சிரஞ்சீவிக் கதை
தயவு செய்து தப்பாக எண்ணிக்
கொள்ள வேண்டாம். நான் எழுதப் போகிற இந்தக் கதை "சிரஞ்சீவிக் கதை" என்பதாக
நான் உரிமை கொண்டாடவில்லை. உண்மையில், இது தீர்க்காயுள் பெற்ற கதை கூட
அன்று. இதனுடைய ஆயுள் மூன்று நிமிஷந்தான், வேகமாய்ப் படிப்பவர்களுக்கு.
எழுத்துக் கூட்டிப் படித்தால் கூட ஐந்து நிமிஷந்தான் இக்கதையின் வாழ்வு.
இந்தக் கதைக்குத் தலைப்பாக அமைந்த "சிரஞ்சீவிக் கதை" ஒரு ஹாஸ்யப் பத்திரிகையிலே வெளியானது. அதில், ஒரு ஸ்திரீ எப்படித் தன் நாத்தனார் மீது வஞ்சம் தீர்க்கும் பொருட்டுத் தன் மூன்று குழந்தைகளைக் கொன்று, நான்கு பூனைக் குட்டிகளைக் கொன்று, தன்னையும் கொன்று கொண்டாள் என்பதும், இந்தச் சம்பவங்களினால் மனமுடைந்த அவளுடைய கணவன் வீதியோடு போகும்போது எப்படி ஒரு டிராம் வண்டி அவன் மீது ஏறி அவனை உடல் வேறு தலை வேறு ஆக்கிற்று என்பதும் ஆச்சரியகரமான முறையில் வியக்கத்தக்க நடையில் நகைச்சுவை ததும்ப விவரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கதையின் தலைப்பு "அமிர்தபானம்". தலைப்புக்கு மேலே பத்திரிகாசிரியர் கட்டங்கட்டி விசேஷக் குறிப்பு ஒன்றும் வெளியிட்டிருந்தார்.
அந்த விசேஷக் குறிப்பின் முதல் வரியைப் படித்ததுதான் என்னுடைய கதாநாயகர் ஸ்ரீமான் மார்க்கண்ட முதலியார் செய்த தப்பிதம். பத்திரிகை படிக்கும் விஷயத்தில் அவர் தம் வாணாளில் செய்த முதல் தப்பிதம் அது தான். கடைசித் தப்பிதமும் அதுவேதான்.
மேற்படி தப்பிதம் கூட அவர் வேண்டுமென்று மனமாரச் செய்யவில்லை. பணம் கொடுத்துப் பத்திரிகை வாங்கி, ஊசியைப் பெயர்த்து எடுத்து, பக்கங்களைப் புரட்டி வாசிப்பதற்கு வேண்டிய உற்சாகம் அவரிடம் லவலேசமும் கிடையாது. சாயங்காலம் ஆபீஸ் விட்டதும் வழக்கம் போல் மயிலாப்பூர் டிராம் வண்டியில் ஏறி உட்கார்ந்தார். வழியில் மௌண்ட் ரோட்டில் அந்த வண்டியில் ஏறி அவர் பக்கத்தில் உட்கார்ந்த ஒரு மனுஷன் கையில் மேற்படி பத்திரிகை இருந்தது. அந்தச் சிரஞ்சீவிக் கதை பிரசுரமாயிருந்த பக்கத்தை அவன் பிரித்து வைத்துக் கொண்டிருந்தான். தற்செயலாக ஸ்ரீமான் மார்க்கண்ட முதலியாருடைய பார்வை அந்தப் பக்கத்தின் மேல் அந்தக் கட்டத்திற்குள் விழுந்தது.
