சந்திரமதி
5
மோட்டார் வண்டி கிராம கிராமந்தரங்களையெல்லாம்
கடந்து சென்று காலை சுமார் பத்து மணிக்குத் தஞ்சாவூரை நெருங்கிற்று.
அப்போதெல்லாம் பட்டணங்களைச் சுற்றிலும் சுங்கச் சாவடிகள் உண்டு. மோட்டார்
வண்டிக்காரர்கள் சில சமயம் ஏமாற்றி விடுகிறார்கள் என்பதற்காக, தூரத்தில்
கார் சத்தம் கேட்கும்போதே, ஒரு நீளமான மூங்கிலை எடுத்துச் சாலையின் குறுக்கே
மாட்டி விடுவார்கள். மோட்டார்கள் நின்றுதான் ஆக வேண்டும். துரையப்பனுடைய
காரும் சுங்கம் கொடுப்பதற்காக நின்றது. அதே சமயத்தில், சுங்கச்சாவடிக்கு
அருகிலிருந்த வெற்றிலை பாக்குக் கடையிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்தார்கள்.
அவர்கள் வண்டியின் அருகில் வந்து, கதவைத் திறந்து கொண்டு சந்திரமதியின்
பக்கத்தில் உட்கார்ந்தார்கள். அவர்கள் வேறு யாருமில்லை - கறுப்பு மீசைக்காரனும்,
நல்லானும்தான்!
துரையப்பன் திகைத்துப் போனான். சுங்க ரசீது கிடைத்தது. மூங்கிலையும் எடுத்தாகிவிட்டது. ஆனால் துரையப்பன் வண்டியை ஓட்டவில்லை.
அக்கரையான் தன்னுடைய பொடி டப்பியை எடுத்து, ஓர் உறிஞ்சு உறிஞ்சினான். பிறகு, கையை உதறிக் கொண்டே, "ஏன் தம்பி தாமதம்? ஓட்டுங்க; எங்கே போகலாமென்று உத்தேசித்து வந்தீங்களோ, அந்த இடத்துக்கே ஓட்டுங்க" என்றான். இதற்குள் வேடிக்கை பார்க்க ஜனங்கள் வந்து கூடிவிட்டார்கள்.
அங்கு நிற்பதில் பயனில்லையெனக் கண்ட துரையப்பன் வண்டியை விட்டுக் கொண்டு சென்றான். பட்டணத்திற்குள் ஒரு சந்தில் நுழைந்து பூட்டியிருந்த ஒரு வீட்டுக்கெதிரில் நிறுத்தினான். நாகரத்தினத்திடம் சாவியைக் கொடுத்துத் திறக்கச் சொன்னான்.
எல்லாரும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். துரையப்பன் மட்டும் தயங்கினான். கறுப்பு மீசைக்காரன் அவனுடைய கையைப் பிடித்து, "வாங்க தம்பி, வாங்க!" என்று கூறி இறக்கினான்.
உள்ளே போய் எல்லாரும் உட்கார்ந்த பிறகு, அக்கரையான், "தம்பி! இப்போது என்ன சொல்றீங்க?" என்று கேட்டான்.
"என்னத்தைச் சொல்கிறது? இந்தப் பெண் பட்டணம் பார்க்க வேண்டுமென்றாள்; அழைத்துக் கொண்டு வந்தேன். உங்களுக்கு இஷ்டமில்லையென்றால், திரும்பியழைத்துக் கொண்டு போங்கள்" என்றான்.
"அப்படியெல்லாம் கோபிக்க வேண்டாம், தம்பி! அப்புறம் நாட்டாமைக்காரர் வீட்டு எருமைக் கன்றுக் குட்டி புல்லுத் தின்னாது" என்றான் அக்கரையான். அதைக் கேட்ட நல்லான் கொல்லென்று சிரித்தான்.
இப்படிக் கொஞ்ச நேரம் அகடவிகடப் பேச்சு ஆன பிறகு, "அதெல்லாம் இருக்கட்டும், தம்பி! மேற்கொண்டு நடக்கிறதைப் பற்றிப் பேசுங்க" என்றான் அக்கரையான்.
"மேற்கொண்டு என்ன நடக்கிறது?"
