முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.087.திருமணஞ்சேரி
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.087.திருமணஞ்சேரி
5.087.திருமணஞ்சேரி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மணவாளநாயகர்.
தேவியார் - யாழ்மொழியம்மை.
1924 | பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர் நட்ட நின்று நவில்பவர் நாடொறும் சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம் வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே. |
5.087.1 |
பட்டமணிந்த நெற்றியினரும், பாயும் புலியின் தோலை உடுத்தவரும், நாள்தொறும் நட்டமாடி நின்று பாடுவோரும், உயர்ந்தவர் வாழ்கின்ற திருவுடைய மணஞ்சேரியில் வட்டமாகியவார்சடை உடைய எமது பெருமானுமாகிய இறைவர் வண்ணத்தை வாழ்த்துவீராக.
1925 | துன்னு வார்குழ லாளுமை யாளொடும் பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர் மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை உன்னு வார்வினை யாயின வோயுமே. |
5.087.2 |
நெருங்கிய நீண்ட கூந்தலை உடைய உமாதேவியோடு கூடியவரும், பின்னிய நீண்ட சடைமேற் பிறையை வைத்தவரும் ஆகிய நிலைபெற்ற நீண்ட புகழை உடைய திருமணஞ்சேரியில் மருந்தாம் பெருமானை உள்ளத்தே உன்னவார்களின் வினைகள் ஓயும்.
1926 | புற்றி லாடர வாட்டும் புனிதனார் தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர் சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார் பற்றி னாரவர் பற்றவர் காண்மினே. |
5.087.3 |
புற்றிற் பொருந்திய அரவினை ஆட்டும் புனிதரும், எல்லை மீறிய முப்புராதிகளின் கோட்டைகளைத் தீயெழச்சினந்தவரும், சுற்றிலும் நெருங்கிய மதில் சூழ்ந்த மணஞ்சேரி உறைபவருமாகிய இறைவரைப் பற்றினார்க்கு அவர் பற்றாவர்; காண்பீராக.
1927 | மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை முத்தர் முக்கணர் மூசர வம்மணி சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம் வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே. |
5.087.4 |
ஊமத்தமலரும், பிறையும் வளருஞ் சிவந்த சடையை உடைய முத்தி நாயகரும், முக்குணங்களை உடையவரும், ஒலிக்கும் அரவம் அணிந்த சித்தரும், தீயின்வண்ணம் உடையவரும், பெருமைமிக்க மணஞ்சேரியில் வித்தாயிருப்பாருமாகிய இறைவர் தம்மை விரும்பியவரைத் தாம் விரும்புபவர் ஆவர்.
1928 | துள்ளு மான்மறி தூமழு வாளினர் வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர் அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம் வள்ள லார்கழல் வாழ்த்தல்வாழ் வாவதே. |
5.087.5 |
துள்ளும் மான்குட்டியையும், தூய மழு வாளினையும் உடையவரும், சடைமேற் கங்கையை மறைத்தவரும் ஆகிய சேறு நிறைந்த வயல் சூழ்ந்த மணஞ்சேரியில் உறையும் வள்ளலார் கழல்களை வாழ்த்தலே வாழ்வாவது.
1929 | நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல் ஊர்ப ரந்த உரகம் அணிபவர் சீர்ப ரந்த திருமணஞ் சேரியார் ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே. |
5.087.6 |
கங்கைநீர் பரவி நிமிர்ந்து விளங்கும் சடையின் மேல் ஊர்ந்து பரவுகின்ற பாம்பினை அணிந்தவராகிய பெருமை பரவிய திருமணஞ்சேரி இறைவர் எழில் பெருகி விளங்கும் சூலப் படையினை உடையவர்.
1930 | சுண்ணத் தர்சுடு நீறுகந் தாடலார் விண்ணத் தம்மதி சூடிய வேதியர் மண்ணத் தம்முழ வார்மணஞ் சேரியார் வண்ணத் தம்முலை யாளுமை வண்ணரே. |
5.087.7 |
சுண்ணம் பூசியவரும், சுட்ட வெண்ணீற்றினை உகந்து ஆடுபவரும், விண்ணின் மதியைச் சூடிய வேதியரும் ஆகிய மார்ச்சனை பொருந்திய முழவு ஆர்க்கும் மணஞ்சேரி உறையும் இறைவர், நிறம் உடைய முலையாளாகிய உமையின் வண்ணம் உடையவர் ஆவர்.
1931 | துன்ன வாடையர் தூமழு வாளினர் பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம் மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே. |
5.087.8 |
பின்னிய நூலாடையினரும், தூயமழு வாளினரும், பின்னிய சிவந்த சடையின்மேல் பிறை வைத்தவரும் ஆகிய, நிலைபெற்ற நீண்ட பொழில்கள் சூழும் மணஞ்சேரி உறையும் மன்னனார் கழலே தொழ வாய்ப்பாவது.
1932 | சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன் புத்தர் சேரமண் கையர் புகழவே மத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம் அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே. |
5.087.9 |
சித்தர்களும், தேவர்களும், திருமாலும், நான்முகனும், புத்தரும், உடையற்றவராய சமண ஒழுக்கத்தினரும் புகழ, உலக மையலிற்பட்டவர் அறியாத மணஞ்சேரி மேவிய எம் தலைவரது அடியார்க்கு அல்லல் இல்லை.
1933 | கடுத்த மேனி யரக்கன் கயிலையை எடுத்த வன்னெடு நீண்முடி பத்திறப் படுத்த லும்மணஞ் சேரி யருளெனக் கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே. |
5.087.10 |
ஆற்றல் மிகுந்த இராவணன் திருக்கயிலையை எடுத்தபோது அவன் நீண்ட முடிகள் பத்தும் இற்றுவிழச்செய்தலும், "மணஞ்சேரி இறைவா! அருள்வாயாக" என்று அவன்கூவ அவனுக்கு வெற்றிதரும் வாளையும், நாமத்தையும் கொடுத்தனன் பெருமான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 85 | 86 | 87 | 88 | 89 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமணஞ்சேரி - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சேரியெம், மணஞ்சேரி, இறைவர், உடையவரும், திருமணஞ்சேரி, பின்னிய, மணஞ்சேரியில், உறையும், சேரியார், சூழ்மணஞ், வார்மணஞ், செஞ்சடை, சித்தர், வாளினர், உடையவர், விளங்கும், சடையின்மேல், சூழ்ந்த, சிவந்த, வைத்தவரும், வார்சடை, நின்று, திருச்சிற்றம்பலம், திருமுறை, பின்னு, மேற்பிறை, நிலைபெற்ற, சடைமேற், நெருங்கிய, பொருந்திய