முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.009.திருவீழிமிழலை
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.009.திருவீழிமிழலை
3.009.திருவீழிமிழலை
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
2889 | கேள்வியர்
நாடொறு மோதுநல் வேதத்தர் கேடிலா வேள்விசெ யந்தணர் வேதியர் வீழி மிழலையார் வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம் ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட் கணியரே |
3.009.1 |
கேள்வி ஞானம் உடையவர்களும், நாள்தோறும் நல்ல வேதத்தை ஓதுபவர்களும், கெடுதலில்லாத யாகத்தைச் செய்கின்ற, எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுடையவர்களுமான அந்தணர்கள், போற்றுகின்ற வேதநாயகர் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவார். அவர் ஆருயிர்கட்கெல்லாம் வினைப்பயனுக்கேற்பப் பிறப்பும், இறப்பும் செய்வார். கடலாழம் கண்டறியவரப்படாதது போல அவருடைய தன்மை பிறரால் அறிதற்கு அரியது. தம்முடைய திருவடிகளைப் போற்றி வணங்கும் அன்பர்கட்கு நெருக்கமானவர்.
2890 | கல்லினற்
பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழி மிழலையார் நல்லினத் தார்செய்த வேள்வி செகுத்தெழு ஞாயிற்றின் பல்லனைத் துந்தகர்த் தாரடி யார்பாவ நாசரே |
3.009.2 |
இறைவர் மலைமகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். பக்தியோடு துதிக்கும் மென்மையான இனத்தாராகிய அந்தணர்கள் விரும்பிப் போற்றுகின்ற வீழிமிழலையில் விளங்குபவர். சிவனை நினையாது செய்த தக்கனது யாகத்தை அழித்தவர். அந்த யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களைத் தகர்த் தவர். தம்மைத் தொழும் அடியவர்களின் பாவத்தைப் போக்குபவர்.
2891 | நஞ்சினை
யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழி மிழலையார் அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே |
3.009.3 |
இறைவர் நஞ்சுண்டதால் இருள் போன்ற கறுத்த கண்டத்தையுடையவர். கடுங்கோபம் கொண்டு அந்தகாசுரன் என்ற அரக்கனைக் கொன்ற மூவிலைச் சூலப்படையையுடையவர். திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுபவர். மைதீட்டிய கண்களையுடைய உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். கங்கையால் அபிடேகம் செய்யப்பட்ட சிவந்த சடை முடியையுடையவர். அத்தகைய சிவபெருமானைத் தொழும் அடியவர்களின் கொடு வினை யாவும் அழியும்.
2892 | கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம் விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார் தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம் அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே |
3.009.4 |
மான், மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியன கொணடு, விலைமதிப்புடைய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில் இறைவர் வீற்றிருந்தருளுகின்றார். தலையிலே பிறைச் சந்திரன் திகழ, கழுத்திலே எலும்புமாலை விளங்க, கையில் சூலம், உடுக்கை கொண்டு அலையுடைய கங்கையை ஏற்று இடபக்கொடி கொண்டு விளங்குபவர். யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும் தம்மைப் போன்ற உருவம் (சாரூப பதவி) பெறச் செய்வார். (ஒத்த தோழர்கள் ஒன்று போல் அலங்கரித்துக் கொள்வது போல).
2893 | பிறையுறு
செஞ்சடை யார்விடை யார்பிச்சை நச்சியே வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழி மிழலையார் முறைமுறை யாலிசை பாடுவா ராடிமுன் றொண்டர்கள் இறையுறை வாஞ்சிய மல்லதெப் போதுமென் னுள்ளமே |
3.009.5 |
திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர் பிறைச் சந்திரனைச் சூடிய சிவந்த சடைமுடியையுடையவர். இடபத்தை வாகனமாக உடையவர். பிச்சையெடுத்தலை விரும்பும் நாள்களில் பலியேற்றுத் திரிவார். தொண்டரகள் பண்முறைப்படி இசைபாடி அதற் கேற்ப ஆட முற்பட அவர்கள் இதயத் தாமரையில் வீற்றிருப்பார். அவரையல்லாது எனது உள்ளம் வேறெதையும் நினையாது.
2894 | வசையறு
மாதவங் கண்டு வரிசிலை வேடனாய் விசையனுக் கன்றருள் செய்தவர் வீழி மிழலையார் இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்ல வடமிட்டுத் திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே |
3.009.0 |
திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர் அருச்சுனன் செய்த குற்றமற்ற பெருந்தவம் கண்டு இரங்கி, அழகிய வில்லேந்திய வேட்டுவ வடிவில் வந்து அவனுக்கு அருள்புரிந்தவர். தம்மை இசைத்தமிழால் பாடி, தம் திருப்புகழைப் போற்றி உரைத்துப் பிறரைக் கேட்கும்படி செய்து, முரசொலிக்கத் திசைநோக்கித் தொழுது ஆடிப்பாடுவார் சிந்தனையில் வீற்றிருப்பர்.