"நீங்க சொல்லாவிட்டால், நான் சொல்கிறேன்; எப்படியும் நீங்க சந்திரமதியை இட்டுக் கொண்டு வந்து விட்டீங்க. மறுபடியும் நாங்க அவளை அழைத்துக்கிட்டுப் போகிறது நியாயமில்லை. எப்படியாவது அவள் சுகமாயிருந்தால் நாட்டாமைக்காரருக்குச் சந்தோஷந்தான். ஆனால் அந்தப் பெண்ணை வளர்க்கிறதற்கு அவர் ரொம்பப் பாடுபட்டிருக்கிறார். ஒரு மூவாயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்துவிட்டுக் குசாலாக அழைத்துக் கொண்டு போங்க. அவ்வளவுதான் நாங்க சொல்கிறது" என்றான்.
துரையப்பன் கொஞ்ச நேரம் யோசனை செய்தான். "சரி, மூன்று நாள் எனக்கு அவகாசம் கொடுங்கள். பணம் கொண்டு வருகிறேன்" என்றான். இதற்கு அவர்கள் சம்மதிக்கவே, துரையப்பன் வீட்டை விட்டு வெளியேறி மோட்டாரைச் செலுத்திக் கொண்டு சென்றான். அவனுடைய பெட்டி மட்டும் இவர்களிடம் இருந்தது.
இதெல்லாம் திங்கட்கிழமை நடந்தது. செவ்வாய், புதன், வியாழன் வரையில் அந்த வீட்டிலேயே இருக்கத் தீர்மானித்திருந்தார்கள். அவர்களுடைய உத்தேசம் என்ன வென்பதை வாசகர்களே ஊகித்திருக்கலாம். துரையப்பன் பணங் கொண்டு வருவான், அதை வாங்கிக் கொண்டு அவனை நன்றாய் அடித்துப் போட்டுவிட்டு மற்றவர்கள் எல்லாரும் ஊருக்குத் திரும்பிவிடலாமென்று எண்ணியிருந்தார்கள். ஆனால் சந்திரமதி அதற்குக் குறுக்கே நின்றாள். துரையப்பன் போனதிலிருந்து அவள் கண்ணீர்விடத் தொடங்கி விட்டாள். நாளாக ஆக, அவளுடைய துக்கம் அதிகமாயிற்று. துரையப்பன் திரும்பி வரும்போது அவ்வீட்டில் தன்னால் இருக்க முடியாதென்றும், இருந்தால் கட்டாயம் அவனிடம் உண்மையைக் கூறி எச்சரிக்கும்படி இருக்கும் என்றும் கூறினாள். கடைசியாகப் புதன்கிழமையன்று அவளை ஊருக்கு அனுப்பிவிடத் தீர்மானித்தார்கள். நல்லானுக்கு தனியாக இருந்து சமாளிக்கத் தைரியமில்லை. அக்கரையானைத் தனியே விட்டுவிட்டுப் போனால் மூவாயிரம் ரூபாயும் தன்னிடம் ரொக்கமாக வரவேண்டுமேயென்ற பயமும் அவனுக்கு இருந்தது. ஆகவே, நாகரத்தினத்துடன் சந்திரமதியைக் கூட்டி ஊருக்கு அனுப்பிவிடத் தீர்மானித்தார்கள்.
புதன்கிழமை காலையில் நாகரத்தினமும் சந்திரமதியும் திருநாகேசுவரத்துக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு தஞ்சாவூர் ஸ்டேஷனில் ரயில் ஏறினார்கள். துரையப்பனை அடித்து ஹிம்ஸிக்கக் கூடாதென்று சந்திரமதி நூறு தடவை மன்றாடி நல்லானிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டாள்; ஆனால் அக்கரையான் வாய் திறக்கவில்லை.
வியாழக்கிழமை பொழுது விடிந்ததிலிருந்து, துரையப்பன் வருவான், வருவான் என்று நல்லானும் கறுப்பு மீசைக்காரனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் வரவேயில்லை. "ஓகோ! பையன் ஏமாற்றி விட்டான்!" என்று அப்போதுதான் அவர்களுக்குத் தோன்றியது. உடனே இரண்டு பேருக்கும் ஒருவித பயம் உண்டாகிவிட்டது. ஒரே மூச்சாக ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று ரயிலேறினார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சந்திரமதி - Chandramathi - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கொண்டு, துரையப்பன், என்றான், தம்பி, அக்கரையான், வந்து, வருவான், என்ன, வாங்கிக், பிறகு, கறுப்பு, எல்லாரும்