புன்னைவனத்துப் புலி - அத்தியாயம் 12
சந்திரசூடன் மேற்கூறிய விவரங்களையெல்லாம்,
கூறினான். "திருமணத்துக்கு அவசியம் வந்து சேர வேண்டும்" என்று வற்புறுத்தி
என்னை அழைத்து விட்டுப் போனான். நானும் கலியாணத்துக்குப் போவதாகத்தான்
இருந்தேன்.
இந்த நிலைமையில் ஒரு நாள், திருமணம் வைத்திருந்த தேதிக்கு இரண்டு நாளைக்கு முன்னால், "எதிர்பாராத காரணங்களினால் அழைப்பில் குறிப்பிட்டபடி என் திருமணம் நடைபெறாது, சிரமத்துக்கு மன்னிக்கவும்" என்று சந்திரசூடன் கையொப்பமிட்ட கடிதம் வந்தது. எனக்கு எப்படி இருந்திருக்குமென்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம்.
மறுபடியும் சந்திரசூடனைக் கண்டு பிடித்து, "எனப்பா இப்படி ஏமாற்றி விட்டாயே! ஏன் கலியாணம் நின்று போயிற்று!" என்று கேட்டேன்.
"எல்லாம் அந்த சி.ஐ.டி சாயபுவினால் வந்த வினை!" என்றான் சந்திரசூடன்.
"முன்னால் அந்தப் பாதிக் கதையின் பேரில் பழியைப் போட்டாய். இப்போது சாயபுவின் பேரில் பழிபோடுகிறாயே!" என்று கேட்டேன்.
சந்திரசூடன் பின்வருமாறு கதை முடிவைக் கூறினான்:
சென்னைக்கு வந்த பிறகு சந்திரசூடன் பல முறை அந்த ஸி.ஐ.டி. சாயபுவைச் சந்திப்பதற்கு முயற்சி செய்தான்; அவன் அகப்படவேயில்லை. பின்னர் கலியாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய தொடங்கினான்.
கலியாணத் தேதிக்கு நாலு நாளைக்கு முன்பு ஹமீது அவனைத் தேடிக் கொண்டு வந்தான்.
"அந்தப் பெண்ணுக்கும் அவள் குழந்தைக்கும் நீர் உதவி செய்ததெல்லாம் சரிதான். ஆனால் இப்போது செய்ய உத்தேசிக்கும் காரியம் சரியில்லை" என்றான்.
"ஏன்! என்ன தவறு? விதவா விவாகத்தை இப்போது எங்கள் ஹிந்து சமூகம் கூட ஒப்புக் கொள்கிறதே! உமக்கு என்ன ஆட்சேபணை!" என்றான் சந்திரசூடன்.
"அவள் விதவை என்பதற்கு என்ன ருசு! புருஷன் ஒரு வேளை உயிரோடிருந்தால்...!"
"அது யோசிக்க வேண்டிய விஷயந்தான். புருஷன் உயிரோடிருந்தால் மறு கலியாணங்கூடச் சட்டப்படி செல்லாது! ஆனால் விமான விபத்தைப் பற்றித்தான் அப்போதே எல்லாப் பத்திரிகையிலும் விவரமாக வெளியாகி இருக்கிறதே!"
"விமான விபத்தில் எல்லோரும் இறந்துதான் போனார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? இவள் புருஷன் எங்கேயாவது திண்டாடி விட்டு வந்து சேர்ந்தால்..."
"ஆமாம்! எனக்குக் கூட அதைப் பற்றிச் சிறிது கவலையாகத்தானிருக்கிறது. முன்யோசனை இல்லாமல் ஏற்பாடு செய்துவிட்டேன்."
"இப்போது என்ன மோசம்? ஏற்பாட்டை ரத்துசெய்து விட்டால் போகிறது! அல்லது தள்ளியாவது வைக்கலாமே? புருஷன் நிச்சயமாய் செத்து தொலைந்து போனான் என்று தெரிந்த பிறகு கலியாணத்தை வைத்துக் கொண்டால் போகிறது!"
"நானே போய் அவளிடம் சொல்ல வெட்கமாயிருக்கிறது. எனக்காக நீர் போய் இந்த விஷயத்தைச் சொன்னால் நல்லது. நானும் அச்சமயம் வந்து சேர்ந்து கொள்கிறேன்."
"அந்தப் பெண்பிள்ளை நான் அவள் குழந்தையைக் கொல்லப் பார்த்ததாகவல்லவா எண்ணிக் கொண்டிருக்கிறாள்! என்னைப் பார்த்ததும் எரிந்து விழுவாளே!"