2895 | சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நன் மூவிரு தொன்னூலர் வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழி மிழலையார் காடரங் காவுமை காணவண் டத்திமை யோர்தொழ நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே |
3.009.7 |
திருவீமிழலையில் வீற்றிருக்கும் இறைவர் விண்ணோர்கட்குத் தூரமானவர். மேன்மை வாய்ந்த வேதாங்க நூல்கள் ஆறினையும் கற்று வல்லவர்களாய், மூவகை அழலை ஓம்பி, நால் வேதங்களையும் பயின்ற அந்தணர்கட்கு அணியராகி வீட்டின்பம் நல்குபவர். சுடுகாட்டை அரங்காகக் கொண்டு, உமாதேவியார் கண்டு மகிழ, எல்லா அண்டங்களிலுமுள்ள தேவர்கள் தொழத் திருநடனம் செய்பவராகிய சிவபெருமானை ஏத்தி வழிபடுபவர்களின் வினையாவும் அழியும்.
2896 | எடுத்தவன் மாமலைக் கீழ வி ராவணன் வீழ்தர விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழி மிழலையார் படுத்துவெங் காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக் கொடுத்தன ரின்பங் கொடுப்பர் தொழக்குறை வில்லையே |
3.009.8 |
பெரியகயிலை மலையை அப்புறப்படுத்த எடுத்த இராவணனை அம்மலையின் கீழேயே கிடந்து அலறுமாறு அடர்த்து, பின் அவன் சாமகானம் பாடிய இசை கேட்டு அருள்புரிந்தார் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான். அவர் கொடிய காலனை உதைத்து. தம்மருகில் நின்று வழிபாடு செய்த பாலனான மார்க்கண்டேயனுக்குப் பேரின்பம் கொடுத்தார். அச் சிவபெருமான் தம்மைத் தொழுது போற்றும் அடியவர்கட்கு எவ்விதக் குறைவு மில்லாமல் எல்லா நலன்களையும் கொடுப்பார்.
2897 | திக்கமர்
நான்முகன் மாலண்ட மண்டலந் தேடிட மிக்கமர் தீத்திர ளாயவர் வீழி மிழலையார் சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும் நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே |
3.009.9 |
நான்கு திக்குகளையும் நோக்குகின்ற முகங்களையுடைய பிரமனும், திருமாலும் மேலுள்ள அண்டங்கள் அனைத்திலும், கீழுள்ள அண்டங்களிலும் முடி, அடி தேட, காணமுடியாவண்ணம், மிகுந்த எழும் தீப்பிழம்பாய் நின்றவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான். அவர் சொக்கு எனப்படும் ஒருவகைத் திருக்கூத்து ஆடியும், பாடியும் பூதகணங்கள் சூழ விளங்கும் நக்கர், அவருடைய திருநாமமாகிய நமச்சிவாய என்பதை ஓதவல்லவர்கள் சிவபுண்ணியம் செய்தவராவர்.
2898 | துற்றரை
யார்துவ ராடையர் துப்புர வொன்றிலா வெற்றரை யார்அறி யாநெறி வீழி மிழலையார் சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற சோதிதான் மற்றறி யாஅடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே |
3.009.10 |
பொருந்திய காவியாடை அணிந்த புத்தர்களும், ஆடையணியாத சுத்தமில்லாச் சமணர்களும் அறியாத நெறியில் விளங்குபவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர். சொல்லையும், பொருளையும் கடந்து அருள் ஒளியாக விளங்கும் இறைவர், தம்மைத் தவிர வேறெதையும் அறியாத அடியார்களின் சிந்தனையில் நிலையாக வீற்றிருப்பார்.
2899 | வேதியர்
கைதொழு வீழி மிழலைவி ரும்பிய ஆதியை வாழ்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்ஆய்ந் தோதிய வொண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர் மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே |
3.009.11 |
அந்தணர்கள் கைகூப்பித் தொழுது போற்றும் திருவீழிமிழலையை விரும்பி வீற்றிருக்கும் இறைவனை, சோலைகள் விளங்கும் சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் ஆராய்ந்து ஓதிய ஒண்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் கூறிப் போற்றி வழிபடுபவர்கள் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானின் மலர் போன்ற திருவடிகளைச் சேர்ந்து முக்திப் பேற்றினைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவீழிமிழலை - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மிழலையார், திருவீழிமிழலையில், இறைவர், வீற்றிருக்கும், தம்மைத், கொண்டு, பாகமாகக், விளங்குபவர், சிவபெருமான், விளங்கும், தொழுது, தொழும், போற்றி, அந்தணர்கள், வீற்றிருப்பார், வேறெதையும், வேதியர், நின்று, தாடியும், வேதத்தர், திருமுறை, அறியாத, பாடியும், போற்றும், சிந்தனையில், திருச்சிற்றம்பலம், பிறைச், அழியும், செய்வார், நினையாது, கொண்டவர், அவருடைய, உமாதேவியை, போற்றுகின்ற, திருவீழிமிழலை, சிவந்த, செஞ்சடை, மூவிலைச், அடியவர்களின், குண்டலம்