சந்திரமதி
2
இப்போது, இந்தக் கதையில் சில புதிய பாத்திரங்களை
உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். அவர்களில் ஒருவன் தான்
மேலே நான் குறிப்பிட்ட கறுப்பு மீசைக்காரன். அவனுக்கு வயது நாற்பத்தைந்துக்கு
மேல் இருக்கும். ஆனால் தலைமயிருக்கும், மீசைக்கும் ஏதோ வர்ணம் தடவி,
நரை விழுந்தது தெரியாமல் பாதுகாத்து வந்தான். அவனுக்குக் 'கறுப்பு மீசைக்காரன்'
என்றும், 'அக்கரையான்' என்றும் பெயர் வழங்கி வந்தது. அக்கரைச் சீமையில்
அவன் என்ன அக்கிரமம் செய்தானோ, யார் குடியைக் கெடுத்தானோ, நிறையப் பணத்துடன்
நாலைந்து வருஷத்துக்கு முன்னால் எங்களூருக்கு வந்து சேர்ந்தான். கொஞ்சம்
நிலமும் வாங்கியிருந்தான். நிலம் வாங்குவதற்கும் சாகுபடி செய்வதற்கும்
நல்லான் அவனுக்கு உதவி செய்தான்.
நல்லான் ஊருக்கு நாட்டாண்மைக்காரனானாலும் சொத்து ஒன்றுமில்லாதவன். ஏதோ கொஞ்சம் இருந்ததைக் கள்ளுக்கடைக்குத் தொலைத்துவிட்டான். அக்கரையானும் அப்படியொன்றும் மதுவிலக்கில் தீவிரமானவனல்ல. ஆகவே, இருவருக்கும் சிநேகம் நாளுக்கு நாள் முதிர்ந்து வந்தது. கடைசியில் நல்லான் தன் பெண் சந்திரமதியைக் கறுப்பு மீசைக்காரனுக்குக் கட்டிக் கொடுத்துவிடப் போவதாய் ஊரில் ஒரு வதந்தி பிறந்தது.
நல்லானுடைய நோக்கம் என்னவோ அவ்வளவு கெட்டது என்று சொல்லமுடியாது. அக்கரையானுக்கு நல்ல சொத்திருந்தது. பெண்டாட்டியா, பிள்ளையா ஒன்றும் இல்லை. சந்திரமதியை அவனுக்குக் கட்டிக் கொடுத்தால், அவ்வளவு சொத்துக்கும் அவளே எஜமானியாவாள். எனவே, நல்லான் தன் பெண்ணின் நன்மையைத்தான் கோரினான். ஆனால் அவளுடைய மனநிலை இன்னதென்பதை அவன் உணர்ந்து கொள்ளவில்லை; உணர முயற்சி செய்யவுமில்லை.
அவளுடைய மனநிலை எனக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அதைப் பூரணமாக அறிந்து கொண்டு விட்டதாகவே ஒரு சமயம் நான் எண்ணியதுண்டு. அது எவ்வளவு தவறான எண்ணமென்று பின்னால் தெரிந்தது. தலை நரைத்த கிழவனாகிய எனக்கு, இளம் பெண்ணின் ஹிருதயம் எவ்வாறு தெரியும்? நிற்க.