"அதையெல்லாம் நான் சரிப்படுத்தி விட்டேன். நீர் தான் அவளுடைய குழந்தையைக் காப்பாற்றியவர் என்று காரண காரியத்துடன் எடுத்துச் சொல்லி அவளும் ஒப்புக் கொண்டாள். உமக்கு நன்றி செலுத்துவதற்காகக் காத்திருக்கிறாள். நீர்தான் எனக்காகப் போய் கலியாணத்தைத் தள்ளிப் போடும்படி சொல்ல வேண்டும். காரணத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்."
"அப்படியானால், பார்க்கிறேன்" என்று சொல்லி விட்டு அப்துல் ஹமீது மனோன்மணியின் வீட்டுக்குப் போனான். சற்று பின்னால் சந்திரசூடனும் சென்றான்.
சாயபுவைப் பார்த்ததும் மனோன்மணி மகிழ்ச்சி அடைந்து குழந்தையை இரு முறையும் காப்பாற்றியதற்காகப் பலமுறை அவனுக்கு நன்றி கூறினாள்.
பிறகு அப்துல் ஹமீது ஒருவாறு அவளுடைய கலியாணத்தைப் பற்றி பிரஸ்தாபித்தான்.
"தனியாக வாழ்க்கை நடத்துவது இந்த உலகில் மிகவும் கஷ்டமென்று தெரிந்து கொண்டேன். அதற்காகத்தான் மறுமணத்துக்குச் சம்மதித்தேன். இந்தக் குழந்தையின் பேரிலும் அவர் ரொம்ப ஆசையாயிருக்கிறார்!" என்றாள் மனோன்மணி.
"மறுமணம் என்பது நிச்சயமாயிருந்தால் சரிதான், ஆனால் உங்கள் முதல் புருஷன் ஒரு வேளை உயிரோடிருந்தால்...?" என்று ஹமீது கூறியதும், மனோன்மணிக்குத் தாங்க முடியாத துக்கம் மீறிக் கொண்டு வந்து விட்டது. கண்ணீர் பெருகியது.
உடனே அவள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டாள்.
அந்தச் சமயத்தில் சந்திரசூடன் வந்து சேர்ந்தான்.
"சாயபு! இது என்ன?" என்று கோபமாகக் கேட்டான்.
மனோன்மணி விம்மலை அடக்கிக் கொண்டு, "அவர் மீது குற்றம் ஒன்றுமில்லை, ராஜ்மோகனுடைய தகப்பனாரை ஞாபகப்படுத்தினார். எனக்குத் தாங்க முடியாமல் அழுகை வந்துவிட்டது" என்று சொன்னாள்.
"இப்போது எதற்காக அதை ஞாபகப்படுத்தினீர்?" என்று சந்திரசூடன் கேட்டான்.
"அவர் செத்துப் போனார் என்பது நிச்சயந்தானா என்று கேட்டேன். அதற்கு இந்த அம்மாள் இவ்வளவு அதிகமாய் அழுது விட்டாள்" என்றான் ஹமீது.
"நீர்தான் ஸி.ஐ.டி.காரராயிற்றே! தர்மராஜன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்று கண்டுபிடித்துச் சொல்லுமே?" என்றான் சந்திரசூடன்.
"அதற்கென்ன? ஒரு வருஷம் அவகாசம் கொடுத்தால், கண்டுபிடித்துச் சொல்கிறேன்." என்றான் ஹமீது.
"நல்ல வேளை! ஒரு வருஷம் என்னத்திற்கு ஒரு நிமிஷம் போதாதா வேஷத்தைக் கலைப்பதற்கு?" என்று சொல்லிக் கொண்டே, சந்திரசூடன் அப்துல் ஹமீதின் தலைத் தொப்பியையும் முகத்தின் துணிக் கட்டையும் எடுத்து எறிந்தான்.
மனோன்மணி, "ஓ!" என்று அலறிக் கொண்டு போய்த் தர்மராஜனுடைய காலின் கீழ் விழுந்தாள்!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அத்தியாயம் 12 - Punnaivanathu Puli - புன்னைவனத்துப் புலி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சந்திரசூடன், என்றான், ஹமீது, என்ன, புருஷன், வந்து, இப்போது, அவள், மனோன்மணி, கொண்டு, சொல்ல, போய், அப்துல், வேண்டும், அவர், உயிரோடிருந்தால், வேளை, அந்தப், நீர், கேட்டேன், போனான், பிறகு