முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.045.திருவாரூர்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.045.திருவாரூர்
3.045.திருவாரூர்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
பண் - கௌசிகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
3277 | அந்த மாயுல காதியு மாயினான் வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன் சிந்தை யேபுகுந் தான்றிரு வாரூரெம் எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ |
3.045.1 |
சிவபெருமான் உலகத்தின் ஒடுக்கத்திற்கும், தோற்றத்திற்கும் நிமித்த காரணன். திருவெண்ணீறு பூசிய வேத நாயகன். என் சிந்தையில் புகுந்து விளங்குபவன். திருவாரூரில் வீற்றிருந்தருளும் எம் தந்தையான அவன் என்னை ஏற்று அருள் புரிவானோ!
3278 | கருத்த னேகரு தார்புர மூன்றெய்த ஒருத்த னேயுமை யாளொரு கூறனே திருத்த னேதிரு வாரூரெந் தீவண்ண அருத்த வென்னெனை யஞ்சலென் னாததே |
3.045.2 |
இறைவர் என் கருத்திலிருப்பவர். தம்மைக் கருதிப் போற்றாத பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அக்கினிக்கணை தொடுத்து எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர். ஒப்பற்றவர், உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். தூயவர். திருவாரூரில் வீற்றிருந்தருளும் தீ வண்ணர். எப்பொருட்கும் விளக்கமாய் அமைந்த பெரும்பொருள். அவர் என்னை அஞ்சற்க என்று மொழியாததன் காரணம் யாதோ?
3279 | மறையன் மாமுனி வன்மரு வார்புரம் இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான் சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூரெம் இறைவன் றானெனை யேன்றுகொ ளுங்கொலோ |
3.045.3 |
இறைவன், வேதங்களை அருளிச் செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவன். பெரிய தவத்தன். பகையசுரர்களின் முப்புரங்களை நொடிப்பொழுதில் எரியூட்டியவன். சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவன் என்னை அடியவனாக ஏற்றுக் கொள்வானோ!
3280 | பல்லி லோடுகை யேந்திப் பலிதிரிந் தெல்லி வந்திடு காட்டெரி யாடுவான் செல்வ மல்கிய தென்றிரு வாரூரான் அல்ல றீர்த்தெனை யஞ்சலெ னுங்கொலோ |
3.045.4 |
இறைவர் பிரமனின் பல் இல்லாத மண்டையோட்டை ஏந்திப் பலி ஏற்றுத் திரிபவர். இரவில் சுடுகாட்டில் நடனம் புரிபவர். செல்வச் செழிப்பு மிக்க அழகிய திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் என் துன்பத்தைத் தீர்த்து அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாரோ!
3281 | குருந்த மேறிக் கொடிவிடு மாதவி விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை திருந்து மாடங்கள் சூழ்திரு வாரூரான் வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ |
3.045.5 |
குருந்த மரத்தில் ஏறிப்படரும் மாதவியும், விரிந்து மலர்ந்த நறுமணம் கமழும் தேனுடைய கொன்றை மரங்களும் திகழ, மாடமாளிகைகள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவர் நான் வருந்தும்போது, என்னை வருந்தாதே என்றுரைத்து அருள் புரிவாரோ!
3282 | வார்கொண் மென்முலை யாளொரு பாகமா ஊர்க ளாரிடு பிச்சைகொ ளுத்தமன் சீர்கொண் மாடங்கள் சூழ்திரு வாரூரான் ஆர்க ணாவெனை யஞ்சலெ னாததே |
3.045.6 |
கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, ஊரிலுள்ளவர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்கும் உத்தமனாய், செல்வ வளமிக்க அழகிய மாடங்கள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் நான் வேறு யாரைச் சரணாகப் புகுந்துள்ளேன் என்று கருதி அவன் என்னை அஞ்சாதே என்று கூறாமலிருக்கிறான்?