எங்கள் கிராமத்துக்கு அடுத்த கிராமத்தில் ஒரு பெரிய ஜமீன்தார் இருந்தார். அவருடைய பிள்ளைகள் சிறு பிள்ளைகளாயிருந்த போது என்னிடம் படித்தார்கள். பிறகு அவர்கள் சமீபத்திலுள்ள பட்டணத்துக்குப் போய் ஹைஸ்கூலில் சேர்ந்து படித்தார்கள். பட்டணத்து ஹைஸ்கூல்களின் சமாசாரந்தான் உங்களுக்குத் தெரியுமே? வருஷத்தில் பாதி நாளைக்குமேல் விடுமுறைதான். விடுமுறைக்காகப் பிள்ளைகள் ஊருக்கு வரும்போதெல்லாம் அவர்களை ஜமீன்தார் என்னிடம் அனுப்பி வைப்பார். இந்தப் பிள்ளைகளுடன் ஜமீன்தாரின் மைத்துனர் மகன் ஒருவனும் வருவான். அவன் பெயர் துரையப்பன். முதலிலே இந்தப் பையனை அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. டாப்பு ஜெரப்பு அதிகம்; ரொம்பக் கர்வக்காரன்; பெரியவர்களிடம் மட்டுமரியாதை கிடையாது. "ஐயோ! இந்த டம்பாச்சாரியோடு சேர்ந்து நம்முடைய ஜமீன்தாரின் நல்ல பிள்ளைகளும் கெட்டுப் போவார்களே!" என்று கவலைப்பட்டேன்.
ஆனால் நாளடைவில் அந்தப் பையன்மேல் இருந்த வெறுப்பு எனக்குக் குறைந்து வந்தது. அவன் மேல் அபிமானங்கூட உண்டாயிற்று. அதற்கு காரணம் என்னவென்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். என்னைப் பற்றிக் கூட ஒரு மாதிரி நினைக்கத் தொடங்குவீர்கள். ஆனாலும் உண்மையைச் சொல்லத்தானே வேண்டும்? துரையப்பனையும் சந்திரமதியையும் பற்றி ஊரில் வதந்தி உண்டாகிப் பரவிற்று. கோவிலிலும், குளக்கரையிலும், மாந்தோப்பிலும், களத்து மேட்டிலும் துரையப்பனும் சந்திரமதியும் சந்திப்பதாகப் பேச்சு ஏற்பட்டது. ஒன்றைப் பத்தாகச் சொல்லுவதுதான் நம்முடைய ஊர் வழக்கமாயிற்றே. ஆகையால், இந்தப் பேச்சை நான் முழுதும் நம்பவில்லை. ஆனாலும் அது உண்மையாயிருக்கக்கூடாதவென்று ஆசைப்பட்டேன். சந்திரமதிக்கு எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் வந்தாலும் தகும். எப்படியாவது அவள் கறுப்பு மீசைக்காரனுக்கு வாழ்க்கைப்படாமல் இருந்தால் நல்லது. துரையப்பன் பணக்காரனாயிருக்கலாம்; சந்திரமதி ஏழையாயிருக்கலாம். அவர்களுடைய சாதிகளிலும் ஏற்றத் தாழ்வு இருக்கலாம். இதனாலெல்லாம் என்ன மோசம்? அவர்கள் இருவரும் கலியாணம் செய்து கொண்டு ஏன் சுகமாயிருக்கக் கூடாது?
வதந்தியில் கொஞ்சம் உண்மை உண்டென்று எனக்குச் சீக்கிரத்தில் தெரிய வந்தது. ஒரு நாள் அந்தக் கறுப்பு மீசைக்காரன் - அவன் மோரக்கட்டையில் இடி விழ! - என்னிடம் வந்தான். "ஸார்! அப்புறம் என்மேல் தப்புச் சொல்லாதேங்கோ. யாரோ ஒரு வெள்ளாழப் பையன் வருகிறானாமே இங்கே, துரையப்பன் என்று - அவன் இனிமேல் இந்த ஊர்ப்பக்கம் தலைக் காட்டக் கூடாது. அப்படித் தலை காட்டினால், வெட்டி மடைவாயில் வைத்துவிடுவேன்!" என்றான். இந்த உருட்டலுக்கெல்லாம் நானா பயப்படுகிறவன்? துரையப்பனுடைய தகப்பனார் லேசுபட்டவரல்ல வென்றும், கவர்மெண்டே அவர் கைக்குள் அடக்கமென்றால், துரையப்பன் மேல் யாராவது கையை வைத்தாலும் போதும், அவன் கதி அதோகதிதான் என்றும் நான் திரும்பிப் பயமுறுத்தினேன். "எல்லாம் சீக்கிரம் பார்க்கலாம்!" என்று அக்கரையான் உறுமிக் கொண்டு போய்விட்டான்.
