முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.046.திருக்கருகாவூர்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.046.திருக்கருகாவூர்

3.046.திருக்கருகாவூர்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
3288 | முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக் கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம் அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே |
3.046.1 |
முத்துப் போன்ற புன்னகை கொண்டு விளங்கும் உமாதேவி அஞ்சுமாறு மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்திய கடவுள் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர். அவர் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
3289 | விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
கமுத நீழலக லாததோர் செல்வமாம் கமுத முல்லை கமழ்கின்ற கருவாவூர் அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே |
3.046.2 |
கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் அடியவர்களே. நும் பணி ஆனது அமுதம் போல இன்பம் விளைவிக்கும் திருவடி நீழலை விட்டு அகலாத செல்வமாகும். வெண்ணிற முல்லை மணம் கமழ்கின்ற திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் இறைவன் அமுதம் போன்று இனிமை தருபவன். அவனுடைய வண்ணம் நெருப்புப் போன்றசிவந்த வண்ணமாகும்.
3290 | பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக் குழக ரென்றுகுழை யாவழை யாவரும் கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம் அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே |
3.046.3 |
பழகுவதற்குரிய சிறப்புடைய சிறுத்தொண்டர்கள் இன்னிசையோடு பாடி அழகனான சிவபெருமானைக் குழைந்து, அழைத்து, கழலணிந்த திருவடிகளையே பொருளாகக் கொண்ட பாக்களைப் பாட, திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் அழகரான சிவபெருமானின் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
3291 | பொடிமெய் பூசிமலர் கொய்து புணர்ந்துடன் செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர் கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம் அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே |
3.046.4 |
திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி, மலர் கொண்டு தூவிப் போற்றி வழிபடும் அடியவர்கட்குக் குற்றமில்லாச் செம்மையான உள்ளம் நல்கும் செல்வரான சிவபெருமான், நறுமணம் கமழும் முல்லைகளையுடைய திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் அடிகளாவார். அவருடைய வண்ணம் நெருப்புப்போன்ற சிவந்த வண்ணமாகும்.
3292 | மைய லின்றிமலர் கொய்துவ ணங்கிடச் செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர் கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம் ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே |
3.046.5 |
மயக்கமில்லாமல் மலர்கொய்து போற்றி வணங்கும் அடியவர்கட்குச் செம்மையான உள்ளம் நல்கும் செல்வத்தராகிய சிவபெருமான், தாழையும் முல்லையும் மணம் கமழும் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர் ஆவார். அவருடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
3293 | மாசில் தொண்டர்மலர் கொண்டுவ ணங்கிட ஆசை யாரவரு ணல்கிய செல்வத்தர் காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம் ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே |
3.046.6 |
மாசில்லாத தொண்டர்கள் மலர்தூவி வணங்கிட அவர்கள் விருப்பம் நிறைவேற அருள்நல்கும் செல்வரான சிவ பெருமான், சினம் கொள்ளும் இடபத்தை வாகனமாகக் கொண்டு திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் இறைவர் ஆவார். அவர் வண்ணம் எரியும் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
3294 | வெந்த நீறுமெய் பூசிய வேதியன் சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன் கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம் எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே |
3.046.7 |
திருநீறு பூசிய வேதியராய், அடியவர்தம் சிந்ததையுள் நின்று அருள்புரியும் செல்வரான சிவபெருமான், நறுமணம்கமழும் முல்லைகள் மலரும் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தந்தையாவார். அவர் வண்ணம் எரியும் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
3295 | பண்ணி னேர்மொழி யாளையோர் பாகனார் மண்ணு கோலம்முடை யம்மல ரானொடும் கண்ண னேடவரி யார்கரு காவூரெம் அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே |
3.046.9 |
பண்போன்று இனிய மொழிபேசும் உமா தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட இறைவன், அலங்கரிக்கப்பட்ட கோலமுடைய அழகிய மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும், திருமாலும் காண்பதற்கு அரியவராய்த் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர் ஆவார். அவனது வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
3296 | போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல் தீர்த்த மென்றுதௌ வீர்தௌ யேன்மின் கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம் ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே |
3.046.10 |
மஞ்சட் காவி ஆடையால் போர்த்த உடம்பினர்களும், பொழுதெல்லாம் அலைபவர்களும் சொல்கின்ற மொழிகளை உயர்வானவாகக் கொள்ள வேண்டா. மேகம் சூழ, குளிர்ந்த முல்லை மணம் கமழும் திருக்கருகாவூரில் வீற்றிருந் தருளும் எம் சிவனின் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணம்.
3297 | கலவ மஞ்ஞையுல வுங்கரு காவூர் நிலவு பாட லுடையான்றன நீள்கழல் குலவு ஞானசம் பந்தன செந்தமிழ் சொலவ லாரவர் தொல்வினை தீருமே |
3.046.11 |
மயில், தோகை விரித்து ஆடுகின்ற திருக்கருகாவூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் புகழ்ப் பாக்கள் கொண்டு போற்றி வழிபடப் பெற்றவர். அப்பெருமானுடைய திருவடிகளில் அன்பு செலுத்தி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப் பதிகத்தை ஓத வல்லவர்களின் தொல்வினை தீரும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கருகாவூர் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வண்ணம், வீற்றிருந்தருளும், வண்ணமே, திருக்கருகாவூரில், சிவந்த, வண்ணமாகும், நெருப்புப், காவூரெம், லும்மழல், வண்ணம்மழ, ழுங்கரு, கொண்டு, செல்வத்தர், போற்றி, முல்லைகம, செல்வரான, நல்கிய, சிவபெருமான், கமழும், யார்கரு, திருக்கருகாவூர், முல்லை, தலைவர், யும்மெரி, வண்ணம்மெரி, அவருடைய, இறைவர், எரியும், தொல்வினை, போர்த்த, திருமுறை, திருச்சிற்றம்பலம், அமுதம், திருமேனியில், செம்மையான, உள்ளம், இறைவன், நல்கும், கமழ்கின்ற