இது ஒரு சிரஞ்சீவிக் கதை. இதன் ஆசிரியர் ஆயுள் காலத்தில் இந்தக் கதை சாகாது. எனெனில், அவர் நம் உடம்பில் உயிருள்ள வரையில் தினம் ஒரு தடவையாவது, ஒருவரிடமாவது, "என்னுடைய 'அமிர்தபானம்' என்னும் கதையை வாசித்தாயா?" என்று கேட்டுக் கொண்டு தானிருப்பார்!...
"இது ஒரு சிரஞ்சீவிக் கதை..." என்று முதலியார் படித்தார். அவ்வளவு தான்; அதற்குமேல் அவருடைய பார்வை சொல்லவில்லை! ஆனால் மனம் என்னவோ வேலை செய்யத் தொடங்கிவிட்டது!
"சிரஞ்சீவி-சிரஞ்சீவி-இந்த உலகத்தில் சிரஞ்சீவியாயிருப்பது சாத்தியமா? ஏன் சாத்தியமில்லை? சித்த புருஷர்கள் எத்தனையோ பேர் இல்லையா?-சிரஞ்சீவியாயில்லா விட்டாலும் நூறு வயது நிச்சயம் இருக்கலாம்-ஏன் இருக்கக் கூடாது?-'மனிதன் சாக வேண்டுமா' என்னும் புத்தகத்தில் டாக்டர் வான் டிண்டார்மஸ் என்ன சொல்லியிருக்கிறார்?..."
ஸ்ரீமான் மார்க்கண்ட முதலியாருக்கு அன்று தான் ஐம்பது வயது பூர்த்தியாகி இருந்தது. மறுநாள் பொழுது விடிந்தால் ஐம்பத்தோராவது வயது பிறக்கும். அவர் மௌண்ட் ரோட்டுக்கும் ராயபேட்டைக்கும் மத்தியிலுள்ள புதுப்பேட்டைவாசி. அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே வாழ்ந்து வருபவர். அவருடைய வாழ்க்கைத் துணைவி ஒரே ஒரு புதல்வியை விட்டு விட்டுக் காலஞ் சென்று ஏழெட்டு வருஷங்களாயின. பெண்ணும் கலியாணமாகி ஜோலார்பேட்டையிலுள்ள புருஷன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். ஆகவே, முதலியார் இப்போது தன்னந்தனியாகவே இருந்து வந்தார். ஒரு வீட்டு மெத்தை அறையை மட்டும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் வசித்தார். அடுத்த வீதியில் அவருடைய தங்கை தன் புருஷன் குழந்தைகளுடன் சம்சாரம் நடத்தி வந்தாள். அவர்கள் வீட்டிலே தான் இவருக்கு இரண்டு வேளையும் சாப்பாடு. முதலியார் மேல் அவருடைய தங்கைக்கு அதிகப் பிரியம். ஏழைக் குடும்பம்; ஆகையால் முதலியார் அங்கே சாப்பிடுவதால் கொஞ்சம் சௌகரியம் ஏற்பட்டு வந்தது; அவருடைய காலத்துக்குப் பிறகு இன்னும் அதிக சௌகரியத்தை எதிர் பார்த்தார்கள்.
