முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.093.திருநறையூர்ச்சித்தீச்சரம்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.093.திருநறையூர்ச்சித்தீச்சரம்
7.093.திருநறையூர்ச்சித்தீச்சரம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சௌந்தரேசர்.
தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.
943 |
நீரும் மலரும் நிலவும் சடைமேல் ஊரும் மரவும் உடையான் இடமாம் வாரும் மருவி மணிபொன் கொழித்துச் சேருந் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.093.1 |
இடையறாது ஒழுகும் நீர்ப்பெருக்கு, மணியையும் பொன்னையுங் கொழித்துக்கொண்டு சேர்கின்ற திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, சடையின்மேல் நீரையும், பல மலர்களையும் பிறையையும் ஊர்ந்து செல்லுகின்ற பாம்பையும் உடையவனாகிய இறைவனது இடமாகும்.
944 |
அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத் துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம் வளைக்கைம் மடவார் மடுவில் தடநீர்த் திளைக்குந் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.093.2 |
வளையையணிந்த கைகளையுடைய இளமகளிர், மிக்க நீரினுள் மூழ்கி இன்புறும் திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, புற்றில் வாழ்கின்ற, படத்தையுடைய பாம்பு போலும் இடையினையுடையவளாகிய தன் தேவி அஞ்சும்படி, துளையையுடைய துதிக்கையையுடைய யானையினது தோலை உரித்துப் போர்த்தவனாகி இறைவனது இடமாகும்.
945 |
இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்த பகழி யொடுவில் உடையோன் பதிதான் முகிழ்மென் முலையார் முகமே கமலம் திகழுந் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.093.3 |
அரும்புபோலும், மெல்லிய தனங்களையுடைய மகளிரது முகங்களே, தாமரை மலர்போல விளங்குகின்ற திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, தன்னை இகழுந் தன்மையைப் பெற்ற அசுரர்களது மதில்கள் மூன்றை எரித்த அம்பையும், வில்லையும் உடைய இறைவனது இடமாகும்.
946 |
மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால் இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம் நறக்கொள் கமலந் நனிபள் ளிஎழத் திறக்குந் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.093.4 |
தேனைக் கொண்டுள்ள தாமரைமலரை, நன்கு துயிலெழும்படி வண்டுகள் திறக்கின்ற திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம் என்னும் திருக்கோயிலே, வீரத்தைக் கொண்ட இராவணனது மலைபோலும் தோள்களை, தனது மலையால் முரியச்செய்த விரலையுடைய தலைவனாகிய இறைவன் இருக்கும் இடமாகும்.
947 |
முழுநீ றணிமே னியன்மொய் குழலார் எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம் கழுநீ கமழக் கயல்சேல் உகளும் செழுநீ நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.093.5 |
குளங்களில் செங்கழுநீப் பூவின் மணங் கமழுமாறு அவைகளின்மேல் கயல்மீன்களும், சேல் மீன்களும் துள்ளி வீழ்கின்ற, மிக்க நீரையுடைய திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருகோயிலே, திருமேனிமுழுவதும் நீற்றை அணிந்தவனும், அடர்ந்த கூந்தலையுடைய மகளிரது உயர்ச்சி பொருந்திய பண்புகளைக் கொண்டவனும் ஆகிய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற இடமாகும்.
948 |
ஊனா ருடைவெண் டலைஉண் பலிகொண் டானார் அடலே றமர்வான் இடமாம் வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த் தேனார் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.093.6 |
விண்ணிற் பொருந்திய சந்திரன் நுழைந்து செல்லும், வளவிய சோலைகளினிடத்தில் தேன் நிறைந்து நிற்கும் திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, ஊன் பொருந்திய, உடைந்த, வெள்ளிய தலையில், உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்று, ஆனினத்ததாகிய, வெற்றியையுடைய ஏற்றை விரும்புபவனாகிய இறைவனது இடமாகும்.
949 |
காரூர் கடலில் விடம்உண் டருள்செய் நீரூர் சடையன் னிலவும் மிடமாம் வாரூர் முலையார் மருவும் மறுகில் தேரூர் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.093.7 |
கச்சு மேற்பொருந்தப்பெற்ற தனங்கைளயுடைய மகளிர் அழகுடன் நிறைந்து நிற்கும் தெருக்களில் தேர்கள் ஓடுகின்ற திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, கருமை நிறம் பொருந்திய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு, தேவர்கட்கு அருள்செய்த, நீர்ததும்பும் சடையினையுடையவனாகிய இறைவன் விளங்கியிருக்கின்ற இடமாகும்.
950 |
கரியின் னுரியுங் கலைமான் மறியும் எரியும் மழுவும் உடையான் இடமாம் புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள் தெரியுந் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.093.8 |
தமது கடமைகளை விரும்பிச் செய்யும் அந்தணர்கள், நிறைந்த சொற்களின் பொருளை ஆராய்கின்ற திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, யானைத் தோலையும், ஆண் மான்கன்றையும், எரிகின்ற மழுவையும் உடையவனாகிய இறைவனது இடமாகும்.
951 |
பேணா முனிவான் பெருவேள் வியெலாம் மாணா மைசெய்தான் மருவும் மிடமாம் பாணார் குழலும் முழவும் விழவில் சேணார் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.093.9 |
பண் நிறைந்த குழல்களின் ஓசையும், மத்தளங்களின் ஓசையும் விழாக்களில் சேய்மைக்கண் சென்று பொருந்துகின்ற திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, தன்னை விரும்பாது வெறுத்தவனாகிய தக்கனது பெருவேள்வியின் சிறப்புக்களை எல்லாம் சிறவாதபடி அழித்தவனாகிய இறைவன் பொருந்தியிருக்கும் இடமாகும்.
952 |
குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த எறியும் மழுவாட் படையான் இடமாம் நெறியில் வழுவா நியமத் தவர்கள் நெறியுந் நறையூர்ச் சித்தீச் சரமே. |
7.093.10 |
நன்னெறியினின்றும் வழுவாத கடப்பாட்டினை யுடைய உயர்ந்தோர்கள் மிக்குள்ள திருநறையூரில் உள்ள, 'சித்தீச்சரம்' என்னும் திருக்கோயிலே, கொடிய கூற்றுவனை உதைத்த, குறியினின்றும் தவறாது எறியும் மழுப்படையை உடையவனாகிய இறைவனது இடமாகும்.
953 |
போரார் புரமெய் புனிதன் அமருஞ் சீரார் நறையூர்ச் சித்தீச் சரத்தை ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள் ஏரார் இமையோர் உலகெய் துவரே. |
7.093.11 |
போர் செய்தலை உடையவரது முப்புரத்தை அழித்த தூயவனாகிய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற, புகழ் நிறைந்த திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாட வல்லவர்கள், எழுச்சிபொருந்திய தேவருலகத்தை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 91 | 92 | 93 | 94 | 95 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சித்தீச், நறையூர்ச், திருநறையூரில், என்னும், இடமாகும், சித்தீச்சரம், திருக்கோயிலே, இடமாம், இறைவனது, இறைவன், பொருந்திய, உடையவனாகிய, நிறைந்த, நிற்கும், நிறைந்து, கடலில், எறியும், ஓசையும், எழுந்தருளியிருக்கின்ற, மருவும், மிடமாம், இகழுந், உடையான், திருச்சிற்றம்பலம், திருமுறை, திருநறையூர்ச்சித்தீச்சரம், முலையார், இருக்கும், மகளிரது, விரும்பி