சிரஞ்சீவிக் கதை
நேற்றுச் சாயங்காலம் ஐம்பது காந்தி குல்லாத்
தொண்டர்கள் பஜனை பாடிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். பத்து அடுப்பு வைத்துப்
பத்துக் குடங்களில் உப்புக் காய்ச்சினார்கள். பத்தாயிரம் ஜனங்கள் கூடியிருந்தார்கள்.
அவர்கள் மாதிரிக்குக் கொஞ்சம் உப்பு வாங்கிக் கொள்வதற்காகப் போட்டியிட்ட
போது, பெரிய ரகளையாகிவிட்டது.
இராத்திரி கவர்ன்மெண்ட் ஹவுஸில் மறுபடியும் அந்தரங்கக் கூட்டம் நடந்தது. "நாளைக்குக் கூட்டத்தைக் கலைக்க உத்தரவு கொடுக்காவிட்டால் நகரின் அமைதிக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல" என்று போலீஸ் கமிஷனரும், இன்ஸ்பெக்டர் ஜெனரலும் சொன்னார்கள். அந்தப் பொறுப்பை ஏற்க மற்றவர்கள் சித்தமாயில்லை. மேலும், அன்றைய சாயங்காலம் வெளியான ஆங்கிலோ இந்தியப் பத்திரிகை, "சென்னையில் பிரிட்டிஷ் ராஜ்யம் நடக்கிறதா? இல்லையா?" என்று ஒரு கேள்வி கேட்டிருந்தது. எனவே, மறுநாள் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்குப் போலீஸ் இலாகாவுக்குச் சர்வாதிகாரம் அளிக்கப்பட்டது.
இந்த அந்தரங்கக் கூட்டத்தின் விஷயமும், முடிவும் சென்னைவாசிகளுக்கு எப்படித் தெரியும்? அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், இரண்டு நாளாய்க் காங்கிரஸ் தொண்டர்கள் உப்புக் காய்ச்சுகிறார்கள். அவர்களை போலீஸார் ஒன்றும் செய்யவில்லையென்பதே. ஆகவே அன்று சாயங்காலம் சென்னைவாசிகளில் முக்கால்வாசிப் பேர் கடற்கரையில் வந்து கூடிவிட்டார்கள். வடக்கே இரும்புப் பாலத்திலிருந்து தெற்கே குவின் மேரிஸ் காலேஜ் வரையில் கிழக்கே ஜலக்கரையிலிருந்து மேற்கே கோயமுத்தூர் கிருஷ்ணையர் ஹோட்டல் வரையில் ஒரே ஜனக்கூட்டந்தான்.
போலீஸ் வீரர்கள் அணிவகுத்துக் கடற்கரைச் சாலை வழியாக நாலைந்து தடவை குறுக்கும் நெடுக்கும் போய் வந்தனர். ஒன்றும் பிரயோஜனமில்லை; கூட்டம் கலையவில்லை.
அன்று உப்புக் காய்ச்சப்படவில்லை; தொண்டர்கள் கடற்கரைக்கு வரவேயில்லை! எனெனில் அவர்கள் விடுதியிலிருந்து கிளம்பும்போதே கைது செய்யப்பட்டனர். இந்த விவரம் ஜனங்களுக்குத் தெரியாது. அவர்கள் ஒருவரையொருவர், 'என்ன நடக்கிறது? என்ன நடக்கப்போகிறது?' என்று கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் பதில் மட்டும் கிடைக்கவில்லை. 'என் என்றார்க்கு என் என் என்றார் எய்தியதரிந்திலாதார்!'
ஸ்ரீமான் மார்க்கண்ட முதலியார், பைகிராப்ட்ஸ் சாலை வழியாகக் கடற்கரைக்கு வந்து கொண்டிருந்தவர், இந்தக் கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டார். அநேகம் பேரை அவர், "என்ன விசேஷம்? எதற்காகக் கூட்டம்?" என்று கேட்டார். "காங்கிரஸ் கலாட்டா" என்றார்கள் சிலர். "காந்தி குல்லாக்காரர்கள் உப்புக் காச்சுகிறார்கள்" என்றார்கள் சிலர். ஆனால் இவ்வளவு பெரிய ஜனக் கூட்டத்திற்கு என்ன காரணம் என்பதற்கு மட்டும் யாரும் திருப்திகரமான பதில் சொல்லவில்லை.