இன்னும் ஒரே ஒரு புதிய ஆளை உங்களுக்கு நான் தெரியப்படுத்தியாகவேண்டும். அவனுடைய பெயர் நாகரத்தினம். குடியானப் பையன். இவனைப் பற்றி எப்படியெல்லாம் என்னுடைய அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டி வந்தது என்பதை நினைக்கும் போது எனக்கே வெட்கமாயிருக்கிறது. அவனும் நாலாம் வகுப்பு வரையில் என் பள்ளிக்கூடத்தில் படித்தவன் தான். அப்புறம் விவசாயத்தில் அவன் தகப்பனுக்கு ஒத்தாசையாக வேலை செய்யத் தொடங்கினான். தகப்பன் இறந்த பிறகு அவன் விவசாயத்தை விட்டுவிட்டான். ஒரு வண்டியும் இரண்டு காளைகளும் வாங்கி, சத்த வண்டி ஓட்டத் தொடங்கினான். இந்தத் தொழிலில் அவன் உல்லாசமாகக் காலங் கழித்தானென்றே சொல்லவேண்டும். சில நாள் நான் பார்த்திருக்கிறேன்; அவன் சத்தத்துக்கு வண்டி அடித்து விட்டுத் திரும்பி வெறும் வண்டியைச் சாலையோடு ஓட்டிக் கொண்டு வருவான். அப்போதெல்லாம்
'மானா மருதையிலே - ஒரு
மருக் கொழுந்து கூடைக்காரி!'
என்று வாய்விட்டு உல்லாசமாகப் பாடுவான். அதைக் கேட்கும்போது, எனக்குக்கூட,
இந்தப் பிள்ளைகளுடன் டானா, டாவன்னா என்று மாரடித்துக் கொண்டிருப்பதை
விட்டு வண்டி ஓட்டத் தொடங்கலாமா என்று தோன்றும். மருக் கொழுந்து கூடைக்காரி!'
இப்படிக் குஷாலாக இருந்தவனுக்கு மறுபடியும் படிப்பில் ருசியுண்டானது எனக்கு மிகவும் வியப்பளித்தது. ஒரு நாள் என்னிடம் வந்து, தான் படித்ததெல்லாம் மறந்து போகிறதென்றும், மறுபடியும் படிக்கவேண்டுமென்றும், இங்கிலீஷ் கற்றுக் கொள்ளக்கூட ஆசையாயிருக்கிறதென்றும் சொன்னான். இராத்திரியில் தினம் வந்து படிப்பதாகக் கூறினான். நான் மகிழ்ச்சியுடன் அவனுக்குச் சொல்லிக் கொடுக்க ஒப்புக் கொண்டேன்.
குடியானப் பிள்ளைகளுக்குள்ளே நாகரத்தினத்தைப் போன்ற புத்திசாலியைக் காண்பது அரிது. சீக்கிரம் அவனுக்குப் படிப்பு வந்தது. அக்கறையுடனும் படித்தான். என்னிடம் அவனுக்கிருந்த பக்தி விசுவாசத்தையோ சொல்லி முடியாது. அப்படிப்பட்டவனிடம் எனக்கு மிகவும் நல்ல அபிப்பிராயம் இருந்ததில் வியப்பில்லையல்லவா? ஒருநாள் ராத்திரி அந்த நல்ல அபிப்பிராயம் அடியோடு மாறிப் போயிற்று. "இந்த விஷப் பாம்பையா இத்தனை நாளும் நல்லவன் என்று நினைத்திருந்தோம்?" என்று வியப்புண்டாயிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சந்திரமதி - Chandramathi - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவன், நான், வந்தது, கறுப்பு, என்னிடம், நல்லான், நாள், எனக்கு, கொண்டு, துரையப்பன், இந்தப், நல்ல, வண்டி, வந்து, மீசைக்காரன், தான், மேல், என்றும், பெயர், கொஞ்சம்