் மறைந்து வந்து கொண்டிருந்த புலி திடீரென்று இரண்டு கைகளை நீட்டி அக்கைகளில் வைத்திருந்த துப்பாக்கியினால் அவனை நோக்கிக் குறி பார்த்தது. இது என்ன கனவா, மனப்பிரமையா, ஜால வித்தையா என்பது ஒன்றும் அவனுக்குத் தெரியவில்லை. யோசிப்பதற்கு நேரமும் இருக்க வில்லை. ஓட்டம் பிடிப்பது ஒன்றுதான் அவன் செய்யக் கூடியதாயிருந்தது, அவ்வளவுதான் 'ஓ!' என்று அலறிக் கொண்டு வழி கண்ட இடத்தில் விழுந்தடித்து ஓடினான். துப்பாக்கிக் குண்டு அவனுக்குச் சமீபமாகப் பாய்ந்து சென்று ஒரு மரத்தைத் தாக்கியதைக் கண்டான். அவனுடைய ஓட்டத்தின் வேகம் இன்னும் அதிகமாயிற்று. குடல் தெறிக்க ஓடி மலையிலிருந்து கீழே இறங்கினான். மனோன்மணியின் வீட்டை அடைந்த பின்னர் தான் நின்றான்.
மனோன்மணி வீட்டில் இருந்தாள். "என்ன? என்ன?" என்று ஆவலுடன் கேட்டாள். மூச்சு வாங்கல் நின்ற பிறகு, இனிமேல் நான் வேட்டையாடப் போக மாட்டேன்! போகமாட்டேன்!" என்றான்.
மனோன்மணி ஒன்றும் புரியாதவளாய், "ஒரு வேளை இன்று புலியைப் பார்த்தீங்களோ?" என்று கேட்டாள்.
"ஆமா, பார்த்தேன்! அது ரொம்பப் பொல்லாத புலி" என்றான் சந்திரசூடன்.
"அது பொல்லாத புலி என்று தான் தெரியுமே? எத்தனை ஆடு மாடுகளை அடித்துக் கொன்றிருக்கிறது? இவ்வளவு பயந்த சுபாவம் உள்ளவர்கள் வேட்டைக்கு போயிருக்கக் கூடாது!" என்றாள் மனோன்மணி.
"ஆடு மாடுகளை அடித்துக் கொல்வதோடு அந்தப் புலி நின்றால் பாதகமில்லை. மனிதர்களையும் தாக்க வருகிறது!" என்றான் சந்திரசூடன்.
"மனிதர்களைக் கண்டால், அதுவும் வேட்டையாட போகும் மனிதர்களைக் கண்டால், புலி பிரதட்சணம் செய்து நமஸ்காரம் பண்ணுமா?"
"அப்படிப் பண்ண வேணும் என்று நான் சொல்லவில்லை. எல்லாப் புலிகளையும் போல் மனிதன் மேல் பாய்ந்தால் பரவாயில்லை. இந்தப் புலி கையில் துப்பாக்கி எடுத்துச் சுட வருகிறது!"
புலியைக் கண்ட கிலியினால் இவருக்கு ஏதாவது மூளைக் கோளாறு வந்து விட்டதோ என்ற பாவத்தோடு சந்திரசூடனை மனோன்மணி பார்த்தாள். அப்புறம் வேறு பேச்சு எடுத்தாள். சந்திரசூடனும் பின்னர் மூளைத் தெளிவுடன் பேசினான்.
"நான் இன்றைக்கு மதராஸ் புறப்பட்டுப் போகிறேன். பண்ணையாரின் உயில் எழுதும் காரியமாகத்தான் போகிறேன். திரும்பி வர ஒரு வாரம் ஆகலாம். அதுவரை நீங்கள் ஜாக்கிரதையாயிருக்க வேணும்?" என்றாள்.
"எந்த விஷயத்தில் நான் ஜாக்கிரதையாயிருக்க வேணும்?" என்று கேட்டாள் மனோன்மணி.
"பொதுவாக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். குழந்தை ராஜ்மோகன் விஷயத்தில் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்" என்றாள்.
"உண்மைதான், வரவர, மனோகரின் நடத்தையில் முரட்டுத்தனம் அதிகமாகி வருகிறது. அது மட்டும் அல்ல, அவருடன் வரும் சாயபு ஒருநாள் குழந்தையின் அருகில் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் நகர்ந்து விட்டான். அது வேற எனக்கு கவலையாயிருக்கிறது."
"நானும் ஒரு நாள் அதைக் கவனித்தேன், சாயபுவிடம் கேட்டு விட்டேன். 'இந்தக் குழந்தையின் காலில் ஏதோ ஊனம் என்றார்கள். எனக்குக் கொஞ்சம் மலையாள வைத்தியம் வரும். அதனால், காலைக் குணப்படுத்த முடியுமா என்று பார்த்தேன்' என்றான். அவனுடைய பதில் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை."
"மொத்தத்தில் இந்த ஊரில் இருக்கவே எனக்குப் பயமாயிருக்கிறது. பண்ணையாரைப் பார்க்க முடியாது என்றோ, பார்த்துப் புண்ணியமில்லை என்றோ ஏற்பட்டால், இந்த ஊரைவிட்டுச் சீக்கிரத்தில் போய் விட விரும்புகிறேன்" என்றாள் மனோன்மணி.
"அவ்வளவு அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள், நான் திரும்பி வந்ததும் ஒரு முடிவுக்கு வரலாம்" என்றான் சந்திரசூடன்.
இந்தச் சமயத்தில் மனோகரும் வந்து சேர்ந்தான். சந்திரசூடனைப் பார்த்து இடி இடி என்று சிரித்தான். "இத்தனை நாளைக்குப் பிறகு புலி கண்ணுக்குத் தென்பட்டது. அதை அப்படிக் கூச்சல் போட்டு விரட்டி விட்டீரே? அப்பப்பா! என்ன ஓட்டம்! என்ன ஓட்டம்! புலி வேட்டைக்குச் சரியான ஆள் நீர் தான்!" என்று சொல்லி விட்டு மனோகரன் விழுந்து விழுந்து சிரித்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 6 - Punnaivanathu Puli - புன்னைவனத்துப் புலி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - புலி, சந்திரசூடன், நான், அவன், என்றான், மனோன்மணி, என்ன, வந்து, தான், ஜாக்கிரதையாயிருக்க, என்றாள், ஓட்டம், வருகிறது, கேட்டாள், வேணும், வேறு, இரண்டு, அவனுடைய, செய்து, வேண்டும், மலைமேல், போனான், நாள், சமயத்தில்