3283 | வளைக்கை
மங்கைநல் லாளையோர் பாகமாத் துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன் திளைக்குந் தண்புனல் சூழ்திரு வாரூரான் இளைக்கும் போதெனை யேன்றுகொ ளுங்கொலோ |
3.045.7 |
வளையலணிந்த கைகளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட இறைவன், தன்னை எதிர்த்து வந்த யானையானது கலங்குமாறு அடர்த்து அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன், குளிர்ந்த புனல் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவன், இளைத்து வருந்தும் காலத்தில் என்னை ஏற்று அருள் புரிவானோ!
3284 | இலங்கை
மன்ன னிருபது தோளிறக் கலங்கக் கால்விர லாற்கடைக் கண்டவன் வலங்கொள் மாமதில் சூழ்திரு வாரூரான் அலங்கல் தந்தெனை யஞ்சலெ னுங்கொலோ |
3.045.8 |
இலங்கை வேந்தனான இராவணனுடைய இருபது தோள்களும் நொறுங்கிக் கலங்கத் தன் காற்பெருவிரலை ஊன்றியவர் இறைவர். வலிமையுடைய பெரிய மதில்கள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் எனக்குப் பெருமை சேர்க்கும் மாலை தந்து அருளி, நான் வருந்தும் காலத்தில் அஞ்சாதே என்று அபயம் அளித்துக் காப்பாரோ!
3285 | நெடிய
மாலும் பிரமனும் நேர்கிலாப் படிய வன்பனி மாமதிச் சென்னியான் செடிக ணீக்கிய தென்றிரு வாரூரெம் அடிக டானெனை யஞ்சலெ னுங்கொலோ |
3.045.9 |
நீண்டு உயர்ந்த திருமாலும், பிரமனும் காணமுடியாத தன்மையராய்க்குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் தாங்கிய இறைவர், மன்னுயிர்களின் பாவங்களை நீக்கி அழகிய திருவாரூரில் வீற்றிருந்தருளும் அடிகளாவார். அவர் என்னை அஞ்சாதே என்று அருள் புரிவாரோ!
3286 | மாசு மெய்யினர் வண்டுவ ராடைகொள் காசை போர்க்குங் கலதிகள் சொற்கொளேல் தேச மல்கிய தென்றிரு வாரூரெம் ஈசன் றானெனை யேன்றுகொ ளுங்கொலோ |
3.045.10 |
அழுக்கு உடம்பையுடைய சமணர்களும், துவராடை அணிந்த புத்தர்களும், கூறும் பயனற்ற சொற்களைக் கொள்ளாதீர், அருளொளி விளங்கும் அழகிய திருவாரூரில் வீற்றிருந்தருளும் எம் இறைவரான சிவபெருமான் என்னை ஏற்று நின்று அருள்புரிவாரோ!
3287 | வன்னி கொன்றை மதியொடு கூவிளம் சென்னி வைத்த பிரான்றிரு வாரூரை மன்னு காழியுண் ஞானசம் பந்தன்வாய்ப் பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே |
3.045.11 |
வன்னி, கொன்றை, சந்திரன், வில்வம் ஆகியவற்றைச் சடைமுடியில் திகழச் சூடிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருவாரூரை, நிலைபெற்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் வாய்மலர்ந்து அருளிய இத்திருப்பாடல்களை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வீற்றிருந்தருளும், திருவாரூரில், இறைவர், இறைவன், வாரூரான், சூழ்திரு, சூழ்ந்த, யஞ்சலெ, னுங்கொலோ, அஞ்சாதே, யேன்றுகொ, வாரூரெம், சிவபெருமான், ளுங்கொலோ, மாடங்கள், தென்றிரு, வருந்தும், கொன்றை, சடைமுடியில், குருந்த, போதெனை, காலத்தில், இலங்கை, பாகமாகக், அருள்புரிவாரோ, புரிவாரோ, பிரமனும், திருமுறை, உமாதேவியைத், பகையசுரர்களின், யாளொரு, புரிவானோ, திருமேனியில், திருச்சிற்றம்பலம், விளங்குபவன், மல்கிய, திருவாரூர், றானெனை, அப்பெருமான்