முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.081.திருக்கழுக்குன்றம்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.081.திருக்கழுக்குன்றம்
7.081.திருக்கழுக்குன்றம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பண் - நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் - வேதகிரியீசுவரர்.
தேவியார் - பெண்ணினல்லாளம்மை.
822 |
கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே நின்ற பாவ வினைகள் தாம்பல நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம் கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே. |
7.081.1 |
உலகீர், தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானது இடம், பிடியானைகள் தங்கள் கன்றுகளோடு சூழ்ந்திருக்கும் தண்ணிய திருக்கழுக்குன்றமே; அதனை, பிற உயிர்களை வருத்து மாற்றாற் செய்த கொடுஞ்செயல்களால், பலரும் பல இகழுரைகளைச் சொல்லுமாறு இழிவெய்த நின்ற பாவமாகிய வினைகள் பலவும் நீங்குதற்பொருட்டுப் பலகாலும் சென்று வணங்குமின்கள்.
823 |
இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம் நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி கறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே. |
7.081.2 |
உலகீர், விளங்குகின்ற, கொன்றை மாலையை அணிந்த சடையையுடைய எங்கள் பெருமானது இடம், பல நிறங்களையும் காட்டுகின்ற மணிகளோடு, முத்தினையும் தள்ளிக் கொண்டு பாய்கின்ற, ஒலிக்கும் வெண்மையான அருவிகளையுடைய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை, தலைவணங்கிச் சென்று, இனிய இசைகளைப் பாடி வழிபடுமின்கள்.
824 |
நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால் ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத் தோளும் எட்டு முடைய மாமணிச் சோதியான் காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே. |
7.081.3 |
உலகீர், நம்மை ஆளுகின்ற நம் வினைகள் குறைந்து, முழுதும் ஒழிதற்பொருட்டு, தோள்கள் எட்டினையும் உடைய, சிறந்த மாணிக்கம்போலும் ஒளியை யுடையவனாகிய, நஞ்சணிந்த கண்டத்தை உடையவன் எழுந்தருளியிருக்கின்ற, குளிர்ந்த திருக்கழுக்குன்றத்தை, நாள்தோறும், முறைப்படி, நெடிது நின்று வழிபடுமின்கள்.
825 |
வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி யாடியை முளிறி லங்கு மழுவா ளன்முந்தி உறைவிடம் பிளிறு தீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக் களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே. |
7.081.4 |
உலகீர், வெம்மை பொருந்திய மழுப்படையை உடைய சிவபெருமான் முற்பட்டு எழுந்தருளியிருக்கின்ற இடம், பிளிறுகின்ற, மனவலியையும், பெரிய தும்பிக்கையையும், பொழிகின்ற மதங்கள் மூன்றையும் உடைய களிற்றி யானைகளோடு, பிடி யானைகள் சூழந்துள்ள, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; ஆதலின், உங்கள் அறியாமை நீங்குதற்பொருட்டு, அங்குச்சென்று, திருநீற்றில் மூழ்குகின்றவனாகிய அப்பெருமானை வழிபடுமின்கள்.
826 |
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன் இலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம் முலைகள் உண்டு தழுவுக் குட்டி யொடுமுசுக் கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே. |
7.081.5 |
உலகீர், புல்லிய சடையை உடைய அற வடிவினனும், இலை வடிவத்தைக்கொண்ட சூலப் படையை உடைய எம் தந்தையும், எங்கள் தலைவனும் ஆகிய இறைவனது இடம், பாலை உண்டு தழுவுதலை உடைய குட்டியோடு பெண் முசுவும், அதனோடு, ஆண் முசுவும் மரக்கிளைகளில் தாவுகின்ற காட்டினையுடைய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை உங்கள் கீழ்மைகள் எல்லாம் நீங்கும் பொருட்டுச் சென்று வழிபடுமின்கள்.
827 |
மடமு டைய அடியார் தம்மனத் தேயுற விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன் படமு டைய அரவன் றான்பயி லும்மிடம் கடமு டைய புறவிற் றண்கழுக் குன்றமே. |
7.081.6 |
நஞ்சினை உடைய கண்டத்தையுடையவனும், தேவர்கட்கு மேலானவனும், படமுடைய பாம்பை யுடையவனும் ஆகிய சிவபெருமான், தன்னையன்றி வேறொன்றையும் அறியாத அடியவரது மனத்தில் பொருந்தும் வண்ணம் நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம், காட்டையுடைய, முல்லை நிலத்தோடு கூடிய குளிர்ந்த திருக்கழுக்குன்றமே.
828 |
ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடம் தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடவே கான மஞ்ஞை உறையுந் தண்கழுக் குன்றமே. |
7.081.7 |
ஞான வடிவினனும், நடனம் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான், குறைபாடு இல்லாத தன் அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணம், நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம், தேனும், வண்டும் தேனை உண்டு இனிய இசையைப்பாட, காட்டில் மயில்கள் அதனைக் கேட்டு இன்புற்றிருக்கின்ற திருக்கழுக்குன்றமே.
829 |
அந்தம் இல்லா அடியார் தம்மனத் தேஉற வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே சந்தம் நாறும் புறவிற் றண்கழுக் குன்றமே. |
7.081.8 |
அளவற்ற அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணமும், திருமாலும் நான்முகனும் நாள்தோறும் வந்து வணங்கி வழிபட்ட, மலர்கள் நாள்தோறும் குவிந்து கிடக்கும் வண்ணமும், நடனமாடுகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம், சந்தன மரம் மணம் வீசுகின்ற, முல்லை நிலத்தோடு கூடிய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே.
830 |
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன் குழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை கழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே. |
7.081.9 |
உலகீர், பின்னிய சடையின்கண் தலைக் கோலங்களையுடையவனும், 'குழை' என்னும் அணியை அணிந்த காதினை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம், மேகங்கள் மிக முழங்க, மிக உயர்ந்த வேயும், கழையுமாகிய மூங்கில்கள் முத்துக்களைச் சொரிகின்ற, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை, உங்கள் குற்றங்களெல்லாம் நீங்குதற் பொருட்டு வழிபடுமின்கள்.
831 |
பல்லின் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம் கல்லின் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினால் சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே. |
7.081.10 |
உலகீர், பற்களையுடைய வெண்மையான தலையை உடையவன் நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம், பாறைகளின்மேல் வீழ்கின்ற வெண்மையான அருவிகளையுடைய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை, வலிமை மிக்க, திரண்ட தோள்களையுடையவனாகிய நம்பியாரூரனது வனப்புடைய பாடல்களால் துதித்து வழிபடுவோரை வழிபடுமின்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 79 | 80 | 81 | 82 | 83 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கழுக்குன்றம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - குன்றமே, திருக்கழுக்குன்றமே, தண்கழுக், குளிர்ந்த, உலகீர், எழுந்தருளியிருக்கின்ற, வழிபடுமின்கள், தொழுமின், சென்று, சிவபெருமான், வினைகள், பிரானிடம், நாள்தோறும், அடியார், பொருந்தும், நீங்காது, லும்மிடம், தம்மனத், உங்கள், வெண்மையான, எங்கள், முல்லை, நிலத்தோடு, பிடிசூழ், வண்ணம், திருச்சிற்றம்பலம், தேனும், வண்டும், மலர்கள், வண்ணமும், வணங்கி, மனத்திற், அடியார்களது, றண்கழுக், புறவிற், நின்று, அணிந்த, அருவிகளையுடைய, திருக்கழுக்குன்றம், உடையவன், வடிவினனும், முசுவும், திருமுறை, றான்பயி, வெள்ளை, அருவித், உறையுந்