எது எப்படியானாலும் தாம் அன்று கடற்காற்று வாங்காமல் போவதில்லையென்று மார்க்கண்ட முதலியார் தீர்மானித்திருந்தார். கூட்டத்தில் புகுந்து நெருக்கித் தள்ளிக் கொண்டு மேலே மேலே சென்று, கடைசியில் கடற்கரைக்கு வெகு சமீபமாக வந்துவிட்டார்.
அந்தச் சமயத்தில் போலீஸ் படை ஆறாவது தடவையாகக் கடற்கரைச் சாலையில் 'மார்ச்' செய்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் போலீஸ் படையின் மத்தியில் எங்கிருந்தோ மாயமாக ஒரு கல் வந்து விழுந்தது; அப்புறம் இன்னொரு கல் வந்து விழுந்தது. மூன்றாவது கல்லும் விழுந்தது.
அடுத்த கணத்தில் போலீஸ் படை நின்றது. 'ஷுட்!' என்று உத்தரவு பிறந்தது.
அந்தப் போலீஸ்காரர்களின் துப்பாக்கிகளிலிருந்து எந்தக் கணத்தில் குண்டுகள் கிளம்பினவோ, அதே கணத்தில், ஓர் இம்மியும் வித்தியாசம் இல்லாமல், மார்க்கண்ட முதலியார் கூட்டத்தை விலக்கித் தள்ளிக் கொண்டு தலையை வெளியே நீட்டினார். தக்ஷணம் அவருடைய கண்களுக்கெதிரில் ஆயிரம் மின்னலின் பிரகாசம் தோன்றிற்று. அவருடைய காதில் ஆயிரம் இடிகள் சேர்ந்தாற்போல் இடிக்கும் சப்தம் கேட்டது. அடுத்த கணத்தில் அவர் சுருண்டு கீழே விழுந்தார்.
அன்று இரவு துப்பாக்கிப் பிரயோகத்தினால் காயமடைந்தவர்களையெல்லாம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று பரிசோதித்தபோது, முதலியாருடைய ஜீவன் ஒரு விநாடி கூடத் தாமதிக்காமல் குண்டு பட்டதும் உடலை விட்டு சென்றிருக்க வேண்டும் என்று தெரிய வந்தது.
*****
சத்தியாகிரஹ இயக்கமெல்லாம் ஒருவாறு அடங்கிய பின்னர், அன்றைய தினம் கடற்கரையில் போலீஸ் துப்பாக்கிக் குண்டினால் உயிர் நீத்த நிரபராதிகளின் ஞாபகார்த்தமாக ஏதாவது செய்ய வேண்டுமென்று சில பிரமுகர்கள் முயற்சி செய்தார்கள். கார்ப்பொரேஷன் கூட்டத்தில், ஒரு காங்கிரஸ் கௌன்ஸிலர் பின்வரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
"கடற்கரைத் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிர் துறந்த ஸ்ரீமான் மார்க்கண்ட முதலியாரின் ஞாபகார்த்தமாக, அவர் புதுப்பேட்டையில் வெகு காலமாக வசித்து வந்த சந்துக்கு, இப்போதுள்ள 'ஜாம்பவந்த லாலா சந்து' என்ற பெயரை நீக்கி விட்டு, 'மார்க்கண்ட முதலியார் தெரு' என்று பெயர் வைக்க வேண்டியது."
தீர்மானம் ஏகமனதாக நிறைவேறி அமுலுக்கும் வந்தது.
அந்தப் பழைய மார்க்கண்டனைப் போலவே, என்னுடைய கதாநாயகர் ஸ்ரீமான் மார்க்கண்ட முதலியாரும் என்றும் ஐம்பது வயதுடையவராகச் சிரஞ்சீவிப் பட்டம் அடைந்த வரலாறு இதுதான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரஞ்சீவிக் கதை - Chiranjeevi Kadhai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - போலீஸ், மார்க்கண்ட, வந்து, முதலியார், அன்று, என்ன, அந்தப், உப்புக், கணத்தில், கூட்டத்தில், அவர், விழுந்தது, கொண்டு, கடற்கரைக்கு, தொண்டர்கள், கூட்டம், காங்கிரஸ், சாயங்காலம், ஸ்ரீமான்