முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.031.திருமயேந்திரப்பள்ளி
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.031.திருமயேந்திரப்பள்ளி
3.031.திருமயேந்திரப்பள்ளி
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமேனியழகர்.
தேவியார் - வடிவாம்பிகையம்மை.
3129 | திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும் கரைதரு மகிலொடு கனவளை புகுதரும் வரைவிலா லெயிலெய்த மயேந்திரப் பள்ளியுள் அரவரை யழகனை யடியிணை பணிமினே |
3.031.1 |
கடலலைகள் அடித்துவரும் பவளங்களும், சிறப்புடைய வைரமும், கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும், கனமான சங்குகளும் நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்னும் திருத்தலத்தில், மேருமலையாகிய வில்லால், அக்கினிக் கணையாகிய அம்பை எய்து முப்புரங்களை எரியும்படி செய்த, இடையில் பாம்பைக் கச்சாக அணிந்துள்ள அழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.
3130 | கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை கண்டலுங் கைதையுங் கமல்மார் வாவியும் வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற் செண்டுசேர் விடையினான் றிருந்தடி பணிமினே |
3.031.2 |
மேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும், அழகிய மாளிகைகளும், நீர்முள்ளியும், தாழையும், தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும், வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியில் வட்டமாக நடைபயிலும் இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானின், உயிர்களை நன்னெறியில் செலுத்தும் திருவடிகளை வணங்குவீர்களாக.
3131 | கோங்கிள வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும் தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமு மாங்கரும் பும்வயன் மயேந்திரப் பள்ளியுள் ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே |
3.031.3 |
கோங்கு, வேங்கை, செழுமையான மலர்களையுடைய புன்னை, தேன் துளிகளையுடைய கொன்றை, சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும், மாமரங்களும், கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளை வணங்குவீர்களாக.
3132 | வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு சங்கமா ரொலியகில் தருபுகை கமழ்தரு மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள் எங்கணா யகன்றன திணையடி பணிமினே |
3.031.4 |
வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்கட்கு உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும், அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்றபோது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப் பள்ளியுள், உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.
3133 | நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச் சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன் மைத்திகழ் கண்டனன் மயேந்திரப் பள்ளியுட் கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே |
3.031.5 |
இறைவனை வழிபடற்கு மலர்களைக் கையால் ஏந்தி வருதல் போல, பல முத்துக்குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையினில் சேர்க்கத் திருமயேந்திரப் பள்ளியுள் வீற்றிருந்தருளும் இறைவனும், மை போன்று கருநிறம் கொண்ட கழுத்தையுடையவனும், கையில் மழு என்னும் ஆயுதத்தை ஏந்தியவனுமான சிவபெருமானைத் தரிசித்து அவன் திருவடிகளை வணங்குவீர்களாக.
3134 | சந்திரன் கதிரவன் றகுபுக ழயனொடும் இந்திரன் வழிபட விருந்தவெம் மிறையவன் மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள் அந்தமி லழகனை யடிபணிந் துய்ம்மினே |
3.031.6 |
சந்திரன், சூரியன், மிகுபுகழ்ப் பிரமன், இந்திரன் முதலியோர் வழிபட விளங்கும் எம் இறைவனாய், வேதமந்திரங்கள் சிறப்படைய திருமயேந்திரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் அழிவில்லாத பேரழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக.
3135 | சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட நடநவில் புரிவின னறவணி மலரொடு படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள் அடல்விடை யுடையவ னடிபணிந் துய்ம்மினே |
3.031.7 |
சடைமுடியுடைய முனிவர்கள் பூசைத்திரவியங்களைச் சேகரித்து வழிபட, திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளுபவனும், திருநடனம் செய்பவனும், தேன் துளிக்கும் வாசனைமிக்க அழகிய மலர்களோடு பரந்து விரிந்த சடையில் சந்திரனைச் சூடியவனும், வலிமையுடைய எருதினை வாகனமாக உடையவனுமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக!
3136 | சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக் கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன் மரவமர் பூம்பொழின் மயேந்திரப் பள்ளியுள் அரவமர் சடையனை யடிபணிந் துய்ம்மினே |
3.031.8 |
பத்துத் தலைகளையுடைய, போர் செய்யும் வலிமையுடைய அரக்கனான இராவணனின் இருபது கரங்களும் கெடுமாறு, கனத்த கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய், வெண்கடம்ப மரங்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்த திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் பாம்பணிந்த சடைமுடியுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடையுங்கள்.
3137 | நாகணைத்
துயில்பவ னலமிகு மலரவன் ஆகணைந் தவர்கழ லணையவும் பெறுகிலர் மாகணைந் தலர்பொழின் மயேந்திரப் பள்ளியுள் யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே |
3.031.9 |
ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் துயில்பவனான திருமாலும், அழகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் இறைவனின் அடிமுடிகளைத் தேட முற்பட்டு, பன்றி உருவெடுத்த திருமால் சிவனின் திருவடிகளை நெருங்கவும் இயலாதவரானார். (அன்ன உருவெடுத்த பிரமன் திருமுடியை நெருங்க இயலாதவரானார் என்பதும் குறிப்பு.) ஆகாயமளாவிய பூஞ்சோலைகளையுடைய திருமயேந்திரப் பள்ளியில் யோக மூர்த்தியாய் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உணர்ந்து தியானித்து நன்மை அடைவீர்களாக!
3138 | உடைதுறந்
தவர்களு முடைதுவ ருடையரும் படுபழி யுடையவர் பகர்வன விடுமினீர் மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள் இடமுடை யீசனை யிணையடி பணிமினே |
3.031.10 |
ஆடையினைத் துறந்தவர்களாகிய சமணர்களும், மஞ்சள் உடை அணிபவர்களாகிய புத்தர்களும் மிக்க பழிக்கிடமாகக் கூறுவனவற்றைக் கேளாது விடுவீர்களாக. மடையின் மூலம் நீர் பாயும் வளமுடைய வயல்களையுடைய அழகிய மயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக.
3139 | வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள் நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல் நம்பர மிதுவென நாவினா னவில்பவர் உம்பரா ரெதிர்கொள வுயர்பதி யணைவரே |
3.031.11 |
நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியுள் எவ்வுயிரும் விரும்பும் சிவபெருமானின் வீரக்கழலணிந்த திருவடிகளைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை 'இது நம்முடைய கடமை' என்ற உறுதியுடன் நாவினால் பாடித் துதிப்பவர்கள் தேவர்கள் எதிர்கொண்டு அழைக்க உயர்ந்த இடத்தினை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமயேந்திரப்பள்ளி - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பள்ளியுள், திருவடிகளை, மயேந்திரப், சிவபெருமானின், வீற்றிருந்தருளும், திருமயேந்திரப், வணங்குவீர்களாக, பணிமினே, துய்ம்மினே, நிறைந்த, அடைவீர்களாக, வணங்கி, திருமயேந்திரப்பள்ளி, பள்ளியில், பிரமன், முனிவர்கள், உருவெடுத்த, திருமயேந்திரப்பள்ளியுள், சடைமுடியுடைய, வலிமையுடைய, இயலாதவரானார், மரங்கள், பொழிலணி, என்னும், திருச்சிற்றம்பலம், திருமுறை, உயர்ந்த, நறுமணம், இந்திரன், சந்திரன், கமழும், யடிபணிந்