மார்க்கண்ட முதலியார் அன்று மாலை தமது அறைக்கு வந்து சேர்ந்ததும், சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு தமது வாழ்க்கையில் சென்ற காலத்தையும் வருங்காலத்தையும் பற்றித் தொடர்ந்து எண்ணமிடத் தொடங்கினார்: "ஐம்பது வயது ஒரு வயதா? மனிதனுடைய பூரண ஆயுளில் பாதிதான் ஆயிற்று. நியாயமாக இன்னும் ஐம்பது வருஷம் இருக்கலாம்; நாற்பது வருஷமாவது இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி வாழ்க்கையைச் செப்பனிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும். சோம்பேறித்தனம் உதவாது. இதற்கு முன் பல தடவை தேகப் பயிற்சிகளை ஆரம்பித்து ஆரம்பித்து இடையிடையே நிறுத்தியாகி விட்டது. இனிமேல் அப்படி நிறுத்தக் கூடாது. நாளை முதல் தொடர்ச்சியாய் இடைவிடாமல் எல்லாம் செய்து வரவேண்டும். சீமையிலே வெள்ளைக்காரர்கள் அறுபது வயதுக்கு மேல் கலியாணம் செய்து கொள்கிறார்களே!..." இப்படி எண்ணியபோது முதலியாருக்குத் தம்மையறியாமல் புன்னகை வந்தது. கீழே வாசல்புறத்து அறையில் குடியிருந்த கார்ப்பரேஷன் நர்ஸு நவமணி அம்மாள் அவருடைய மனக் கண்ணின் முன் வந்தாள். தாம் குறுக்கே நெடுக்கே போகும் போது அவள் ஆவல் ததும்புகிற கண்களுடன் தம்மைப் பார்ப்பதும் பெருமூச்சு விடுவதும் எல்லாம் ஞாபகம் வந்தன. முதலில், "இதென்ன உபத்திரவம்? இந்த வீட்டைவிட்டுப் போய்விடலாமா?" என்று நினைத்தார். பிறகு, "ரொம்ப நன்றாயிருக்கிறது! இதற்குப் பயந்தா இத்தனை நாள் இருந்த விட்டைவிட்டுப் போவது? அவள் தான் போகட்டுமே?" என்று எண்ணினார். கொஞ்ச நாளைக்கெல்லாம், குறுக்கே நெடுக்கே போகும் போது அவருடைய கண்களே அந்த நர்ஸு இருக்கிறாளோ என்று தேடத் தொடங்கின. இன்னும் சில நாளைக்குப் பிறகு, நவமணி அம்மாள் பெருமூச்சு விடும் போது இவருக்கும் பெருமூச்சு வரத் தொடங்கியது.
"எதற்காக இப்படி நாம் தனிமை வாழ்க்கை நடத்த வேண்டும்? ஏன் கலியாணம் செய்து கொண்டு சந்தோஷமாய் வாழக் கூடாது?" என்று சில சமயம் தோன்றும். சில சமயம் இப்படியும் எண்ணமிடுவார்: "எல்லாரும் என்ன சொல்வார்கள்? சிரிக்கமாட்டார்களா? ஐம்பது வயதுக்கு மேல் கலியாணம்! அதிலும் இன்னும் சிலரைப்போல் தேக நிலைமையாவது சரியாயிருக்கிறதா? தலை நரைத்து எத்தனையோ வருஷமாயிற்று. கொஞ்ச நாளாகத் தொந்தி 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக' வளர்ந்து வருகிறது. தள்ளாமை அதிகமாயிருக்கிறது. மாடிப்படி ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக ஏறினால் மூச்சு வாங்குகிறது. இந்த லட்சணத்தில் கலியாணமா? ஹும்! கலியாணம்? நல்ல தமாஷ்! கல்யாணம்! சீ!"
இவ்வாறு பல பல எண்ணங்களினால் சில காலமாக அலைக்கப் பெற்று வந்த ஸ்ரீமான் மார்க்கண்ட முதலியார் இன்று ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தார். "ஆறு மாதம் ஒழுங்கான வாழ்க்கை நடத்துவது; அதற்குப் பிறகு தேக நிலைமைக்குத் தகுந்தபடி யோசித்து முடிவு செய்வது" என்பது தான் அந்தத் தீர்மானம்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரஞ்சீவிக் கதை - Chiranjeevi Kadhai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவருடைய, முதலியார், தான், அவர், சிரஞ்சீவிக், மார்க்கண்ட, வயது, கலியாணம், ஐம்பது, இன்னும், மேல், பிறகு, கொண்டு, ஸ்ரீமான், செய்து, அந்த, கொன்று, பெருமூச்சு, போது, அங்கேயே, தப்பிதம், அன்று, இந்தக், பத்திரிகை, இருக்கலாம், கூடாது